நானும் என் உலகும்
சனி, 25 நவம்பர், 2023
ஜிகர்தண்டா Double X
வியாழன், 1 ஜூன், 2023
த.ராஜன் - பழைய குருடி (சிறுகதைத் தொகுப்பு)
த.ராஜனின் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து...!
உண்மையில் தீவிரத்தன்மை மிகுந்த கதைகளை படிப்பதற்கென பிரத்தியேகமான ஓர் மனநிலை தேவையாக இருக்கிறது. மேலோட்டமாகவோ மேம்போக்காகவோ பக்கங்களைப் புரட்டி, சொற்களின் மீது கண்களை ஓடவிட்டு மூளையில் அள்ளிப் போட்டுக் கொண்டு பின்பு அசைபோட்டு, கலைந்துகிடக்கிற சொற்களை ஒழுங்கமைத்து, இன்னது தான் கதையென விளங்கிக் கொள்கிற பாணியில் பெரும்பாலான கதைகளைப் படித்துவிடுவேன். சிலருக்கோ பலருக்கோ இதுவே ஏற்புடையதாக இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்
சிக்கலான கதையமைப்பு, உணர்வெழுச்சி மிகுந்திருக்கிற மையப்புள்ளி , கதையின் அடர்த்தி, கடுமையான/செழுமையான மொழி, நம்மைக் கதையில் பொருத்திக் கொள்ளக்கூடிய தன்மை என ஏதேனும் சில காரணங்களால் ஒரு சில கதைகளை என்னால் ஒரே முறையில் படித்து , புரிந்து, உணர்ந்து கொள்ளமுடியாமல் போயிருக்கின்றது. இம்மாதிரியான கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக படித்துக் கடந்துவிடுவதும் எளிதன்று. கதையின் பாரம் மூச்சுமுட்ட தோளில் அழுத்துவது போல் இருக்கும். நிதானமாக அதற்கென நேரமொதுக்கி ஆழம் பார்த்து ஆற்றில் இறங்குவது போல, தீவிரமாக படிக்கத்தொடங்குகையில் அந்தச் சுழல் மெதுவாக நம்மை இழுத்துக் கொள்ளும்.
ஏதோ வாசிப்பினை சாகசம் போல சித்தரிக்கும்பொருட்டு நான் இப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே நான் உணர்ந்ததையே சொற்களில் கடத்திவிட முயன்றிருக்கிறேன். த.ராஜனின் இந்த சிறுகதைத் தொகுப்பு (நெடுங்கதைகள் ? குறுநாவல்கள்?) நான் மேலே குறிப்பிட்டதைப் போன்ற ஒன்று. ராஜன் எனக்கு பத்தாண்டுகளாய் பழகிய நண்பர். கண்டதை (யெல்லாம்) படித்து இலக்கியக் கரையேறிவிடும் முனைப்புடன் சுற்றிய நண்பர் கூட்டத்தில் அவரும் நானும் உண்டு. தேர்ந்த வாசகராகவும் , பின்பு இதழியலாளராகவும், பிழைதிருத்துபவராகவும் (ஒரு கட்டத்தில் அவரை நோக்கி கேலியாக சொல்லப்பட்டதை நிஜமாக்கினார்), அறிந்த நண்பரை எழுத்தாளராகப் பார்க்கிற மகிழ்ச்சியை என்னால் சொற்களில் விவரிக்க முடியாது.
ஆனாலும் அவருடைய முதல் புத்தகம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன், புத்தகத்தின் தலைப்பிற்காக அவருடன் ஒரு சண்டையிட்டேன். அவர் சொன்ன விளக்கங்களை அப்போது மனம் ஏற்காவிட்டாலும், ஓராண்டுக்குப் பின் புத்தகத்தைப் படிக்கையில் அவருடைய விளக்கத்தை சரியானதென ஏற்றுக்கொண்டேன்.167 பக்கங்கள் கொண்ட தொகுப்பில் பாலூட்டிகள், வின்சென்ட்டின் அறை, பழைய குருடி, அரூபி , அறிவுஜீவியின் பொய் என ஐந்தே நெடுங்கதைகள் தாம்.
முதல் கதையான பாலூட்டிகள் கிட்டத்தட்ட ஒரு நாட்டார் கதைக்கான தன்மையைக் கொண்டிருக்கிறது. எங்கோ திருநெல்வேலியின் அடையக்கருங்குளதிலிருந்து வந்து, சென்னை முழுவதுமாக நகரமயமாவதற்கு முன்பு தென்னந்தோப்பாகக் கிடந்த இடத்தில் சுடலைமாடனை வழிபட்டு வெளவாலைப் பலியிடுகிற ‘வெளவால் தாத்தா’ கந்தையனையும், இரண்டு தலைமுறைக்குப்பின், பாட்டனை பார்த்தேயிராமல் அவர் பற்றிய கதைகளின் வழியாகவே அவரை அறிந்துகொண்ட பேரன் சின்னதுரையையும் முன்பு தென்னந்தோப்புகள் நிறைந்திருந்து இப்போது நகரமயமாகிவிட்ட இடத்தை வந்தடைகையில் வெளவாலே இவர்கள் இருவரையும் இணைக்கிற கண்ணியாக இருக்கிறது. இந்தக் கதையில் குறிப்பிட்ட சொல்லவேண்டிய பகுதி ஒன்றுண்டு. கந்தையன் ஒரு வெளவாலுக்கு பிரசவம் பார்க்கிற (ஆம் !) பகுதியின் விவரணைகளை ஒரு மாதிரி அச்சத்துக்கும் அருவெறுப்புக்கும் இடையேயான சிலிர்ப்புடனேயே படித்தேன். மொத்தத்தில் இந்தச் சிறுகதையை, பிழைப்புக்காக இடம்பெயர்ந்தும் தங்களுடைய அடையாளங்களை இழந்தும்/துறந்தும் வாழ்கிற மக்களுடைய இருத்தலியல் சிக்கல்களை (existential crisis ?!) பேசுகிற கதையாகவே புரிந்து கொள்கிறேன்.
அடுத்த கதையான வின்சென்ட்டின் அறை, மனப்பிறழ்வு கொண்ட , தன்னுடைய பாலினம் சார்ந்த அடையாளச்சிக்கலுடைய ஒருவனின் கதை, அவனைப் பற்றி மற்றவர்களின் வழியாக உருவாக்கப் படுகிற சித்திரமும் , கதைசொல்லி வின்சென்ட் பற்றி உருவாக்குகிற சித்திரமும் கதையின் முடிவில் ஒட்டுமொத்தமாக கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாத கதை.
பழைய குருடி - தொகுப்பின் முகமான இந்தக் கதையில் நம்மை யோசிக்க வைத்து திசைதிருப்பும்படியான ஒரு வேலையைச் செய்திருக்கிறார் ராஜன். பாலூட்டிகள் கதையின் பாத்திரங்களான கந்தையனும் சின்னத்துரையும் இங்கேயும் உலவுகின்றனர். முதல் கதையின் நீட்சி போலவே தெரிந்தாலும் சாதியெனும் அடையாளத்தை தொலைத்துவிடும் முனைப்புடன் செயல்படும் சின்னதுரையை, நொய்த்தொற்றுக் கால பொதுமுடக்கம் வேறு உருவில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்துவதும் , அவனும் அவன் குடும்பத்தினருடன் உழல்வதுமாக முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.
இந்த தொகுப்பை எழுத்தாளர் பா.வெங்கடேசனுக்கும், எழுத்தாளர் சீனிவாச ராமநுஜம் சமர்ப்பித்திருந்தார் ராஜன். அதற்கான காரணத்தை கடைசி இரண்டு கதைகளான அரூபி , அறிவுஜீவியின் பொய் ஆகியவற்றைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் தூயனுடைய நாவலான கதீட்ரலின் ஒரு பகுதியை பெயர் மாற்றங்களுடன் அப்படியே பயன்படுத்தியிருப்பதாக முன்னுரையில் சொல்லியிருந்தார் ராஜன். அரூபி சிறுகதையில் குறிப்பிட்ட அந்தப் பகுதியை வாசிக்கையில் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
தொகுப்பின் ஐந்தாவது/இறுதி கதையான ‘அறிவுஜீவியின் பொய் ’ இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பூனா ஒப்பந்தம் என்னும் வரலாற்று நிகழ்வினைப் பின்னணியாக வைத்து காலச்சுழல் (timeloop) மாதிரியான ஒருவகையில் எழுதப்பட்ட சிறுகதை. இப்படியொரு கதையினை யோசிப்பதற்கே மனம் சோர்ந்துவிடும். ராஜன் அரசியலையும், வரலாற்றையும், இந்தக் கதைக்கான போக்கையும் சரிசமமாக கையாண்டிருக்கிற விதம் வியக்கவைக்கிறது.
நான் வாசித்தவரையில் புனைவெழுத்தின் சாத்தியக்கூறுகளை முடிந்த அளவு சோதித்து ,புதிதாக முயன்றுபார்த்து மிகச்சிக்கலான abstract (இணையான எளிய தமிழ்ச்சொல் புலப்படவில்லை) உணர்வுகளையும் காட்சிகளையும் எழுத்தின்வழி கடத்தியதாகக் கருதும் எழுத்தாளர்கள் மனோஜ் (புனைவின் நிழல் தொகுப்பு), பா.வெங்கடேசன் (ராஜன் மகள்) , தூயன் (கதீட்றல்) ஆகியோர். அவருடைய நண்பனாக, த.ராஜனும் அந்த வரிசையில் இடம்பெறுவார் என உறுதியாக நம்புகிறேன். இந்த சிறுகதைத் தொகுப்பு அதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கின்றது. இருன்மையான, யாரும் பேசத்தயங்குற உணர்வுகளையும் ,தீவிரத்தன்மை வாய்ந்த, இறுக்கமான அல்லது சிக்கலான கதைக்களங்களை எடுத்துக் கொண்டு அதனை முடிந்தளவு உயிர்ப்புடனும் , தனிப்பட்ட உரையாடல்கள் அதிகமின்றி கதையின் போக்கினை விவரிப்பதன் வழியாகவும் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பினை நமக்குத் தந்திருக்கின்றார்.
மிகச்சிறப்பான அட்டைப்படம் /புத்தக வடிவமைப்புக்காகவும் , கதைகளினூடாக இடம்பெறுகிற ஆஸ்வால்டோ கயாசமின் (Oswaldo Guayasamin) ஓவியங்களுக்காகவும் எதிர் வெளீயீடு பதிப்பகத்துக்கு என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும் <3
பழைய குருடி - த.ராஜன் | சிறுகதைத்தொகுப்பு | 167 பக்கங்கள் (கெட்டி அட்டை)| விலை ரூ.250 | ISBN9789390811175
புத்தகம் வாங்க: https://rb.gy/4sb59
புதன், 5 ஏப்ரல், 2023
ஹீலியந்தே - Redamancy of the Livsnjutare
பேரன்பின் ஹீலியந்தே,
காதல் எப்போதும் நாம் எதிர்பார்க்கிற இடத்திலிருந்து எதிர்பார்க்கிற நேரத்தில் எதிர்ப்பார்க்கிற அளவில் வருவதில்லை; அது எப்போதும் நெருங்கிவிடும் தொலைவில் மறந்திருந்து பார்த்தபடியே இருந்துகொண்டு, எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத ஒருவரின் வழியாக வெளிப்பட்டு முற்றிலுமாய் ஆக்கிரமித்துக் கொண்டு சுற்றிச் சுழன்று முற்றும் முழுகடிக்கும். அப்படியானதுதான் நம் இருவருக்குமான காதலும். நீ எனக்கு அறிமுகமான பொழுதில் நாம் ஒருமுறை கூட ஒருவரையொருவர் நேரில் சந்தித்திருக்கவில்லை.
உனக்கு என் குரலும் புகைப்படமும், எனக்கு உன் குரலும் புகைப்படமும் மட்டுமே அறிமுகம். உன்னைப் பார்த்த மாத்திரத்தில் நான் அறிந்த கொண்டது இவளோர் அன்பின் பேரருவி என்பதை மட்டுமே. உனது புன்னகையும் , குரலில் தொனிக்கிற வாஞ்சையும் ஒரு பரிச்சயப்பட்ட ஆன்மாவாகவே உன்னை முன்னிறுத்தின. அதிகம் பேசிப் பழகும் முன்பே மனதளவில் நெருக்கமாகிவிட்ட உனக்கு, இதை வேறெந்த சொற்களில் எழுதிப் புரிய வைப்பதென தெரியவில்லை எனக்கு.
இந்த நெருக்கம் இருந்தாலுமே, கண்ணாடித் திரைக்குப் பின்நின்றபடி சைகை மொழியில் பேசிக்கொள்பவர்கள் போல், உடல்களாய் நாம் இந்த உலகின் இருவேறு மூலைகளில் இருந்தோம். நான் கண்விழிக்கும்போது உனது இரவுகளாயும், நீ கண்ணயர்ந்தபோது எனது பகல்களாயும் நாட்கள் கழிந்தன. உனக்கும் எனக்கும் இடையே இருந்த ஒட்டு மொத்த தூரத்தையும், நாம் நேரில் சந்தித்துக் கொண்ட ஓர் நாளின் நன்பகல் மழைத்துளிகள் இட்டு நிரப்பின. ஆம் உனக்காக உன்னோடான ஓர் நாளென்று இருந்தது பின்பு நமக்கான நாளாகிப் போனது.
அன்றைக்கு இந்த பெருநகரின் நெடுஞ்சாலைகளில் எனது மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிகையில், உன் அருகாமை தவிர்த்து வேறொன்றும் நினைவில் ஆழப்பதியவில்லை. முன்பு வெயிலில் காய்ந்து பின் மழையில் நனைந்துபோன உடைகளுடன் , ஓர் இறுக்கமான அணைப்பை மட்டும் தந்து விடைபெற்றுக் கொண்டோம். அன்றைய நாளை மொத்தமாய் அசை போட்டபடி , உனக்காகவென ஒரு கவிதையை தேடிப்பிடித்து அனுப்பிவைத்தேன். அந்தக் கவிதை நாம் பேசிக்கொள்ளாத ஓர் உரையாடலின் பகுதியாகிப் போனது. நான் உணர்ந்ததையே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்பதை விளங்கிக் கொண்டேன்.
பின்பு எனது அன்றாடங்களின் ஒரு பாதி உனக்காக என்றானது. உனது குறுஞ்செய்திக்காகவும், நீ அனுப்பிவைக்கும் உன் புகைப்படங்களுக்காகவும் காத்திருத்தலென்பது ஓர் அலாதி இன்பமாகிப் போனது. உனக்காக ஓர் பாடல்வரியை எடுத்துப் பகிரவும், பாடல் பாடி அனுப்பிவைக்கவும், பிரத்யேகமாய் உனது புகைப்படத்திற்கான கவிதையொன்றை எழுதி அனுப்பவும் சிந்தித்தல் என்பதே சிலிர்ப்ப்பூட்டும் அனிச்சை செயலானது.
உன் உலகத்தில் கொஞ்சமாய் சஞ்சரிக்கத்தொடங்கினேன் நான்.
உனக்குப் பிடித்தமான சிவப்பு வண்ணம்,
உனக்குப் பிடித்தமான சூரியகாந்திப் பூ,
நீ ரசித்த பாடல்வரிகள்,
நீ பிடித்த நிலவின் நிழற்படங்கள்,
உன் காட்டாற்றுக் கூந்தல் மேகத்துக்கு நீ தீற்றிக் கொள்ளுகிற வண்ணங்கள்,
உனது பிரியமான உதட்டுச்சாயம்,
நீ விரும்பி அணிந்துகொள்கிற ஷூ,
நீ நடந்து திரிகிற சாலைகள்,
நீ விரும்பி அருந்தும் ஹாட் சாக்லெட் பானம்,
உனது நீள விரல்களில் வெவ்வேறு மலர்களை ஏந்திக்கொண்டிருக்கிற படங்கள்,
நீ எப்படி அணிந்து கொண்டாலும் உன்னை அழகாய்க் காட்டும் உன் விருப்பமான உடைகள்,
நீ தேடியலைந்து பார்க்கிற திரைப்படங்கள்,
உன் பிரியமான நாய்க்குட்டி,
உன் உலகத்து மனிதர்கள்,
உன் மாறாப் புன்னகை,
உன் ஊடுருவும் பார்வை,
உனது இருப்பு,
நீ...!
மொத்தமாய் இத்தனையையும் உள்வாங்கியபடியே இருந்திருக்கிறேன் நான். ஒவ்வொரு முறை உனக்காக ஏதோவொன்றை செய்துவிட்டு நான் காத்திருக்கையில், வார்த்தையாய் எனது பெயரெழுதி நீ அனுப்பிவைப்பதையும், மகிழ்ழ்சியும் அங்கலாய்ப்புமாய் புன்னகையுடன் என் பெயரை உச்சரித்து சின்ன ஒலிக்குறிப்பாய் நீ அனுப்பிவைப்பதையும் நான் மனம் மலர வாசித்துக் கொண்டும் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டும் இருப்பேன். நிபந்தனையற்ற அன்பு எனும் சொல்லை பலர் கூறக் கேட்டிருந்தாலும் உன் வழியாக அது இன்னதென்று உணரப் பெற்றேன். எப்போதும் அளவில்லாமல் அன்பைத் தந்து மட்டுமே பழக்கப்பட்ட ஒருவனுக்கு முதல்முறை அது பலமடங்காய் திரும்பக் கிடைப்பதெல்லாம் பேரதிசயம்; பெருவரம். அது எனக்கே நிகழ்ந்ததில் நானும் திக்குமுக்காடித்தான் போனேன்.
இந்த உறவுக்குப் பெயரிட்டு, வகுத்து வைத்த வரையறைக்குள் அடைக்கப் பார்ப்பதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. அதில் விருப்பமும் இல்லை. நமது தனித்தனியான பயணங்களில் ஏதோவொரு இடத்தில் நாமிருவரும் சக பயணிகளாய் ஒரே ரயிலில் பயணித்துக் கொண்டிருப்பதாய் உருவகப் படுத்திக்கொள்கிறேன். நிறுத்தம் எதுவென தெரியும் வரையிலும்தொடர்ந்து பயணிப்போம் என நம்புகிறேன்.உன் வானம் எப்போதும் சூரியஉதயங்களாலும், நட்சத்திரங்களாலும், நிலவொளியாலும், வானவில்களாலும் நிரம்பியிருக்க இந்த பிரபஞ்சத்தை வேண்டி வாழ்த்துகிறேன்.
இன்னும் சில ஒளியாண்டுகள் உன்னுடன் பயணிப்பேன் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
காதலுடன்,
உன் சக பயணி <3
திங்கள், 13 மார்ச், 2023
Everything everywhere all at once
இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிற முதுமை வரை சிறியதும் பெரியதுமாய் பல முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. கல்வி, உணவுத்தேர்வு, வாழ்க்கை முறை, காதல், திருமணம், தொழில், நட்பு , குடும்பம் என எல்லாவற்றிலுமே நமக்கு முன் வாய்ப்புகளும் கேள்விகளும் கொட்டிக்கிடக்கும்போது, அவற்றுள் நமக்கு விருப்பமான ஒன்றையோ அல்லது நமக்கு இது சரியானதாக இருக்கும் என நாம் நம்பும் ஒன்றையோ தேர்ந்தெடுப்போம். அந்த நேரத்து முடிவு நம் வாழ்வை என்னவாக மாற்றப் போகிறதென யாராலும் கணிக்க முடியாது.
ஒருவேளை , காலம் நமக்குச் சில உண்மைகளைப் புரிய வைத்து, நமது முடிவுகள் குறித்த தெளிவை ஏற்படுத்தும்போது எதையுமே மாற்ற முடியாமல் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம். ஆனால் நம் மனதை ஆற்றிக்கொள்ளும் பொருட்டு ,” ஒரு வேளை நாம் இப்படிச் செய்யாமல், இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்காமல் வேறொன்றை தேர்ந்தெடுத்திருந்தால் கட்டாயம் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்” என சமாதானம் சொல்லி கொள்வோம். உண்மையில் வேறு பாதையில் சென்றிருந்தால் வாழ்வு எப்படி இருந்திருக்குமென யாராலுமே கணிக்க முடியாது . அப்படி கணிக்கவோ, அந்த உலகில் நமது வாழ்க்கை நாம் விரும்பியபடி அமைந்திருக்கிறதாவென தெரிந்து கொள்ள முடிந்தால் ? இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையிருந்து விடுபட்டு விருப்பமான வேறொரு வாழ்க்கைக்குள் புகுந்து கொள்ள முடிந்தால் ?
இதுதான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything everywhere all at once) திரைப்படத்தின் அடிநாதம். திரைப்படம் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்பு ’மல்டிவெர்ஸ்’ (Multiverse) என்றால் என்னவென்று பார்ப்போம். அண்மையில் வெளிவந்த ஸ்ப்டைர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்ளிட்ட மார்வெல் காமிக்ஸின் பல திரைப்படங்களிலும் லோகி, வாண்டாவிஷன் உள்ளிட்ட வலைத்தொடர்களிலும் இந்த மல்டிவெர்ஸ் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதானால் நாம் வாழும் இந்த உலகம் இடம்பெற்றிருக்கிற பிரபஞ்சத்தைப் போலவே , பரந்து விரிந்த வெளியில் பல பிரபஞ்சங்கள் இருக்கலாம். அதில் நம்முடைய வேறொரு பிரதி இந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையில் வேறொரு குணாதிசயம் கொண்டவராக வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவை நாம் பயணித்து செல்ல முடியாத தூரத்தில், வேறொரு பரிணாமத்தில் இருக்கலாம். இந்த கருத்தாக்கமே மல்டிவெர்ஸ் என்றழைக்கப் படுகிறது. எதிர்கால அறிவியல் முன்னேற்றம் இந்த பிரபஞ்சங்களுக்கு இடையேயான பயணத்தைs சாத்தியப்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கக்கூடும் , என்கிற கற்பனையே பல படைப்பாளிகளையும் இந்த கருத்தாக்கத்தை நோக்கி திருப்பியிருக்கின்றது.
எவ்ரிதிங் எவ்ரிவேர்... திரைப்படமும் அப்படியொரு மல்டிவெர்ஸில் இடம்பெறும் கதை தான். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரான எவ்லின் க்வான் வாங் என்கிற பெண், அவர் நடத்தி வரும் சலவை நிறுவனத்தின் கணக்குவழக்குகளை சரிபார்ப்பதில் தொடங்குகிறது திரைப்படம். எவ்லினின் கணவர் வேமண்ட் வாங், மகள் ஜாய் வாங் உள்ளிட்டோரின் அறிமுகத்துடன் , அவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இல்லாததும் இவர்களுக்கிடையேயான மனத்தாங்கல் குறித்தும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன்பின் எவ்லின் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்யும் பொருட்டு தனது குடும்பத்தாருடன் வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறார். அங்கே இருக்கிற கண்டிப்பான பெண் அலுவலர் எவ்லினிடம் கணக்குகள் குறித்துக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே எவ்லின் திடீரென அங்கிருந்து நாற்காலியுடன் வேறெங்கோ இழுத்துச்செல்லப்படுகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என உணரும் முன்பே அவருடைய கணவர் வேமண்ட் அவர்முன் தோன்றி தான் வேறொரு உலகத்திலிருந்த வந்திருப்பதாகவும் எவ்லின் மிகப்பெரிய ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் ஒரு சக்தி வாய்ட்ந்த எதிரியின் மூலம் பெரும் ஆபத்து நேர இருப்பதாகவும் சொல்ல அங்கிருந்து திரைப்படம் வேறொரு களத்தில் பரபரப்பாக பயணிக்கத் துவங்குகிறது.
பின்பு வெவ்வேறு உலகங்களில் புகழ்பெற்ற ஆக்ஷன் நடிகையாகவும், சமையல் கலைஞராகவும், பாடகியாகவும், விஞ்ஞானியாகவும், பாறாங்கல்லாகவும் (!) இருக்கும் பல எவ்லின்களையும் அவர்களுடைய வாழ்வையும் பார்க்கிறோம். எவ்லினுக்குக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நேரப்போகும் ஆபத்து என்ன ? யார் அந்த சக்திவாய்ந்த எதிரி? எவ்லினுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? எவ்லின் சிக்கல்களை முறியடித்து இந்த உலகிற்கு திரும்பினாரா இல்லையா ? என்பதெல்லாம் மீதிக்கதை.
எவ்லினாக மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கும் மைக்கேல் யோஹ் (Michael Yeoh) க்ரவ்ச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன் (Crouching tiger hidden dragon) உள்ளிட்ட பல புகழ்பெற்ற சீன/ஹாங்காக் திரைப்படங்களில் 35 ஆண்டுகளாக நடித்து வருபவர். உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசானுக்கு இணையாக பெரும்பாலான சண்டைக்காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்த நடிகை என்ற பெருமையும் மைக்கேல் யோஹ்வுக்கு உண்டு. ஜாக்கிசான் பற்றிக் குறிப்பிடுகையில் மற்றுமொரு ருசிகரமான சம்பவத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
டேனியல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் இயக்குநர்களான டேனியல் க்வான் (Daniel Kwan) டேனியல் ஷெய்னெர்ட் (Daniel Scheinert) இருவரும் ஜாக்கிசானை மனதில் வைத்தே கதையை எழுதியிருக்கின்றார்கள். சண்டைக்காட்சிகள் ,அபத்த நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என இந்தப் படத்துக்குத் தேவையான அத்தனைக்கும் ஜாக்கி பொருத்தமானவராக இருப்பார் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால் அவர்கள், அவர்கள் சீனா சென்று ஜாக்கிசானை அணுகியபொழுது அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகே டேனியல்ஸ், பெண் பாத்திரத்தை மையமாக வைத்து கதையை மாற்றி எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
மைக்கேல் யோஹ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதும் திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததும் யாருமே எதிர்பாராத ஒன்று. ’எவ்ரிதிங் எவ்ரிவேர்’ திரைப்படம் உலகம் முழுக்க பெருவெற்றி பெற்றதை அறிந்த ஜாக்கிசான் , யோஹ்வுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு டேனியல்ஸ் இந்தப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதையும் சொல்லி குறுந்தகவல் அனுப்ப, ‘your loss my bro' என விளையாட்டாக அவரைக் கேலி செய்திருக்கிறார் யோஹ். இதுமட்டுமின்றி எவ்லினின் கணவர் வேமண்ட் பாத்திரத்தில் ஜாக்கிசானைப் போலவே தோற்றமளிக்கும் கேஹ்யூய் க்வானையும் நடிக்கவைத்து குறும்பு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷ்வல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் . அதீதமாக எளிமைபடுத்தி சொல்வதானால் ஒளிப்பதிவு, ஒப்பனை, காட்சியைப் படம்பிடிக்கும் விதம், கோணம் ஆகிவற்றில் மாறுபாடு செய்தல், ப்ரொடக்ஷன் வடிவமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு, கலை இயக்கம், உள்ளிட்டவற்றின் துணையுடன் உருவாக்கப்படுபவை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) எனவும் கணினியின் துணைகொண்டு டிஜிட்டலாக மேம்படுத்தப்பட்டு, உருமாற்றப்பட்டு,உருவாக்கப்படுபவை விஷ்வல் எஃபெக்ட்ஸ் (VFX) எனவும் அழைக்கப்படுகின்றன.
ஹாலிவுட் திரைப்படங்களும் அவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியத் திரைப்படங்களும் பல நூறு கோடிகளில் செலவு செய்து, பல நூறு தொழிநுட்பக் கலைஞர்களின் துணை கொண்டு VFX செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், முறையான பயிற்சியோ முன்னனுபவமோ இல்லாமல் தாங்களாகவே கிராஃபிக்ஸ் வடிவமைப்பைக் கற்றுக் கொண்ட ஐந்தே ஐந்து தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக் கொண்டு 500க்கும் மேற்பட்ட VFX காட்சித்துண்டுகளை உருவாக்கியிருக்கிறது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ படக்குழு. VFX இயக்குநர் ஸ்சாக் ஸ்டல்ட்ஸ் (Zak Stoltz) உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஐவரும் லாக்டவுன் காலத்தில் தங்கள் வீட்டில் இருந்தபடி தங்களுடைய கணினியையே பயன்படுத்திபடி வீடியோவில் பேசிப் பேசியே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் இத்தனை பெரிய காரியத்தை சாதித்திருக்கின்றார்கள்.
பெரும் ஸ்டூடியோக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் திரைத்துறையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த பத்தாண்டுகளாக சிறப்பான சுயாதீன திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் A24 என்னும் நிறுவனமே ’எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அவர்களுடன் இணைந்து இயக்குநர்கள் டேனியல்ஸும், ஹாலிவுட்டில் மார்வெல்லுக்காக பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்களும் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார்கள். இரண்டரை கோடி டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுக்க பத்தரை கோடி டாலர்களை சம்பாதித்திருக்கின்றது. அதுமின்றி ரசிகர்கள், விமர்சகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றது.
’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படம் சிறந்த நடிப்பு, அபாரமான சண்டைக்காட்சிகள், அட்டகாசமான VFX, பொருத்தமான பின்னணி இசை என அத்தனையையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு வேறு சில பல காரணிகளும் உண்டு. தங்களுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் புலம் பெயரும் பெற்றோர் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பதின்பருவ இளைஞர்களின் மன அழுத்தம், பெறோருக்கும் அவர்களுக்குமான தலைமுறை இடைவெளி, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள், தனிமனிதர்கள் எதற்காகவாவது ஒடிக்கொண்டே இருக்க வேண்டிய போட்டிச்சூழல் , இருத்தலியல் சிக்கல்கள், என எல்லாவற்றையும் ஒரு தத்துவார்த்தமான அதே சமயம் அசட்டுத்தனமான நகைச்சுவையினூடாக உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருப்பதே அந்த உளப்பிணைப்பிற்குக் காரணம் எனக் கொள்ளலாம்.
’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்...’ -