நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 11 மே, 2026

ரகுராய் நினைவஞ்சலி - சென்னை

 







சனிக்கிழமை மாலை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் அரங்கில் பிரபு காளிதாஸ் ஒருங்கிணைத்த , நிழற்படக்கலைஞர் ரகுராய்க்கான நினைவஞ்சலிக் கூட்டம் பற்றி...
 
அண்மையில் மறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த நிழற்படக்கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ரகுராய் அவர்கள் குறித்து நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உரையாடவும் ஒவியர் ட்ராட்ஸ்கி மருது, நிழற்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற நிழற்படக்கலைஞர் ஷேக் முகமுகது ஃபைசல் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். 
 
முதலில் பேசிய மருது அவர்கள் ரகுராயை டெல்லியில் முதன் முதலாக கலைக்கண்காட்சிகளின் போது சந்தித்ததில் துவங்கி அவருடைய வாழ்வின் பல நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். ரகுராய் எப்போதும் ஒரு பரபரப்புடனேயே காணப்பட்டதாகவும் அவருடைய கண்கள் அவரைச் சுற்றியுள்ள சூழலில் யாருக்கும் புலப்படாத சப்ஜெக்டுகளைத் தேடியபடியே இருந்ததாகவும் சொன்னார்.
 
அதுவரையிலும் ஐரோப்பிய நிழற்டக் கலைஞர்களுக்கு மட்டுமே இருந்த பிரத்யேக பாணியிலிருந்து மாற்றி இந்தியாவின் நிலவமைப்பையும் மக்களையும் முற்றிலும் புதியதொரு கோணத்தில் ரகுராய் காட்சிப்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
ரகுராய் எப்போதும் அவரது துறைசார்ந்த அடுத்தடுத்த தொழில்நுட்ப பாய்ச்சல்களைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொண்டு அவற்றைக் கற்றுக் கொண்டதையும் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் கலையை வெகுமக்கள் திரளிடம் கொண்டு சேர்த்ததைப் பற்றி சொன்னார். 
 
மருது அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஓவியம், அனிமேஷன், கிராஃபிக்ஸ் சார்ந்த தொழிநுட்பங்களைத் தேடியலைந்து கற்றுக் கொண்டது பற்றிக் குறிப்பிட்ட அத்தனையும் பொக்கிஷமான தகவல்கள். இந்தியாவில் ஆப்பிளின் மேக், மைக்ரோசாஃப்டின் பிசி ஆகியவை நுழைவதற்கு முன்பே பிரபலமடைந்த அமிகா என்ற கணினியை செய்தித்தாளில் வரிவிளம்பரம் பார்த்து உடனே வாங்கிவிட முயன்றதையும் , பின்பு அந்த விற்பனையாளர்களின் இடத்துக்கே நேரில் சென்று விசாரித்ததையும் சொல்லி , அவர்கள் அப்போதைய அரசின் இறக்குமதி கெடுபிடிகளின் காரணமாக அதீதமான ரகசியத்தன்மையுடன் செயல்பட்டதையும் குறிப்பிட்டார்.
பின்பு 45000 ரூபாய்களுக்கு (ரெண்டு க்ரவுண்ட் இடம் வாங்கிருப்பேன் அப்போ என்றார் 😃) அமிகா கணினியை வாங்கியவுடன் அதில் 8 பிட் வண்ணங்களில் ஓவியம் வரைந்ததையும் ஒரே க்ளிக்கில் பல அடுக்காக வரையப்பட்ட ஓவியங்களை நகரும்படமாக மாற்ற முடிந்ததையும் சொல்லி அதுவரையிலும் காகிதத்தில் வரைந்து ப்ரேம்களைப் பார்த்து பின்பு ஃபிலிமுக்கு மாற்றி அதனை பெரிய திரையில் ஓடவிட்டுப் பார்க்க பிரசாத் அரங்கில் காத்திருந்த நிலை மாறி உடனுக்குடன் கணினியில் அனிமேஷனை பார்க்க முடிந்தது ஒரு கலைஞனாக பெரும் விடுதலையுணர்வை தந்ததென சொன்னார்.
 
பின்பு அவருடைய பேச்சு திரைத்துறையில் அவர் பணிபுரிந்த திரைப்படங்கள் குறித்து நகர்ந்தது. நாசரின் அவதாரம் திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிக்காக கிராபிக்ஸில் நரசிம்ம அவதாரம் செய்ய முயன்று பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டதையும், தேவதை படத்தின் போது செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் முயற்சிகள் குறித்தும், இறுதியாக சங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படப்பாடலில் (அவர் பணிபுரியவில்லை) செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் பற்றியும் சொன்னார். செல்போன் பயன்பாடு பரவலாகிவிட்ட இந்த காலத்தில் ஐரோப்பாவைப் போல் இங்கும் காட்சி ஊடகம் / ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக் கல்வியில் செயல்முறைகளாக புகுத்த வேண்டிய தேவையையும் அவசியத்தையும் குறிப்பிட்டார். 
 
டிஸ்னியின் ‘லயன்கிங்’ (1994) அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற 6 நிமிட Wildebeest stampede காட்சிக்காக ஓவியக்கலைஞர்கள் மூன்று ஆண்டுகள் உழைத்ததையும் , ஒரு வேளை கணினிப் பயன்பாடு இல்லாதிருந்தால் இதற்கு மட்டுமே பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்பதையும் சொல்லிவிட்டு, தொழிநுட்பம் எப்போதும் கலையை ஜனநாயகப்படுத்தியதையும் துறைசார்ந்த முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ள விரும்பாத கலைஞர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனதையும் சொல்லி, ரகுராய் இறுதி வரை தன்னை காலத்திற்கேறார்போல் புதுப்பித்துக் கொண்டே இருந்ததைச் சொல்லி அவருடைய நீண்ட உரையினை முடித்துக் கொண்டார் .
பின்பு ஃபைஸல் , ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற காலத்தின் நினைவுகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் வகுப்புகள் என்றால் மீதம் மூன்று நாட்கள் மாணவர்களை படமெடுக்க வெளியிடங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவாராம். அப்படி அனுப்பும்பொழுது அவர்கள் செல்லும் இடம் பற்றிய முழு விவரங்கள், அந்நாளின் வானிலை , உள்ளூரில் ஏதேனும் பரப்பான சூழல் இருந்தால் அது பற்றிய விவரங்கள் என அத்தனையும் விசாரித்துவிட்டு கருத்தில் கொண்டே அவர்களை வெளியில் அனுப்புவாராம். டெல்லியில் இருந்ததால் ரகுராய் பெரும்பகுதி டெல்லி அரசியல் சார்ந்த முக்கியத் தருணங்களைப் படம்பிடித்ததையும் வேறு சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
 
அன்னை தெரசாவின் சென்னை சுற்றுப்பயணத்தில் அவரைப் படமெடுக்க உடன் வந்திருந்த ரகுராயை, முதன்முதலில் நேரில் பார்த்தது பற்றி சொன்ன வைட் ஆங்கிள் ரவிஷங்கர் நிழற்படக்கலைஞராக தன்னுடைய வாழ்க்கை துவங்கியதையும், தமிழ்நாட்டின் பிரபலமான ஃபோட்டோ ஏஜன்ஸிகளுடன் பணிபுரிந்ததையும் , கலைஞரை மிக இயல்பாக நெருக்கமாக படம்பிடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். கலைஞரின் வீட்டில் புகழ்பெற்ற நிழற்படக்கலைகர் ஹேரி மில்லர் எடுத்த பேரறிஞர் அண்ணாவின் நிழற்படம் பற்றி கலைஞர் பகிர்ந்து கொண்ட தகவல்களையும், கலைஞரின் photo sense பற்றியும் சொல்லி, பின்பு ஒளிப்பதிவாளராக தன்னுடைய தற்கால திரையுலக அனுபவங்கள் வரை சுருக்கமாகப் பேசி தன் உரையை முடித்துக் கொண்டார்.
தனிப்பட்ட முறையில் ரகுராயின் கருப்பு வெள்ளைப் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய செயல்பாடுகள் பற்றி மேலோட்டமாகத் தெரிந்திருந்தாலும் இன்னும் நுணுக்கமான விஷயங்களையும் அனுபவங்களையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் உரையாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது . நிகச்சியை ஒருங்கிணைத்த பிரபுவின் குடும்பத்தினர் அங்கிருந்தவர்களை ஓடி ஓடி கவனித்தபடி இருந்தனர். சுட்டிப் பையனாக பார்த்த அபய் (பிரபுவின் மகன்) இன்று கல்லூரி செல்லும் இளைஞராக வளர்ந்து நிற்கிறார். அவரும் பிரபுவுடன் இந்நிகழ்வினைப் படமெடுத்தபடி இருந்தார். ஒட்டுமொத்தமாக மனதிற்கு நெருக்கமான நிறைவானதொரு நிகழ்வாக அமைந்தது. Thanks for inviting me and for the fantastic evening Prabhu…! 
 
வெளியே நிறுத்திவைத்திருந்த காரை உடனே நகர்த்தும்படி போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் அலைபேசியில் அழைத்துச் சொன்னதால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் நன்றி சொல்ல முடியாமல் அவசரம் அவசரமாகக் கிளம்ப வேண்டியாதாகிவிட்டது ☹

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி (சிற்றூர் முதல் குரூஸ் பர்ணாந்து வரை) - ஜிரா - அல்புனைவு

 


 
“Nations are not communities and never have been. The history of any country, presented as the history of a family, conceals the fierce conflicts of interest (sometimes exploding, often repressed) between conquerors and conquered, masters and slaves, capitalists and workers, dominators and dominated in race and sex. And in such as world of conflict, a world of victims and executioners, it is the job of thinking people, as Albert Camus suggested, not to be on the side of the executioners.”
― Howard Zinn, A People’s History of the United States:
 
ஒரு நிலத்தின் வரலாறு என்பது உண்மையில் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறே. மாறாக அரசியல் வரலாறு என்பதும் மக்களின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றே. ஓர் ஊரின் வரலாற்றைத் தேடி கடந்த காலத்தின் சுவடுகளைப் பின்தொடர்ந்து பார்ப்போமாயின் அது பெரும்பாலும் மக்களின் உழைப்பையும் ரத்தத்தையும் உயிர்களையும் அடித்தளமாகக் கொண்டு அதன் மேல் அதிகார வெறிகொண்ட தனி மனிதர்களும் அரசர்களும் அரசுகளும் தங்களின் சுயநலத்துக்காக எழுப்பிய கோட்டைகளையே காண முடிகிறது. உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது கோட்டைச் சுவர்களின் பிரம்மாண்டங்களை அண்ணாந்து பார்ப்பதிலும் கடந்த காலப் பெருமிதங்களில் மிதந்து ,மனதால் அங்கேயே தேங்கிவிடுவதிலும் இல்லை. மக்களின் வாழ்வையும் வலிகளையும் தேடிப்போதலும் அதன் வழியே கிடைக்கிற கதைகளுமே உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது என் கருத்து. 
 
ஜிரா என்னும் ஜி.ராகவன் எழுதி மின்னங்காடி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூலான ‘தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ் பர்னாந்து வரை’ அப்படியொரு வரலாற்றுத் தேடலை நிகழ்த்தியிருக்கின்றது. புறத்தோற்றத்தில் இது தூத்துக்குடி என்னும் ஊரின் வரலாறு என்பதாகத் தோன்றினாலும் உண்மையில் இது கடல்சார்ந்து பல நூற்றாண்டுகளாகத் தங்கள் வாழ்வினைக் கட்டமைத்துக் கொண்ட பரதவ மக்களின் வரலாறாகவும்,ஒரு பகுதி தமிழகத்தில் கிறிஸ்தவத்தின் வரலாறாகவும், கடல் வணிகத்தின் வரலாறாகவும், வெவ்வேறு காலகட்டங்களில் தங்களின் வாழ்வாதாரத்தின் பொருட்டு ஆட்சியாளர்களுடன் உடன்பட்டும் முரண்பட்டும் வாழ்ந்த பொதுமக்களின் போராட்ட வரலாறாகவுமே உருவாகி வந்திருக்கின்றது.
தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆண்ட பாண்டியர்களின் தொடக்க ஆட்சிக்காலத்தில் பெரும் வணிக மையமாகவும் முதன்மைத் துறைமுகமாகவும் செயல்பட்ட கொற்கை நகரம் காலப் போக்கில் (சில பல நூற்றாண்டுகளில்) கடல் உள்வாங்கி நிலப்பரப்பானபின் , தென் பகுதியின் பிற துறைமுகங்களாக வெவ்வேறு காலகட்டங்களில் பழையகாயல் , புன்னைக்காயல், முத்துக்குளித்துறை (தற்போதைய தூத்துக்குடி )உள்ளிட்ட ஊர்கள் இருந்திருக்கின்றன. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர்களின் இறுதி ஆட்சிக்காலத்தின் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக மதுரை சுல்தான்களிடம் ஆட்சியை இழந்து பின்பு விஜயநகர அரசின் துணையுடன் அவர்களிடம் போராடி தென்காசி தொடங்கி தூத்துக்குடி வரையிலுமான சில பகுதிகளை ஆண்டு வந்த காலகட்டத்தில் துவங்குகிறது இப்புத்தகம். 
 
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கீசியரின் வருகை, கிறிஸ்தவ மிஷனரிக்களின் (ஏசு சபையினர்) செயல்பாடுகள் ,இந்த ஊரின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வாழ்வை முன்னேற்றவும் பெரும்பங்காற்றிய தூய சவேரியார் பற்றிய தகவல்கள், விஜயநகர அரசின் படையெடுப்பு, கிட்டத்தட்ட 20000 பரதவ குல மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் காரணமான காதறுப்பு நிகழ்வு, இதனூடாக முத்து, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தூத்துக்குடி முதன்மைத் துறைமுகமாக வளர்ந்த கதை என அத்தனையையும் பேசியிருக்கிறார். குறிப்பாக தூத்துக்குடி பனிமயமாதாவின் திருவுரு மனிலாவில் இருந்து சந்தலேனா கப்பலில் இங்கு வருகிற நிகழ்வும் அதற்கும் முன்னும் பின்னுமான விவரணைகளும் சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன. 
 
பழைய ஒருங்கிணைந்த தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட பாளையக்காரர்கள் அடிமைகளாக மலேயாவிற்கு (தற்போதைய மலேசியா) அனுப்பிவைக்கப்பட்ட நிகழ்வு; சுதந்திரத்துக்கு வ.உ.சிதம்பரனார் தலைமையில் கோரல் மில் தொழிலாளர்களான அடிப்படை உரிமைகள் நியாயமான ஊதியம் கோரி நிகழ்த்தப்பட்ட, மொத்த நாட்டின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பிய மாபெரும் கடையடைப்புப் போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் பற்றி இந்தப் புத்தகத்தில் தான் முதன்முதலில் அறிந்துகொண்டேன்.
பாண்டிய மன்னர்கள் துவங்கி, மதுரை சுல்தான்கள், போர்ச்சுக்கீசியர்கள், அஞ்சுவண்ணத்தார் எனப்படும் இஸ்லாமியர்கள்,டச்சுக்காரர்கள், மலபார் சாமூத்திரிகள், விஜயநகர நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், இறுதியாக பிரிட்டிஷார் என 14ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காலணியாதிக்கத்தால் விளைந்த தொடர் போர்களையும் அரசியல் மோதல்களையும் அமைதியின்மையையும் கடந்து, கொஞ்சங் கொஞ்சமாய் மீண்டு, வளர்ந்து வந்திருக்கின்றனர் தூத்துக்குடி மக்கள். இத்தனை வரலாற்றுத் தகவல்களையும் வாசிக்கிறவர்களின் ஆர்வம் குன்றாத மொழியில் சிறப்புற எழுதியிருக்கிறார் ஆசிரியர். 
 
முழுக்க கதையாக இல்லாமல் ஆங்காங்கே முக்கிய நிகழ்வுகளை மட்டும் கதை போன்ற மொழியில் சொல்லி அது சார்ந்த தரவுகளைத் தந்திருக்கிறார். 25 அத்தியாயங்களில் இத்தனைத் தகவல்களையும் சொல்லி ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அதற்கான உசாத்துணையும் (references) தந்திருப்பது நூலாசிரியரின் கடினமான உழைப்புக்கும் தரவுகளில் உண்மைத்தன்மையை ஆய்ந்தறிந்து எழுத அவர் எடுத்துக் கொண்டு பெருமுயற்சிக்குமான சான்று. நான் குறிப்பிடாமல் விட்ட இன்னும் பல நிகழ்வுகள் அரிய தகவல்களும் இந்நூலில் உண்டு . முன்னுரையில் சரவணன் சந்திரன் குறிப்பிட்டது போல இந்த புத்தகம் அகழ்ந்தெடுத்த ஓர் ஆணிமுத்தின் கதை தான். 
 
நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும் சரி, அல்லது குறுகுறுப்புடன் கதைகேட்கிற, வரலாற்றைத் தேடுகிற சராசரி வாசகரானாலும் சரி, கட்டாயம் தவறவிடாமல் படிக்க வேண்டிய புத்தகம் . ஜி.ரா அவர்களுக்கும், இந்நூலைச் சிறப்புறப் பதிப்பித்திருக்கும் மின்னங்காடி பதிப்பகத்தினருக்கும் என் வாழ்த்தும் நன்றியும்
 
தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ்பர்னாந்து வரை | மின்னங்காடி பதிப்பகம் | 221 பக்கங்கள் | ரூ. 300

சனி, 7 பிப்ரவரி, 2026

ஒரு க்ளாஸ் விஸ்கி - கவிதா சொர்ணவல்லி - சிறுகதைகள்

 

தொகுப்பில் மொத்தம் எட்டு சிறுகதைகள். கிட்டத்தட்ட பத்தாண்டு கால இடைவெளிக்குள்ளாக எழுதப்பட்ட கதைகள். 
 
முதல் கதையான காதலடித் தடங்கள் அழகான ஒரு சின்ன தருணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து முன்னும் பின்னுமாய் சில சம்பவங்களைச் சொல்லி மறுபடியும் தொடங்கிய இடத்தில் முடிகிற குறுங்கதை.
அடுத்ததாக வசியக்காரிகள் – பன்னீர்ப் பூக்களின் வாசமும் வசுந்திரா டீச்சரும் காலத்துக்கும் மனதில் நிற்பார்கள். இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள் எனக்கு ஜெயமோகனுடைய எழுத்தை நினைவூட்டின. அவற்றில் ஒன்று இந்த ‘வசியக்காரிகள்’ கதை. மற்றது ‘சர்ப்பக்காவு’ கதை. இந்தக் கதைகளில் ஊடுபாவாய் இருக்கிற அமானுஷ்யமும் நாட்டார் வழக்கு சார்ந்த சொல்லாடல்களும் காரணமாக இருக்கலாம்.
சர்ப்பக்காவு கதையை வாசிக்கிற போது நிஜமாகவே கொஞ்சம் சிலிர்ப்பாக இருந்தது. 
 
கடவுளின் ஃப்ளேவர் , மழை ரோஸ் நிறத்தில் வான்காவாக இருந்தது – இரண்டுமே அத்தனை அழகான காதல் கதைகள் – கதையில் உரையாடல்களின் வழியாக நுணுக்கமாக பல விஷயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார் கவிதா. 
 
உதா:
 
//எழுதிப்பேசுவது மிக எளிதாக இருக்கிறது. எந்த உணர்வுகளையும் அதன் உண்மைத்தன்மையோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை.உணர்வுகளற்று அல்லது நமக்கேற்ற உணர்வில் வாசித்துக் கொள்ளலாம்//
 
//பொறுப்புகளுக்குள் நுழைவதென்பது பிரிவுகளுக்கும் தயாராவது//
 
//உள் எரிந்த சுடரின் பிரகாசம் காணாமல் ஆகியிருந்தது .யாரிடமும் பகிர்வதற்கு என்னிடம் துளி மகிழ்வு மிஞ்சியிருக்கவில்லை.என்னுடைய இயல்பென்பது எதுவாகினும் அதைத் தூண்டிவிடும் வினையூக்கியாகக் காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலை எனக்களித்த ரசவாதியாக அவன் இருந்திருக்கிறான்.//
 
தொகுப்பின் தலைப்புக் கதையான ’ஒரு க்ளாஸ் விஸ்கி’ சிறுகதை புரிதலுள்ள ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கும் இடையேயான ஒரு அத்தியாயத்தைக் கொண்டது. கச்சிதமான ஒரு குறும்படத்திற்கான கதை இது. 
 
இந்தத் தொகுப்பிலேயே நான் ஒரு மாதிரி அச்சத்துடனும் பதற்றத்துடன் படித்த கதை என்றால் ‘கத்தி’ கதையைத் தான் சொல்வேன். உயிரற்ற ஒரு பொருளின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருக்கு ஏற்படும் பிடிப்பு மிகைவிருப்பாக மாறி பின்பு அவரையே ஆபத்திற்குள்ளாக்குகிற படிப்படியான பித்துநிலையினை அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். 
 
’பொசல்’ சிறுகதைத் தொகுப்புக்கு பிறகு வெளிவந்திருக்கும் கவிதாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. ஹாலிவுட் திரைப்படங்களில் ஹால்மார்க் படங்கள் என்று ஒரு வகைமை உண்டு. பெரும்பாலும் அமெரிக்காவின் விடுமுறைக் காலங்களில் வெளிவரும் இவ்வகைப் படங்களும் ஒரு மாதிரி மென்மையான கொண்டாட்டச் சூழலிலேயே எடுக்கப்பட்டிருக்கும். க்றிஸ்த்துமஸ் கால அலங்கரிப்புகள், சூழ்ந்திருக்கும் பனி, டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதங்களில் நிகழும் கதை, மென்மையான கதைப் பாத்திரங்கள், பெரும்பாலும் பெண் மனம் சார்ந்த உணர்வுப்பூர்வமான கதைகள் , ஒரு சிறுநகரமோ அல்லது சிற்றூரோ, இறுதியில் ஒரு நெகிழ்ச்சியான முடிவுடன் திரைப்படம் நிறைவுபெரும் .பார்க்கும் எவரையும் ஆற்றுப்படுத்தி மென் அணைப்புடன் தலை சாய்த்துக் கொள்வது போல உணரவைக்கக் கூடியவை இவ்வகை திரைப்படங்கள். 
 
கவிதா சொர்ணவல்லியின் பெரும்பாலான சிறுகதைகள் அப்படியானவை தான். டிசம்பர் மாத மழையும் , குளிரும், வண்ண வண்ண பூக்களும், சிலிர்ப்புகளும், புன்னகையும், கண்ணீரும், மென் அணைப்புகளும் நிறைந்திருக்கிற கதைகள். பொசலில் சிற்றூரைச் சுற்றி வந்து கதை சொல்லிய ஊர்க்காரப் பெண் ரயிலேறி பெருநகரம் வந்தபின்னும் தனக்குள்ளே கொஞ்சம் ஊரையும் ,நிறைய உணர்வுகளையும் சுமந்து கொண்டு கதை சொல்லியிருக்கிறார்.
 
எளிமையான அழகான சிறுகதைகளின் தொகுப்பு.
❤
ஒரு க்ளாஸ் விஸ்கி, சிறுகதை தொகுப்பு, வான்கோ பதிப்பகம், 108 பக்கங்கள், ரூ.165

பன்றிவேட்டை - லஷ்மி சரவணகுமார்

 

Pandri-Vettai-Novel-LakshmiSaravanakumar

//எல்லா வேட்டைகளின் முடிவையும் காடுதான் தீர்மானிக்கிறது -லஷ்மி சரவணகுமார், பன்றி வேட்டை//
 
//A peculiar virtue in wildlife ethics is that the hunter ordinarily has no gallery to applaud or disapprove of his conduct. Whatever his acts, they are dictated by his own conscience, rather than by a mob of onlookers. It is difficult to exaggerate the importance of this fact." - Aldo Leopold//
 
வேட்டை எனும் சொல், காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு முற்றிலும் வேறுவேறான பொருளைத் தரக்கூடியது. ஒரு வேட்டையில் கொல்லும் விலங்கு ஒன்றும் இரையாகும் விலங்கு ஒன்றுமாக இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு கொல்லும் விலங்கும் இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு இரையாகும் விலங்கும் இருக்கலாம். அந்த வேட்டைக்கான காரணமும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறவற்றின் / வர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம். ஆனால் அந்த வேட்டையின் முடிவென்பதை காடே தீர்மானிக்கிறது.
 
லஷ்மி சரவணகுமாரின் பன்றி வேட்டை நாவலும் அப்படியொரு வேட்டையைச் சுற்றி பின்னப்பட்ட கதைதான். 1970களில் மதுரையைச் சுற்றி அமைந்திருக்கிற மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில், நூறாண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் ஒரு ஜமீன் குடும்பத்தினரால் தங்கள் வாழ்வையும் அமைதியையும், தெய்வத்தையும் (!) இழந்து தவிக்கும் பளியர் இன மலைவாழ் பழங்குடி மக்களின் போராட்டமே இந்த நாவல். எப்பேற்பட்ட கரடியையும், யானையையும் தன் துப்பாக்கியால் வேட்டையாடிய ஜமீன்தார் ஒரு காட்டுபன்றியை வேட்டையாட நினைக்கும் போது காயப்பட்டுப் போகிறார். 
உடலில் பட்ட காயம் தாண்டி அவருடைய மனமும் ,ஆணவமும் காயப்பட்டுவிட ,உடல்நிலை சரியானதும் இன்னும் உக்கிரமாக அதே வேட்டையினை வெற்றிகரமாக முடித்துவிட முயற்சி செய்கிறார். உண்மையில் அவரால் அந்த வேட்டையை தான் நினைத்தபடி முடிக்க முடிந்ததா என்பதே மீதிக்கதை.
லஷ்மியின் முந்தைய படைப்புகளில் காணப்படும் தந்தை-மகனுக்கு இடையேயான அகங்கார மோதல் இந்த நாவலிலும் உண்டு. இந்தக் கதையில் வேட்டைத்துப்பாக்கியே அதிகாரத்தின் சின்னமாகத் தோன்றுகிறது. அப்பாவின் துப்பாக்கிக்கு மகன் ஆசைப்பட, மகனாகவே இருந்தாலும் “அந்தத் துப்பாக்கியைத் தொட உனக்குத் தகுதி இல்லை” என நிராகரிக்கிற வீரணன். அந்த இடத்தில் தொடங்கி ஜமீன்தார் வீரணனுக்கும் அவருடைய மகன் கண்ணனுக்கும் இடையில் தொடரும் அந்த மோதல் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் காடு சார்ந்த வர்ணனைகளும், வேட்டை முறை பற்றிய, பளியர் இன மக்களில் வாழ்வியல், வழிபாடுகள் குறித்தான வர்ணனைகளுமே சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன.
 
என்னுடைய வருத்தம் கதையின் ஒரு பகுதியாக இது மிகச்சிறப்பாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ரொம்பவும் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதாகவே தோன்றியது. கிட்டத்தட்ட இதே மாதிரியான களத்தில் எழுதப்பட்ட கானகன் நாவலுடன் தன்னியல்பாக என் மனம் நிகழ்த்தும் ஒப்பீடு காரணமாக இருக்கலாம். அல்லது முதலில் திரைக்கதையாக எழுதப்பட்டு பின்பு நாவலாக மாற்றப்பட்டதாக ஆசிரியரே குறிப்பிட்டிருப்பதால் இந்த வடிவம் வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. உண்மையில் இந்நாவல் வலைத்தொடராகவோ திரைப்படமாகவோ உருப்பெற்றால் காந்தாரா போலவோ அல்லது ’ஏகம்’ போலவோ காட்சிகளால் நம்மைக் கட்டிப்போடலாம்.
 
ஒரு ஜமீன்தார் கதையென்றால் தேய்வழக்காக என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அத்தனையும் உண்டு. ஊர்மக்களுக்கு கொடுமை இழைத்தல், அதிகார வெறி, பெண்களை மானபங்கப் படுத்துதல், செல்வத்தின் மீதான நிலத்தின் மீதான பேராசை, ஒரு சாபம், பெண் மோகத்தால் அழிதல், அடிமைப்படுத்தப்பட்டவர்கள் வெகுண்டெழுந்து புரட்சி செய்தல் என அத்தனையும் உண்டு. இதில் பெரும்பாலான திருப்பங்கள் யூகித்துவிடக் கூடியதாக இருப்பதால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.
கானகன் நாவல் வாசித்தபோதே படித்திருந்தாலும் இப்போது இந்த நாவல் குறித்து எழுதும்பொருட்டு பளியர் இன மக்களைப் பற்றி தேடிப் படிக்கையில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் மலைவாழ் பழங்குடியின மக்களான பளியர் இனத்தாரின் வாழ்வு மிகத் துயரமானது . காலம்காலமாக மலைகளையும் காடுகளையும் தங்களின் வாழ்வாதரத்துக்காக நம்பியிருந்த மக்கள், அரசால் சமவெளிகளுக்குத் தள்ளப்பட்டு அவர்களுக்கு பரிச்சயமில்லாத புதியதொரு வாழ்வினை வாழப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
இந்த நாவல் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்கிற கதையென்றாலும் இப்போதும் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களில்லை. பொடவு எனப்படும் மலை இடுக்குகளிலும் குகைகளிலும் வாழ்ந்த இவர்களுக்கு அரசாங்கம் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நிரந்தரமாக அவர்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தக்கூடிய கல்வியையும், பணி வாய்ப்பையும் கூட ஏற்படுத்தித் தரும் என நம்புவோம்
பளியர் இன வாழ்வியலையும் , வழக்கங்களையும், இயற்கைக்கும் அவர்களுக்குமான பிணைப்பினையும் பதிவு செய்த வகையில் ‘பன்றி வேட்டை’ நாவலை வாசிக்க வேண்டிய படைப்பாகக் கருதலாம். போலவே லஷ்மியின் முந்தைய படைப்புகளை வாசித்திராத புதிய வாசகர்களுக்கு ‘ரூஹ்’ நாவலும், ‘பன்றி வேட்டை’யும் நல்லதொரு தொடக்கப் புள்ளியாக இருக்கும். 
 
பன்றி வேட்டை , எழுத்து பிரசுரம் , 170 பக்கங்கள், ரூ.220
Related Posts Plugin for WordPress, Blogger...