சனிக்கிழமை மாலை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் அரங்கில் பிரபு காளிதாஸ் ஒருங்கிணைத்த , நிழற்படக்கலைஞர் ரகுராய்க்கான நினைவஞ்சலிக் கூட்டம் பற்றி...
அண்மையில் மறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த நிழற்படக்கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ரகுராய் அவர்கள் குறித்து நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உரையாடவும் ஒவியர் ட்ராட்ஸ்கி மருது, நிழற்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற நிழற்படக்கலைஞர் ஷேக் முகமுகது ஃபைசல் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
முதலில் பேசிய மருது அவர்கள் ரகுராயை டெல்லியில் முதன் முதலாக கலைக்கண்காட்சிகளின் போது சந்தித்ததில் துவங்கி அவருடைய வாழ்வின் பல நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். ரகுராய் எப்போதும் ஒரு பரபரப்புடனேயே காணப்பட்டதாகவும் அவருடைய கண்கள் அவரைச் சுற்றியுள்ள சூழலில் யாருக்கும் புலப்படாத சப்ஜெக்டுகளைத் தேடியபடியே இருந்ததாகவும் சொன்னார்.
அதுவரையிலும் ஐரோப்பிய நிழற்டக் கலைஞர்களுக்கு மட்டுமே இருந்த பிரத்யேக பாணியிலிருந்து மாற்றி இந்தியாவின் நிலவமைப்பையும் மக்களையும் முற்றிலும் புதியதொரு கோணத்தில் ரகுராய் காட்சிப்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
ரகுராய் எப்போதும் அவரது துறைசார்ந்த அடுத்தடுத்த தொழில்நுட்ப பாய்ச்சல்களைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொண்டு அவற்றைக் கற்றுக் கொண்டதையும் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் கலையை வெகுமக்கள் திரளிடம் கொண்டு சேர்த்ததைப் பற்றி சொன்னார்.
மருது அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஓவியம், அனிமேஷன், கிராஃபிக்ஸ் சார்ந்த தொழிநுட்பங்களைத் தேடியலைந்து கற்றுக் கொண்டது பற்றிக் குறிப்பிட்ட அத்தனையும் பொக்கிஷமான தகவல்கள். இந்தியாவில் ஆப்பிளின் மேக், மைக்ரோசாஃப்டின் பிசி ஆகியவை நுழைவதற்கு முன்பே பிரபலமடைந்த அமிகா என்ற கணினியை செய்தித்தாளில் வரிவிளம்பரம் பார்த்து உடனே வாங்கிவிட முயன்றதையும் , பின்பு அந்த விற்பனையாளர்களின் இடத்துக்கே நேரில் சென்று விசாரித்ததையும் சொல்லி , அவர்கள் அப்போதைய அரசின் இறக்குமதி கெடுபிடிகளின் காரணமாக அதீதமான ரகசியத்தன்மையுடன் செயல்பட்டதையும் குறிப்பிட்டார்.
பின்பு 45000 ரூபாய்களுக்கு (ரெண்டு க்ரவுண்ட் இடம் வாங்கிருப்பேன் அப்போ என்றார்
) அமிகா கணினியை வாங்கியவுடன் அதில் 8 பிட் வண்ணங்களில் ஓவியம் வரைந்ததையும் ஒரே க்ளிக்கில் பல அடுக்காக வரையப்பட்ட ஓவியங்களை நகரும்படமாக மாற்ற முடிந்ததையும் சொல்லி அதுவரையிலும் காகிதத்தில் வரைந்து ப்ரேம்களைப் பார்த்து பின்பு ஃபிலிமுக்கு மாற்றி அதனை பெரிய திரையில் ஓடவிட்டுப் பார்க்க பிரசாத் அரங்கில் காத்திருந்த நிலை மாறி உடனுக்குடன் கணினியில் அனிமேஷனை பார்க்க முடிந்தது ஒரு கலைஞனாக பெரும் விடுதலையுணர்வை தந்ததென சொன்னார்.
பின்பு அவருடைய பேச்சு திரைத்துறையில் அவர் பணிபுரிந்த திரைப்படங்கள் குறித்து நகர்ந்தது. நாசரின் அவதாரம் திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிக்காக கிராபிக்ஸில் நரசிம்ம அவதாரம் செய்ய முயன்று பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டதையும், தேவதை படத்தின் போது செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் முயற்சிகள் குறித்தும், இறுதியாக சங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படப்பாடலில் (அவர் பணிபுரியவில்லை) செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் பற்றியும் சொன்னார். செல்போன் பயன்பாடு பரவலாகிவிட்ட இந்த காலத்தில் ஐரோப்பாவைப் போல் இங்கும் காட்சி ஊடகம் / ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக் கல்வியில் செயல்முறைகளாக புகுத்த வேண்டிய தேவையையும் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
டிஸ்னியின் ‘லயன்கிங்’ (1994) அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற 6 நிமிட Wildebeest stampede காட்சிக்காக ஓவியக்கலைஞர்கள் மூன்று ஆண்டுகள் உழைத்ததையும் , ஒரு வேளை கணினிப் பயன்பாடு இல்லாதிருந்தால் இதற்கு மட்டுமே பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்பதையும் சொல்லிவிட்டு, தொழிநுட்பம் எப்போதும் கலையை ஜனநாயகப்படுத்தியதையும் துறைசார்ந்த முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ள விரும்பாத கலைஞர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனதையும் சொல்லி, ரகுராய் இறுதி வரை தன்னை காலத்திற்கேறார்போல் புதுப்பித்துக் கொண்டே இருந்ததைச் சொல்லி அவருடைய நீண்ட உரையினை முடித்துக் கொண்டார் .
பின்பு ஃபைஸல் , ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற காலத்தின் நினைவுகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் வகுப்புகள் என்றால் மீதம் மூன்று நாட்கள் மாணவர்களை படமெடுக்க வெளியிடங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவாராம். அப்படி அனுப்பும்பொழுது அவர்கள் செல்லும் இடம் பற்றிய முழு விவரங்கள், அந்நாளின் வானிலை , உள்ளூரில் ஏதேனும் பரப்பான சூழல் இருந்தால் அது பற்றிய விவரங்கள் என அத்தனையும் விசாரித்துவிட்டு கருத்தில் கொண்டே அவர்களை வெளியில் அனுப்புவாராம். டெல்லியில் இருந்ததால் ரகுராய் பெரும்பகுதி டெல்லி அரசியல் சார்ந்த முக்கியத் தருணங்களைப் படம்பிடித்ததையும் வேறு சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
அன்னை தெரசாவின் சென்னை சுற்றுப்பயணத்தில் அவரைப் படமெடுக்க உடன் வந்திருந்த ரகுராயை, முதன்முதலில் நேரில் பார்த்தது பற்றி சொன்ன வைட் ஆங்கிள் ரவிஷங்கர் நிழற்படக்கலைஞராக தன்னுடைய வாழ்க்கை துவங்கியதையும், தமிழ்நாட்டின் பிரபலமான ஃபோட்டோ ஏஜன்ஸிகளுடன் பணிபுரிந்ததையும் , கலைஞரை மிக இயல்பாக நெருக்கமாக படம்பிடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். கலைஞரின் வீட்டில் புகழ்பெற்ற நிழற்படக்கலைகர் ஹேரி மில்லர் எடுத்த பேரறிஞர் அண்ணாவின் நிழற்படம் பற்றி கலைஞர் பகிர்ந்து கொண்ட தகவல்களையும், கலைஞரின் photo sense பற்றியும் சொல்லி, பின்பு ஒளிப்பதிவாளராக தன்னுடைய தற்கால திரையுலக அனுபவங்கள் வரை சுருக்கமாகப் பேசி தன் உரையை முடித்துக் கொண்டார்.
தனிப்பட்ட முறையில் ரகுராயின் கருப்பு வெள்ளைப் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய செயல்பாடுகள் பற்றி மேலோட்டமாகத் தெரிந்திருந்தாலும் இன்னும் நுணுக்கமான விஷயங்களையும் அனுபவங்களையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் உரையாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது . நிகச்சியை ஒருங்கிணைத்த பிரபுவின் குடும்பத்தினர் அங்கிருந்தவர்களை ஓடி ஓடி கவனித்தபடி இருந்தனர். சுட்டிப் பையனாக பார்த்த அபய் (பிரபுவின் மகன்) இன்று கல்லூரி செல்லும் இளைஞராக வளர்ந்து நிற்கிறார். அவரும் பிரபுவுடன் இந்நிகழ்வினைப் படமெடுத்தபடி இருந்தார். ஒட்டுமொத்தமாக மனதிற்கு நெருக்கமான நிறைவானதொரு நிகழ்வாக அமைந்தது. Thanks for inviting me and for the fantastic evening Prabhu…!
வெளியே நிறுத்திவைத்திருந்த காரை உடனே நகர்த்தும்படி போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் அலைபேசியில் அழைத்துச் சொன்னதால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் நன்றி சொல்ல முடியாமல் அவசரம் அவசரமாகக் கிளம்ப வேண்டியாதாகிவிட்டது 








