நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2026

ஒரு க்ளாஸ் விஸ்கி - கவிதா சொர்ணவல்லி - சிறுகதைகள்

 

தொகுப்பில் மொத்தம் எட்டு சிறுகதைகள். கிட்டத்தட்ட பத்தாண்டு கால இடைவெளிக்குள்ளாக எழுதப்பட்ட கதைகள். 
 
முதல் கதையான காதலடித் தடங்கள் அழகான ஒரு சின்ன தருணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து முன்னும் பின்னுமாய் சில சம்பவங்களைச் சொல்லி மறுபடியும் தொடங்கிய இடத்தில் முடிகிற குறுங்கதை.
அடுத்ததாக வசியக்காரிகள் – பன்னீர்ப் பூக்களின் வாசமும் வசுந்திரா டீச்சரும் காலத்துக்கும் மனதில் நிற்பார்கள். இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள் எனக்கு ஜெயமோகனுடைய எழுத்தை நினைவூட்டின. அவற்றில் ஒன்று இந்த ‘வசியக்காரிகள்’ கதை. மற்றது ‘சர்ப்பக்காவு’ கதை. இந்தக் கதைகளில் ஊடுபாவாய் இருக்கிற அமானுஷ்யமும் நாட்டார் வழக்கு சார்ந்த சொல்லாடல்களும் காரணமாக இருக்கலாம்.
சர்ப்பக்காவு கதையை வாசிக்கிற போது நிஜமாகவே கொஞ்சம் சிலிர்ப்பாக இருந்தது. 
 
கடவுளின் ஃப்ளேவர் , மழை ரோஸ் நிறத்தில் வான்காவாக இருந்தது – இரண்டுமே அத்தனை அழகான காதல் கதைகள் – கதையில் உரையாடல்களின் வழியாக நுணுக்கமாக பல விஷயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார் கவிதா. 
 
உதா:
 
//எழுதிப்பேசுவது மிக எளிதாக இருக்கிறது. எந்த உணர்வுகளையும் அதன் உண்மைத்தன்மையோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை.உணர்வுகளற்று அல்லது நமக்கேற்ற உணர்வில் வாசித்துக் கொள்ளலாம்//
 
//பொறுப்புகளுக்குள் நுழைவதென்பது பிரிவுகளுக்கும் தயாராவது//
 
//உள் எரிந்த சுடரின் பிரகாசம் காணாமல் ஆகியிருந்தது .யாரிடமும் பகிர்வதற்கு என்னிடம் துளி மகிழ்வு மிஞ்சியிருக்கவில்லை.என்னுடைய இயல்பென்பது எதுவாகினும் அதைத் தூண்டிவிடும் வினையூக்கியாகக் காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலை எனக்களித்த ரசவாதியாக அவன் இருந்திருக்கிறான்.//
 
தொகுப்பின் தலைப்புக் கதையான ’ஒரு க்ளாஸ் விஸ்கி’ சிறுகதை புரிதலுள்ள ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கும் இடையேயான ஒரு அத்தியாயத்தைக் கொண்டது. கச்சிதமான ஒரு குறும்படத்திற்கான கதை இது. 
 
இந்தத் தொகுப்பிலேயே நான் ஒரு மாதிரி அச்சத்துடனும் பதற்றத்துடன் படித்த கதை என்றால் ‘கத்தி’ கதையைத் தான் சொல்வேன். உயிரற்ற ஒரு பொருளின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருக்கு ஏற்படும் பிடிப்பு மிகைவிருப்பாக மாறி பின்பு அவரையே ஆபத்திற்குள்ளாக்குகிற படிப்படியான பித்துநிலையினை அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். 
 
’பொசல்’ சிறுகதைத் தொகுப்புக்கு பிறகு வெளிவந்திருக்கும் கவிதாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. ஹாலிவுட் திரைப்படங்களில் ஹால்மார்க் படங்கள் என்று ஒரு வகைமை உண்டு. பெரும்பாலும் அமெரிக்காவின் விடுமுறைக் காலங்களில் வெளிவரும் இவ்வகைப் படங்களும் ஒரு மாதிரி மென்மையான கொண்டாட்டச் சூழலிலேயே எடுக்கப்பட்டிருக்கும். க்றிஸ்த்துமஸ் கால அலங்கரிப்புகள், சூழ்ந்திருக்கும் பனி, டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதங்களில் நிகழும் கதை, மென்மையான கதைப் பாத்திரங்கள், பெரும்பாலும் பெண் மனம் சார்ந்த உணர்வுப்பூர்வமான கதைகள் , ஒரு சிறுநகரமோ அல்லது சிற்றூரோ, இறுதியில் ஒரு நெகிழ்ச்சியான முடிவுடன் திரைப்படம் நிறைவுபெரும் .பார்க்கும் எவரையும் ஆற்றுப்படுத்தி மென் அணைப்புடன் தலை சாய்த்துக் கொள்வது போல உணரவைக்கக் கூடியவை இவ்வகை திரைப்படங்கள். 
 
கவிதா சொர்ணவல்லியின் பெரும்பாலான சிறுகதைகள் அப்படியானவை தான். டிசம்பர் மாத மழையும் , குளிரும், வண்ண வண்ண பூக்களும், சிலிர்ப்புகளும், புன்னகையும், கண்ணீரும், மென் அணைப்புகளும் நிறைந்திருக்கிற கதைகள். பொசலில் சிற்றூரைச் சுற்றி வந்து கதை சொல்லிய ஊர்க்காரப் பெண் ரயிலேறி பெருநகரம் வந்தபின்னும் தனக்குள்ளே கொஞ்சம் ஊரையும் ,நிறைய உணர்வுகளையும் சுமந்து கொண்டு கதை சொல்லியிருக்கிறார்.
 
எளிமையான அழகான சிறுகதைகளின் தொகுப்பு.
❤
ஒரு க்ளாஸ் விஸ்கி, சிறுகதை தொகுப்பு, வான்கோ பதிப்பகம், 108 பக்கங்கள், ரூ.165

சனி, 10 மே, 2014

புனைவின் நிழல் - மனோஜ்

izquotes.com
பொதுவாவே படிக்கிறது ஜாலியான விஷயம்… இன்னது தான்னு இல்லாம கண்டதையும் படிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பகுத்து பார்த்து ரசிக்கக் கத்துக்குறதெல்லாம் வேற கத. ஆனாலும் வாசிக்கிறது சுகம் தான்… புனைவுகள்.. கட்டுரைகள்.. சுய(சொறிதல்)சரிதை… அறிவியல்… கவிதை… எல்லாமே வெவ்வேற உலகம். நம்ம கண்ணைக் கட்டி காலத்துக்கு நடுவுல கடத்திட்டுப் போகக்கூடிய வல்லமை புனைவிலக்கியத்துக்கு இருக்கு. ஒரு சிறுகதைன்னு எடுத்துகிட்டா அதுல வர பாத்திரங்கள் (சட்டி பானைய சொல்லல).. கதை நிகழ்கிற இடம்.. சூழல்… தனிமனிதர்களின் நியாயங்கள்.. அவங்க கொடுக்குற தீர்வுன்னு பல விஷயங்கள் இருக்கு. ஒரு சிறுகதையையோ நாவலையோ அல்லது எந்தவொரு புனைவிலக்கியத்த நாம வாசிக்கும்போதும் ஒரு வெள்ளை கேன்வாஸ்ல கோட்டோவியத்துல தொடங்குற மாதிரி ஆரம்பிச்சு கடைசில அந்த கதை முடிவை அடையும்போது ஒரு அழகான (சில சமயம் சொதப்பலான/மொன்னையான) ஓவியமா நம்ம கற்பனைல நிறைவடையுது.


ஃபேண்டஸின்னு (fantasy) தனியா ஒன்னும் கெடையாதுங்குறது என்னுடைய எண்ணம். ஃபிக்‌ஷன் எல்லாமே ஃபேண்டஸி தான். உங்க கற்பனைக்குள்ள நீங்க உருவாக்கிக்குற உலகம் தான்.அந்த களத்தை உங்களுக்கு ஒரு எழுத்தாளர் அமைக்குறாரு; அவ்வளவே.ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ திரைப்படமா எடுக்கப்படும்போது மக்கள் பெரும்பாலும் புத்தகத்துக்கு நிகரா படம் இல்லன்னு தான் சொல்லுவாங்க. ஏன்னா உங்க மனசு ரொம்பவே பெரிய கேன்வாஸ்..எல்லைகள் கிடையாது.. அந்த உலகத்துல உலவுறவங்க எப்படி இருப்பாங்கன்றத நீங்கதான் தீர்மானிக்கிறீங்க. தங்களுடைய தனிப்பட்ட கற்பனைய வேறொரு வரையறைக்குள்ள அடைச்சு காட்சிப்படுத்துறத பெரும்பாலாவர்கள் விரும்புரதில்ல. ஆனாலும் காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற இடம் தான் புனைவின் உச்சம். அங்கதான் எழுத்தாளர் ஜெயிக்கிறார்.


எதுக்கு இவ்ளோ பீடிகைன்னு கேட்டீங்கன்னா அதுக்குக் காரணம் ஒரு புத்தகம் தான். ஒரு (அ)சாதாரணமான சிறுகதைத் தொகுப்பு.சத்தியமா இந்த மாதிரி ஒரு அனுபவத்தை எதிர்பார்த்து நான் இந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கல.’புனைவின் நிழல் ’ மனோஜ் எழுதுனது. மொத்தம் 15 சிறுகதைகள். Versatilityன்னு ஒரு வார்த்தை இருக்குல்ல… அதுக்கு சரியான உதாரணம் இந்த தொகுப்பு தான். ஒன்னு ரெண்டு கதைகள் மட்டும் கொஞ்சம் வெகுஜன இதழ் பாணி ‘கடைசி வரி பன்ச்’ கதைகள். மத்ததெல்லாமே ஒவ்வொன்னும் ஒரு உலகம்… ஒரு டைம் மெஷின்… ஒரு Black Hole… எப்புடி வேணாலும் சொல்லிக்கலாம். 

‘அட்சர ஆழி’ – முதல் பால் சிக்ஸர். நான் ரெண்டாவது பத்தியோட முடிவுல சொன்ன மாதிரி //காட்சிப்படுத்த சாத்தியமில்லாத விஷயங்களை வெறும் வர்ணனைகளால நம்ம மனசுக்குள்ள உருவாக்குற // வித்தைக்கு ஒரு சின்ன உதாரணம். கதையே ‘எப்படி விளங்கவைப்பது என்பதுதான் எனக்குள்ள பிரச்சனையே’ இப்படித்தான் தொடங்குது. J

ஏவாளின் விலா எலும்பு, 857, மஹல்… இந்த மூன்று கதைகளையும் வரலாறு அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்து புனைகதைகள்னு சொல்லலாம். Trust me… கண்டிப்பா அசந்து போவீங்க. ஆதாம் ஏவாள் காலத்துக் கதையாகட்டும்… மொகலாய மன்னர்கள் கதையாகட்டும் வர்ணனைகளும் வார்த்தைகளும் உங்களைக் கட்டிப்போடும்.

றெக்கை.. பால்… சர்ப்பவாசனை.. இந்த கதைகளெல்லாம் ஒரு மாதிரி trance ஃபீலிங் தந்துச்சு எனக்கு. வாசனையையும்...வெம்மையும்… வெறுமையையும்.. தனிமையையும்… வார்த்தைகளில் கடத்திவிட முடியுமா என்ன..?? வாவ்…!!! எனக்கு ரொம்ப நாளாவே இந்த ‘பின்நவீனத்துவம்’னா என்னன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ராஜேஷ் அட்டகாசமா ஒரு விளக்கம் (மினி தொடர்) எழுதிருந்தாரு (கட்டுரை இங்கே). கொஞ்சமா புரிஞ்சாலும் அதை படிச்சப்புறமும் என்னால சரியா ரிலேட் பண்ணிக்க முடியல. மனோஜின் கதைகள் postmodernismனா என்னன்னு ஓரளவுக்கு உணர்த்துச்சு.

இந்தத் தொகுப்புலேயே என்னுடைய personal favorite-னா அது ‘கச்சை’ சிறுகதை தான். அதிலிருக்குற அமானுஷ்யமும்… அழகும்… ஊடுபாவாக சொல்லப்படுற சாதீய/சமூகக் கொடுமைகள பத்தின தகவல்களும்… நிச்சயமா இதுவொரு க்ளாசிக்னு சொல்லலாம். ‘அச்சாவோட சிச்சாமணி’ன்னு ஒரு கதை இருக்கு பன்னிரெண்டாவதா இருந்தாலும் நீங்க இத கடைசியிலேயே படிக்கலாம். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டப்புறம் மனோஜ் தந்த ஸ்வீட் பீடா. நெஜம்மாவே விழுந்து பொரண்டு சிரிச்சேன்.

மொத்தத்துல புனைவு விரும்பிகளுக்கு/சிறுகதை ரசிகர்களுக்கு இது ஒரு செம்ம வெரைட்டியான விருந்து. கண்டிப்பா படிச்சுடுங்க.

புனைவின் நிழல்
ஆசிரியர்-மனோஜ்
உயிர்மை பதிப்பகம்
விலை – ரூ.70
ISBN:81-89912-00-3


ஆன்லைனில் வாங்க : இங்கு க்ளிக்கவும்

வியாழன், 16 மே, 2013

’ஒன்று’ - ரா.கண்ணன், ராஜுமுருகன் - விகடன்



கொஞ்சம் விறுவிறுப்பும் கொஞ்சம் காதலுமாய் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கின்ற வகையிலான சிறுகதைகள் எப்போதுமே என்னைக் கவரத் தவறியதேயில்லை. முதன் முதலில் சிறுவர்மலரில் தான் தொடங்கியது என் வாசிப்பு. பின் குமுதத்தில் தொடர்கதை (’பிளஸ் ஒன்’ தொடர்கதை– பிரியா கல்யாணராமனின் எழுத்துக்கு அடிமை நான்.) படித்து அப்படியே விகடுனுக்கு மாறி ‘சுஜாதா’வை அடையாளங்கண்டு நூலகம் சென்று தனி புத்தகங்கள் அதிகம் வாசிக்கத்தொடங்கிய நேரமது. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது.

இன்று வணிக எழுத்து என்று ‘இலக்கிய’வாதிகளால் பெரும்பாலும் ஒதுக்கப்படுகின்ற அங்கீகரிக்கப் படாத ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், ப்ரியா கல்யாணராமன் (’சுஜாதா’வையும் இப்பட்டியலில் சேர்ப்போரும் உண்டு) உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளே பெரும்பாலானோருக்கு வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்திருக்கும் அல்லது ஆர்வமேற்படுத்தியிருக்கும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. என் அம்மா எனக்கு மு.வ அவர்களையும் தி.ஜா வையும் அறிமுகப்படுத்தினாலும் நானென்னவோ குமுதத்தையும் விகடனையும் தான் அதிகம் விரும்பினேன்.

 நிற்க. எதற்காக இவ்ளோ பெரிய பில்டப் என்று கேட்கலாம். விஷயத்துக்கு வருகின்றேன். ’லைட் ரீடிங்’ (light reading) என்று விளிக்கப்படுகின்ற ‘மென் வாசிப்பு’க்கு நான் எப்போதுமே பெரிய ரசிகன். வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் பெரும்பாலும் அவை தருகின்ற சின்ன சின்ன சஸ்பென்ஸுக்காகவும், திடீர் திருப்பங்களுக்காகவும்,கொஞ்சம் இளமைக்காகவும்,பொங்கும் காதலுக்காகவும் நிறையவே ரசித்திருக்கின்றேன்.அந்த வகையில் சமீபத்தில் அண்ணன் யுவகிருஷ்ணா அவர்கள் பேஸ்புக்கில் பரிந்துரைத்ததன் பேரில் விகடனில் தொடராக வெளிவந்த ‘ஒன்று’ கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். தொடராக வந்தபோதே பட்டையை கிளப்பியது ஆதலால் ஒரு மினிமம் கேரண்டி நம்பிக்கை இருந்தது.
 அப்போது எழுத்தாளரின் அடையாளத்தை வெளியிடாமல் ‘இருவன்’ என்று பெயர் மட்டும் வந்தது. யார்ரா அந்த ‘இருவன்’ இப்படி எழுதுகிறாரென்று நினைப்பேன். புத்தகமாய் வெளிவரும்போது தான் தெரிந்தது ‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகனும், ரா.கண்ணன் அவர்களும் தான் அந்த ’இருவன்’ என்று. மிகவும் மோசமான மனநிலையில் வாசிக்கத் தொடங்கிய நான் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிக்கத் தொடங்கி அப்படியே மூழ்கிப்போனேன். எனக்குள்ளே நிறைய சிரித்துக் கொண்டேன். என் முன்னே நின்ற பிரச்சனைகள் மறந்து போயின. கொஞ்சம் காதலும் கவிதையுமாய் கனநேர கிறுக்கொன்று பிடித்தது. ஒவ்வொரு கதையாய் படித்து முடித்தவுடன் ”அடச்சே..அதுக்குள்ள முடிச்சுப்புட்டானுவளே’ என்று வருந்தவும் செய்தேன்.

எழுத்துநடையில் துள்ளலும் எள்ளலுமாய் தட தடவென பக்கத்து வீட்டு அழகு தேவதைகளினூடாகவும்… காதலில் சொதப்பிய காதல் மன்னர்களினூடாகவும்… அழைத்துச் செல்லும் ஒரு வேகமான ரயில் பயண அனுபவம். அவ்வப்போது நெகிழவும் முகிழவும் சிரிக்கவும் வைக்கத் தவறவில்லை இந்தக் கதைகளின் எழுத்தாளர்களான இருவர்(ன்).

சில நேரங்களில் நாம் வாசிக்க விரும்பும் புத்தகமோ பார்க்க விரும்பும் திரைப்படமோ அது முழுமையான கலைப் படைப்பாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆசானாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் நம்முடைய அந்த நேரத்து பிரச்சனைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் கொஞ்சம் விடுபட வைத்தாலே போதுமானது. ‘ஒன்று’ புத்தகம் அந்த வகை.

கதைகளிலிருந்து நான் ரசித்த வரிகள் சில…!!

’தேடித் தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும் தீர்ந்துவிட்ட பிறகு, கிடைக்கிற மெளனம் எவ்வளவு அழகானது. மெளனத்திலும் தேடினால், ஆழத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் பிய்த்தெறிய முடியாத மச்சம்போல் ஒட்டிக்கிறது பிரியம். ஆமாம்..இதை எல்லாம் பிரியம் என்றே அழைத்தாலென்ன? ஆகவே பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்.’

‘காதல்… வயசையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர் பூதம். ஆதி நெருப்பின் கதகதப்பு. உலகின் முதல் உன்மத்தம். பாதாதிகேசம். கேசாதிப் பாதம். இது கெமிஸ்ட்ரியின் ஹிஸ்டரி.’

’நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்’

‘லாலி என் அருகே இருக்க, ஒரே நேரத்தில் என்னைக் காளான் குடையாகவும் குறிஞ்சி மலராகவும் உணர்ந்தேன். அந்த இரவில் அவள் மழையாகவும், நான் ஈசலாகவும் பிறந்து வந்ததாய் தவித்தேன்’

‘ஏ.டி.எம் ஸ்லிப் பின்னால்கூட ஹைக்கூ எழுதும் மனசுக்காரன் நான். சாலையில் சைரன் கேட்டாலே அதில் பயணிக்கும் நோயாளிக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கும் ஒருத்தி எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை’

’அது அந்தாக்‌ஷரி’ அல்ல தோழர்...என் வாழ்வின் வழிப்பாதை. விரல் பிடித்து விழியாக வாழ்ந்து காட்டக் கிடைக்கவிருக்கும் ஒரு வரம். யார் யாரோ கஷ்டப்பட்டு இத்தனை காலம் திரை இசையை எங்களுக்காகவே படைத்ததாய் தோன்றிய கனம் அது தோழர்’

‘காதலி சென்றுவிட்ட பிறகு காதல் பகிர்ந்த இடங்களைப் பார்ப்பது துயரம். நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்துகிடக்கின்றன பிரியங்கள்.’

’நதியைப்போலக் கடந்துவிட்டது காலம். காதலும் பிரியமும் கடல்போல் நிற்கிறது. போய்ப் பார்ப்பதும் கால் நனைப்பதும் அவரவர் விருப்பம். அவரவர் துயரம்.’

’ஒவ்வொரு நினைவும் ஜனனம். ஒவ்வொரு பிரிவும் மரணம். காதல் விதைத்த பார்வையின் முதல் நொடியையும், பிரிவைக் கொடுத்த வார்த்தையின் கடைசிப் புள்ளியையும் யார் அறிவார்.’

மீதியை புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்:
புத்தகம்: ‘ஒன்று’
எழுதியவர்கள்: ரா.கண்ணன், ராஜு முருகன்
விகடம் பிரசுரம்
விலை:ரூ.85
ஆன்லைனில் வாங்க : http://books.vikatan.com/index.php?bid=2061


Related Posts Plugin for WordPress, Blogger...