நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2026

பன்றிவேட்டை - லஷ்மி சரவணகுமார்

 

Pandri-Vettai-Novel-LakshmiSaravanakumar

//எல்லா வேட்டைகளின் முடிவையும் காடுதான் தீர்மானிக்கிறது -லஷ்மி சரவணகுமார், பன்றி வேட்டை//
 
//A peculiar virtue in wildlife ethics is that the hunter ordinarily has no gallery to applaud or disapprove of his conduct. Whatever his acts, they are dictated by his own conscience, rather than by a mob of onlookers. It is difficult to exaggerate the importance of this fact." - Aldo Leopold//
 
வேட்டை எனும் சொல், காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு முற்றிலும் வேறுவேறான பொருளைத் தரக்கூடியது. ஒரு வேட்டையில் கொல்லும் விலங்கு ஒன்றும் இரையாகும் விலங்கு ஒன்றுமாக இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு கொல்லும் விலங்கும் இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு இரையாகும் விலங்கும் இருக்கலாம். அந்த வேட்டைக்கான காரணமும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறவற்றின் / வர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம். ஆனால் அந்த வேட்டையின் முடிவென்பதை காடே தீர்மானிக்கிறது.
 
லஷ்மி சரவணகுமாரின் பன்றி வேட்டை நாவலும் அப்படியொரு வேட்டையைச் சுற்றி பின்னப்பட்ட கதைதான். 1970களில் மதுரையைச் சுற்றி அமைந்திருக்கிற மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில், நூறாண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் ஒரு ஜமீன் குடும்பத்தினரால் தங்கள் வாழ்வையும் அமைதியையும், தெய்வத்தையும் (!) இழந்து தவிக்கும் பளியர் இன மலைவாழ் பழங்குடி மக்களின் போராட்டமே இந்த நாவல். எப்பேற்பட்ட கரடியையும், யானையையும் தன் துப்பாக்கியால் வேட்டையாடிய ஜமீன்தார் ஒரு காட்டுபன்றியை வேட்டையாட நினைக்கும் போது காயப்பட்டுப் போகிறார். 
உடலில் பட்ட காயம் தாண்டி அவருடைய மனமும் ,ஆணவமும் காயப்பட்டுவிட ,உடல்நிலை சரியானதும் இன்னும் உக்கிரமாக அதே வேட்டையினை வெற்றிகரமாக முடித்துவிட முயற்சி செய்கிறார். உண்மையில் அவரால் அந்த வேட்டையை தான் நினைத்தபடி முடிக்க முடிந்ததா என்பதே மீதிக்கதை.
லஷ்மியின் முந்தைய படைப்புகளில் காணப்படும் தந்தை-மகனுக்கு இடையேயான அகங்கார மோதல் இந்த நாவலிலும் உண்டு. இந்தக் கதையில் வேட்டைத்துப்பாக்கியே அதிகாரத்தின் சின்னமாகத் தோன்றுகிறது. அப்பாவின் துப்பாக்கிக்கு மகன் ஆசைப்பட, மகனாகவே இருந்தாலும் “அந்தத் துப்பாக்கியைத் தொட உனக்குத் தகுதி இல்லை” என நிராகரிக்கிற வீரணன். அந்த இடத்தில் தொடங்கி ஜமீன்தார் வீரணனுக்கும் அவருடைய மகன் கண்ணனுக்கும் இடையில் தொடரும் அந்த மோதல் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் காடு சார்ந்த வர்ணனைகளும், வேட்டை முறை பற்றிய, பளியர் இன மக்களில் வாழ்வியல், வழிபாடுகள் குறித்தான வர்ணனைகளுமே சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன.
 
என்னுடைய வருத்தம் கதையின் ஒரு பகுதியாக இது மிகச்சிறப்பாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ரொம்பவும் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதாகவே தோன்றியது. கிட்டத்தட்ட இதே மாதிரியான களத்தில் எழுதப்பட்ட கானகன் நாவலுடன் தன்னியல்பாக என் மனம் நிகழ்த்தும் ஒப்பீடு காரணமாக இருக்கலாம். அல்லது முதலில் திரைக்கதையாக எழுதப்பட்டு பின்பு நாவலாக மாற்றப்பட்டதாக ஆசிரியரே குறிப்பிட்டிருப்பதால் இந்த வடிவம் வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. உண்மையில் இந்நாவல் வலைத்தொடராகவோ திரைப்படமாகவோ உருப்பெற்றால் காந்தாரா போலவோ அல்லது ’ஏகம்’ போலவோ காட்சிகளால் நம்மைக் கட்டிப்போடலாம்.
 
ஒரு ஜமீன்தார் கதையென்றால் தேய்வழக்காக என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அத்தனையும் உண்டு. ஊர்மக்களுக்கு கொடுமை இழைத்தல், அதிகார வெறி, பெண்களை மானபங்கப் படுத்துதல், செல்வத்தின் மீதான நிலத்தின் மீதான பேராசை, ஒரு சாபம், பெண் மோகத்தால் அழிதல், அடிமைப்படுத்தப்பட்டவர்கள் வெகுண்டெழுந்து புரட்சி செய்தல் என அத்தனையும் உண்டு. இதில் பெரும்பாலான திருப்பங்கள் யூகித்துவிடக் கூடியதாக இருப்பதால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.
கானகன் நாவல் வாசித்தபோதே படித்திருந்தாலும் இப்போது இந்த நாவல் குறித்து எழுதும்பொருட்டு பளியர் இன மக்களைப் பற்றி தேடிப் படிக்கையில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் மலைவாழ் பழங்குடியின மக்களான பளியர் இனத்தாரின் வாழ்வு மிகத் துயரமானது . காலம்காலமாக மலைகளையும் காடுகளையும் தங்களின் வாழ்வாதரத்துக்காக நம்பியிருந்த மக்கள், அரசால் சமவெளிகளுக்குத் தள்ளப்பட்டு அவர்களுக்கு பரிச்சயமில்லாத புதியதொரு வாழ்வினை வாழப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
இந்த நாவல் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்கிற கதையென்றாலும் இப்போதும் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களில்லை. பொடவு எனப்படும் மலை இடுக்குகளிலும் குகைகளிலும் வாழ்ந்த இவர்களுக்கு அரசாங்கம் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நிரந்தரமாக அவர்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தக்கூடிய கல்வியையும், பணி வாய்ப்பையும் கூட ஏற்படுத்தித் தரும் என நம்புவோம்
பளியர் இன வாழ்வியலையும் , வழக்கங்களையும், இயற்கைக்கும் அவர்களுக்குமான பிணைப்பினையும் பதிவு செய்த வகையில் ‘பன்றி வேட்டை’ நாவலை வாசிக்க வேண்டிய படைப்பாகக் கருதலாம். போலவே லஷ்மியின் முந்தைய படைப்புகளை வாசித்திராத புதிய வாசகர்களுக்கு ‘ரூஹ்’ நாவலும், ‘பன்றி வேட்டை’யும் நல்லதொரு தொடக்கப் புள்ளியாக இருக்கும். 
 
பன்றி வேட்டை , எழுத்து பிரசுரம் , 170 பக்கங்கள், ரூ.220

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நீஸெவின் வேர்க்கனி - மயிலன் ஜி சின்னப்பன் - சால்ட் பதிப்பகம்


இந்த ஆண்டு படித்து முடித்த முதல் நாவல் (குறுநாவல் ?!) மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் நீஸேவின் வேர்க்கனி. நூற்றியிருபது பக்கங்களுக்குள் என்பதால் எளிமையாகப் படித்து முடித்து விடலாம் என்கிற முன்முடிவுடன் தொடங்கினேன். எதிர்பார்ப்பிற்கு மாறாக மயிலனின் வழக்கமான மொழிநடையிலிருந்து மாறுபட்டு அதிகம் கவனக்குவிப்பைக் கோருகிற ஒரு நாவலாக அமைந்திருந்தது ‘நீஸேவின் வேர்க்கனி’. 

பதினேழாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையானது டானிஷ் நிலப்பிரபுக்களான விர்கஸ், நேதா இருவரின் கலை சார்ந்த ஓர் அற்புதமான உரையாடலுடன் துவங்குகிறது. அதன் பின் நாவல் முழுவம் உரையாடல்கள் குறைந்து போய் பெரும்பகுதி விவரணைகளாலேயே நிரம்பியிருக்கின்றது. அதீத விருப்பம் , எல்லை, துன்பம் எனப் பொருள்படும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நாவல் , எனக்கு துயரங்களின் தொகுப்பாகவே தொன்றியது.

மன்னரின் ஆசியுடன் டானிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவி இந்தியாவில் வாணிபத்தை விரிவாக்கிடும் பொருட்டு டச்சுக்காரர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு கீழைத்திசையில் இரு கப்பல்களில் பயணப்படும் விர்கஸும் நேதாவும் இந்தப் பெரும்பயணத்தில் இழந்தவையும் பெற்றவையுமே இந்த நாவல். தொடக்கத்தில் காலனியாதிக்கவாதிகளின் பாடுகளை அவர்களின் பார்வையில் தெரிந்து கொள்வதில் எனக்கு என்ன கிட்டும் என்கிற மேலோட்டமான நெருடலுடனே வாசிக்கத்துவங்கி ஒரு கட்டத்தில் கதையின் ஓட்டத்தில் கதைப்பாத்திரங்களோடும் அவர்தம் வாழ்வினோடும் ஒன்றிவிட்டு, பின்பு அதே நெருடலுடன் ’உங்களுக்கு வேணும்டா; என சிறுபிள்ளைத்தனமாக என்னை விலக்கிக் கொள்ள முயன்றதும் நடந்தது.
முதல் அத்தியாயத்தின் கலை குறித்த பின்வரும் உரையாடல்கள் உண்டு 

 // “நற்கலை எப்போதும் பெருவலியிருந்தும் உளப்பிணியிலிருந்தும் வருத்தும் ஏழ்மையிலிருந்துமே பிறக்கமுடியும்”
“கேளிக்கை மனத்திலிருந்து கலையுருவாக்கம் நிகழமுடியாது என்று நான் சொல்வதை கலை என்பதையே வலியின் வெளிப்பாடாகத் திரிக்கிறேன் என எடுத்துக்கொள்ள சாத்தியமுண்டு. வெளிப்பாட்டுத் தளத்திலல்லாமல் , உள்ளீடு சார்ந்தவொன்றை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கலை நிர்ப்பந்திக்கும் அக்கறையும் சிரத்தையும் மிதவை மனங்களால் எட்டமுடியாதது. உத்தேசிக்கும் வெளியீடு, காதலாகவோ களிப்புணர்வாகவோ கொண்டாட்டமாகவோ இருந்தாலும் அதற்கான அழுத்தமான, பிரத்தியேகமான ஊன்றல் வேண்டும்.செல்வச்செழுமை அந்த ஊன்றலை அனுமதிக்காது” //

மேற்கண்ட உரையாடல்களே இந்த நாவலின் மொத்த சாரத்தையும், வாசிக்கிறவர்கள் இந்த படைப்பிலிருந்து பெறுவதென்ன எனபதையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

நாவலின் தலைப்பான நீஸே குறித்து முதல் அத்தியாத்தில் ஒரு குறிப்பு உண்டு. நேதாவும் விர்கஸும் கலைமனம் குறித்தான விவாதத்தின் முடிவில் நேதா உருவாக்கிக்கொண்டிருக்கிற நீஸேவின் மரச்சிற்பத்தை விர்கஸிடம் காட்டுவான். நீஸே (Nisse) என்பது டானிஷிய தொன்மங்களிலும் நாட்டார்வழக்கிலும் சொல்லப்படுகிற ஒரு வகை நல்லாவி. உருவத்தில் சிறியவையான இவை வயதில் முதிய தோற்றத்துடன் வீட்டிற்குள் இருந்தபடி அன்றாட வேலைகளைச் செய்கிற பணியாள் போன்றவை. ஆனால் தொன்மங்களில் சொல்லப்பட்டது போலன்றி இளமையான அழகான உருவத்தில் நீஸேவை வடித்திருப்பான் நேதா. நீஸேவின் வேர்க்கனி என்கிற தலைப்பிற்கும் இதற்குமான தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

காலம்காலமாக வழக்கத்திலிருக்கும் ஒன்றை நம்முடைய பார்வையில் முற்றிலும் வேரொன்றாக உருவகித்து மீட்டுருவாக்குவது(ம்) தான் கலைமனம் செய்யக்கூடியதென நேதா முயன்றான் எனில் மயிலன் இந்த நாவலின் வழி செய்ய முயன்றிருப்பதுவும் அது தானா? 

நாவல் டென்மார்க்கின் கோப்பன்ஹேகனில் தொடங்கி, இலங்கை, திரிகோணமலை, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ரகுநாத நாயக்கர் என அத்தனையையும் தொட்டு தரங்கம்பாடியின் டன்ஸ்பர்க் கோட்டையில் முடிகிறது. கப்பல் பயணத்தின் பிற நிகழ்வுகளைக் குறிப்பிட்டால் வாசிக்கிறவர்களுக்கு எதுவும் மிஞ்சாது என்பதால் அதனை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளவும் . Well written and very demanding work of fiction. வாழ்த்துகள் மயிலன்...! <3

சால்ட் பதிப்பகம் அவர்களுடைய வழக்கமான அழகியலுடன் மிகச் சிறப்பாக புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்கள். வடிவமைப்பாளரும் ஓவியருமான பழனிவேலன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
Related Posts Plugin for WordPress, Blogger...