முதல் கதையான காதலடித் தடங்கள் அழகான ஒரு சின்ன தருணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து முன்னும் பின்னுமாய் சில சம்பவங்களைச் சொல்லி மறுபடியும் தொடங்கிய இடத்தில் முடிகிற குறுங்கதை.
அடுத்ததாக வசியக்காரிகள் – பன்னீர்ப் பூக்களின் வாசமும் வசுந்திரா டீச்சரும் காலத்துக்கும் மனதில் நிற்பார்கள். இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள் எனக்கு ஜெயமோகனுடைய எழுத்தை நினைவூட்டின. அவற்றில் ஒன்று இந்த ‘வசியக்காரிகள்’ கதை. மற்றது ‘சர்ப்பக்காவு’ கதை. இந்தக் கதைகளில் ஊடுபாவாய் இருக்கிற அமானுஷ்யமும் நாட்டார் வழக்கு சார்ந்த சொல்லாடல்களும் காரணமாக இருக்கலாம்.
சர்ப்பக்காவு கதையை வாசிக்கிற போது நிஜமாகவே கொஞ்சம் சிலிர்ப்பாக இருந்தது.
கடவுளின் ஃப்ளேவர் , மழை ரோஸ் நிறத்தில் வான்காவாக இருந்தது – இரண்டுமே அத்தனை அழகான காதல் கதைகள் – கதையில் உரையாடல்களின் வழியாக நுணுக்கமாக பல விஷயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார் கவிதா.
உதா:
//எழுதிப்பேசுவது மிக எளிதாக இருக்கிறது. எந்த உணர்வுகளையும் அதன் உண்மைத்தன்மையோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை.உணர்வுகளற்று அல்லது நமக்கேற்ற உணர்வில் வாசித்துக் கொள்ளலாம்//
//பொறுப்புகளுக்குள் நுழைவதென்பது பிரிவுகளுக்கும் தயாராவது//
//உள் எரிந்த சுடரின் பிரகாசம் காணாமல் ஆகியிருந்தது .யாரிடமும் பகிர்வதற்கு என்னிடம் துளி மகிழ்வு மிஞ்சியிருக்கவில்லை.என்னுடைய இயல்பென்பது எதுவாகினும் அதைத் தூண்டிவிடும் வினையூக்கியாகக் காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலை எனக்களித்த ரசவாதியாக அவன் இருந்திருக்கிறான்.//
தொகுப்பின் தலைப்புக் கதையான ’ஒரு க்ளாஸ் விஸ்கி’ சிறுகதை புரிதலுள்ள ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கும் இடையேயான ஒரு அத்தியாயத்தைக் கொண்டது. கச்சிதமான ஒரு குறும்படத்திற்கான கதை இது.
இந்தத் தொகுப்பிலேயே நான் ஒரு மாதிரி அச்சத்துடனும் பதற்றத்துடன் படித்த கதை என்றால் ‘கத்தி’ கதையைத் தான் சொல்வேன். உயிரற்ற ஒரு பொருளின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருக்கு ஏற்படும் பிடிப்பு மிகைவிருப்பாக மாறி பின்பு அவரையே ஆபத்திற்குள்ளாக்குகிற படிப்படியான பித்துநிலையினை அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார்.
’பொசல்’ சிறுகதைத் தொகுப்புக்கு பிறகு வெளிவந்திருக்கும் கவிதாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. ஹாலிவுட் திரைப்படங்களில் ஹால்மார்க் படங்கள் என்று ஒரு வகைமை உண்டு. பெரும்பாலும் அமெரிக்காவின் விடுமுறைக் காலங்களில் வெளிவரும் இவ்வகைப் படங்களும் ஒரு மாதிரி மென்மையான கொண்டாட்டச் சூழலிலேயே எடுக்கப்பட்டிருக்கும். க்றிஸ்த்துமஸ் கால அலங்கரிப்புகள், சூழ்ந்திருக்கும் பனி, டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதங்களில் நிகழும் கதை, மென்மையான கதைப் பாத்திரங்கள், பெரும்பாலும் பெண் மனம் சார்ந்த உணர்வுப்பூர்வமான கதைகள் , ஒரு சிறுநகரமோ அல்லது சிற்றூரோ, இறுதியில் ஒரு நெகிழ்ச்சியான முடிவுடன் திரைப்படம் நிறைவுபெரும் .பார்க்கும் எவரையும் ஆற்றுப்படுத்தி மென் அணைப்புடன் தலை சாய்த்துக் கொள்வது போல உணரவைக்கக் கூடியவை இவ்வகை திரைப்படங்கள்.
கவிதா சொர்ணவல்லியின் பெரும்பாலான சிறுகதைகள் அப்படியானவை தான். டிசம்பர் மாத மழையும் , குளிரும், வண்ண வண்ண பூக்களும், சிலிர்ப்புகளும், புன்னகையும், கண்ணீரும், மென் அணைப்புகளும் நிறைந்திருக்கிற கதைகள். பொசலில் சிற்றூரைச் சுற்றி வந்து கதை சொல்லிய ஊர்க்காரப் பெண் ரயிலேறி பெருநகரம் வந்தபின்னும் தனக்குள்ளே கொஞ்சம் ஊரையும் ,நிறைய உணர்வுகளையும் சுமந்து கொண்டு கதை சொல்லியிருக்கிறார்.
எளிமையான அழகான சிறுகதைகளின் தொகுப்பு.
ஒரு க்ளாஸ் விஸ்கி, சிறுகதை தொகுப்பு, வான்கோ பதிப்பகம், 108 பக்கங்கள், ரூ.165

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக