நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 27 நவம்பர், 2019

காணாமல் போன தேசங்கள் - நிர்மல்

நிர்மல் அவர்களின் ‘ காணாமல் போன தேசங்கள்’ புத்தகம் குறித்து...

"இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இனக்குழு என்பது பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு காட்டும் தனி முக்கியத்துவமும் மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே முக்கிய பிரச்சனை. அதிகாரத்தை வைத்து நில வளங்கள் மற்றும் வேலை வாய்ப்பை தங்களுக்குள் வைத்துக் கொண்டு சிலரை ஒதுக்குவதே இனக்குழு பிரச்சனையின் மூலம். இதுதான் பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்கள்."
Geopolitics - politics, especially international relations, as influenced by geographical factors. புவியியல் காரணிகள் , சர்வதேச அளவில் பிற நாடுகளோடான உறவு, இவை சார்ந்த அரசியலே - புவியரசியல்.

‘காணாமல் போன தேசங்கள்’ -தலைப்பே விவரிப்பது போல, கால ஓட்டத்தில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன நாடுகள் குறித்தும் அந்தந்த நாடுகளின் அரசியல், மொழி, கலாச்சாரம், இனக்குழுக்கள் (Ethnic groups) , வாழ்வியல், சந்தித்த பிரச்சனைகள், பிற நாடுகளின் தலையீடுகள் குறித்தும் மிக விரிவாக பேசியிருக்கிறார்.

யூகோஸ்லாவியா தொடங்கி ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா வரை காணாமல் போன இந்த தேசங்களின் வரலாறுகளை உற்று நோக்கினால் இனம், மொழி, மதம், அரசியல், கலாச்சாரம் என பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கிற நாடுகள், மொழியின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ, ஏதோவொரு ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்களைத் திணிக்க முயல்வதே புரட்சியும் வன்முறையுமாய் சிதறிப் போக காரணமாக இருந்திருக்கிறது.

ஒவ்வொரு நாடுகளின் இடர்பாடுகள் உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்து வாசிக்கும்போதும் நம் நாட்டில் அதே மாதிரியான ஒரு நிகழ்வோடு அதனை ஒப்புநோக்கத் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. ஈழம், காஷ்மிர் என பலவற்றை நிர்மல் அவரே விரிவாக ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காலம் காலமாக நாம் சமூக அறிவியல் புத்தகங்களில் படித்துவந்த இந்திய நாட்டின் ’Unity in diversity - வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியக் கூறுகள் குறித்தும் உண்மையான நிலை குறித்தும் நமக்கொரு தெளிவான புரிதல் கிடைக்கிறது. நிலவுடைமை, நிலப்பிரபுத்துவம், பண்ணை அடிமை முறை,தேசியவாதம், தனிப்பட்ட மனிதர்களின் அதிகார வெறியால் பாதிக்கப்பட்ட நாடுகள், இயற்கை வளங்களின் மேலாண்மை, மூன்றாம் உலக நாடுகளில் வல்லரசுகளின் சூழ்ச்சி விளையாட்டுகள், என அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
For every Nationalism there will be a counter Nationalism. ஏனென்றால் தேசிய உணர்வு என்பது மிக எளிதில் மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய உணர்வு. அது மிக எளிதாக முன் பின் தெரியாத நபர்களை இணைக்கும், போராட வைக்கும்.... அந்த இணைப்பு சிலரையோ, பலரையோ தனிமைபடுத்தக் கூடும்.
திராவிட சித்தாந்தம் முன்வைக்கிற மாநில சுயாட்சி (State Autonomy), இறையாண்மை (Sovereign state) ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவம் பற்றி பேசுகிற அதே வேளையில் தேசியம் (Nationalism), இன அடையாளங்களை (Ethnic identity) பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்படுகிறது.
இறுதியாக ஒரு தேசம் அதன் மக்களிடையேயான இன/மத/மொழி/கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக தன்னாட்சி செய்வதால் விளைகிற நன்மைகளையும் அதற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்தின் ஆட்சிமுறை/அரசியலமைப்பை சொல்வதோடு முடிகிறது.

த்ரில்லர் வகைக் கதைகளும்,திரைப்படத்தின் சுருக்கமான வடிவிலான கதைகளும், காதல் கதைகளுமாய் நிறைந்து கிடக்கிற இந்த #PenToPublish போட்டியில் இத்தனை தீவிரத்தன்மை வாய்ந்த ’புவியரசியல்’ (Geopolitics) பேசுகிற கட்டுரைத் தொகுப்பை எழுத முடிவு செய்ததற்கே தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள். புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் reference புத்தகங்களின் பட்டியல் மட்டும் நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அத்தனை அசுரத்தனமான உழைப்பு & விவரணை. So far, this has been the most sincere effort which has been made for 2019 #PenToPublish contest.

தமிழ் இலக்கியப் பரப்பில் புனைவல்லாத படைப்புகளுக்கான இடம் பயணக் கட்டுரைகள், இலக்கியவாதிகளின் அனுபவக் கட்டுரைகள் என்கிற அளவில் பெரும்பான்மையாகவும்,  மாநில/தேசிய அரசியல், வரலாறு, அறிவியல் பேசுகிற புத்தகங்கள் ஓரளவும் புழக்கத்தில் இருக்கின்றன. அபுனைவின் முக்கியமான சிக்கல் அவற்றில் பெரும்பாலானவை கொண்டிருக்கிற ஆய்வுக்கட்டுரை மாதிரியான கடுமையான மொழியே. வளர்-இளம் பருவத்தினருக்கான (Teen & Young adults) எளிமையான மொழியைக் கொண்ட அபுனைவுகள் இல்லாத குறையை  , இந்தப் புத்தகம் போக்கும் என நிச்சயம் நம்புவோம்.மீண்டுமொரு முறை மனம்நிறைந்த  வாழ்த்துக்கள் நிர்மல்.வாய்ப்பும் நேரமும் அமைந்தால் தொடர்ந்து எழுதவும்...!

புத்தகம் ஆன்லைனில் வாங்க: இங்கு

செவ்வாய், 26 நவம்பர், 2019

’ரூஹ்’ - லஷ்மி சரவணகுமார்



லஷ்மி சரவணகுமாரின்ரூஹ்நாவல் குறித்து .

 அமேசான் நிறுவனம் நடத்தும் கிண்டில் #PenToPublish போட்டி குறித்தும், இம்முறை அதிகளவு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் வெளிவந்த படைப்புகளில் நான் முதலில் படித்தது லஷ்மியின்ரூஹ்’. ரூஹ் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள் சொல்கிறது இணையம்.
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.

 பாவ்லொ கொய்லோ (Paulo Coelho) எழுதியதி அல்கெமிஸ்ட்நாவல் போன்று, தமிழில் தத்துவமும் வாழ்வியலும் ஆன்மிகமும் சேர்ந்த புனைவுகள் வெகு சொற்பமே. சமகால எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த தத்துவம்/வாழ்வியல் சார்ந்து தீவிரத்தன்மையோடு அணுகியது சரவணன் சந்திரனின்சுபிட்சமுருகன்’. அதனைத் தொடர்ந்து தமிழில் தத்துவம் சார்ந்த, அன்பின் மகத்துவத்தை எளிமையாகப் பேசுகிற ஒரு படைப்புரூஹ்’.


எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.

 ஏர்வாடியில் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழாவில் தொடங்குகிற கதை, பதினெட்டாம் நூற்றாண்டில் அரபிக்கடலில் மராட்டிய கடற்படைத் தளபதி கனோஜி அங்க்ரேவால்  சிறைபிடிக்கப்படும் பாக்தாத் கப்பல்; அதன் தலைமை மாலுமி அஹமது; இவர்களில் துவங்கி , பேரையூரில் வாழும் தோல்பாவைக் கலைஞர் விட்டல்ராவ்; அவருடைய மகன் ஜோதி, அதே ஊரில் வாழ்கிற அன்வர், அன்வரின் மனைவி ராபியா என்னும் தேவதை; என அத்தனை பேருடைய கதைகளையும் அத்தனை இடங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கிற அற்புதமான கதை சொல்லல்

சிறுவயதிலிருந்தே குடும்பமும் சுற்றமும் வெறுக்கிற, அவனுடைய உடல்மொழியின் பெண்மைக்காக சீண்டப்படுகிற கேலிக்குள்ளாகிற  ஜோதி என்கிற உணர்வுகளின் பாற்பட்ட வெற்று மனிதன்; அவனுடைய எண்ணவோட்டங்களும் மனவக்கிரங்களும் அவனைச் செலுத்துகிற பாதை; இறுதியில் அவன் கண்டடைகிற முடிவு. இந்த உருமாற்றமும் அதனூடான உரையாடல்களும் தத்துவார்த்தமான கேள்விகளுமே ஒரு cathartic process (இணையான தமிழ்சொல்லாம் துப்புறவாக்கத்தில் catharsisன் அழகு இல்லை).

அவளின் நினைவென்பது பற்றியெரியும் காட்டுத் தீயின் உக்கிரம்,  சதையும் எலும்புகளும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம், அவளென்பது  யாதுமான பேருரு
 ராபியாவின் பாத்திரப் படைப்பு குறித்து நிச்சயமாய் பல உரையாடல்கள் நிகழும். தேய்வழக்கான சொல்லாடலில்கத்தி மேல் நடக்கிறமாதிரியான கதை சொல்லல்நிபந்தனையற்ற அன்பின்  மொத்த உருவானவளாய் திகழ்கிற ராபியாவும் அவள் அன்பால் நிகழ்த்துகிற அற்புதங்களுமாய்
நிறைந்திருக்கின்றது ‘ரூஹ்’. கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாய் நிகழ்கிற பெரும் பயணங்களாலும் அதில் பங்குகொண்டு பயணிக்கிறவர்களின் கதைகளாலும் ஆனது ‘ரூஹ்’
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
லஷ்மி சரவணகுமாரின் முந்தைய படைப்பான கொமொரா முழுக்க முழுக்க வெறுப்பையும் அது சார்ந்த உணர்வுகளையும் பேசியதெனில், ‘ரூஹ்’ அதன் எதிர் துருவத்தில் நின்று முழுமையான அன்பையும் சரணடைதலையும் பேசுகின்றது. என்னளவில் இதுவரையிலான லஷ்மியின் படைப்புகளில் ‘ரூஹ்’ எப்போதுமே முதலிடத்தில் இருக்கும்.

தவறவிடக் கூடாத படைப்பு...! கட்டாயம் வாசித்துவிடவும்...!

மின் புத்தகம் வாங்க: இந்த இணைப்பை க்ளிக்கவும்

புதன், 28 ஆகஸ்ட், 2019

கேள்விகளின் தொடர்சுழல் - Qarrtsiluni


பேரன்பின் பார்ட்னருக்கு,

கடிதங்கள் எழுதுவதற்கான காரணங்கள்  அற்றுப்போய்விடவில்லை எனினும், ஓய்ந்தமர்ந்து எழுத நேரமிருந்தும், ஏனோ மனம் வரவில்லை. இந்தப் புதிய பாதையில் கொஞ்சமாய்  நடந்து பழகத் துவங்கியிருக்கின்றேன் பார்ட்னர். ஆங்காங்கே சிராய்ப்புகளும் சிறு கீறல்களும் இல்லாமலில்லை. விழுந்து, எழுந்து, நிதானித்து, பின் தொடர்ந்து நடக்கிற செயற்சுழல் ஓரளவு பழகி, புரிந்து, தொடர்கிறது. பெரிதாய் இளைப்பாறல்கள் ஏதுமில்லை; தேடும் திசையும் தெரிந்தேனில்லை. வழக்கமாய் கைதரும் வாசிப்பும் , யாருக்காகவேனும் பாட்டுப் பாட வாய்க்கிற இரவுகளும், சேர்த்து யோசிக்க இன்னொரு உயிருமாய் நாட்கள் நகர்த்துகின்றேன்.

எந்தன் பழைய கடிதங்களை, அவ்வப்போது வாசிக்க நேர்கையில் முற்றிலும் வேறொருவனாக என்னை நானே கற்பனை செய்து கொள்கின்றேன் பார்ட்னர். நித்ய பயணியாயும், நாடோடியாயும், வனாந்திரங்களில் உலவித்திரிகிறவனாயும், தனிமையின் காதலனாயும்,  வெறுமையின் கவிஞனாயும் என்னை நானே உருவகித்துத் திரிந்த, அந்த கற்பிதங்களின் தொகுப்புருவானவனை எங்கே எனத் தேடிக் கொண்டிருக்கிறேன் பார்ட்னர். வலிந்து வருந்தி உருவாக்கி, வலிந்து வருந்தித் தொலைத்த அந்த உருவின் இன்மை உணர்கின்றேன் பார்ட்னர்.

இரண்டே இரண்டு விழிகளால் அழுது எப்படி இந்த கடலை கண்னீராக நான் வெளியேற்ற முடியும்! என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது எப்படி நான் அழாமலிருக்க முடியும்!- ஜெ பிரான்சிஸ் கிருபா ,கன்னி

இப்போதைய என் இரவுகள் அத்துனை நீளமில்லை பார்ட்னர். மாதக்கணக்கில் வாராதிருக்கிற மழையும் , வான் நீங்கி வாட்டித் தீய்த்துக் கொண்டிருக்கிற காலமிது. சாலைகளின் தகிப்பும், காற்றின் அனலும், வியர்வை நெடியும் ஒன்றுகூடி தோள்மீதமர்ந்து சுமை சேர்க்கின்றது பார்ட்னர். நாள்தோரும் உலகில் நிகழ்கிற அத்தனை மரணங்களுக்காவும் உள்ளூர வலிய துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். எல்லா மரணங்களுக்காகவும் கோபப்பட்டு, எல்லா மரணங்களுக்காகவும் வருந்தி, எல்லா மரணங்களுக்காகவும் கண்ணீர் சிந்தி , பின் என்னை நானே மீளத் தேற்றிக் கொள்ளுகிறேன். மனம் துயருறும் பொருட்டான காரணங்கள் ஏதுமில்லாததே பெரும் அழுத்தமும் அச்சமுமாய்க் கொண்டிருக்கின்றேன் பார்ட்னர்.

குளிர் தனிமையென்றால் கோடை பிரிவல்லவா ? பின்பு, மழையே கூடல்...! காலமும் வார்த்தைகளும் பெரும் பாலைவனத்தின் மணல் புயல் பார்ட்னர். சுட்டுப் பொசுக்கும் புதைமணலிலிருந்து மீட்டெடுத்துக் கைதூக்க தோதாய் ஒரு கவிதையோ, பாடலோ, இசைத் துணுக்கோ எக்கனமும்  தோன்றிவிடக்கூடும். நெடிந்து நீள்கிற சிறகுகளையும் பிழைத்தலின் பொருட்டு முடக்கி கூடடைக்க வேண்டியிருக்கின்றது. வானக் கூரை இடிந்து விழுந்தாலென்ன பார்ட்னர். நான் பறக்கா வானமும், நான் ஓட்டா சாலைகளும் யார் பொருட்டு இருக்கின்றன பார்ட்னர்

இதுவரையான என் வாழ்வின் எல்லா முடிவுகளும் எல்லா தெரிவுகளும் கேள்விகளுக்கு உட்படுகின்றன. நானே கேட்டுக் களைக்கிறேன். எது சரி எது தவறென திண்ணமாய் முடிவுசெய்யமுடியாத வெளியொன்றின் ஒற்றைப் பேரரசனாய் முடிசூட்டிக்கொள்ளுகின்றேன். நான் தவறவிட்ட மனங்களுக்காயும் என்னைத் தவறவிட்ட மனங்களுக்காயும் அன்றாடம் சில நொடிகள் மெளனமாய் இரங்கல் தெரிவிக்க வேண்டியதாயிருக்கின்றது. உலகம் முழுக்கவே கூட்டத்தில் தனித்துவிடப்பட்டு, துயருறும் மனங்களுக்கான பொதுப்படை பண்புநலன்களையும், ஆற்றுப்படுத்தும் வழிகளையும் யாரேனும் ஆராய்ந்து சொல்வார்களாயின் நான் அவர்தம் நம்பிக்கையாளனாவேன் பார்ட்னர்.

மகிழ்ச்சிக்கும்மகிழ்ச்சி என நான் நம்புவதற்கும் இடையே ஆயிரம் மைல்கள் இருக்கின்றனஇந்த நகரத்தில் என்னைப் போல் எங்குமிருக்க முடியாமல்அலைந்துழல்பவர்களில் நான் எத்தனையாவது ஆள்?-மனுஷ்ய புத்திரன்
அல்லால், தனிமையின்பாற்பட்ட எவனொருவனும் எவளொருத்தியும் மற்றேனைய மனங்களோடு தங்களைப் பொருத்திக் கொள்வார்களாயின்; இந்த உயிர்க்கூட்டங்களில் கலந்துவிட முயல்வார்களாயின்; இப்படி ஊசலாடி அலைக்கழிய வேண்டுமென்பதே உலக முறைமையோ ?அல்லது தம்மை எங்கே பொருத்திக் கொள்ளவேண்டுமென யோசித்து யோசித்தே சோர்ந்தயர்வதால் ஏற்படும் அடையாளச் சிக்கலோ ? Existential Crisis என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா பார்ட்னர் ? இருத்தலியலின் நெருக்கடி...! இங்கே பிழைத்துக் கிடத்தலும் அடையாளங்களைத் தேடிக் கண்டடைதலுமே போராட்டம் பார்ட்னர். எல்லாவற்றையும் தாண்டியும் தானே இங்கு எல்லாமுமே ? சில்வியா ப்ளாத் சொன்னதைப் போல ,' I am a victim of introspection'. தொடர்கேள்விகள் ஒரு சுழலும் முடிவிலி பார்ட்னர். அத்தனை எளிதாய் ஒருவனால் விடை தேடி விட முடியுமா என்ன ?

மனித மனங்களை நிரந்தரமாய் நம்பப்போவதில்லையென தீர்மானித்தேனாயின் இன்னமும் பிழைத்துக்கிடக்க வாய்ப்பு உண்டு. நட்புக்கும், அன்புக்கும், காதலுக்கும், குடும்பத்துக்கும், உறவுக்கும், பிரிவுக்கும், எதற்குமே தனித்தனியே இடமொதுக்காதிருந்து, மொத்தமாய் சாலையைக் கடக்கிற மந்தையாடுகளெனக் கொண்டால், நான் மேய்ப்பனாய் இருப்பதைக் காட்டிலும் சாலையாய் இருப்பதையே அதிகம் விரும்புகிறேன் பார்ட்னர். பொறுப்புத் துறப்புகளுக்கும் விளக்கங்களுக்கும் வேலையில்லை. உடைந்த எதையும் ஒட்டவைக்க பெரிதாய் முயற்சி செய்வதில்லை; யாருடைய நேரத்தையும் கோருவதில்லை; எழுதுவதை வாசிக்கச் சொல்லி கேட்டேனில்லை; ஆனாலும் எழுதுவதையும், படிப்பதையும், கேட்பவர்களுக்காகவும் பிடித்தவர்களுக்காகவும் பாடுவதையும்,  நிறுத்தவில்லை. பாதை நீள நீள, என் பயணம் தொடர்கின்றது பார்ட்னர்.

இதோ இந்தக் கடிதத்தின் கடைசிப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கையில் இத்தனை நாட்களாய்க் காத்திருந்த மழை, தயங்கித் தயங்கி பெய்யத் தொடங்கின்றது. எல்லா துவக்கங்களையும் ஒரு பெருமழை உன்னதமாக்கி விடுகிறது இல்லையா ? எல்லா உயிர்களின் தனிமையையும் வெறுமையையும் மொத்தமாய் இட்டு நிரப்பிவிட முடிந்தவளல்லவா மழை..!!


இப்படிக்கு,
மழைதரும் நம்பிக்கையோடும்,
விடையில்லாக் கேள்விகளோடும்,
நான்..!






செவ்வாய், 25 ஜூன், 2019

இந்தியாவின் கழிப்பறைக் குழப்பம் - Where India goes ?


புதிய இந்தியா - 2019:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறோம். பெருவாரியான மக்களின் தேர்வாக மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி. வெற்றிக்குப் பின்னான தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் ஒரு ‘புதிய இந்தியா’வை அமைக்க இருப்பதாக பேசி இருக்கிறார் திரு.மோடி அவர்கள்.

பழைய சிக்கல்கள்:

GST வரிவிதிப்பு , பணமதிப்பு நீக்கம், சிறு குறு தொழிலாளர்களின் முடக்கம்,  
பொருளாதார சிக்கல்கள், மதம்/சாதியின் பெயரால் நாடு முழுவதும் நிகழ்த்தப்படும் வன்முறைகள், வேலைவாய்ப்பின்மை,  NEET மாதிரியான தேர்வுகளின் வாயிலாக கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்படும் மருத்துவக் கல்வி, CBSE பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றப்படும் கல்விக் கொள்கைகள், என இதுவரை நாடு சந்தித்த பிரச்சனைகளுக்கு சரியான நிலையான முழுமையான தீர்வுகள் கிட்டாத நிலையில், நாட்டின் மிக முக்கியமான பொது சுகாதாரம் சார்ந்த  மற்றுமொரு பிரச்சனை Open Defecation - OD எனப்படும் திறந்தவெளி மலம் கழித்தல்.
தூய்மை இந்தியா:

மத்திய அரசு தனது கடந்த ஆட்சிக்காலத்தில் அதிக முக்கியத்துவம் அளித்த திட்டங்களுள் முதன்மையானது மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னெடுத்த  ‘Swachh Bharat Mission' எனும் ’தூய்மை இந்தியா’ திட்டம். கங்கையை சுத்தப்படுத்துதல், நகரங்களும் கிராமங்களுக்குமான தனித்தனி தூய்மை இந்தியா திட்டங்கள், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தோடு இணைந்து வகுக்கப்பட்ட திட்டங்கள், முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள்/பாரம்பரியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களின் தூய்மையை மேம்படுத்துதல் என பல துணைத்திட்டங்களை உள்ளடக்கியது இந்த ‘தூய்மை இந்தியா’ திட்டம். 

2014 துவங்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக சொல்லப்பட்டது ODF (Open Defecation Free - ODF) - திறந்தவெளி மலம்கழித்தல் அற்ற நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டுமென்பதே. 

Courtesy: indiatoday.in

தூய்மையின் நிலை ? 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கிராமங்களுக்கான தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM-G) சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை வெளியீடு கீழ்கண்ட செய்தியைச் சொன்னது.

2018 நவம்பர் மாதம் தொடங்கி 2019 ஃபிப்ரவரி மாதம் வரையிலும் நடத்தப்பட்ட  தேசிய வருடாந்திர ஊரக சுகாதார கணக்கெடுப்பின் (The National Annual Rural Sanitation Survey - NARSS) படி ,  இந்திய கிராமப்புறங்களில் 93% வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதாகவும், 96.4 % வீடுகளில் கழிப்பறையைப் பயன்படுத்தும் வசதி இருந்தால் கட்டாயம் பயன்படுத்துவதாகவும் சொல்லப்பட்டது. இந்திய கிராமங்களில் 90.7%, திறந்தவெளி மலம்கழித்தலற்றவை  (ODF - Open defecation free)  என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 6136 கிராமங்களில் 92040 குடும்பங்களை சுயாதீன சரிபார்ப்பு நிறுவனங்களின் (IVA - Independent verification agency) துணையோடு நேரடியாக சரிபார்த்ததிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

உண்மையிலே தூய்மையானதா இந்தியா ?

முதலில் இந்தியாவின் திறந்தவெளி மலம்கழித்தல் குறித்த வேறு சில தரவுகளின் அடிப்படையிலான தகவல்களைப் பார்க்கலாம். கீழ்காணும் படம் உலக வங்கியின்  தரவுகள் அடிப்படையிலானது. இந்தியாவின் கிராமப்புறங்களில் கடந்த 2000 ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலும் திறந்தவெளியில் மலம்கழிப்போரின் சதவிகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் இறுதியாக 39.84 % சதவிகிதம் பேர் இந்திய கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக சொல்லப்பட்டது.
இனி, நமது அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட 2014 ஆம் ஆண்டு முதல், இந்திய மாநிலங்களில் 96 சதவிகிதத்துக்கு மேல் திறந்தவெளி மலம் கழித்தலற்றதாக அறிவித்த  2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலுமான அரசு தரப்பின் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் பார்க்கலாம்.

வட இந்தியாவின் அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான பிகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தரவுகளையே ஒப்பீடுகளுக்கு எடுத்துக் கொள்வோம். IHHL (Individual Household Latrine) எனப்படும் கழிப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்டு, மக்களின் தினசரி பயன்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையிலேயே இத்தனை சதவிகிதம் ODF (Open Defecation Free) திறந்தவெளி மலம்கழித்தலற்ற கிராமங்களாக/மாவட்டங்களாக/மாநிலங்களாக அரசு தரப்பு அறிவிக்கின்றது.



இனி, இந்தியாவில் பொது சுகாதாரம், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளர்ச்சி என பல்வேறு துறைகளில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டு வரும் RICE எனப்படும் Research Institute for Compassionate Economics நிறுவனம் நடத்திய ஆய்வுகளையும் அதன் அடிப்படையிலான தரவுகளையும் பார்க்கலாம். இந்த தகவல்களும் மேற்கண்ட அதே நான்கு மாநிலங்கள் சார்ந்தவையே.

RICE நிறுவனத்தின் 2014 ஆண்டின் கனக்கெடுப்போடு 2018 ஆண்டு கனக்கெடுப்பின் முடிவுகளை ஒப்பிட்டு, கழிவறை பயன்பாடு/அணுகல் (access to toilets) அதிகரித்திருப்பதை கீழ்கண்ட படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சதவிகித வேறுபாட்டில் காணலாம்.


RICE நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கழிப்பறை இல்லாமல் இருந்து, 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது கழிப்பறை கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் சதவிகிதமும், அவற்றுள் அரசு உதவி/ மானியத் தொகை பெற்று கழிப்பறை கட்டிய வீடுகளின் சதவிகிதமும் குறிப்பிடப்பட்டுள்ளது (கீழ்க்காணும் படம்)

தூய்மை இந்தியா திட்டவரைவின் கணக்கெடுப்பு முடிவுகளின் படியும், RICE அமைப்பின் கணக்கெடுப்பு முடிவுகளின் படியும், கழிப்பறை அணுக்கம் (access to toilets) அதிகரித்திருக்கின்றது; கட்டப்பட்ட கழிப்பறைகளின் எண்ணிக்கையும் கூடியிருக்கின்றது; 2014ஆம் ஆண்டை விட திறந்தவெளியில் மலம் கழிப்போரின் சதவிகிதம் பெருமளவு குறைந்திருக்கின்றது;

என்ன சிக்கல் ? எங்கே குழப்பம் ?

தூய்மை இந்தியா திட்டத்தின் வாயிலாக  மேற்கொள்ளப்பட்ட அத்தனை முன்னெடுப்புகளும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளும், அடிப்படையில் சில விஷயங்களில்  மட்டுமே கவனம் செலுத்தின. அதில் முக்கியமானது கழிப்பறைகள் கட்டுதல். கழிப்பறைகள் கட்டிமுடிப்பதன் மூலம் மட்டுமே அந்தந்த  பகுதிகள் (கிராமம்/நகரம்/மாநிலம்) திறந்தவெளி மலம்கழித்தலற்றவை (Open Defecation Free) என அறிவிக்கப்பட்டன.

மேலே குறிப்பிட்ட நான்கு மாநிலங்களிலுமே காலை நேரங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் கிராம மக்களை வெவ்வெறு வகையில் மிரட்டுதல்,அவமானப்படுத்துதல், கழிப்பறை கட்டாத குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை தர மறுத்தல், விவசாய மானியங்கள்  மறுத்தல், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மறுத்தல், கடுமையான அபராதங்கள் வசூலித்தல்,   என உள்ளாட்சி அதிகாரிகளும் இன்னபிற அரசு ஊழியர்களும் அவர்களுடைய மேலதிகாரிகள் உத்தரவின் பெயரிலேயே இத்தனை காரியங்களையும் செய்துவந்ததாகத் தெரிகிறது.  பிரதமரின் அறிவிப்பின்படி ஸ்வச் பாரத் திட்டத்தின் வாயிலாக இந்தியா மொத்தமும் நான்காண்டுகளில் முழுமையாக தூய்மை அடைந்துவிட்டதாக காட்டும் பொருட்டே இவை அனைத்தும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

Where India goes ? ஆய்வுப்பார்வையும், வேறு கோணங்களும்

இந்திய புள்ளியியல் கழகத்தின் (Indian Statistical Institute) ஆராய்ச்சியாளர்களும், R.I.C.E அமைப்பின் நிர்வாக இயக்குநர்களுமான  டயேன் காஃபே (Diane Coffey) மற்றும் டீன் ஸ்பியர்ஸ், தங்களுடைய 'Where India Goes: Abandoned toilets, Stunted development and the costs of caste' என்ற புத்தகத்தில் இந்தியாவின் தலையாய பிரச்சனைகளுல் ஒன்றான இந்த திறந்தவெளி மலம்கழித்தல் குறித்து மிக விரிவானதொரு ஆய்வுப்பார்வையை முன்வைத்திருக்கின்றனர்

இந்தியாவின் கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலும் அதை சார்ந்த பிற சிக்கல்களையும் , காரணங்கள் (Causes), விளைவுகள் (Consequences), எதிர்வினைகள் (responses)  என மூன்று பிரிவுகளின் கீழ் பத்து அத்தியாயங்களில் தீர ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர். இந்தியாவைவிட பொருளாதாரத்திலும், கல்வியறிவிலும் பிந்தங்கிய நிலையிலுள்ள பல ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகளில் கூட ’தி.வெ.ம.க’ சதவிகிதம் மிகக் குறைவாகவே உள்ள நிலையில், நம் நாட்டில் என்னதான் பிரச்சனை என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் டயேனும் டீனும்.

குழந்தைகள் இறப்பு விகிதம் (infant mortality rate), குழந்தைகளின் சராசரி வளர்ச்சி/உயரம் உள்ளிட்ட பல விஷயங்களில் திறந்தவெளி மலம் கழித்தலின் நேரடி பாதிப்பு பற்றி பேசுகின்றனர். மேலும் இந்த பிரச்சனையின் பின்னால் மிகப்பெரிய பங்கு வகிக்கின்ற சாதிரீதியான தீண்டாமை குறித்தும் ஒடுக்குமுறைகள் குறித்தும் நிறையவே பேசப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளேயோ அருகிலோ கழிப்பறை கட்டினால் அதை சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்ட சாதியினரை தாங்கள் வசிக்குமிடம் அருகே வர அனுமதிக்க நேரும் என்பதாலேயே பெரும்பாலான கிராம மக்கள் கழிப்பறைகள் கட்ட முன்வராதது டயேனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

சாதி... தீண்டாமை..தூய்மை ?!!

RICE அமைப்பு நடத்திய SQUATS (Sanitation quality- use, access and trends) கணக்கெடுப்பின்போது கழிப்பறை கட்டுமளவு வசதி வாய்த்த அந்தந்த கிராம மக்கள் சொன்னது, ”இந்திய அரசாங்கமும், தூய்மை இந்தியா திட்டமும் பரிந்துரைக்கும் அளவில் சிறிய நிலத்தடி கழிவுத்தொட்டிகள் கொண்ட கழிப்பறைகளை கட்டினால் அவை அடிக்கடி நிரம்பும். அப்படி கழிவுத்தொட்டிகள் நிரம்பும் பட்சத்தில் அதை சுத்தம் செய்ய (தலித்கள்) மலமள்ளும் தொழிலாளர்கள் யாரும் கிடைப்பதில்லை. நாங்கள் (உயர்சாதியினர்/பிராமணர்) இந்த வேலையை செய்ய மாட்டோம். அதனால் பெரிய தொட்டிகளை கட்டுகின்றோம். அதற்குமே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து நிறைய செலவு செய்து லாரி/மோட்டார் வைத்து சுத்தம் செய்ய வேண்டியிருக்கின்றது” .

1993 ஆம் ஆண்டு முதன்முதலில்  தொழிலாளர்களை கைகளால் மலமள்ள பணித்தலை பல மாநிலங்களில் தடைசெய்து இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்பு 2013ஆம் ஆண்டு நிறைவேறப்பட்ட The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Bill சட்டம், நாடுமுழுவதுமே தொழிலாளர்களை கைகளால் மலமள்ள பணித்தலை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. சிறை தண்டனையும் அபராதமும் கூட உண்டு. ஆனாலும் தேசிய குற்ற ஆவண காப்பகம் அளிக்கும் தகவலின்படி இன்றுவரை இந்த சட்டப்பிரிவின் கீழ் ஒரு வழக்கு கூட பதிவுசெய்யப்படாதது விந்தையே.

கிராம மக்கள் தூய்மை எனவும் மாசு எனவும் எந்தெந்த விஷயங்களை கணக்கிலெடுத்துக் கொள்கின்றார்கள் ?; சாதிக் கட்டமைப்பினால் நேரடியாகவும் மறைமுகவாகவும் என்னென்ன பாதிப்புகள் என்ன ? இவை குறித்து விவாதிப்பதன் மூலமும் கிராம  மக்களோடு நிறைய நாட்கள் செலவிடுவதன் வாயிலாகவும் இந்திய கிராமங்களில் சாதீய பாகுபாடுகள் குறித்து ஒரு புரிதலுக்கு வருகின்றனர்.

There are ways in which caste is similar to systems of dividing and ranking people that exist in other societies, such as race in the US, South Africa or Latin America. Yet, there are also ways in which caste in South Asia is a unique social institution. 
Much has been written about the elaborate rituals that some Brahmin and members of other higher castes perform to assert and maintain their purity (and therefore superiority) over other people from other castes. In addition to believing that objects (such as feces and drains) and situations (such as death and childbirth) can affect the purity of a person who interacts with them, many of the higher caste people also believe that people from lower castes are 'polluting'.
 (excerpts from the book) 

சாதீய ஒடுக்குமுறைகளுக்கும், தீண்டாமைக்கும்,  தூய்மை இந்தியா திட்டம் ஒழிக்க முயல்வதாகச் சொல்லும் திறந்தவெளி மலம்கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியுமென்பதைப் புரிந்து கொள்ளவே அதீத முயற்சியும், பொறுமையும், வாசிப்பும், பொதுநல நோக்கும் தேவைப்படுகின்றன.டெல்லி பல்கலைக்கழக சமூகவியலாளர் பேராசிரியர் ஆந்த்ரே பெதெய்ல் (Andre Beteille) சொல்வதுபோல “In our obsession for ritual purity, we make compromises with physical cleanliness.” 
The first part to our two-part answer to this central question: Why do so many people in rural India defecate in the open? Although many societies have ideas about what is clean and dirty, rural Indians' ideas about purity and pollution are globally unique and are intimately related to the Hindu caste system
(excerpt from the book)

இதை விட முக்கியமான மற்றொன்று கழிப்பறைகளின் கட்டுமானமும்  அதற்காக செய்யப்படும் அபரிமிதமான செலவினமும். சராசரியாக உலக சுகாதார மையத்தின் பரிந்துரையின்படி,  1.5 க்யூபிக் மீட்டர் கன அளவு கொண்ட நிலத்தடி இரட்டை மலக்குழியோடு (twin pit latrine) கட்டப்படும் கழிப்பறைக்கு வங்கதேசம் மாதிரியான நாட்டில் இந்திய ரூபாய் மதிப்பில் 2000ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை செலவாகக்கூடும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படும் கழிப்பறைகள் கட்ட 12000ரூபாயிலிருந்து 21000 ரூபாய் வரை செலவளிக்கின்றனர் இந்திய கிராமத்தினர். உலக சுகாதார மையம் பரிந்துரைக்கும் சராசரி அளவை விட ஐந்து மடங்கு பெரிய நிலத்தடி கழிவுநீர்/மலத் தொட்டியை கட்டுவதாலேயே இந்த செலவு. இதன் பின்னாலுள்ள உளவியல் குறித்து டயேன்/டீன் பின்வருமாறு கேள்வியெழுப்புகின்றனர்.

Why do rural Indians want such expensive toilets that sit atop large pits? Why do they reject the affordable options that are found in other developing countries? In short, why do rural Indians reject government pit latrines? Answering these questions requires an understanding of rural India's history of untouchability, and particularly the practice of manual scavenging.
(excerpt from the book)


மற்றொரு அத்தியாயத்தில் திறந்தவெளி மலம்கழித்தலால் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதை பற்றிப் பேசும்போது, Muslim mortality paradox என்கிற ஒரு விஷயத்தையும் குறிப்பிடுகின்றனர். இந்திய அரசின் குடும்பநல மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் , இந்து குழந்தைகளை விட இஸ்லாமிய குழந்தைகளின் இறப்பு விகிதம் 21% குறைவாக உள்ளதாக கண்டறிந்தனர்.சமூகத்தில் சிறுபான்மையினராகவும் பொருளாதார நிலையில் இந்துக்களை விட பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இஸ்லாமியர்களிடையே திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அதிகளாவில் இல்லாததும் அவர்கள் சக இஸ்லாமியர்கள் வாழும் பகுதியிலேயே வாழ்வதாலுமே, திறந்தவெளி மலம்கழித்தலால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றப் படுவதாகச் சொல்கிறார்கள்.
Open defecation kills children and stunts the growth of those who survive. It explains why some poorer children are more likely to survive than some richer children and it lets children in some of the poorest countries grow taller than children born in an India that has been experiencing rapid economic growth. These facts average over, all Indians: Open defecation is a relatively egalitarian health hazard.
If the effects of open defecation remain similar in the coming decades, over five million Indian children may die before open defecation is eliminated, if the decline continues at the same slow rate.
(excerpts from the book)

இறுதியாக...

இந்த பிரச்சனையின் நடைமுறைச் சிக்கல்களையும் ,இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி அலசி ஆராய்ந்த பின்னர், டயேன், டீன் இருவரும் மூன்று முக்கியமான பரிந்துரைகளை முன்வைக்கிறார்கள்.

1: திறந்தவெளி மலம்கழித்தல் சார்ந்த கணக்கெடுப்புகளை சுயாதீன அமைப்புகளின் மூலம் நடத்தி, ஓரளவு நடமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுத்தல்

2. மக்களிடையே கலாச்சாரம் குறித்தும், தனிப்பட்ட அவர்களுடைய தேர்வுகள் மற்றவர்களை எப்படி நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்றது என்பதையும், சாதி-தீண்டாமை பற்றியும்  உரையாடலைத் துவக்க/நிகழ்த்த வேண்டும்.

3. பொது சுகாதாரம் , துப்புறவு, சார்ந்து நடைமுறைபடுத்தப்படும் திட்டவரைவுகளை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி தேவையான மாறுபாடுகளைச் செயல்படுத்தவேண்டும்.

திறந்தவெளி மலம் கழித்தல் என்பது மக்களின் அடிப்படை பழக்க வழக்கம் மற்றும் குணாதிசயம் சார்ந்த ஒரு பிரச்சனை. முறையான கல்வியும், அடிப்படை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், தொடர் முயற்சிகளும் மட்டுமே இப்படியான பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை தரக்கூடியவை.
அரசாங்கம் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு கொள்கை ரீதியான தீர்வுகளை முன்னெடுத்தால் மட்டுமே நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஓரளவுக்காவது பயனடைய முடியும்.

"I shall have to defend myself on one point, namely, sanitary conveniences. I learned 35 years ago that a lavatory must be as clean as a drawing-room. I learned this in the West. I believe that many rules about cleanliness in lavatories are observed more scrupulously in the West than in the East. There are some defects in their rules in this matter, which can be easily remedied. The cause of many of our diseases is the condition of our lavatories and our bad habit of disposing of excreta anywhere and everywhere. I, therefore, believe in the absolute necessity of a clean place for answering the call of nature and clean articles for use at the time, have accustomed myself to them and wish that all others should do the same. The habit has become so firm in me that even if I wished to change it I would not be able to do so. Nor do I wish to change it"
 - M.K.Gandhi, Navajivan (24-5-1925)
ஆங்கிலத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க : இங்கு 

எதிர் வெளியீடு இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ’எங்கே செல்கிறது இந்தியா’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். (நான் தமிழ்ப்பதிப்பை இன்னும் படிக்கவில்லை)

-----------------------------------------------------------------------------------------------------------------------

இந்தக் கட்டுரைக்கான தரவுகள், ஆய்வறிக்கைகள், புள்ளிவிவரங்கள், பத்திரிக்கை செய்திகள், ஆய்வுக்கட்டுரைகள் அத்தனையின் இணைப்புகளும் இந்த word கோப்பில். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

புதன், 15 மே, 2019

இரும்புப் பெண்மணி இரோம் and the streak of hope


ஊர் உலகமே ஆர்வமாய் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்துக் கிடக்கின்றது. வெற்றியோ தோல்வியோ முடிவு ஏதாகிலும் அது பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடக்கூடும். அவர்தம் கொள்கைகளையும் முடிவுகளையும் சார்புகளையும் நம்பிக்கைகளையும் ஒரு தோல்வி அசைத்துப் பார்துவிடக்கூடும். என்னதான் பொதுநலனோடு மக்களுக்காக போராளியாய்க் குரல் கொடுத்தாலும், தேர்தல் அரசியலின் வழியாகவே பெரும்பாலான அமைப்புரீதியான சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியுமென்பது என் நம்பிக்கை.

நினைவு தெரிந்த நாள் முதலாய் செய்திகளில் கலைந்த தலைமுடியோடும் மூக்கில் சொருகப்பட்ட ப்ளாஸ்டிக் குழாயோடுமே பார்த்துப் பழகியது இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் முகம். எப்போதுமே கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக உணவு/சத்து ஊட்டப்படும். மறுபடியும் உண்ணா நோன்பிருக்க களம் காணுவார்.வடகிழக்கில் AFSPA குறித்த பின்னணி விவரங்களையெல்லாம் அறிந்து கொண்ட வயதுக்கு முன்பே, ஒவ்வொரு முறை இரோமின் முகத்தை செய்திகளில் காணும்போதும் அதீதமான குற்ற உணர்வுக்கு ஆளாவேன். எதற்காக இத்தனை பிடிவாதம்... யாருக்காக இந்த போராட்டம் என.

2017ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டபோது, அடடா இத்தனை ஆண்டுகளாய் மக்களுக்காக போட்டியிட்டவராயிற்றே; மக்கள் கட்டாயமாய் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்வார்களென திண்ணமாக நம்பினேன். 16 வருடங்களாய் உண்ணா நோன்பிருந்த போராளிக்கு மக்கள் தந்தது 90 வாக்குகள். வெறும் 90 வாக்குகள். நிச்சயமாய் அப்போது இரோமுக்கு ஏதோவொரு பிடிப்பு விட்டுப்போயிருக்கக் கூடும்.

தான் முழுநேர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் இரோம்.
7 ஆண்டுகளாய் தனக்காகக் காத்திருந்த சமூக ஆர்வலர் டெஸ்மான்டை, கொடைக்கானலில் எளிமையானதொரு பதிவுத்திருமணத்தில் வாழ்க்கைத் துணைவராய் ஏற்றபோது அப்படியொரு மனநிறைவு எனக்கு. You deserve to have a life, you warrior.For everything you went through; I'm glad you are finding solace என அகமகிழ்ந்தேன்.

இன்று காலை இரோம்-டெஸ்மாண்ட் இணையருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்திகேட்டு அத்தனை மகிழ்ச்சி.I was elated and almost on tears when I saw the picture. Light at the end of the tunnel , Ray of hope, நம்பிக்கையின் ஒளிக்கீற்றென நாம் கேட்ட கதைகளும் கேள்விப்பட்ட அற்புதங்களும் இரோம் மாதிரி யாருக்கோ எங்கெங்கோ நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது... இல்லையா ❤️ Stoicism சொல்வது போல "sometimes even to live is an act of courage".

More power to you Sharmila... Loads of love to you and your family. May you find the comfort, calmness and the happiness you deserve ❤️❤️❤️❤️

ஞாயிறு, 3 மார்ச், 2019

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

 
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.

எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்ற வரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம்.  ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு. 
- ஜெயமோகன் (சுபிட்ச முருகன் நாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து)
சரவணன் சந்திரன் எழுதத் தொடங்கி முதல் புனைவு வெளிவந்த போது, நிறைய பேர் அவருடைய எழுத்தில் சாருவுடைய தாக்கம் நிறையவே இருப்பதாகச் சொல்வார்கள். அவரிடமே கேட்கும்போதும், ”அது அந்த ஃபார்ம் தான் தம்பி. ஆனா உள்ளுக்குள்ள மொத்தமா வேற தான்.“ என்று சொல்வார். சாருவும் சரவணன் சந்திரனின் படைப்புகளை அறிமுகப்படுத்தியும் விதந்தோதியும் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், இந்த நாவலுக்கு ஜெயமோகனின் முன்னுரை எனும்போதே நான் யோசித்தேன், இவருடையது முற்றிலும் வேறுபட்ட தளமாயிற்றே என. சுபிட்ச முருகன் வாசித்து முடிக்கையில் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டிருந்தது.

ச.ச வின் புனைவுகளில் ஒரு பொதுத்தன்மை இருக்கும் .தன்மையில், பெரும்பாலும் கதைசொல்லியின் பார்வையிலேயே நிகழ்கிற கதையில் அவர்களுடைய பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. அச்சம், வெறுப்பு, வஞ்சம், ஆசை, காமம், சாபம், போதை என ஏதோவொரு உணர்வால் சூழப்பட்டு மனச்சுழலில் தன்னிலை மறந்து வீழ்ந்து கிடப்பார்கள். தூரத்து ஒளிக்கீற்றாய் ஒன்றைப் பற்றிக் கொண்டு தேடல், பயணம் , மீட்சி என மீண்டு வருவார்கள். சுபிட்ச முருகனும் கிட்டத்தட்ட இந்த அமைப்போடு ஒத்துப் போகிற படைப்புதான். ஆனாலும், விவரணையிலும், ஜெயமோகன் முன்னுரையில் சொல்லியிருக்கிற  ’அன்றாடமின்மை’யையும் (ஆங்கில நிகர் சொல் unusualness என வைத்துக்கொள்வோம்),  கையாண்டிருக்கிற அடர்த்தியான மொழிபுமே (narrative) இந்த படைப்பினை தனித்து அடையாளப் படுத்துகின்றன.

அந்த மலையடிவார மண்ணின் வெக்கையை அவன் உணரும்போது, அவனுடைய மனப்பிறழ்வின் போதும், கால்கள் செயலிழந்து உடலை இழுத்துக்கொண்டு அவன் தரையில் தேயும்போதும் , இறுதியாய் ‘சுபிட்ச முருகனை’ கைகளிலேந்தி பெருமழையில் நனைகிறபோதும், தீயில் கருகிய மரத்தில் மஞ்சள் முகம் செதுக்கிய மரப்பாச்சியாய் இளங்கா அத்தையின் மஞ்சள் முகம் அவனைத் துரத்தும்போதும்,  சத்தியமாக நீங்களும் வெக்கையில் வியர்த்து, உடல் சோர்ந்து, பயந்து, மழையில் நனைந்து ஆற்றுப்படுத்திக் கொள்ளக்கூடும்.

எஸ்.ரா எப்போதும் சொல்கிற விஷயமுண்டு.”எத்தனை பெரிய காவியமாக எழுதப்பட்டிருந்தாலும், நம்மாட்களுக்கு அதனுடைய நாலு வரி கதைச்சுருக்கம் வேண்டும்” என. இதுதானே கதை...இதுதான பிரச்சனை...இதுதானே முடிவு..என அத்தனையையும் ஒற்றைப்படையாக அணுக முயல்வது . ஊழ்வினையாலும் பெண் சாபத்தாலும், அவனுக்கு  காமம் சார்ந்து ஏற்படுகிற உடல் தடைக்கும் பிணிக்கும் , பழனி மலையடிவாரத்தில் ஆன்மிகத்தேடலோடும் முருகனின் அருளோடும் தீர்வு கிட்டி அனைத்தும் நீங்கிவிடுகிறதென... ஒற்றைப்படையாய் கதைச்சுருக்கம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எழுத்து குறித்த விவாதங்களை எப்போதுமே கூர்ந்து கவனிப்பதுண்டு. இன்னது தான் எழுத்து; இப்படித்தான் எழுதப்பட வேண்டும்; இவ்வாறு தொடங்கி இங்கே முடிக்கவேண்டுமென ஏகப்பட்ட வரையறைகள். எல்லாமுமே நமக்கு நாமே வகுத்துக் கொண்டவை. ”நான் ஒரு கதையை மற்றவர்களுக்கு சொல்லும் பொருட்டே எழுத விழைகிறேன்.அது இன்னதென புரியவைப்பதே எனது நோக்கம்” என எழுதுவது ஒரு வகை.

“நான் உணர்ந்த கதையை...அல்லது ஒரு அனுபவத்தை ஏதோவொரு வகையில் வெளிக்கொணர்ந்தேயாக வேண்டும். நான் எழுத முடிவெடுத்து எழுத்துக்களில் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். எதையும் யாருக்காகவும் சொல்ல விழையாமல், கதைசொல்லலுக்கான சராசரி சமரசங்கள் ஏதுமில்லாமல் ,நானுணர்ந்ததை கதையினூடாகவே அதே அடர்த்தியுடன் எழுதியிருக்கிறேன். இதையே வேறு யாரும் உணர்ந்தால் அதுவே இந்த மனப்பதிவின் வெற்றி” என்ற கருதுகோளோடு எழுதுவது இன்னொரு வகை.

இதில் சரவணன் சந்திரனின் ‘சுபிட்ச முருகன்’ இரண்டாவது வகை. இதுவரை நீங்கள் அவருடைய புனைவுகளையோ கட்டுரைத் தொகுப்புகளையோ படித்திருந்து  இப்போது ’சுபிட்சமுருகன்’ வாசிப்பீர்களேயானால், அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறான ஒரு படைப்பாளியாக ’சுபிட்சமுருகன்’ அவரை முன்னிறுத்தக்கூடும்.

மேலும் சுபிட்ச முருகன் குறித்து இரண்டு வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளின் இணைப்புகள் கீழே.

நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை? - டி. தருமராஜ்

மெய்யறிதலின் அபூர்வத் தருணங்கள்! - லஷ்மி சரவணகுமார்

சுபிட்ச முருகன் - புத்தகம் வாங்க:

https://www.commonfolks.in/books/d/subitcha-murugan

வெள்ளி, 25 ஜனவரி, 2019

வீரா, தாரா & யாழினி - Absurd Love

பேரன்பின் வீராவுக்கு,

மிகத் தாமதமானதொரு பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லிவிடும் பொருட்டே உனக்காக இந்த கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன் நான். எல்லோரும் எல்லோரிடத்தும் சொல்லிக் கொள்கிற சம்பிரதாயமான ‘வாழ்த்துகள்’ என்கிற சொல்லோடு நான் சொல்லிக் கடந்துவிடக்கூடியவளல்ல நீ. சாலைகளோடி, ஊர்த்தேடி திரியும்பொருட்டே பிழைத்து வாழ்கிற, என் போலான சக நாடோடிப் பறவையன்றோ நீ.

நான் உட்பட சுற்றியுள்ள யாவரிடத்தும் நிறைய பேச முயற்சி செய்தபடியே இருக்கிறாய் நீ. உன் அழுகைக்கான காரணத்தையும் கூட நீ சொல்கிறாய். யாரும் எந்த விளக்கமும் கேட்பதில்லை உன்னை. எப்போதும் மலையுச்சிகளை நோக்கியே இருக்கிறது உன் மனம். எந்த பயணமும் முடிவுற விரும்புவதில்லை நீ. ”இன்னும் கொஞ்ச தூரம் ”... “இன்னும் கொஞ்ச தூரம்” என்றபடி காலத்தை நீட்டிக்க முயல்கிறாய்.


Kahaan hoon main ab..
Aahein, darr, khushi, raaste
Kachchi baatein, sachche vaaste
Kahin pe in sab mein
Kahaan hoon.. main ?
என சுக துக்கங்களிலும், உறவுகளிலும், பயணங்களிலும் உன்னைத் தேடியபடியே இருப்பவள் நீ.

Main ekaaki de daya ki bheekh rajaKya tujhe aabhaas bhi mera.. என உன்னை நொந்தபடி பெயர் தெரியாத ஊரில் இருளில் ஓடும்போதும் சரி,

Heera para bajaar mein
Raha chhaar laptaaye
keetehi moorakh pachhe mohe
Koi Parakhi Liya Uthaaye
என சந்தையில் கிடக்கும் வைரமான உன்னை தேடிக் கண்டடையும் ஒருவனுக்கான நம்பிக்கையை சொல்லும்போதும் சரி,

உன்னை... இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காதலிக்கத் தோன்றுகிறது.



 எத்தனை தூரம் பயணித்திருப்பாயோ ? எந்த ஊர் கடல்களில் கால் நனைத்திருப்பாயோ? எந்தெந்த மலைகளின் மீது மேகம் தொட்டிருப்பாயோ ? எந்தெந்த காடுகளின் சுனை பருகியிருப்பாயோ ? அறிந்தேனில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. நான் சேருமிடம் முந்துமோ... நீ சேருமிடம் முந்துமோ.. யாரிருக்க யார் கடப்பாரோ அறியேன். இந்த இரவின் கடுங்குளிரையும் , இன்னும் சில இரவுகளின் நட்சத்திரங்களையும் , நாளைய விடியலையும் , வெண்பனி மலைகளினூடாய் இன்னும் சில விடியல்களையும்... நாம் கைகோர்த்தபடி, நீ என் மீது சாய்ந்தபடி, நாம் ஒன்றாய் நடந்தபடி... கடக்க வாய்த்திருக்கலாம்.ஆனாலும் இந்தப் பயணத்தின் இந்தத் தருணத்தில் நானுந்தன் சக பயணி.


வெவ்வேறு பயணங்களில் வெவ்வேறு உலகங்களில் நீயும் நானும் வெவ்வேறு பெயர்களில் சந்தித்திருக்கக்கூடும்.  ’தாரா’வாக நீயிருந்த மற்றோர் உலகிலும் உன்னோடு பயணித்திருக்கிறேன் நான். வீராவைக் காட்டிலும் தாரா கொஞ்சம் தெளிவானவள் எனத் தோன்றுமெனக்கு.  எங்கோ ஒரு ஊரில் அடையாளங்களைத் துறந்து கவலைகள் மறந்து பெயர்களற்று போலியான சுயமில்லாது ஆடித் திரிந்திருக்கின்றோம்.பின்பு
கனவுலாவியான நான், இவ்வுலகில் பிழைத்தலின் பொருட்டு சிலகாலம் அணிந்து கொண்ட ’சராசரி ஆள்’ எனும் முகமூடியை அத்தனை ரசிக்கவில்லை நீ.எனது போலி முகமூடியை அடையாளங்கண்டு கிழித்தெறிந்து மீண்டும் என்னைக் கதைசொல்லியாக மாற்றியவள் நீ. 

’இதுவே நான்’ என இவ்வுலகை நம்ப வைத்த விம்பத்தை அத்தனை இலகுவாய் நீ அடித்து நொறுக்கியதை கொஞ்சமும் தாங்க முடியாமல், எனது கையறு நிலையை கோபம் வன்மமுமான வார்த்தைகளால் உன் மீது கொட்டிவிட்டு ஓட முயன்றேன்.
அப்போதும்

pal bhar Theher jaao
dil ye sambhal jaaye
kaise tumhe roka karoon
meri taraf aata
har gham phisal jaaye
aankhon mein tumko bharoon,
bin bole baatein tumse karoon,
gar tum saath ho,
agar tum saath ho..


என என்னோடு பேசி என்னை நிறுத்த முயன்றாய். எனக்கு உன்னோடு போராட எதுவுமேயில்லை. மொத்தமும் என்னோடுதான்...என்னுள்ளேதான். 

wo jise DhoonDha zamaane mein
mujhi mein tha
wo mere saare jawaabon ka
safarnaama..

நமது இந்தப் பயணம் உன்னில் தொடங்கி உன்னில் முடிந்து உன்னோடே தொடர்ந்தது.

Ho.. safarnaama..
sawaalon ka safarnaama
shuru tumse, khatam tumpe
safarnaama

You fell in love with my weirdest self and you only wanted that version of me. 



வேறோர் உலகில்...யாழினியாக உனக்கு இத்தனை குழப்பங்களும் வலிகளும் இல்லை.எளிமையான முடிவுகளையே கொண்ட சின்னச் சின்னச் சிக்கல்கள் நிறைந்தது உன் வாழ்க்கை. 'எனக்கு சில குறிக்கோள் இருக்கு..ஆனா உங்களுக்கு சொன்னா புரியாது ‘ என்றோ ‘உங்கள பாத்தா எனக்கு பயம் வரல’ என்றபடி ஒரு சிறிய அணைப்பிலோ, ‘சும்மா...ஜாலியா’ என்றபடி தலையிலடித்துக் கொள்ளும்போதோ, நீ பேசுவதும், பேசாத மற்றேனையும் இலகுவாய்ப் புரிந்து கொள்வேன். அசட்டுத்தனங்களும் அசட்டுத்தனமான துணிவும் இல்லாத வாழ்க்கை ஏது ? எல்லாவற்றையும் சிறு புன்னகையோடு கடந்துவிட இது மட்டுமே போதுமல்லவா ?

இனி இந்த உலகின் இந்தப் பயணத்தை நீ யாழினியாகவே தொடர விரும்புகிறேன்...!

//
கனவில் நின்னேனே
நான் நான் நானாய் ஆனேனே
மின்மினிப் பூ ஆனேனே

விண்மீன் துள்ளும் அருவியாய் போனேனே
வான் மேகம் பூச்செண்டாய் மாறக் கண்டேனே
கண் காணா பூட்டு ஒன்னு ஒடச்சு வந்தேனே...!

ஏன்னா ராணி நான்
தேன்னா தேனீ நான்...!! //

போ...பற...தீராமல் வாழ்ந்து தீர்,
காதலுடன்,
நான் <3 nbsp="" p="">


Related Posts Plugin for WordPress, Blogger...