நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 டிசம்பர், 2021

Turning Point : War on terror - Netflix - திருப்புமுனை - 2021

 


 அண்மையில்  அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியதும் , அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மத அடிப்படைவாத தீவிரவாத அமைப்பான தாலிபன்கள் வசம் சிக்கியதும் உலகம் முழுக்க கவனம் பெற்ற ஒரு நிகழ்வு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னணி என்ன ? அதன் பின்னான தீவிரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் என்ன? உண்மையில் அமெரிக்காவின் ஆஃப்கன் உடனான போர் எப்போது, எந்த நோக்கத்திற்காக தொடங்கியது ? தாலிபன்கள் உருவானது எப்படி ? அமெரிக்காவின் ஈராக் மீதான போருக்கு என்ன காரணம் ? இப்படியான இன்னும் பல கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கின்றது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series)

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலுக்கு முன்பு, நான்கு உள்நாட்டு விமானங்கள் கடத்தப்பட்ட செய்தியில் தொடங்கி பின்பு முதல் விமானம் மோதியதும் மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த நூறு மாடிக் கட்டிடத்திலிருந்து இறங்க முயற்சி செய்தது , கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து மக்களை மீட்கப் போராடிய தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்தது, அடுத்தடுத்த விமானங்கள் இன்னொரு கோபுரத்திலும் பெண்டகன் எனப்படும் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை  பெருவளாகத்திலும் மோதியது  என பரப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகிறது தொடர்.

அமெரிக்க இராணுவத்தின் பெரும் பதவியில் இருந்தவர்கள், சட்ட வல்லுநர்கள்,9/11 சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்க  முன்னாள் உளவுத்துறையினர்தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர், முன்னாள் தாலிபன் தலைவர்கள், ஆஃப்கன் போர்ப்படைத் தளபதிகள், ஆஃப்கன் அரசியல் தலைவர்கள் என பலருடனான நேர்காணலில் இந்நிகழ்வின் முன்னும் பின்னும் நடந்த பல சம்பவங்களை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு அல்காயிதா தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனத் தெரியவந்தபின் அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்கிற வரலாறும் காட்டப்படுகின்றது.

2021 ஆண்டு வரையிலுமான அமெரிக்காவின் ஆஃப்கன் மீதான இருபது ஆண்டுகால போர் தொடங்குவதற்கு முக்கிய தூண்டுகோளாக  இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதத் தாக்குதலே அமைந்திருக்கின்றது. முன்பு 1979முதல் 89 வரையிலுமாக பத்தாண்டுகள் ஆஃப்கானிஸ்தான்ரஷ்யா இடையிலான போரின் போது ஆஃப்கன் போராளிகளான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்காவே மறைமுகமாக போர்ப்பயிற்சியும் ஆயுதங்களும் தந்து உதவியதாக சொல்லப்படுகிறது. பின்னாட்களில் இவர்களே தாலிபன்களாக மாறியதாகவும், ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாத அமைப்பிலும் சேர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

அமெரிக்க இராணுவம் ஆஃப்கானிஸ்தானிலிருந்து சிறை பிடித்த நூற்றுக்கணக்கான கைதிகளை க்யூபாவில் அமைந்திருக்கிற க்வாண்டனமோ பே ( guantanamo bay) சிறைச்சாலையில் அடைத்து வைத்து enhanced interrogation techniques என்கிற பெயரில் செய்த கொடுமைகளைப் பற்றியும் பேசியிருக்கின்றார்கள். இவர்களில் 9/11 சம்பவத்துடன் நேரடித் தொடர்புடைய குற்றவாளிகள் ஓரிருவர் இருந்திருந்தாலும் , பெரும்பாலானோர் சட்டப்படி எந்தக் குற்றமும் சாட்டப்படாமல் (accused) தீவிரவாதிகளாகவோ அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாகவோ இருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே சிறைபிடிக்கப்பட்டு ஆஃப்கானிஸ்தானிலிருந்தும் இன்னபிற நாடுகளிலிருந்தும்  நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனையையும் அனுபவித்திருக்கிறார்கள்

  பெட்டிச்செய்தி:


ஒரு சர்வதேசக் குற்றவாளியோடு தொடர்பில் இருந்ததாகவும், அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களுக்குக் காரணமானவர்களுள் ஒருவராகவும் கருதப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார் மொஹ்மதூ ஸ்லாஹி.அவருடைய நாடான மொரிட்டானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள க்வாண்டனமோ தீவின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட மொஹ்மதூ, செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து, பின்பு பலரின் முயற்சியாலும் சட்டப்போராட்டங்களாலும் விடுதலை அடைந்தார். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியானது தான் ’The Mauritanian’ திரைப்படம். இத்திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.

 ஆஃப்கானிஸ்தானில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் புஷ் தலைமையிலான அரசு, அதிபர் சதாம் உசேன் பேரழிவை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள் (Weapons of mass destruction) வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக் நாட்டின் மீதும் போர் தொடுக்க முடிவெடுக்கிறது. எந்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை அறிந்தால் நாம் மனம் நொந்து போகக் கூடும்.  ஒரு கட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் எந்த இலக்குமின்றி நிகழ்ந்ததைப் பற்றியும், ஆஃப்கனில் அமைந்திருந்த ஹமீது கர்சாய் தலைமையிலான அரசு ஊழலும் லஞ்சமும் நிறைந்த ஒன்றாக இருந்ததையும் அமெரிக்க முன்னாள் அரசு அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

தாலிபன்களைத் தோற்கடிக்க ஆஃப்கானிஸ்தானின் வடக்கு கூட்டணி (Northern alliance) இராணுவக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்காவுக்கு, காபூலிலிருந்தும் காந்தஹாரிலிருந்தும் தாலிபன்களை விரட்டியடித்தபின் அந்நாட்டில் என்ன செய்வது என்கிற தெளிவான திட்டம் ஏதும் இல்லை. அத்துடன் மீண்டும் அங்கு இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தவும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் எதுவுமே செய்யாத ஹமீது கர்சாய் தலைமையிலான மோசமான  அரசாட்சியும்  தாலிபன்கள் புத்துயிர்ப்புடன் மீண்டும் செயல்பட முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. ஆவணக் குறுந்தொடரின் இறுதிப் பகுதியில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவின் பேரில், பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் சர்வதேசக் குற்றவாளியும் தீவிரவாதியுமான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நிகழ்வும் அது தொடர்பான சம்பவங்களும் பேசப்படுகின்றன.

இறுதியாக ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளும், பிற நாட்டு அரசியல்/இராணுவ அதிகாரிகளும் முழுமையாக வெளியேறிபின் தாலிபன்கள் தலைமையிலான அரசு அமைந்திருக்கிற  இவ்வேளையில், இரு தரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்சேதத்தையும் , பெருமளவிலான பொருட்சேதத்தையும் ஏற்படுத்திய இந்தப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தீவிரவாத செயல்களால் ஏற்படுகிற பாதிப்புகளையும் இழப்புகளையும் பற்றிப் பேசியிருக்கும்  அதே அளவு நாடுகளுக்கிடையேயான போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்கிற பாதிப்புகளையும்  இழப்புகளையும் பற்றி விரிவாகப் பேசியிருக்கின்றது இந்த ஆவணக் குறுந்தொடர் .

’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

மாநாடு - தரமான பொழுதுபோக்குத் திரைப்படம் - 2021



 மாநாடு பாத்தாச்சு….! We absolutely loved it..enjoyed..! ❤

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாம படம் பார்க்கப் போய் , மிகச் சிறப்பான அனுபவத்தைத் தந்து அனுப்புற படங்கள் ஒரு வகைன்னா (தனியொருவன் அப்படி), ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப்போயி படமும் நம்மள கொஞ்சங்கூட ஏமாத்தாம செம்மையா தீனி போட்டு,அது மறக்க முடியாத அனுபவமா அமையுறது இன்னொரு வகை. இதுல மாநாடு ரெண்டாவது வகை

சிலம்பரசனுடைய கம்பேக் படம், வெங்கட் பிரபுவுக்கு நாலு வருஷத்துக்கு பிறகு வர்ர படம், யுவனுடைய இசை, முதல்முறையா ஒரு timeloop கதைக்களம், இதையெல்லாம் தாண்டி வெளியீட்டில் கடைசி நேர குழப்பம், போதாக்குறைக்கு மழை வேற..இவ்வளவும் ‘மாநாடு’ படத்து மேல இருக்குற எதிர்ப்பார்ப்பையும் அழுத்தத்தையும் இன்னுமே அதிகமாக்குச்சு. ஆனா சிந்தாம சிதறாம அத்தனையும் படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கையும் வெற்றியையும் தேடித்தந்திருக்கு. அதுவும் இந்த timeloop concept என்னான்னு புரிஞ்சு காட்சிகள் திரும்பத் திரும்ப வரும்போது தியேட்டர்ல எல்லாரும் அதுக்கேத்த மாதிரி ஆரவாரமா ரியாக்ட் பண்ண விதத்துலயே கட்டாயம் படம் வெற்றியடைஞ்சிடுச்சுன்னு சொல்லிடலாம்.

ரஜினியுடைய மேனரிஸ்ம் அல்லது தாக்கம் நிறைய நடிகர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும். ஆனா பெருசா முயற்சி பண்ணாம அந்த laid back, cool attitude இயல்பாவே அமைஞ்சவங்க எனக்குத் தெரிஞ்சு ரெண்டே பேரு. ஒருத்தர் ஒளிப்பதிவாளர்/நடிகர் ‘நட்டி’ நட்ராஜ்; இன்னொருத்தர் எஸ்.ஜே.சூர்யா. அதுவும் படம் கொஞ்சம் lag ஆகுற மாதிரியான இடத்துல சரியா இவரோட placement. மனுஷன் அவரும் எஞ்சாய் பண்ணி, நம்மளையும் செம்ம ஜாலி ஆக்கிவிட்டாரு. பட்டைய கெளப்புற performance…! என்ன ஒன்னு… அந்த டயலாக் டெலிவரி மட்டும் அவருடைய எல்லா படத்துலயும் (மாநாடு உட்பட) ஒரே மாதிரி இருக்குறதா தோணுச்சு.

சிம்பு…! – உண்மையிலேயே ஒருத்தரை கைதூக்கிவிட இவ்வளவு பேர் இதுக்கு மேல வேற எதுவும் பண்ணவே முடியாதுங்குற அளவுக்கு இவருக்காக பண்ணிட்டாங்க. இதுக்கு மேல அவரா மண்ணள்ளிப் போட்டுக்காம இருந்தாலே போதும். And what an actor he is…! இதை அப்பப்போ மக்களுக்கு நினைவுபடுத்துறதுக்காவது தொடர்ந்து படங்கள்ல ஒழுங்கா நடிப்பாருன்னு நம்புவோம்.

இவ்வளவு சிக்கலான விஷயத்த பார்வையாளர்களுக்கு எளிமையா புரியவைக்குற மாதிரி திரைக்கதை எழுதுன வெங்கட் பிரபு அவர்களைப் பாராட்டியே ஆகனும். உஜ்ஜயினி உருட்ட தவிர்த்துட்டு வேற எதாவது சொல்லியிருக்கலாம்; ஆனா அதுக்கு இன்னும் screen time நிறைய தேவைப்பட்டிருக்கும். So, it is acceptable. யுவன் பத்தி ஊரே பேசியாச்சு; இன்னும் பேசும்..பேசலாம்..வொர்த்து தான்…! ❤

இயக்குநருக்கு இணையா இந்தப் படத்துல ரொம்ப முக்கியமான இன்னொருத்தர் படத்தொகுப்பாளர் ப்ரவீன்.KL. அவருடைய நூறாவது படம் வேற. காலத்துக்கும் அவரு பேரை சொல்ற மாதிரி ஒரு படமா அமைஞ்சிடுச்சு. நெனச்சுப் பாக்கவே exhausting இருக்கு… அதுவும் கல்யாண மண்டப ஃபைட் சீக்வன்ஸ்லாம் அப்டியே நெருப்பு மாதிரி இருந்துச்சு.

எல்லாத்துக்கும் மேல பல வருடங்களுப்பிறகு மெய்ன்ஸ்ட்ரீம் தமிழ்சினிமாவுல ஒரு இஸ்லாமிய கதாநாயகன் - அவன் வழியா படம் சொல்ல வந்த விஷயம் ரெண்டுத்துக்காகவும் இன்னும் நிறையவே பாராட்டலாம்.

ஞாயிறு, 30 நவம்பர், 2014

காவியத்தலைவன்




நேத்து காவியத்தலைவன் பாத்துட்டேன். வழக்கமா வசந்தபாலன் படங்களில் இருக்கிற சோகமோ...இருன்மையோ இல்லாம ரொம்ப கொண்டாட்டமா கலர்ஃபுல்லா இருந்துச்சு படம். என்னுடைய தாத்தா அந்த காலத்துல ஏகப்பட்ட மேடை நாடகங்கள்ல நடிச்சவரு... நிறைய கதைகள சொல்லுவாரு... சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்கள்.. நாடக நடிகர்களுடைய வாழ்க்கைமுறை... அரிதாரம் பூசிக்கிறதுல தொடங்கி... மண்ணெண்ணை வெச்சு தேங்கா நார போட்டு தேய்ச்சு வேஷங்கலைக்குற வரைக்கும்...நெறைய சொல்லிருக்காரு. அந்த வெத்தலை குதப்பலோட கண்ல கொஞ்சம் போதையோட பேசுகிற ஸ்டைலாகட்டும்... மல் துணி சட்டையாகட்டும்... நான் கேள்விப்பட்ட விஷயங்கள் எல்லாமே படத்துல Close to reality காமிச்சுருக்காங்க. அதப் பத்தி எழுத ஆரம்பிச்சா இன்னும் எழுதிட்டே போலாம்.

அப்புறம் நாடக நடிகர்களுக்கு கெடைச்ச சமூக அங்கீகாரம் பத்தி படத்துல பாதி தான் (இராஜ பார்ட் மட்டும்) வருது.இது இல்லாம ஸ்த்ரீ பார்ட் போடுறவங்க.. கள்ளபார்ட் வேஷம் கட்டுனவங்க.. அவங்கள மக்கள் நடத்துன விதம் (ஸ்த்ரீ பார்ட் -கேலி, கள்ள பார்ட் - வெறுப்பு) இதெல்லாம் தாத்தா சொல்லி கேட்டுருக்கேன்.ரொம்ப பழைய படங்கள் மேல ஆர்வமேற்பட்டதுக்கு என் பெரிய மாமாவும் தாத்தாவும் தான் காரணம்.

படத்துல சொல்லப்பட்டிருக்குறது எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் அவர்களுடைய கதைன்னு சொன்னாலும்... சித்தார்த்துடைய அந்த வாழ்ந்து கெட்ட பாத்திரம் எனக்கு தியாகராஜ பாகவதரைத் தான் ஞாபகப் படுத்துச்சு.அவருடைய Rise and fall மட்டும் ஓரளவு ஒத்துப் போகுது.. ஆனா சுதந்திரப் போராட்ட பின்னணி..சினிமா வாழ்க்கை இதிலெல்லாம்..MKT வாழ்க்கை irrelevant.

பிருத்விராஜுங்குற நடிப்பு ராட்சசனுக்கு முன்னால சித்தார்த் டல்லடிச்சு தான் போறாரு.என்னவோ என்னால சித்தார்த் கேரக்டரோட ஒத்துப்போகவே முடியல...!அந்த ஜமீந்தார் மகளுடனான காதலாகட்டும்..அவளுடைய மறைவுக்குப் பின்னான சோகமும் அழுகையுமாகட்டும்.. சித்தார்த்துடைய நடிப்பு கொஞ்சங்கூட என்ன பாதிக்கல. பிருத்விராஜ் அடிச்சு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பட்டைய கெளப்பிருக்காரு.வேதிகாவைப் பத்தியும் சொல்லனும்..ரொம்ப இயல்பான...அழகான நடிப்பு. வெச்ச கண் வாங்கல :) :) அழ...கி..!


செட்கள், எழுத்து, ஒப்பனைன்னு எல்லா விஷயத்தையும் பாத்துப் பாத்து பண்ணிருக்காங்க.ஆனாலும் வசனங்கள் எனக்கு திருப்தியில்ல...! :( ராஜேஷ் சொல்லிருக்க மாதிரி ரொம்பவே சாதாரணமான வசனங்கள்.இதுக்கு ஜெயமோகன் தேவையில்ல.அப்புறம் இதுவரைக்கும் இல்லாத வகைல.. இது ரஹ்மான் இசைன்னு துருத்திகிட்டுத் தெரியாம.. நம்மள distract பண்ணாம (ARR எப்பவும் அப்படியில்ல..ஆனாலும் இசை தனியா தெரியும்) படத்தோட ஒன்றி பாக்கமுடிஞ்சுது. (ஏற்கனவே இந்தப்படப் பாடல்களுக்கு நான் அடிமை) பாட்டா கேக்கும்போது கொஞ்சம் போரடிச்சது எல்லாம் படத்துல ரசிக்குற விதமாதான் இருந்துச்சு.



ஒரு துறைல ஒரே சமயத்துல நுழையுற ரெண்டு பேரு.. அதுல ஒருத்தருக்கு கிடைக்குற புகழ்.. அங்கீகாரம்... இதனால இன்னொருத்தருக்கு வர கோபம்.. வெறுப்பு ..வஞ்சம்...ego. இதையெல்லாம் ஏற்கனவே ‘இருவர்’ல கொஞ்சம் பாத்துருக்கோம். நாசருடைய கேரக்டர் வேற அதையே ஞாபகப்படுத்துச்சு.நாசர்.. பொன்வண்ணன்...இவங்களுக்கு நாம சர்டிஃபிகேட் தரத்தேவையில்ல.பட்டாசு performance.படம் முழுக்க நெறைய டீட்டெய்லிங் இருந்தாலும்...முடிவு மட்டும் ஏனோ திருப்தியில்ல. கண்டிப்பா பாக்கலாம்.பழைய நாடகங்கள் பத்தி கேள்வியே படாதவங்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாதான் இருக்கும்.

கீழே: ராஜேஷ் எழுதுன ‘காவியத்தலைவன்’ விமர்சனம். இன்னபிற விவரங்களோட விரிவான விமர்சனம்.கண்டிப்பா படிங்க.

http://karundhel.com/2014/11/kaaviya-thalaivan-2014-tamil-review.html

சனி, 26 அக்டோபர், 2013

Gravity (2013) – விட்டு விலகிச் செல்லாதே



பெயர் : ரயன் ஸ்டோன் (Ryan Stone)

தொழில் : மெடிக்கல் இஞ்சினியர்

விண்வெளி பயண அனுபவம்: இதுவே முதல் விண்வெளிப் பயணம். ஆறு மாத ஆயத்த பயிற்சியைத் தவிர வேறு அனுபவம் ஏதுமில்லை. அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர்.


பெயர் : மாட் கோவால்ஸ்கி (Matthew Kowalski)

தொழில் : விண்வெளி வீரர்

விண்வெளி பயண அனுபவம் : அனுபவஸ்தர். ரஷ்ய விண்வெளி வீரர் அனடோலியின் 82 மணி நேர (மொத்தமாக விண்வெளியில் கடத்திய காலம்) சாதனையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டவர். அதனைக் கடக்க பெரிதும் விரும்புபவரும் கூட.செம்ம ஜாலி பார்ட்டி..!


பயணத்தின் நோக்கம் : ஹப்பிள் ஸ்பேஸ் (Hubble Space Telescope) விண்-தொலைநோக்கியை பழுது நீக்கும் பொருட்டு.

விண்கலம் : எக்ஸ்ப்ளோரர்

ஆபத்து: அழிக்கும் பொருட்டு ஏவுகனையால் தாக்கப்பட்ட பழுதான ரஷ்ய செயற்கைக்கோளின் வெடித்து சிதறிய பாகங்கள் (சிதை(ந்த)பொருட்கள் – debris) அதிவேகமாய் இவர்கள் (ரயான், மாட்) பணிபுரிந்து கொண்டிருக்கின்ற சுற்றுப்பாதையில் (orbit) இவர்களை நோக்கி வருவது.

என்ன நடந்தது : சிதைபொருட்கள் அதிவேகமாய் தாக்கியதில் எக்ஸ்ப்ளோரர் விண்கலம் சேதமடைகின்றது. சக வீரர் ஷெரிஃப் உயிரிழக்கின்றார். இருவரும் அந்தரத்தில் மிதக்க (!!) நேரிடுகின்றது .

உயிர்பிழைக்க வழி: உடையில் இருக்கிற கொஞ்சம் ஆக்ஸிஜனையும், விண்வெளியில் நகர உதவும் கருவியிலுள்ள கொஞ்சம் வாயுவையும் (விண்வெளி வெற்றிடத்தை கனமான வாயுவால் உந்தி நகர்தல் – moving in space by using thrust) வைத்துக்கொண்டு ISS-ஐ (International Space Station – சர்வதேச விண்வெளி மையம்) அடைதல்.அங்கிருந்து வேறு கலங்களில் தப்பி பூமி திரும்புவது

முடிவு : மாட், ரயான் இருவரும் தப்பித்தார்களா..?? இல்லையா…??



கண்களுக்கு விருந்துன்னு சொல்லப்படுற வார்த்தை இப்போ ரொம்ப க்ளிஷேவானது. பொதுவாவே ஆங்கிலப்படங்கள்ல தொழில்நுட்ப விஷயங்களிலும் ஒளிப்பதிவு மற்றும் சி.ஜியிலும் பட்டைய கெளப்புவாங்க. ஆனாலும் ‘செம்ம விஷுவல் ட்ரீட்’-னு நான் வாயைப் பொளந்து பாத்த படங்கள் 

1. அவதார்-2009 (12 வருட உழைப்பை வாங்கிய அசுரத்தனமான டெக்னாலஜி. 3டி-ல பாத்தவங்க கொடுத்து வெச்சவங்க)

2. லைஃப் ஆஃப் பை -2013 (கொஞ்சம் போரடிக்கும் திரைக்கதையானாலும் கடல் பரப்பு அட்டகாசமான அழகு)

3. பஸிஃபிக் ரிம் - 2013 (அந்த படத்துலயே வர வசனம் – 2500 tonnes of awesome. செம்ம விஷுவல்ஸ். 3டி/ஐமேக்ஸ் –ல பாக்க முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்ட படம் )

அடுத்தது க்ராவிட்டி தான். படம் பத்தி படிச்சு பாத்தப்போ இயக்குனர் அல்ஃபோன்ஸோ க்வாரோன் (Alfonso Cuarón) ஏகப்பட்ட உழைப்பைக் கொட்டியிருப்பதாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட நாலு வருடங்களுக்கு மே லான மேக்கிங்கில் திட்டமிடலுக்காகவும் டெக்னிக்கல் பெர்ஃபெக்க்ஷனுக்காகவும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கின்றார்கள். திரையரங்கில் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த பெர்ஃபெக்‌ஷனை உணர்ந்திருக்கலாம்.படத்தில் நிறைய ‘பாயிண்ட் ஆஃப் வியூ’ ஷாட்கள்… படத்தோடு ஒன்றிவிட்டபின் நாமே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. சப்தங்கள் ஏதுமில்லாத விண்வெளி வெற்றிடத்தை நிச்சயமாய் நம்மால் உணர முடிகின்றது.


சாண்ட்ரா புல்லக், ஜார்ஜ் க்ளூனி ஆகியோரின் நடிப்பைப் பற்றி புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருவருமே ____________________________ கள் (வழக்கமான பாராட்டு வரி எதையாவது இட்டு நிரப்பிக் கொள்ளவும்). ஆனாலும் Sandra steals the show...!! இந்த மாதிரியான ’யாருமற்ற தனிமையில் தப்பிப்பிழைத்து உயிர்வாழ்தல் -survival’ வகையறா கதைகளில் நிச்சயம் கொஞ்சம் தத்துவார்த்தமான வசனங்களும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இருக்கும் (உ.தா : Life of Pi) க்ராவிட்டியிலும் அந்த மாதிரி நிறைய உண்டு (you have to learn to let go, try to detach yourself, க்ளைமாக்ஸில் அனிங்கான்க் உடன் ரயான் ரேடியோவில் பேசுகிற காட்சி ).


மொத்தமே 90 நிமிடப் படம் தான் .இந்த 90 நிமிட கால அவகாசத்துக்குப் பின்னால் ஒரு சுவையான ட்ரிவியா உள்ளது. சர்வதேச விண்வெளி மையம் (ISS) மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம்… எக்ஸாக்ட்லி 90 நிமிடங்கள்..!!! செம்மை இல்ல..!!? 


படத்தை தியேட்டர்களிலிருந்து தூக்குறதுக்கு முன்னாடி கண்டிப்பா பாத்துடுங்க…!! என்னதான் டவுன்லோட் பண்ணி பாத்தாலும் அந்த அனுபவம் கண்டிப்பா கெடைக்காது…!!


இந்த படம் தொடர்பான அறிவியல் ரீதியான கேள்விகளுக்கும் / சந்தேகங்களுக்கும் :

http://en.wikipedia.org/wiki/Space_debris

http://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/what-is-a-spacewalk-k4.html#.UmuZp3BHI4M

http://www.physicsclassroom.com/class/newtlaws/u2l1a.cfm


படத்தின் ஏனைய triviaக்கள் :

http://www.imdb.com/title/tt1454468/trivia?ref_=tt_trv_trv

திங்கள், 18 மார்ச், 2013

பாலாவின் ‘பரதேசி’


பாலாவின் பரதேசி பார்த்தாகிவிட்டது. ஊர் உலகமே படம் பற்றி நிறைய பேசவும் எழுதவும் செய்கின்றார்கள். எனக்கும் இந்த படம் பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

முதலில் ஆங்கிலத்தில் ‘Red Tea’யாக எழுதப்பட்டு பின்பு தமிழில் ‘எரியும் பனிக்காடு’-ஆக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தின் முழுமையான தழுவலாக இந்த படம் இல்லை. ஆதலால் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பது நலம். தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக பஞ்சம் பிழைக்கச் சென்று ஆங்கிலேயர்களின் கொடுமைகளுக்கு ஆளான மக்களின் கதை என்ற அடிப்படையை மட்டும் எடுத்துக்கொண்டு அதன்மீது ஒரு திரைக்கதையினைக் கட்டமைத்திருக்கின்றார் பாலா.

படம் வெளிவரும் முன்பு வெளியிடப்பட்ட டீசரை பார்த்துவிட்டு கொஞ்சமும் புரிதல் இல்லாமல் இயக்குனர் பாலாவை இந்தாளு ஒரு சைக்கோ என்று பேசியவர்களெல்லோரும் படம் பார்த்தபின் அந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றியிருப்பார்கள். பாலாவின் Perfection ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகின்றது. கதை என்றவகையில் கொஞ்சம் அழுத்தமில்லாமல் சோகையாகிப்போனது வருத்தமே. ஆனாலும் ஒரு தேயிலைத்தோட்ட அடிமைகளாகச் சென்றழிந்த மக்களின் வாழ்வைப்பற்றிய குறிப்பிடத்தக்க ஆவணமாக ’பரதேசி’ நிச்சயம் திகழும்.

அதர்வாவுக்கு இந்தப் படம் ஒரு மைல்கல். அப்பாவி ஒட்டுப்பொறுக்கி ‘ராசா’வாக அப்படியே அள்ளிக்கொண்டு போகின்றார். இறுதியில் பாறை மீது உட்கார்ந்துகொண்டு ”கொஞ்சம் இரக்கம் காட்டுங்க நியாயமாரே” என்று கதறும்போது நம்மைக் கலங்கடிக்கின்றார். கங்காணியாக நடித்திருக்கும் இயக்குநர் ஜெர்ரி, அங்கம்மாவாக வரும் வேதிகா, இரண்டாம் பாதியில் வரும் தன்ஷிகா, கருத்தக்கன்னி ரித்விகா, சாலூர் ராசாவின் கூன் பாட்டி, சோக்காளி ஊர்ப்பெரிசாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன்  என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே பாலா பட்டறையில் பட்டை தீட்டப்பட்டு மின்னுகின்றார்கள் .

ஒளிப்பதிவாளர் செழியன் பாலாவின் கண்களாகவே செயல்பட்டிருக்கின்றார். முதல் காட்சியில் தடதடவென ஓடி சாலூர் கிராமம் மொத்தத்தையும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையையும் காட்டிவிடுவதில் தொடங்கி சாலூர் மக்கள் கால்நடைப் பயணமாக சென்று தேயிலைத் தோட்டங்களினூடே தங்கள் வாழ்வைத் தொலைப்பது வரையிலுமான அத்தனைக் காட்சிகளிலும் தனித்து தெரிகின்றார்.

படத்தின் நெருடலாக குறிப்பிட வேண்டியவை என்று சொன்னால் இரண்டே விஷயங்கள் தான். ஒன்று சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு அவர்களை மதம் மாற்றிய கிறிஸ்தவ மிஷனரிக்கள் பற்றிய பகுதியை காமெடியாக்கியது. அதனைத் தவிரவும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுநிலையை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கொஞ்சமாவது முன்னேற காரணமாக இருந்தவையும் இந்த கிறிஸ்தவ மிஷனரிகள் தாம். நாவலின் அடிப்படையில் பார்த்தால் இங்கு சிவசங்கர் மாஸ்டர் ஏற்றிருக்கும் டாக்டர் கதாப்பாத்திரமே (நிஜத்தில் டாக்டர்.டேனியல்) அந்த மக்களின் துயரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியவர். 'ரெட் டீ'யை  எழுதியவரும் இவரே.அதனை இப்படி கோமாளித்தனம் ஆக்கியிருக்க வேண்டாம். நிச்சயமாக இன்னும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க வேண்டிய விஷயமிது. அதிலும் அந்த ‘அல்லேலோயா’ பாடல் படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் அழுத்தத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. ரிலாக்சேஷன் என்று நினைத்து அந்த பாடலை பாலா வைத்திருக்கலாம். (ஆனாலும் பாட்டு எனக்கு பிடித்திருந்தது ’கானா’ பாலாவின் குரலுக்காகவும் இயக்குநர் பாலாவின் நையாண்டிக்காகவும் J)

மற்றொன்று ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. அப்பட்டமான இளையராஜா சாயல் ‘அவத்தப் பையா’ பாடலும், வைரமுத்துவின் வரிகளுக்காக ‘செந்நீர்தானா’ பாடலையும் தவிர இசையைக் குறிப்பிட்டு சொல்ல வேறெதுவுமில்லை. ஷெனாயை உச்சஸ்தாயியில் அலறவிடுவது தான் உணர்வுப்பூர்வமான இசை என்று இவருக்கு யார் கற்றுக்கொடுத்தார்களெனத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் சரி this movie deserves Raja sir…!!

திரையரங்கை விட்டு வெளியேவரும்போது இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள் “இதே மத்த டைரக்டரு எவனாவது எடுத்துருந்தா ஹீரோ கங்காணியையும் வெள்ளைக்காரனையும் அடிச்சுப்போட்டுட்டு ஜனங்களையெல்லாம் காப்பாத்துற மாதிரி காட்டிருப்பானுகடா மாப்ள..! நல்லவேள பாலா அப்புடி செய்யலை. செஞ்சிருந்தான்னா அது பாலா படம் இல்ல…”

அது.. அது தான் பாலா…!! இந்த மாதிரி படமெடுக்க பாலாவை விட்டா தமிழ் சினிமாவுக்கு வேற ஆளே கிடையாது.
Thank you Bala sir – For an emotional journey through the lives of thousands of people…!!

கண்டிப்பாக பார்க்கவேண்டிய இரண்டு காணொளிகள் கீழே
படத்தின் முழுமையான மேக்கிங் வீடியோ


விஜய் டி.வி-இல் வெளியான ’பரதேசி’ படக்குழுவினரின் உரையாடல்


Images courtesy: Moviegalleri.net

திங்கள், 11 பிப்ரவரி, 2013

Into the wild (2007) - அடையாளங்களைத் துறத்தல்



"Two years he walks the earth. No phone, no pool, no pets, no cigarettes. Ultimate freedom. An extremist. An aesthetic voyager whose home is the road. Escaped from Atlanta. Thou shalt not return, 'cause "the West is the best." And now after two rambling years comes the final and greatest adventure. The climactic battle to kill the false being within and victoriously conclude the spiritual pilgrimage. Ten days and nights of freight trains and hitchhiking bring him to the Great White North. No longer to be poisoned by civilization he flees, and walks alone upon the land to become lost in the wild. - Alexander Supertramp May 1992 " 


நீங்கள் யார் ? 

இந்த கேள்விக்கு எத்தனை பதில்கள் இருக்க முடியும். 

என் பெயர் இன்னது… நான் இந்த ஊரைச் சேர்ந்தவன்… இன்னார் என் பெற்றோர்… இந்த இடத்தில் படித்தவன்… இவரின் நண்பன்… இந்த இடத்தில் பணிபுரிகின்றேன்… இந்த படிப்பு படித்திருக்கின்றேன்… 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மேற்கண்ட எதுவுமே ‘நீங்கள் யார்?’ என்ற கேள்விக்கான விடையே அல்ல.நமது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், ஊர், தெரு, கல்வி, பதவி, பணியிடம் என பல காரணிகளால் நமக்கு ஏற்பட்ட/ஏற்படுத்தப்பட்ட அடையாளாங்கள்.உண்மையில் சொல்லப் போனால் இந்த கேள்விக்கு நம்மால் பதிலளிக்கவே முடியாது.தத்துவரீதியான விளக்கங்கள் இருக்கலாம்.தர்க்கரீதியான விளக்கங்கள் அளிப்பது கடினம்.

இந்த அடையாளங்கள் எல்லாமே ஒரு வகையில் உங்களை அன்றாட வாழ்வில் இணைத்து வைத்திருக்கும் பிணைப்புகள் (Commitments) என்று சொல்லலாம். திடீரென ஒரு நாள் உங்களை கட்டிவைத்திருக்கின்ற அடையாளங்கள் அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு இலக்கில்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கின்றதா?



இந்த எண்ணம் துள்ளலும் துடிப்புமான இருபத்தியோரு வயது இளைஞனுக்கு ஏற்படுகின்றது.அப்படி ஒரு பயணத்தை அவன் நிஜமாகவே மேற்கொள்கின்றான். க்ரிஸ்டோஃபர் ஜான்சன் மெக்கேண்ட்லஸ் (Christopher Johnson McCandles) எமரி பல்கலைக் கழகத்தில் தன்னுடைய பட்டமளிப்பு விழா முடிந்து வந்த அன்று முடிவு செய்கின்றான் இப்படியொரு பயணத்தை தான் மேற்கொள்ள வேண்டுமென்று.வங்கியில் எஞ்சியிருந்த சேமிப்பு மொத்தமும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி கொடுத்தாயிற்று. தான் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான அத்தனை அடையாளங்களையும், கையில் உள்ள பணத்தையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு… விரும்பிப் படிக்கும் சில புத்தகங்களையும் இயற்கையோடு இணைந்த வாழ்வில் உயிர்பிழைத்து வாழ தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னுடைய பழைய காரில் கிளம்புகின்றான். தனக்குத்தானே புதிய பெயரை (Alexander Supertramp) சூட்டிக்கொள்கின்றான்.

எந்த திட்டமிடலும் இல்லாத… எந்த கட்டுப்பாடுகளுமில்லாத… தன் வேகத்தையும் பாதையையும் தானே தேர்ந்தெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போல… நதி போல.. காற்றை போல ஒரு பயணம்…!! எத்தனை ஆச்சர்யங்கள்… எத்தனை சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும் இப்படி ஒரு பயணம்..??!! அலெக்ஸின் இறுதி குறிக்கோள் அலாஸ்கா செல்வது. காட்டின் நடுவே வாழ்வது.

ஜார்ஜியாவிலிருந்து கிளம்பும் அலெக்ஸ் அரிசோனா மாகாணத்தை அடையும்போது ஒரு திடீர் ஆற்று வெள்ளத்தில் அவனது கார் அடித்துச் செல்லப்பட்டுவிட அதன்பின் கிடைக்கும் வழிகளில்/வாகனங்களில் தனது பயணத்தை தொடர்கின்றான்.அவனுடைய பயணத்தில் அலெக்ஸ் முதலில் சந்திப்பது ஹிப்பி தம்பதிகளான ஜேன் புர்ரே (Jan Burres), ரெய்னி (Rainey) ஆகியோரை.அவர்கள் இருவரிடையேயான உறவுச் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் அலெக்ஸை அவர்கள் இருவருமே பெரிதும் விரும்புகின்றார்கள். அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவழித்தபின் மீண்டும் தன் பயணத்தை தொடரும் அலெக்ஸ் பின் தெற்கு டக்கோடா (South Dacota) மாகாணம் வந்தடைகின்றான்.அங்கு வெய்ன் (Wayne) என்ற விவசாயியுடைய வயலில் கொஞ்ச நாள் வேலை செய்கின்றான். வேறொரு குற்றத்திற்காக காவல் துறையினால் அலெக்ஸின் நண்பர் வெய்ன் கைது செய்யப்பட்டுவிட வேறு வழியின்றி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கின்றான்.



ஆற்றைக் கடக்க சிறு படகில் பயணம், பின் சரக்கு ரயில் என பலவாறாக பயணிக்கும் அலெக்ஸ் மீண்டும் அந்த ஹிப்பி தம்பதிகளை சந்திக்க நேர்கின்றது.அவர்களுடன் சில மாதங்களை கழிக்கும் அலெக்ஸ், தன் மீது காதல் கொண்டு தடுமாறும் ஹிப்பி கூட்டத்து பதின்பருவ பெண், யாருமில்லாமில்லாமல் தனிமையில் வாழ்கின்ற: அலெக்ஸின் மீது மிகுந்த பாசம் கொண்ட ஒரு முதியவர் என பலரையும் தன் பயணத்தில் சந்தித்து கடந்துவரும் அலெக்ஸ் இறுதியாக தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருக்கும் அலாஸ்கா வந்தடைகின்றான்.

அங்கு ஒரு உடைந்து போன பேருந்தை அவனது வாழ்விடமாக மாற்றிக் கொண்டு அவன் நினைத்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கின்றான். சிறிது காலத்துக்குப் பின் இயற்கையோடான அவனது போராட்டம் துவங்குகின்றது.மோசமான வானிலை காரணமாக அலெக்ஸுக்கு உணவு கிடைக்காமல் போகின்றது. கையிருப்பாக இருந்தவையும் தீர்ந்து போக அவனது உடல் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் குன்றத் தொடங்குகின்றது.பசியை அடக்க ஒரு தாவரவியல் புத்தகத்தைப் பார்த்து ஒரு காட்டுச் செடியைப் பறித்து உண்கின்றான்.பசி மயக்கத்தில் தான் பறித்தது விஷச் செடி என அறியாமல் அதை உண்டுவிடும் அலெக்ஸ் பின் புத்தகத்தைப் பார்த்தபின்பே அதனை உணர்கின்றான்.அழுது புலம்பும் அலெக்ஸ் கிட்டத்தட்ட அந்த காட்டிற்குள்ளே உடைந்த பேருந்தினுள் தான் சிறை பட்டு போனதாக உணர்கின்றான்.அந்த செடி Slow Poison போல அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பிக்கின்றது.மகிழ்ச்சி என்பது பிறரோடு பகிர்ந்து கொள்ளும்போது தான் முழுமையடைகின்றது என்பதனை உணர்கின்றான்.


அலெக்ஸ் பிழைத்தானா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.க்ரிஸ்டோஃபர் மெக்கேண்ட்லஸ் என்ற இளைஞரின் வாழ்க்கையை/உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜான் க்ராகர் (Jon krakauer) என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘Into the wild’ என்ற புத்தகமே பின்னாளில் I am Sam புகழ் ஷான் பென் (Sean Penn) திரைக்கதைஅமைத்து இயக்கி 2007ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம்.படத்தின் ஒளிப்பதிவும் Non-Linear ஆக பயணிக்கின்ற திரைக்கதையும் நிச்சயமாக ஒரு மறக்கவியலா அனுபவத்தை நமக்கு தரும்.படத்தொகுப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் இது.வசனங்கள் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவை.ஒவ்வொரு வசனமும் ஒரு Quote போலவே மிகுந்த ஆழமான வார்த்தைகளைக் கொண்டிருக்கும். படத்தில் நிஜ க்ரிஸ்ஸாகவே வாழ்ந்திருக்கும் எமைல் ஹிர்ஷ் (Emile Hirsch) பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.அத்தனை உணர்வுப் பூர்வமான நடிப்பு...!

இது நிஜம்

இது நிழல்

மொத்தத்தில்

Into the wild – அடையாளங்களைத் துறந்து அலைதலின் அழகியல்

படம் பார்க்காதவர்கள் கட்டாயம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லவும். 

Photos Courtesy: Original Uploaders

சனி, 20 அக்டோபர், 2012

பீட்சா - Don't Miss It...!!


’பீட்சா’....

ஏற்கனவே ’நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில பார்த்த இந்த படத்தின் இயக்குனருடைய குறும்படங்கள்...அப்புறம் இந்த படத்துடைய பாடல்களும் ட்ரைலரும் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புல தான் முதல் நாளே இந்த படத்த பாத்துடனும்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாது..இயக்குனர் ‘கார்த்திக் சுப்பாராஜ்’ கொஞ்சம் கூட ஏமாத்தல... படம் சும்மா அட்டகாசமா இருக்கு..!
எவ்வளவு நாளாச்சு இப்டி பர பரன்னு ஒரு த்ரில்லர் பார்த்து.படத்தோட கதை என்னான்னா....

வெயிட்...அத சொன்னா படம் பாக்குற ஆர்வம் போயிடும்.அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. :):) 

ஹீரோ ‘விஜய் சேதுபதி’யை பொருத்தவரையில் இது அவருக்கு கெடைச்ச ஒரு செம்ம ப்ரேக்.அவரும் பெர்ஃபார்மன்ஸ்ல குறை வைக்காம பட்டைய கெளப்பிருக்காரு.குறிப்பா அந்த பேய் பங்களா சீக்வன்ஸ்...வாய்ப்பே இல்ல..ஒளிப்பதிவாளர் ’கோபி அமர்நாத்’ அவரோட முழுத்திறனுக்கும் அந்த ஒரு காட்சித்தொடரே போதும்...Extraordinary..!! 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பத்தியும் சொல்லியே ஆகனும்.’அட்டகத்தி’ல கலக்குனவரு தான் இவரு. இந்த மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துல படம், பாக்குறவங்களை அப்படியே கட்டி போடுறதுதான் முக்கியம்.அந்த வேலையை திரைக்கதையே பாதி செஞ்சுடும்னாலும் ஒளிப்பதிவும் இசையும் தான்  அதை முழுமையாக்கும். அந்த பின்னணி இசையிலும் சரி... அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் சரி...சும்மா அதகளம்.’மோகத்திரை’ பாட்டு மட்டும் தான் படத்துல முழுசா வருது.’ரம்யா நம்பீசன்’ படம் முழுக்க கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் அழகா இம்ப்ரெஸ் பண்ணிட்டு போறாங்க.'மோகத்திரை’ பாட்டோட விஷ்வல்ஸ் செம்ம க்யூட். 

மற்ற நடிகர்கள் ஏற்கனவே குறும்படங்கள்ல நமக்கு அறிமுகமான முகங்கள் தான். SS Music பூஜா ஒரு ரோல் பண்ணிருக்காங்க.குறும்படம் எடுத்து அப்புறம் வெள்ளித்திரைக்கு வந்ததுல இந்த பட இயக்குனருக்கு முன்னோடி ‘காதலில் சொதப்புவது எப்படி?’ புகழ் பாலாஜி மோகன்.அந்த படத்துலேயும் பூஜா ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருப்பாங்க.இது செண்டிமெண்டா..என்னன்னு தெரியலை.. :) :)

படத்துலே ஏதும் குறையிருக்கா அப்டின்னெல்லாம் நீங்க யோசிக்குறதுக்கு இயக்குனர் நேரமே குடுக்கல.ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி தட தடன்னு தொடங்கி அதே வேகத்துல படம் முடிஞ்சுடுது.குடுக்குற காசுக்கு படம் ஒர்த்து.
நல்ல Sound System உள்ள தியேட்டர்ல போய் பாருங்க.நல்ல அனுபவமா இருக்கும்.

சப்போர்ட்டிங்கான டெக்னிக்கல் விஷயங்கள் + ஒரு பிரமாதமான திரைக்கதை ரெண்டும் இருந்தா ஒரு கலக்கலான படத்தை தர முடியும்னு நிரூபிச்ச ‘பீட்சா’ படக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பீட்சா- Don't miss to get your slice..!!
Photos Courtesy: Original Uploaders

வியாழன், 18 அக்டோபர், 2012

A Millionaire's First Love (2006) - Korean - காதலின் தீபம் ஒன்று...!

முன்குறிப்பு:

உங்களுக்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்காதா…?? காதல் படங்கள் என்றாலே மொக்கை என்பவரா..?? அப்படியானால் இது உங்களுக்கான படமல்ல.மன்னிக்கவும் J

எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள் சிலவற்றைப் பற்றி எழுதவேண்டுமென வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.     Blog எழுதாத நேரங்களில் பார்த்த படங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாகிவிட்டது. ஆகையால் இனி ஒவ்வொன்றாக எழுத வேண்டியது தான். எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு கொரியன் (Korean) திரைப்படத்தோடு தொடங்குகின்றேன்.


   நான் பார்த்த முதல் கொரிய திரைப்படம் 'A Millionaire's First Love'.இந்த படம் பார்த்து கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் இப்போதும் எனக்கு ஒவ்வொரு காட்சியும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.அப்படி ஒரு அற்புதமான காதல் கதை இது...!!!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத, அலுக்கவே அலுக்காத காதல்...!!


ஜே-க்யூன் (Kang Jae Kyung) ஒரு மகா கோடீஸ்வரரின் பேரன்.அப்பா அம்மா கிடையாது.இவனுடைய கார்டியன் இவனது தாத்தாவால் பணியமர்த்தப்பட்ட இவர்களின் குடும்ப வக்கீல்.சதா அடிதடி, நண்பர்களோடு பார்ட்டி, என கொண்டாட்டமாய் பொறுப்பில்லாமல் திரிபவன் ’ஜே-க்யூன்’. அல்ட்ரா மாடர்ன் பைக், ஃபெராரி கார்,சொந்தமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் என பள்ளிக்குக் கூட ஒழுங்காகச் செல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவன்.


அன்று அவனுடைய பதினெட்டாவது பிறந்தநாள்..!! நண்பர்களோடு கூத்தும் கும்மாளமுமாய் கொண்டாடி முடித்துவிட்டு தன்னுடைய ஹோட்டலுக்கு திரும்புகின்றான்.மறுநாள் அவர்களின் குடும்ப வக்கீல் அவனுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியினை சொல்கின்றார். ஜே-க்யூனின் தாத்தா எழுதி வைத்த உயிலின் படி அவனுடைய பள்ளி மேற்படிப்பை ‘கேங்வாண்டோ’ எனும் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்து தேறினால் தான் தாத்தாவின் சொத்துகள் அவனுக்கு சேரும் இல்லாவிட்டால் மொத்த சொத்தின் ஒரு சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் என சொல்கின்றார்கள்.

வேறு வழியில்லாமல் ஜே-க்யூன் அங்கு செல்கின்றான்.அங்கு அவன் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவனை முன்பே அறிந்திருப்பதை கண்டு வியக்கும் ’ஜே-க்யூன்’ எப்படியாவது அந்த பள்ளியை விட்டு வெளியேறத் துடிக்கின்றான்.அங்கே அவனது வகுப்பில் படிக்கும் சக தோழியாய் அறிமுகமாகின்றாள் ‘யூ-வான்' (Choi Eun whan).பள்ளியை விட்டு வெளியேற/வெளியேற்றப்பட அவன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து போகின்றன.
காரணம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே-க்யூனின் தாத்தவுடைய நெருங்கிய நண்பர்.வேறு வழியின்றி படிக்க தொடங்குகின்றான்.

இதற்கிடையில் யூ-வானுக்கும் ஜே-க்யூனுக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலரத் தொடங்குகின்றது.ஜே-க்யூனுக்கு அவனுடைய பால்ய பருவம் நினைவில் நிழலாட
சிறு வயதில் அதே ஊரில் யூ-வானோடு விளையாடி சுற்றித்திரிந்தது நினைவுக்கு வருகின்றது.பத்து நாட்களில் திரும்ப வருகின்றேன் என யூ-வானிடம் சத்தியம் செய்துவிட்டு அவனது பெற்றோர்களோடு அந்த ஊரைவிட்டு கிளம்பும் அதே நாளில் ஒரு சாலை விபத்தில் அவனுடைய பெற்றோரை இழக்கும் ஜே அவனது தாத்தாவோடு சென்றுவிடுகின்றான்.கால ஒட்டத்தில் மறந்துபோன இந்த விஷயங்கள் அத்தனையும் நினைவுக்கு வர அவள் மேலான காதல் இன்னும் அதிகமாகின்றது.

இதற்கிடையில் பள்ளி இறுதி நாளன்று நிகழ்த்தும் பொருட்டு ஜே-க்யூனின் வகுப்பு தோழர்கள் அனைவரும் ஒரு நாடகத்தை ஒத்திகை பார்த்தபடி இருக்கின்றார்கள். முதலில் இதில் நடிக்க மறுக்கும் ஜே-க்யூன் பின் யூ-வானுக்காக ஒப்புக்கொள்கின்றான். ஒரு நாள் ஒத்திகையின் போது திடீரென ’யூ-வான்’ மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவளுக்கு இதயம் மிகவும் பலவீனமாய் இருப்பதும் அவள் உயிரோடிருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாட்கள் தான் என்பதும் ஜே-க்யூனுக்கு மிகுந்த மன வருத்ததையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.


அதன் பிறகான அவர்களின் நாட்கள்… அவர்களிடையேயான நிகழ்வுகள்... அத்தனையும் கவிதை... அவ்வளவு அழகான மென்மையான காட்சிகள்.ஜே-க்யூன் பள்ளி உயர்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது தாத்தாவின் சொத்துகளை திரும்பப்பெற்றானா..?? யூ-வான் உடனான அவனது காதல் என்னவானது…?? அவள் பிழைத்தாளா…? இதையெல்லாம் ‘டவுன்லோட்’ பண்ணி படம் பார்த்து தெரிந்து கொள்க.

ஒரு Arrogant-ஆன கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையை நம் கண் முன்னே நிறுத்தும் ‘Hyun Bin'-ன்  நடிப்பு வெகு இயல்பாகவே நம்மை கவர்கின்றது.குறிப்பாக கிராமத்து பள்ளி நண்பர்களோடு  Adapt ஆக சிரமப்படுவதும்,படத்தின் பிற்பாதியில் யூ-வான் உடன் காதல் வயப்பட்டபின் அவளின் நோய் தீர்க்க மருந்து எனச் சொல்லி ஒரு பாட்டில் நிறைய (ஆம்..!!) கவிதை எழுதிய சீட்டுகளை அவளிடம் தருகின்ற காட்சியும்... செம்ம Performance.
   
குட்டிக் கண்களோடும் குய்யா முய்யா பாஷையோடும் உள்ள கதாநாயகி ‘Lee yeon Hee’-ஐ பார்த்தவுடனே பிடிக்காது தான்.ஆனால் முழு படமும் முடிந்த பின் கண்டிப்பாக உங்களால் இந்த பெண்ணை மறக்கவே முடியாது. அவ்வளவு அருமையான உணர்வுப் பூர்வமான நடிப்பு. அந்த சின்னக் கண்களில் அவ்வளவு உணர்ச்சிகள்.

இந்த படத்தின் இசையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.பெரும்பாலான ரொமாண்டிக் படங்களுக்கு அந்த உணர்வதைத் தருவதில் பெரும்பங்கு வகிப்பது பின்னணி இசை தான்.AMFL-ம் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு செம்ம சாஃப்ட் மெலடி...!!


முழுப்படமும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றது.படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லுங்கள்..!!
Disclaimer: கொஞ்சம் ‘தம்பிக்கு எந்த ஊரு + இதயத்தை திருடாதே’ ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை. J J
 Pictures & Video Courtesy: Original Uploaders

ஞாயிறு, 8 ஜூலை, 2012

War Of The Ring - மின்புத்தகம் - விஸ்வரூபம்...!!!


 பொதுவாக  ஃபாண்டஸி (fantasy) எனப்படும் கற்பனைக் கதைகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நிஜ உலகில் சாத்தியப்படாத நிகழ வாய்ப்பே இல்லாத... பல விஷயங்கள்,கற்பனையான பல வகை மனிதர்கள்,விலங்கினங்கள்.கடவுள்கள்,தேவதைகள்,பூதங்கள்... இப்படி எல்லையே இல்லாமல் பறந்து விரிந்து கிடப்பது இந்த கற்பனை/மாய உலகங்கள்... இவ்வாறான உலகங்களையும் மக்களையும் பற்றிய விந்தை கதைகளை முதலில் நமக்கு வரலாறுகளும்..புராணக்கதைகளும் சொல்லி வந்தன.. பின் காலமாற்றத்தில்.. நாம் கதைகளில் படித்து கற்பனை செய்தவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தின் உதவியோடு திரையில் உயிர் கொடுத்து உலவ விட ஆரம்பித்தனர்..!! ஆங்கிலத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களில் பல உயரங்களைத் தொட்டவர்கள் ஆதலால் மிகச் சிறந்த  ஃபாண்டஸி திரைப்படங்களை இந்த உலகுக்கு அவர்களால் தர முடிந்தது...!! 

ஸ்டார் வார்ஸ் தொடங்கி லார்ட் ஆப் த ரிங்க்ஸ், நார்னியா, ஹாரி பாட்டர்,பேட்மேன்,சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், அவதார் வரை உச்சபட்ச தொழில்நுட்பத்தின் துணையோடு ஹாக்வார்ட்ஸ்,பண்டோரா,மிடில் எர்த் என பலவேறு மாய/கற்பனை உலகங்களையும்...அவற்றின் அதிசய உயிரினங்களையும்...அந்த உலகத்து நாயகர்களின் சாகசங்களையும் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்து வந்திருக்கின்றோம். திரைப்படங்களின் உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள அறிவியல் புரியாத வயதில் அவற்றைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பை விட பல மடங்கு அதிகமான ஆச்சரியமும் பிரமிப்பும் அந்த திரைப்படங்களின் உருவாக்கத்திற்கு பின்னணியில் உள்ள உழைப்பையும் கஷ்டங்களையும் அறிந்துகொள்ளும்போது ஏற்பட்டது. 

இப்படியான ஒரு  ஃபாண்டஸி திரைப்பட தொடரை எடுத்துக்கொண்டு அந்த திரைப்படத்திற்கான கதை முதன் முதலில் புத்தகமாக உருவானது தொடங்கி, அதிலுள்ள பாத்திரங்கள், கதை நிகழ்கின்ற உலகம், காலம், அந்த கற்பனை உலகின் மக்கள் பேசுகின்ற மொழி, அவர்களுக்கு இடையேயான உள்நாட்டு பிரச்சனைகள்,அந்தந்த நாடுகளின் வரலாறுகள், இத்தனையையும் சொல்லி இவையெல்லாவற்றையும் மூன்று பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படத்தினுள் அடக்கி திரையில் கொண்டு வர படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள் ,படத்துக்காக அமைக்கப்பட்ட செட்கள்,  புதுமையான கேமரா டெக்னிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்கள், படப் பிடிப்பின்போது படக்குழுவினர் எதிர்கொண்ட சவால்கள், எடிட்டிங் உத்திகள்,ஆடையலங்கார வடிவமைப்புகள்,நடிகர்களைத் தேர்வு செய்த விதம்,பின்னணி இசையின் உருவாக்கம்..இப்படி ஆதி முதல் அந்தம்  வரை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து ஒரு புத்தகம் வந்தால் எப்படி இருக்கும்...?? 

அந்த Cast & Crew வோடு மொத்தமாக பயணித்த ஒரு உணர்வைத் தருமல்லவா...??

அப்படித்தான் இருந்தது எனக்கு நண்பர் கருந்தேள் ராஜேஷ் எழுதி ஹாலிவுட் பாலா மற்றும் கொழந்த கணேஷ் அவர்களின் வடிவமைப்பில் வெளிவந்திருக்கின்ற  வார் ஆப் த ரிங் (War of the Ring) மின்புத்தகத்தை படித்தபோது.ராஜேஷ் முதன் முதலில் தமிழில் பதிவெழுத ஆரம்பித்தலிருந்து அவரது தளத்தின் அத்தனை கட்டுரைகளையும் படித்து வந்திருக்கின்றேன்.சின்னதாய் ஒரு விஷயம் சொன்னாலும் அதற்கு பின்னால் ஒரு உழைப்பும், ஹோம்வொர்க்கும் கட்டாயம்  இருக்கும்.ஹாலிவுட் பாலா வின் fx மற்றும் பிக்ஸார் ஸ்டோரி படித்தவர்களுக்கு அவரைப்பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.  LOTR சீரிஸ் பற்றி ராஜேஷ் எழுதத் தொடங்கியபோது  அந்த சீரிஸின் ஒரு திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை...படத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது..!!நான் ஹாரி பாட்டர் விரும்பி ஆதலால் LOTR சீரிசை தொடர்ந்து படிக்கவுமில்லை. ஆனால் LOTR மின்புத்தகம் பற்றிய ராஜேஷின் அப்டேட்டுகள் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பித்தன. ஒரு வழியாக மின்புத்தகம் நிறைவடைந்து வெளிவந்த பொழுது ஒரு பெரிய நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு ஈடான ஆர்வத்தோடு படிக்கத்தொடங்கினேன். முழுமையாக படித்து முடிக்க எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டன. 

பின்னே... லார்ட் ஆப் த ரிங்க்ஸ் புத்தகங்களை எழுதியவரான டோல்கீன் (Sir.JRR.Tolkien) மற்றும் LOTR திரைத் தொடரின் இயக்குனர் பீட்டர் ஜாக்சன் (Peter Jackson)ஆகியோர் அளித்த நூறு சதவீத உழைப்பில் ராஜேஷும், பாலா,கொழந்த குழுவினரும் ஐம்பது சதவிகித உழைப்பை இந்த மின் புத்தகத்திற்கான உருவாக்கத்திலும் தகவல் சேகரிப்பிலும் அளித்திரும்போது அந்த புத்தகத்தை படிக்கும் நான் ஒரு ஐந்து சதவிகித உழைப்பையாவது தருவது தான் இவர்களுக்கு நான் தரக் கூடிய மரியாதையாக இருக்கும். LOTR சீரிஸின் மூன்று திரைப்படங்களின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்களையும் தரவிறக்கி பார்த்துவிட்டு, பின்னணி இசைக் கோர்ப்புகளை முழுவதும் கேட்டுவிட்டு மின்புத்தகத்தை மீண்டுமொரு முறை மேய்ந்துவிட்டே இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கின்றேன். 
'War of The Ring' மின்புத்தகத்தை  உருவாக்கியவர்கள்

Rajesh and JRR.Tolkien
Hollywood Bala and Peter Jackson
என்ன சொல்ல...!! எந்தவொரு வணிக நோக்கமுமில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு கிட்டத்தட்ட Lord Of The Rings-க்கான ஒரு தமிழ் என்சைக்ளோபீடியாவை உருவாக்கியிருக்கின்றார்கள்...!! ஒரு முழுமையான Making of LOTR வீடியோ பார்த்த திருப்தியை அளித்தது இந்த வார் ஆப் த ரிங்ஸ் மின்புத்தகம்...!! ராஜேஷ் மற்றும் பாலா அண்ட் கோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!! :) :)

வார் ஆப் த ரிங்  (War of the Ring) மின்-புத்தகத்தை தரவிறக்க  இங்கே கிளிக்கவும்..!!   
கருந்தேள் ராஜேஷ் அவர்களின் தளம் இங்கு..!!

Image Courtesy: Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...