நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 29 ஜூலை, 2026

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து - சுந்தர் சருக்கை (மொ.பெ - சீனிவாச ராமாநுஜம்) - எதிர் வெளியீடு | Following a Prayer



 

உண்மையில் மொழி என்பது என்ன ? ஒரு சொல்லின் மதிப்பு அதன் பொருளைப் பொருத்ததா அல்லது கேட்பவரின் எதிர்வினையைப் பொருத்ததா ? ஒலிதான் மொழியெனில் மனதுக்குள் பேசுவதெல்லாம் மொழியாகாதா ? பேசுகிறவர்களையும் கேட்கிறவர்களையும் இணைக்கிற கருவிதான் மொழியா ? இசையென்பது மொழியா அல்லது வெறும் ஒலியா ? விலங்குகளின் சப்தங்களும் மொழிதானா ? கடவுள் எங்கிருக்கிறார் ? கடவுள்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழி என்று ஒன்று உண்டா ? நமது பிரார்த்தனைகள் என்னும் சொற்கள் எங்கே செல்கின்றன ?

இப்படியான கேள்விகளுக்கு மூன்று பதின்வயது சிறுமிகளின் தேடலின் வழியே தத்துவார்த்தமாக விடை தேட முயலும் புத்தகம்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை எழுதிய ‘Following a Prayer’ என்னும் நாவல். இந்நூலை தமிழில் ‘பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து ; என்ற பெயரில்  சீனிவாச ராமாநுஜம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார் (எதிர் வெளியீடு).

இதற்கு முன்பு நான் வாசித்த ‘ப்ரோஜக்ட் ஹெய்ல்மேரி’ என்னும் அறிபுனைக் கதையில் முதன் முதலில் ஒரு வேற்றுலகவாசியுடன் மனிதன் உரையாடும் பகுதி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மொழி பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும், எழுத்து / ஒலி வடிவமாக அது உருப்பெறுவதற்கான சூழல் குறித்தும் விளக்கங்களைக் கொண்ட, நாவலின் ஒரு சிறிய பகுதி அது. அதனைத் தொடர்ந்து மொழி, உரையாடல், மெளனம், புரிதல், தொடர்பாகவே வாசித்துக் கொண்டிருந்த நான், கண்டடைந்த புத்தகம் தான் சுந்தர் சருக்கையின் இந்நூல்.

 கதையின் முதல் அத்தியாயத்தில் , கர்நாடகத்தின் மலைசார்ந்த பகுதியிலுள்ள ஒரு பசுமையான கிராமத்தில் , வாய்த்துடுக்கான பன்னிரண்டு வயது சிறுமி கல்பனா வீட்டிலிருந்து காணாமல் போகிறாள். தன்னுடைய அஜ்ஜி (பாட்டி) பிரார்த்தனைகளைச் சொல்லி சாமி கும்பிடும்பொழுது அதனைக் கேலியாகக் கேள்வி கேட்கிறாள் கல்பனா. “நீங்கள் சொல்லும் இந்த பிரார்த்தனைகள் எங்கே செல்கின்றன ? கடவுள் எங்கிருக்கிறார் ? எங்காவது இருந்து இந்த பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா ?” எனக் கேட்க, கல்பனாவின் கேள்விகளால் துனுக்குற்ற அஜ்ஜி ஏதோ ஒரு பிரார்த்தனையை கண்மூடி சொல்லிவிட்டு , “இதோ இந்த பிரார்த்தனை எங்கே செல்கிறதென் நீயே தேடிப்போய்ப் பார்த்து கண்டுபிடி” எனச் சொல்லிவிட , கல்பனா விளையாட்டாக அஜ்ஜியின் சொற்களைப் பின்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற , அப்படியாகத்தான் தொலைந்து போகிறாள்.

 அவள் குடும்பமும் ஊரும் அதிர்ந்து போய் அவளைத் தேடும் முயற்சிகளில் இறங்க, மூன்று நாட்களுக்குப் பின் காட்டுவழி மலைப்பாதையில் மயங்கிக் கிடக்கும் அவளை ஒரு பேருந்து ஓட்டுநர் பார்த்து காப்பாற்றி வீட்டிற்கு கொண்டுவந்து விடுகிறார். கல்பனாவுக்கு என்ன நேர்ந்ததோ என அனைவரும் அச்சத்திலிருக்க , அவளோ ஒரு வார்த்தை கூட யாரிடமும் எதுவும் பேசாமல் தவிர்க்கிறாள். பேச மறுக்கிறாள்.  மனம்  முழுக்க கோபமும் வெறுப்புமாக மெளனமாக நாட்களைக் கடத்தும் கல்பனா , தன் தங்கை தீக்‌ஷாவிடம் மட்டும் வாய் திறந்து பேசாமல், எழுத்தின் வழியாக , ஓரிரு சுருக்கமான சொற்களில் பேசுகிறாள் (!) . இதன் பின் கல்பனா, அவள் தங்கை தீக்‌ஷா, தீக்‌ஷாவின் தோழி குமாரி – இந்த மூன்று சிறுமியரைச் சுற்றியே கதை நகர்கிறது.

குழந்தைகளின் அறிவை மெச்சுகிற பெரியவர்களின் பெருந்தன்மை என்பது ,அவர்கள் பதில் சொல்லமுடியாத கேள்விகளை எதிர்கொள்ளும் வரை மட்டுமே. இந்தக் கூற்றை மெய்யாக்கும்படி தொடர்ந்து தங்களுடைய கேள்விகளாலும் , தேடலாலும் , குடும்பத்தினரையும் , ஆசிரியர்களையும் துளைத்தெடுக்கிறார்கள். மொழியைப் புரிந்து கொள்ள நிகழ்த்தும் தேடலும், படிப்படியாக உண்மையை நோக்கிய அவர்களின் பயணமும் தத்துவார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன.   மொழியில் தொடங்கி , ஒலிக்கு நகர்ந்து, பின்பு கடவுளைத் தேடி , பின்பு ஒலிக்கும், இசைக்கும், மொழிக்குமான வேறுபாட்டைப் பேசி இறுதியில் நம்மையும் ஒரு சிந்தனைச் சுழலுக்குள் தள்ளுகிறார் எழுத்தாளர். கதையாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றினாலும் அந்த கதையின் வழி எழுத்தாளர் முன்வைக்கிற தத்துவார்த்தமான கேள்விகளும் அதற்கான பதில்களுமே வாசகர்களுக்கான பெறுமதி என்பது என் கருத்து.

நான் ஆங்கில மூலத்தையும் , தமிழ் மொழிபெயர்ப்பையும் அடுத்தடுத்து வாசித்திருந்தாலும் மொழிபெயர்ப்பில் இந்நூலின் கருதுகோளும் ஆழமும் மிகச்சரியாக வந்திருப்பதாக உணர்ந்தேன்  இன்னொன்று, தத்துவம் சார்ந்த நூல்களை வாசிக்கிற பொறுமை நமக்கு இல்லை என்னும் அவநம்பிக்கையுடனேயே இந்நூலை வாசிக்கத் துவங்கியினேன். வாசிக்கத் தொடங்கி அதனை முடிக்கிற தருவாயில் என்னுடைய பேச்சின் அளவும் குறைந்துபோய்விட்டதாக, அதற்கான தேவை இல்லாமல் போனதாக உணர்ந்தேன். பெரும்பாலான உரையாடல்களை உள்முகமாகவே நிகழ்த்திக் கொண்டிருந்தேன். இதற்கு முழுமுற்றாக இந்த புத்தகத்தை காரணமாகக் கொள்ளாவிட்டாலும் (அன்றாடத்தில் எதிர்கொண்ட சில சிக்கல்களும் வேறு காரணங்களும்  இருந்தாலும்) உறுதியாக அதன் தாக்கம் இருந்தது.

 கதையின் முடிவில் எனக்கு உவப்பில்லை. ஆனால் அந்த முடிவைப் போலவே முற்றுப்பெறாத , விடைதெரியாத கேள்விகள் நமக்கும் தோன்றலாம். நமது சொற்களின் தேவையற்ற அல்லது தேவைப்படாத இடங்களில், சொற்களால் இட்டு நிரப்பமுடியாத மெளனத்தின் மதிப்பை ,இந்நூல் உறுதியாகக் கூட்டியிருக்கும்.

தத்துவங்களை விரும்பி வாசிக்கிறவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்.

 Following a Prayer – Sundar Sarukkai – Tranquebar/Westlandbooks – Rs.599

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து – சுந்தர் சருக்கை – மொ.பெ/ சீனிவாச ராமாநுஜம் – எதிர்வெளியீடு – ரூ.569 / 344 பக்கங்கள்




சனி, 16 மே, 2026

வீனஸ் - பா.கண்மணி - எதிர் வெளியீடு

 


 பா.கண்மணி எழுதிய ’வீனஸ்’ பற்றி
**************************************************

பெங்களூரில் வீனஸ் என்ற பெயரில் அழகுநிலையத்தை தொடங்கி நடத்திவரும் ரஞ்சனி, வாடிக்கையாளர்களாக அங்கு வரும் நிஷா என்னும் மாடல் , உயர்நடுத்தர வர்க்க குடும்பத்தலைவி சந்தியா, அழகு நிலையத்துடன் இணைந்த உடற்பயிற்சிக்கூடத்தில் டயட்டீசியனாகப் பணிபுரியும் திலோத்தமா, உடற்பயிற்சியாளன் ப்ருத்வி, ரஞ்சனியின் மனோதத்துவ மருத்துவரும் நண்பருமான டாக்டர் ஆகியோரின் வாழ்வும் கதைகளுமே வீனஸ் என்னும் இந்த கதைத்தொகுப்பு (anthology ?! )

இதனை நாவல் என்றோ குறுநாவல் என்றோ வகைமை செய்ய முடியாததற்கான காரணம் இந்த வடிவமே. பாத்திரங்களின் வாழ்வையும் அவர்களின் குணவார்ப்பையும் மட்டும் சொல்லிவிட்டு பின்பு பெரிய சிக்கலோ தீர்வோ முடிச்சுகளோ எதுவுமின்றி அடுத்தடுத்த பாத்திரத்தின் கதைக்கு/ அத்தியாயத்திற்கு நகர்ந்து விடுவதனால் ஒட்டுமொத்தமாக ஒரு போதாமை அல்லது முடிவின்மையினை உணர முடிந்தது.

கண்மணியின் மொழி ஒரு மாதிரி அண்மையில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய வீட்டைப்போல பழமையும் நவீனமும் கலந்தாற்போலான தன்மை கொண்டிருக்கிறது. அதுவே நம்மைத் தொடர்ந்து வாசிக்கவும் வைக்கிறது. புளகம், சிவிறி போன்ற வழக்கிலில்லா அருஞ்சொற்களின் பயன்பாடும்,அழகுக்கலை சார்ந்த கலைச்சொற்களும் ,பன்மொழி பேசும் மக்களைக் கொண்ட பெங்களூரின் தன்மைக்கேற்ப ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசும் பாத்திரங்களின் சொற்றொடர்களை அந்தந்த மொழியிலே தமிழில் ( வோ ஜாத்தீ நயி திதி, கடையினிந்தா ராண்டம் செக்குக்கு பந்திதினி ) எழுதிவிட்டதும் கதைக்களத்திற்கேற்றார்போல பொருந்தி வந்திருக்கிறது. வசீகரமான வர்ணனைகளும், சில இடங்களில் அப்பட்டமான விவரணைகளும் ஆங்காங்கு விரவிக்கிடக்கின்றன . ஸ்டெல்லா ப்ரூஸும் , பாலகுமாரனும், சிவசங்கரியும் , சாரு நிவேதிதாவும் கலந்துகட்டிய மொழியே இந்நூலின் பலம்.

இதில் கதைப்பாத்திரங்களின் மையம் அல்லது கதை/அத்தியாயங்களின் மையம் என்பது இளமை, உடல், காலம், பொறுப்புகள், கடமை, மோகம் இவற்றுக்கிடையேயான போராட்டங்களும் மனசஞ்சலங்களுமாக அமைந்திருக்கிறது.
The characters were introduced and set up in a fantastic manner, hooking us in to get involved and then ending abruptly only for us to be left hanging and wanting more . இதே கதை மாந்தர்களைக் கொண்டு கண்மணி இன்னொரு நாவல் எழுதினாலோ அல்லது இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த பாகமென வெளியிட்டாலோ அதனையும் உறுதியாக வாசிப்பேன்.

வீனஸ் - பா.கண்மணி - எதிர் வெளியீடு - 128 பக்கங்கள் - விலை ரூ.180





திங்கள், 11 மே, 2026

ரகுராய் நினைவஞ்சலி - சென்னை

 







சனிக்கிழமை மாலை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் அரங்கில் பிரபு காளிதாஸ் ஒருங்கிணைத்த , நிழற்படக்கலைஞர் ரகுராய்க்கான நினைவஞ்சலிக் கூட்டம் பற்றி...
 
அண்மையில் மறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த நிழற்படக்கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ரகுராய் அவர்கள் குறித்து நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உரையாடவும் ஒவியர் ட்ராட்ஸ்கி மருது, நிழற்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற நிழற்படக்கலைஞர் ஷேக் முகமுகது ஃபைசல் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். 
 
முதலில் பேசிய மருது அவர்கள் ரகுராயை டெல்லியில் முதன் முதலாக கலைக்கண்காட்சிகளின் போது சந்தித்ததில் துவங்கி அவருடைய வாழ்வின் பல நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். ரகுராய் எப்போதும் ஒரு பரபரப்புடனேயே காணப்பட்டதாகவும் அவருடைய கண்கள் அவரைச் சுற்றியுள்ள சூழலில் யாருக்கும் புலப்படாத சப்ஜெக்டுகளைத் தேடியபடியே இருந்ததாகவும் சொன்னார்.
 
அதுவரையிலும் ஐரோப்பிய நிழற்டக் கலைஞர்களுக்கு மட்டுமே இருந்த பிரத்யேக பாணியிலிருந்து மாற்றி இந்தியாவின் நிலவமைப்பையும் மக்களையும் முற்றிலும் புதியதொரு கோணத்தில் ரகுராய் காட்சிப்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
ரகுராய் எப்போதும் அவரது துறைசார்ந்த அடுத்தடுத்த தொழில்நுட்ப பாய்ச்சல்களைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொண்டு அவற்றைக் கற்றுக் கொண்டதையும் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் கலையை வெகுமக்கள் திரளிடம் கொண்டு சேர்த்ததைப் பற்றி சொன்னார். 
 
மருது அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஓவியம், அனிமேஷன், கிராஃபிக்ஸ் சார்ந்த தொழிநுட்பங்களைத் தேடியலைந்து கற்றுக் கொண்டது பற்றிக் குறிப்பிட்ட அத்தனையும் பொக்கிஷமான தகவல்கள். இந்தியாவில் ஆப்பிளின் மேக், மைக்ரோசாஃப்டின் பிசி ஆகியவை நுழைவதற்கு முன்பே பிரபலமடைந்த அமிகா என்ற கணினியை செய்தித்தாளில் வரிவிளம்பரம் பார்த்து உடனே வாங்கிவிட முயன்றதையும் , பின்பு அந்த விற்பனையாளர்களின் இடத்துக்கே நேரில் சென்று விசாரித்ததையும் சொல்லி , அவர்கள் அப்போதைய அரசின் இறக்குமதி கெடுபிடிகளின் காரணமாக அதீதமான ரகசியத்தன்மையுடன் செயல்பட்டதையும் குறிப்பிட்டார்.
பின்பு 45000 ரூபாய்களுக்கு (ரெண்டு க்ரவுண்ட் இடம் வாங்கிருப்பேன் அப்போ என்றார் 😃) அமிகா கணினியை வாங்கியவுடன் அதில் 8 பிட் வண்ணங்களில் ஓவியம் வரைந்ததையும் ஒரே க்ளிக்கில் பல அடுக்காக வரையப்பட்ட ஓவியங்களை நகரும்படமாக மாற்ற முடிந்ததையும் சொல்லி அதுவரையிலும் காகிதத்தில் வரைந்து ப்ரேம்களைப் பார்த்து பின்பு ஃபிலிமுக்கு மாற்றி அதனை பெரிய திரையில் ஓடவிட்டுப் பார்க்க பிரசாத் அரங்கில் காத்திருந்த நிலை மாறி உடனுக்குடன் கணினியில் அனிமேஷனை பார்க்க முடிந்தது ஒரு கலைஞனாக பெரும் விடுதலையுணர்வை தந்ததென சொன்னார்.
 
பின்பு அவருடைய பேச்சு திரைத்துறையில் அவர் பணிபுரிந்த திரைப்படங்கள் குறித்து நகர்ந்தது. நாசரின் அவதாரம் திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிக்காக கிராபிக்ஸில் நரசிம்ம அவதாரம் செய்ய முயன்று பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டதையும், தேவதை படத்தின் போது செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் முயற்சிகள் குறித்தும், இறுதியாக சங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படப்பாடலில் (அவர் பணிபுரியவில்லை) செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் பற்றியும் சொன்னார். செல்போன் பயன்பாடு பரவலாகிவிட்ட இந்த காலத்தில் ஐரோப்பாவைப் போல் இங்கும் காட்சி ஊடகம் / ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக் கல்வியில் செயல்முறைகளாக புகுத்த வேண்டிய தேவையையும் அவசியத்தையும் குறிப்பிட்டார். 
 
டிஸ்னியின் ‘லயன்கிங்’ (1994) அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற 6 நிமிட Wildebeest stampede காட்சிக்காக ஓவியக்கலைஞர்கள் மூன்று ஆண்டுகள் உழைத்ததையும் , ஒரு வேளை கணினிப் பயன்பாடு இல்லாதிருந்தால் இதற்கு மட்டுமே பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்பதையும் சொல்லிவிட்டு, தொழிநுட்பம் எப்போதும் கலையை ஜனநாயகப்படுத்தியதையும் துறைசார்ந்த முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ள விரும்பாத கலைஞர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனதையும் சொல்லி, ரகுராய் இறுதி வரை தன்னை காலத்திற்கேறார்போல் புதுப்பித்துக் கொண்டே இருந்ததைச் சொல்லி அவருடைய நீண்ட உரையினை முடித்துக் கொண்டார் .
பின்பு ஃபைஸல் , ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற காலத்தின் நினைவுகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் வகுப்புகள் என்றால் மீதம் மூன்று நாட்கள் மாணவர்களை படமெடுக்க வெளியிடங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவாராம். அப்படி அனுப்பும்பொழுது அவர்கள் செல்லும் இடம் பற்றிய முழு விவரங்கள், அந்நாளின் வானிலை , உள்ளூரில் ஏதேனும் பரப்பான சூழல் இருந்தால் அது பற்றிய விவரங்கள் என அத்தனையும் விசாரித்துவிட்டு கருத்தில் கொண்டே அவர்களை வெளியில் அனுப்புவாராம். டெல்லியில் இருந்ததால் ரகுராய் பெரும்பகுதி டெல்லி அரசியல் சார்ந்த முக்கியத் தருணங்களைப் படம்பிடித்ததையும் வேறு சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
 
அன்னை தெரசாவின் சென்னை சுற்றுப்பயணத்தில் அவரைப் படமெடுக்க உடன் வந்திருந்த ரகுராயை, முதன்முதலில் நேரில் பார்த்தது பற்றி சொன்ன வைட் ஆங்கிள் ரவிஷங்கர் நிழற்படக்கலைஞராக தன்னுடைய வாழ்க்கை துவங்கியதையும், தமிழ்நாட்டின் பிரபலமான ஃபோட்டோ ஏஜன்ஸிகளுடன் பணிபுரிந்ததையும் , கலைஞரை மிக இயல்பாக நெருக்கமாக படம்பிடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். கலைஞரின் வீட்டில் புகழ்பெற்ற நிழற்படக்கலைகர் ஹேரி மில்லர் எடுத்த பேரறிஞர் அண்ணாவின் நிழற்படம் பற்றி கலைஞர் பகிர்ந்து கொண்ட தகவல்களையும், கலைஞரின் photo sense பற்றியும் சொல்லி, பின்பு ஒளிப்பதிவாளராக தன்னுடைய தற்கால திரையுலக அனுபவங்கள் வரை சுருக்கமாகப் பேசி தன் உரையை முடித்துக் கொண்டார்.
தனிப்பட்ட முறையில் ரகுராயின் கருப்பு வெள்ளைப் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய செயல்பாடுகள் பற்றி மேலோட்டமாகத் தெரிந்திருந்தாலும் இன்னும் நுணுக்கமான விஷயங்களையும் அனுபவங்களையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் உரையாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது . நிகச்சியை ஒருங்கிணைத்த பிரபுவின் குடும்பத்தினர் அங்கிருந்தவர்களை ஓடி ஓடி கவனித்தபடி இருந்தனர். சுட்டிப் பையனாக பார்த்த அபய் (பிரபுவின் மகன்) இன்று கல்லூரி செல்லும் இளைஞராக வளர்ந்து நிற்கிறார். அவரும் பிரபுவுடன் இந்நிகழ்வினைப் படமெடுத்தபடி இருந்தார். ஒட்டுமொத்தமாக மனதிற்கு நெருக்கமான நிறைவானதொரு நிகழ்வாக அமைந்தது. Thanks for inviting me and for the fantastic evening Prabhu…! 
 
வெளியே நிறுத்திவைத்திருந்த காரை உடனே நகர்த்தும்படி போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் அலைபேசியில் அழைத்துச் சொன்னதால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் நன்றி சொல்ல முடியாமல் அவசரம் அவசரமாகக் கிளம்ப வேண்டியாதாகிவிட்டது ☹

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி (சிற்றூர் முதல் குரூஸ் பர்ணாந்து வரை) - ஜிரா - அல்புனைவு

 


 
“Nations are not communities and never have been. The history of any country, presented as the history of a family, conceals the fierce conflicts of interest (sometimes exploding, often repressed) between conquerors and conquered, masters and slaves, capitalists and workers, dominators and dominated in race and sex. And in such as world of conflict, a world of victims and executioners, it is the job of thinking people, as Albert Camus suggested, not to be on the side of the executioners.”
― Howard Zinn, A People’s History of the United States:
 
ஒரு நிலத்தின் வரலாறு என்பது உண்மையில் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறே. மாறாக அரசியல் வரலாறு என்பதும் மக்களின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றே. ஓர் ஊரின் வரலாற்றைத் தேடி கடந்த காலத்தின் சுவடுகளைப் பின்தொடர்ந்து பார்ப்போமாயின் அது பெரும்பாலும் மக்களின் உழைப்பையும் ரத்தத்தையும் உயிர்களையும் அடித்தளமாகக் கொண்டு அதன் மேல் அதிகார வெறிகொண்ட தனி மனிதர்களும் அரசர்களும் அரசுகளும் தங்களின் சுயநலத்துக்காக எழுப்பிய கோட்டைகளையே காண முடிகிறது. உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது கோட்டைச் சுவர்களின் பிரம்மாண்டங்களை அண்ணாந்து பார்ப்பதிலும் கடந்த காலப் பெருமிதங்களில் மிதந்து ,மனதால் அங்கேயே தேங்கிவிடுவதிலும் இல்லை. மக்களின் வாழ்வையும் வலிகளையும் தேடிப்போதலும் அதன் வழியே கிடைக்கிற கதைகளுமே உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது என் கருத்து. 
 
ஜிரா என்னும் ஜி.ராகவன் எழுதி மின்னங்காடி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூலான ‘தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ் பர்னாந்து வரை’ அப்படியொரு வரலாற்றுத் தேடலை நிகழ்த்தியிருக்கின்றது. புறத்தோற்றத்தில் இது தூத்துக்குடி என்னும் ஊரின் வரலாறு என்பதாகத் தோன்றினாலும் உண்மையில் இது கடல்சார்ந்து பல நூற்றாண்டுகளாகத் தங்கள் வாழ்வினைக் கட்டமைத்துக் கொண்ட பரதவ மக்களின் வரலாறாகவும்,ஒரு பகுதி தமிழகத்தில் கிறிஸ்தவத்தின் வரலாறாகவும், கடல் வணிகத்தின் வரலாறாகவும், வெவ்வேறு காலகட்டங்களில் தங்களின் வாழ்வாதாரத்தின் பொருட்டு ஆட்சியாளர்களுடன் உடன்பட்டும் முரண்பட்டும் வாழ்ந்த பொதுமக்களின் போராட்ட வரலாறாகவுமே உருவாகி வந்திருக்கின்றது.
தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆண்ட பாண்டியர்களின் தொடக்க ஆட்சிக்காலத்தில் பெரும் வணிக மையமாகவும் முதன்மைத் துறைமுகமாகவும் செயல்பட்ட கொற்கை நகரம் காலப் போக்கில் (சில பல நூற்றாண்டுகளில்) கடல் உள்வாங்கி நிலப்பரப்பானபின் , தென் பகுதியின் பிற துறைமுகங்களாக வெவ்வேறு காலகட்டங்களில் பழையகாயல் , புன்னைக்காயல், முத்துக்குளித்துறை (தற்போதைய தூத்துக்குடி )உள்ளிட்ட ஊர்கள் இருந்திருக்கின்றன. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர்களின் இறுதி ஆட்சிக்காலத்தின் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக மதுரை சுல்தான்களிடம் ஆட்சியை இழந்து பின்பு விஜயநகர அரசின் துணையுடன் அவர்களிடம் போராடி தென்காசி தொடங்கி தூத்துக்குடி வரையிலுமான சில பகுதிகளை ஆண்டு வந்த காலகட்டத்தில் துவங்குகிறது இப்புத்தகம். 
 
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கீசியரின் வருகை, கிறிஸ்தவ மிஷனரிக்களின் (ஏசு சபையினர்) செயல்பாடுகள் ,இந்த ஊரின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வாழ்வை முன்னேற்றவும் பெரும்பங்காற்றிய தூய சவேரியார் பற்றிய தகவல்கள், விஜயநகர அரசின் படையெடுப்பு, கிட்டத்தட்ட 20000 பரதவ குல மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் காரணமான காதறுப்பு நிகழ்வு, இதனூடாக முத்து, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தூத்துக்குடி முதன்மைத் துறைமுகமாக வளர்ந்த கதை என அத்தனையையும் பேசியிருக்கிறார். குறிப்பாக தூத்துக்குடி பனிமயமாதாவின் திருவுரு மனிலாவில் இருந்து சந்தலேனா கப்பலில் இங்கு வருகிற நிகழ்வும் அதற்கும் முன்னும் பின்னுமான விவரணைகளும் சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன. 
 
பழைய ஒருங்கிணைந்த தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட பாளையக்காரர்கள் அடிமைகளாக மலேயாவிற்கு (தற்போதைய மலேசியா) அனுப்பிவைக்கப்பட்ட நிகழ்வு; சுதந்திரத்துக்கு வ.உ.சிதம்பரனார் தலைமையில் கோரல் மில் தொழிலாளர்களான அடிப்படை உரிமைகள் நியாயமான ஊதியம் கோரி நிகழ்த்தப்பட்ட, மொத்த நாட்டின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பிய மாபெரும் கடையடைப்புப் போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் பற்றி இந்தப் புத்தகத்தில் தான் முதன்முதலில் அறிந்துகொண்டேன்.
பாண்டிய மன்னர்கள் துவங்கி, மதுரை சுல்தான்கள், போர்ச்சுக்கீசியர்கள், அஞ்சுவண்ணத்தார் எனப்படும் இஸ்லாமியர்கள்,டச்சுக்காரர்கள், மலபார் சாமூத்திரிகள், விஜயநகர நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், இறுதியாக பிரிட்டிஷார் என 14ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காலணியாதிக்கத்தால் விளைந்த தொடர் போர்களையும் அரசியல் மோதல்களையும் அமைதியின்மையையும் கடந்து, கொஞ்சங் கொஞ்சமாய் மீண்டு, வளர்ந்து வந்திருக்கின்றனர் தூத்துக்குடி மக்கள். இத்தனை வரலாற்றுத் தகவல்களையும் வாசிக்கிறவர்களின் ஆர்வம் குன்றாத மொழியில் சிறப்புற எழுதியிருக்கிறார் ஆசிரியர். 
 
முழுக்க கதையாக இல்லாமல் ஆங்காங்கே முக்கிய நிகழ்வுகளை மட்டும் கதை போன்ற மொழியில் சொல்லி அது சார்ந்த தரவுகளைத் தந்திருக்கிறார். 25 அத்தியாயங்களில் இத்தனைத் தகவல்களையும் சொல்லி ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அதற்கான உசாத்துணையும் (references) தந்திருப்பது நூலாசிரியரின் கடினமான உழைப்புக்கும் தரவுகளில் உண்மைத்தன்மையை ஆய்ந்தறிந்து எழுத அவர் எடுத்துக் கொண்டு பெருமுயற்சிக்குமான சான்று. நான் குறிப்பிடாமல் விட்ட இன்னும் பல நிகழ்வுகள் அரிய தகவல்களும் இந்நூலில் உண்டு . முன்னுரையில் சரவணன் சந்திரன் குறிப்பிட்டது போல இந்த புத்தகம் அகழ்ந்தெடுத்த ஓர் ஆணிமுத்தின் கதை தான். 
 
நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும் சரி, அல்லது குறுகுறுப்புடன் கதைகேட்கிற, வரலாற்றைத் தேடுகிற சராசரி வாசகரானாலும் சரி, கட்டாயம் தவறவிடாமல் படிக்க வேண்டிய புத்தகம் . ஜி.ரா அவர்களுக்கும், இந்நூலைச் சிறப்புறப் பதிப்பித்திருக்கும் மின்னங்காடி பதிப்பகத்தினருக்கும் என் வாழ்த்தும் நன்றியும்
 
தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ்பர்னாந்து வரை | மின்னங்காடி பதிப்பகம் | 221 பக்கங்கள் | ரூ. 300

Related Posts Plugin for WordPress, Blogger...