“Nations are not communities and never have been. The history of any country, presented as the history of a family, conceals the fierce conflicts of interest (sometimes exploding, often repressed) between conquerors and conquered, masters and slaves, capitalists and workers, dominators and dominated in race and sex. And in such as world of conflict, a world of victims and executioners, it is the job of thinking people, as Albert Camus suggested, not to be on the side of the executioners.”
― Howard Zinn, A People’s History of the United States:
ஒரு நிலத்தின் வரலாறு என்பது உண்மையில் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறே. மாறாக அரசியல் வரலாறு என்பதும் மக்களின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றே. ஓர் ஊரின் வரலாற்றைத் தேடி கடந்த காலத்தின் சுவடுகளைப் பின்தொடர்ந்து பார்ப்போமாயின் அது பெரும்பாலும் மக்களின் உழைப்பையும் ரத்தத்தையும் உயிர்களையும் அடித்தளமாகக் கொண்டு அதன் மேல் அதிகார வெறிகொண்ட தனி மனிதர்களும் அரசர்களும் அரசுகளும் தங்களின் சுயநலத்துக்காக எழுப்பிய கோட்டைகளையே காண முடிகிறது. உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது கோட்டைச் சுவர்களின் பிரம்மாண்டங்களை அண்ணாந்து பார்ப்பதிலும் கடந்த காலப் பெருமிதங்களில் மிதந்து ,மனதால் அங்கேயே தேங்கிவிடுவதிலும் இல்லை. மக்களின் வாழ்வையும் வலிகளையும் தேடிப்போதலும் அதன் வழியே கிடைக்கிற கதைகளுமே உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது என் கருத்து.
ஜிரா என்னும் ஜி.ராகவன் எழுதி மின்னங்காடி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூலான ‘தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ் பர்னாந்து வரை’ அப்படியொரு வரலாற்றுத் தேடலை நிகழ்த்தியிருக்கின்றது. புறத்தோற்றத்தில் இது தூத்துக்குடி என்னும் ஊரின் வரலாறு என்பதாகத் தோன்றினாலும் உண்மையில் இது கடல்சார்ந்து பல நூற்றாண்டுகளாகத் தங்கள் வாழ்வினைக் கட்டமைத்துக் கொண்ட பரதவ மக்களின் வரலாறாகவும்,ஒரு பகுதி தமிழகத்தில் கிறிஸ்தவத்தின் வரலாறாகவும், கடல் வணிகத்தின் வரலாறாகவும், வெவ்வேறு காலகட்டங்களில் தங்களின் வாழ்வாதாரத்தின் பொருட்டு ஆட்சியாளர்களுடன் உடன்பட்டும் முரண்பட்டும் வாழ்ந்த பொதுமக்களின் போராட்ட வரலாறாகவுமே உருவாகி வந்திருக்கின்றது.
தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆண்ட பாண்டியர்களின் தொடக்க ஆட்சிக்காலத்தில் பெரும் வணிக மையமாகவும் முதன்மைத் துறைமுகமாகவும் செயல்பட்ட கொற்கை நகரம் காலப் போக்கில் (சில பல நூற்றாண்டுகளில்) கடல் உள்வாங்கி நிலப்பரப்பானபின் , தென் பகுதியின் பிற துறைமுகங்களாக வெவ்வேறு காலகட்டங்களில் பழையகாயல் , புன்னைக்காயல், முத்துக்குளித்துறை (தற்போதைய தூத்துக்குடி )உள்ளிட்ட ஊர்கள் இருந்திருக்கின்றன. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர்களின் இறுதி ஆட்சிக்காலத்தின் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக மதுரை சுல்தான்களிடம் ஆட்சியை இழந்து பின்பு விஜயநகர அரசின் துணையுடன் அவர்களிடம் போராடி தென்காசி தொடங்கி தூத்துக்குடி வரையிலுமான சில பகுதிகளை ஆண்டு வந்த காலகட்டத்தில் துவங்குகிறது இப்புத்தகம்.
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கீசியரின் வருகை, கிறிஸ்தவ மிஷனரிக்களின் (ஏசு சபையினர்) செயல்பாடுகள் ,இந்த ஊரின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வாழ்வை முன்னேற்றவும் பெரும்பங்காற்றிய தூய சவேரியார் பற்றிய தகவல்கள், விஜயநகர அரசின் படையெடுப்பு, கிட்டத்தட்ட 20000 பரதவ குல மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் காரணமான காதறுப்பு நிகழ்வு, இதனூடாக முத்து, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தூத்துக்குடி முதன்மைத் துறைமுகமாக வளர்ந்த கதை என அத்தனையையும் பேசியிருக்கிறார். குறிப்பாக தூத்துக்குடி பனிமயமாதாவின் திருவுரு மனிலாவில் இருந்து சந்தலேனா கப்பலில் இங்கு வருகிற நிகழ்வும் அதற்கும் முன்னும் பின்னுமான விவரணைகளும் சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன.
பழைய ஒருங்கிணைந்த தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட பாளையக்காரர்கள் அடிமைகளாக மலேயாவிற்கு (தற்போதைய மலேசியா) அனுப்பிவைக்கப்பட்ட நிகழ்வு; சுதந்திரத்துக்கு வ.உ.சிதம்பரனார் தலைமையில் கோரல் மில் தொழிலாளர்களான அடிப்படை உரிமைகள் நியாயமான ஊதியம் கோரி நிகழ்த்தப்பட்ட, மொத்த நாட்டின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பிய மாபெரும் கடையடைப்புப் போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் பற்றி இந்தப் புத்தகத்தில் தான் முதன்முதலில் அறிந்துகொண்டேன்.
பாண்டிய மன்னர்கள் துவங்கி, மதுரை சுல்தான்கள், போர்ச்சுக்கீசியர்கள், அஞ்சுவண்ணத்தார் எனப்படும் இஸ்லாமியர்கள்,டச்சுக்காரர்கள், மலபார் சாமூத்திரிகள், விஜயநகர நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், இறுதியாக பிரிட்டிஷார் என 14ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காலணியாதிக்கத்தால் விளைந்த தொடர் போர்களையும் அரசியல் மோதல்களையும் அமைதியின்மையையும் கடந்து, கொஞ்சங் கொஞ்சமாய் மீண்டு, வளர்ந்து வந்திருக்கின்றனர் தூத்துக்குடி மக்கள். இத்தனை வரலாற்றுத் தகவல்களையும் வாசிக்கிறவர்களின் ஆர்வம் குன்றாத மொழியில் சிறப்புற எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
முழுக்க கதையாக இல்லாமல் ஆங்காங்கே முக்கிய நிகழ்வுகளை மட்டும் கதை போன்ற மொழியில் சொல்லி அது சார்ந்த தரவுகளைத் தந்திருக்கிறார். 25 அத்தியாயங்களில் இத்தனைத் தகவல்களையும் சொல்லி ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அதற்கான உசாத்துணையும் (references) தந்திருப்பது நூலாசிரியரின் கடினமான உழைப்புக்கும் தரவுகளில் உண்மைத்தன்மையை ஆய்ந்தறிந்து எழுத அவர் எடுத்துக் கொண்டு பெருமுயற்சிக்குமான சான்று. நான் குறிப்பிடாமல் விட்ட இன்னும் பல நிகழ்வுகள் அரிய தகவல்களும் இந்நூலில் உண்டு . முன்னுரையில் சரவணன் சந்திரன் குறிப்பிட்டது போல இந்த புத்தகம் அகழ்ந்தெடுத்த ஓர் ஆணிமுத்தின் கதை தான்.
நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும் சரி, அல்லது குறுகுறுப்புடன் கதைகேட்கிற, வரலாற்றைத் தேடுகிற சராசரி வாசகரானாலும் சரி, கட்டாயம் தவறவிடாமல் படிக்க வேண்டிய புத்தகம் . ஜி.ரா அவர்களுக்கும், இந்நூலைச் சிறப்புறப் பதிப்பித்திருக்கும் மின்னங்காடி பதிப்பகத்தினருக்கும் என் வாழ்த்தும் நன்றியும்
தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ்பர்னாந்து வரை | மின்னங்காடி பதிப்பகம் | 221 பக்கங்கள் | ரூ. 300

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக