நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை, முறைசாரா தொழிலாளர்கள், Skilled labourers


 

சென்ற ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசு வெளியிட்ட போது எழுந்த விவாதங்கள் பலவற்றில், இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிவரும் பலரும் குறிப்பிட்டுப் பேசும் விஷயம் skilled labourers எனப்படும் திறன் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடும், தேவையும் பற்றி தான் . மரவேலை செய்பவர்கள் தொடங்கி, எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள், நெசவாளர்கள் என பல துறைகளிலும் இந்த வகை திறன் தொழிலாளர்கள் உண்டு. புதிய கல்விக் கொள்கை -2020 வழிகாட்டலின் படி ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வியை அறிமுகம் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் நாட்டில் இந்த திறன் தொழிலாளர்களுக்கான தேவையை இட்டு நிரப்பிட முடியும் என்பது ஒரு தரப்பினரின் வாதம். இது நியாயமான தீர்வாக இருக்க முடியுமா ?

இப்படியான திறன் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் , இவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் ஆகியவற்றை நெறிப்படுத்தவும் மத்திய அரசோ மாநில அரசோ எந்த , வரைமுறைகளையும் இதுவரை செயல்படுத்தவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் unorganized sector எனப்படும் முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதும் ஒரு காரணம். (mostly level 1 and 2)

முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008 (The Unorganized Workers' Social Security Act (2008)) -ன் படி, மத்திய மாநில அரசுகள் சில பல காப்பீட்டுத் திட்டங்களையும் , இழப்பீடுகளையும் பரிந்துரைக்கிறதே அன்றி கட்டாயமாக்கவில்லை. மேலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் தெளிவான விளக்கங்கள் இல்லை. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வாரியங்களை அமைத்திருக்க வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசங்கள் உட்பட வெறும் பதினோரு மாநிலங்கள் மட்டுமே இதைச் செயல்படுத்தின.

2010-11 ஆண்டுகளில் அப்போதைய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி இந்த தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக (National Social Security Fund - NSSF) , 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.  அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போது நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பும், பாதித் தொகையோ அல்லது மூன்றில் ஒரு பங்கோ மட்டும் வழங்கப்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை குழு (Comptroller and Auditor General - CAG) தாக்கல் செய்த அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டு  பின் பயன்படுத்தப்படாமல் தேங்கிய தொகை மொத்தம் ரூ.1927 கோடிகள். இந்தத் தொகை மீண்டும் மத்திய தொகுப்பு நிதியிலேயே (Consolidated Funds of India) சேர்க்கப்பட்டது.

அப்படியே இந்த தொகை முறையாகவும் முழுமையாகவும் வழங்கப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆணையங்களும் அமைக்கப் பட்டிருந்தாலும், போதுமானதாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே ? ஏன் ?

CBAG (Centre for Budget and Governance Accountability) என்கிற அமைப்பு தாக்கல் செய்த ஆய்வறிக்கையின் படி , உன்மையில் முறைசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருக்கவேண்டிய தொகை ரூ.22,841 கோடிகள் (நாட்டின் மொத்த GDPல் 0.39 சதவிகிதம்) இந்த பரிந்துரைக்கப்பட்ட தொகைக்கும் அரசு ஒதுக்கிய தொகைக்குமான வேறுபாட்டிலேயே உண்மை நிலையை விளங்கிக் கொள்ளலாம்

2019ஆம் ஆண்டின் இறுதியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட Code on Social Security 2019 சமூகப் பாதுகாப்பு மசோதா , பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கிட்டத்தட்ட தொழிலாளர் நலம் தொடர்பான பத்து சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கூறுகளைக் கொண்டிருந்த இந்த மசோதாவில் தான் முறைசாரா தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் gig workers, platform workers (ஸ்விக்கி, ஊபர், மாதிரியான தளங்களின்  ஒருங்கிணைப்பில் பணிபுரிகின்றவர்கள்), தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், கட்டிடத் தொழிலாளர்கள், வேற்று மாநிலத் தொழிலாளர்கள்  (Inter state migratory workers) உள்ளிட்டவர்களையும் அரசு வகைமைப்படுதியிருக்கின்றது. இவர்களின் நலனுக்கான வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவக் காப்பீடு, ஜன் தான் திட்டம் உள்ளிட்டவற்றையும் பரிந்துரைத்திருக்கின்றது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு , செயல்படுத்தப்பட்டால் தான் இவற்றில் இருக்கிற நடைமுறைச் சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும். 

இப்போது புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிற சில பரிந்துரைகளோடு பார்க்கலாம். 

1.மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத் தேர்வுகள்

2. ஆறாம் வகுப்பிலிருந்தே மாணாக்கர்களுக்கு தொழிற்கல்வியை (உள்ளூர் திறன்தொழிலாளர்களோடு இணைந்து) அறிமுகப்படுத்தல்

3. இளங்கலை/அறிவியல்/பட்டயப் படிப்புகளுக்கு - மூன்றாண்டுகள் கட்டாயம் , இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு - நான்கு ஆண்டுகள் கட்டாயம் - இந்த முறையை மாற்றி முதல் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய கல்வியை இடைநிறுத்திக் கொள்ளலாம். அதற்கேற்ற சான்றிதழ் வழங்கப்படும் என மாற்றம்

4. மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், என அத்தனைக்கும் இளங்கலை/முதுகலைக்கென தனித்தனி நுழைவுத் தேர்வுகள், தேசிய திறனறி தேர்வுகள், தகுதித் தேர்வுகள், தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள்

5. கட்டாய மும்மொழிக் கொள்கை - கட்டாய தாய்மொழிக் கல்வி 

6. கல்வியில் மாநிலங்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு மாற்றல் 

தொழிலாளர் நலம் சார்ந்த சட்டங்கள், சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மேற்சொன்ன அத்தனையையும் மனதில் நிறுத்தி, அவற்றை புதிய கல்விக்கொள்கை முன்வைக்கிற திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். 

பலதரப்பட்ட சமுகப் பொருளாதரப் பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் முழுமையாகக் கொண்டு சேர்ப்பதே ஓர் அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, தரத்தின் பெயரால் கல்வியைப் பெற இத்தனை முட்டுக்கட்டைகளைப் போட்டு அவர்களுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் மறைமுகமாகத் தடுத்து நிறுத்துவதாக இருக்கக் கூடாதல்லவா ?

Skilled labour கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சுற்றிவளைத்து புலம்புவதெல்லாம் cheap labour கிடைக்கவில்லை என்பதாவே புரிந்து கொள்கிறேன்.

குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பையும் நிலையான ஊதியத்தையும் வழங்குகிற சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் நுழைய உதவும் தற்போதைய கல்விமுறையை மாற்றி, பணிப்பாதுகாப்போ, சட்டப்பாதுகாப்போ, நிலையான ஊதியமோ இல்லாது முறைசாரா தொழில்களுக்குள், திறன் தொழிலாளர்கள் என்ற பெயரில் நம் குழந்தைகளைத் தள்ளுவதா அறம் ?

இது அமைப்புசார் அடக்குமுறை (systematic oppression) அல்லவா ? 

***Spoilers ahead***

Snowpiercer என்ற  ஒரு கொரியத் திரைப்படம் உண்டு. உலகம் மொத்தமும் பணி சூழ்ந்து வாழத் தகுதியற்றதாக மாறிய பின் உலகின் கடைசி மக்கள் கூட்டம், நில்லாமல் ஓடும் ஒரு ரயிலில் பயணிக்கும். அங்கேயும் வர்க்க வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு.ரயிலில் செல்வச் சீமான்கள் சொகுசான முன் பகுதிப் பெட்டிகளிலும் அந்த ரயிலைத் தொடர்ச்சியாக ஓடவைக்கிற உழைக்கும் ஏழைத் தொழிலாளர்கள் ரயிலின் பின் பகுதிப் பெட்டிகளிலும் வாழ்ந்து வருவார்கள்.  

ஏழைகளின் பகுதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உயரமும் எடையும் கொண்டிருக்கிற குழந்தைகள் வருடந்தவறாமல் தொடர்ச்சியாகக் காணாமல் போவார்கள். இதனைத் தடுத்து அந்தக் குழந்தைகளுக்கு என்ன ஆனது என கண்டறியும் பொருட்டே தொழிலாளர்களிடையே கிளர்ச்சி எழும். ஆயுதம் ஏந்தி ஒரு தலைவன் பின்னால் அணிவகுத்து போராடுவார்கள். பெரும் உயிர்ச்சேதமும் போராட்டமும் நிகழ்ந்தபின் அந்தத் தலைவன் ரயிலை இயக்குகிற இஞ்சின் பெட்டியை அடைவான். குழந்தை எங்கு தேடியும் கிடைக்காம இறுதியில்  இஞ்சின் கதவைத் திறக்கும்போது அவன் காணும் காட்சி நம் இதயத்தை உறையவைக்கும். 

காணாமல் போகும் அந்தக் குழந்தை, பழுதாகிப் போன ஒரு இஞ்சின் பாகத்துக்குப் பதிலாக கையால் அந்த வேலையை செய்ய உட்காரவைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட வயது, உயரம், எடையில் அதுவரை காணாமல் போன அத்தனைக் குழந்தைகளும் அதற்காகத்தான் பயன்படுத்தப் பட்டிருப்பார்கள் என்ற உண்மை புலப்படும். 

***Spoiler ends***

இதற்குமேல் நேரடியாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. 

நம்மாலானதெல்லாம் குறைந்த பட்சம் நம்முடைய வட்டத்தில் இருப்பவர்களுக்காவது இந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மட்டுமே. அதையாவது முழுமையாகச் செய்வோம். 

உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பேசுவோம்

***********************************************************

References:

https://thewire.in/labour/national-social-security-fund-unorganised-workers

https://cag.gov.in/sites/default/files/audit_report_files/Report_No.44_of_2017_-_Financial_Audit_on_Accounts_of_the_Union_Government.pdf

https://www.inventiva.co.in/stories/riyarana/india-lockdown-most-affected-is-unorganized-sector-it-is-93-of-the-total-workforce-41-crore-people-lack-economic-security/

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://economictimes.indiatimes.com/news/economy/indicators/national-database-of-workers-in-informal-sector-in-the-works/articleshow/73394732.cms?from=mdr

https://www.prsindia.org/billtrack/code-social-security-2019#:~:text=The%20Code%20on%20Social%20Security%2C%202019%20was%20introduced%20in%20Lok,for%20Labour%20and%20Employment%2C%20Mr.&text=It%20replaces%20nine%20laws%20related,'%20Social%20Security%20Act%2C%202008.

https://www.financialexpress.com/opinion/skill-india-why-there-is-a-gap-between-current-status-and-goals-explained/1520633/#:~:text=The%20proportion%20of%20formally%20skilled,and%2096%25%20in%20South%20Korea.

https://www.rediff.com/business/column/does-india-have-enough-skilled-labour/20190930.htm



செவ்வாய், 14 ஜூலை, 2020

வைரமுத்து - #MeToo மற்றும் #CancelCulture

(C) - Illustration by Taylor Callery for TIME


அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்கிற ஆஃப்ரிக்க அமெரிக்கர் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முக்கியத்துவம் பெற்றது இந்த #CancelCulture என்கிற விஷயம். ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை கடந்த காலங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவமதித்த, அவதூறாக, மதிப்பைக் குறைக்கும் வகையில் சித்தரித்த திரைப்படங்களையும், அவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்களையும் எதிர்த்து போராடத் துவங்கினர். விளைவாக hbo சேனலிலிருந்து ‘Gone with the wind’ திரைப்படமும், netflixல் இருந்து ‘the help’ திரைப்படமும் நீக்கப்பட்டன.


#MeToo இயக்கத்தில் தொடங்கி இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வரை எல்லா தரப்பிலும் இந்த Cancel culture கடைபிடிக்கப்பட்டது/படுகிறது.



ஒரு துறையில் பெரும் புகழ்பெற்ற தனிமனிதர் (சினிமா/விளையாட்டு/அரசியல்/கலை etc) அவருடைய கடந்தகாலத் தவறுகளின் அடிப்படையிலோ அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ பொதுத் தளத்திலும் பிற இடங்களிலும் (அவரின் கலைத்திறம் ஆளுமை உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல்) நிராகரிக்கப்பட்டால், அது தான் #CancelCulture இந்த வரிசையில் காலம் கடந்த புத்தகங்களையும், திரைப்படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது அந்த படைப்பு உருவான காலகட்டத்தில் சரியான பார்வையோ புரிதலோ இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தேதிக்கு அந்த திரைப்படமோ/புத்தகமோ பேசும் விஷயம் தவறு (irrelevant/incorrect) எனக் கொள்வது.

இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை நூறாண்டுகளுக்கு முன்பே ஃபோர்ட் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் இதைப் போல நிராகரிக்கப்பட்டிருக்கிறார். ’The Dearborn Herald' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த அவர், யூதர்களை மோசமாக சித்தரித்து அவதூறாக எழுதப்பட்ட ஒரு தொடர் கட்டுரையையும் அந்த பத்திரிக்கையில் வெளியிட்டுவந்தார்.பின்பு அமெரிக்கா முழுக்கவும் யூதர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பாலும், அறப்போராட்டங்களாலும், நீதிமன்ற வழக்குகளாலும் ஒரு கட்டத்தில் ஃபோர்ட் தனது தவறுகளுக்காக பொது மன்னிப்புக் கேட்க வேண்டிவந்தது.அப்படியாக அந்த cancellation campaign முடிவுக்கு வந்தது.

இதே போல் சமகாலத்தில் sexual assault / harassment பாலியல் புகார் காரணமாக cancel செய்யப்பட்டவர்கள் ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், இயக்குநர் வுடி ஆலன், நடிகர் கெவின் ஸ்பேசி உள்ளிட்டோரும் உண்டு.

இந்த #CancelCulture சரியா தவறா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஒரு பிரபலத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
இது இப்படி இருக்க, இந்த sexual assault/harassment allegations ஐப் பொருத்த வரையில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே அன்றி பொதுவில் அவர் எப்படி நடத்தப் பட வேண்டுமென்றோ ஊடகம் உள்ளிட்டவற்றில் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி அணுக வேண்டும் என்றோ எந்த guidelinesம் இருப்பதாகத் தெரியவில்லை (இருந்தால் தெரியப்படுத்தவும்)

நம்மளால, நம்முடைய மனசாட்சிப்படி, moral compass படி, நமக்குத் தெரிஞ்ச தகவல்களை வெச்சு தான் முடிவெடுக்க முடியும். அப்படிப் பாத்தா benefit of doubtஅ position of powerல இருக்குறவங்களுக்கு குடுக்காம இருக்குறதுதான நியாயம். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தானே நிக்கனும்.

வைரமுத்து எழுதுன பாடல்களைக் கேக்குறது guilty pleasure தான்..ஆமாம் அவருடைய எழுத்தைப் புகழத்தோணும் தான் அதே சமயம் அவரால பாதிக்கப்பட்ட இந்த victims பத்தி ஞாபகம் வந்தா நமக்குள்ள ஒரு conflict வரனும். அதான் நியாயம்…! பரவால்ல… இதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கிறவரை, நம்மால முடிஞ்சவரைக்கும் அவரைக் கொண்டாடாம இருந்தாலே போதும்னு நெனைக்கிறேன்.

இவ்வளவு எழுதுறதுக்கு காரணமும் அந்த internal conflict தான்.

வைரமுத்து, தாம்ப்ராஸ் நாராயனன், காஞ்சிபுரம் ஜெயேந்திரன், உள்ளிட்ட எல்லாரையும் ஒரே தட்டுல தான் வெச்சுப் பாக்கனும்..எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒரே மாதிரி தான் அணுகனும்… போலவே ஸ்ரீரெட்டி அவர்களுடைய புகாரையும் சின்மயி அவர்களுடைய புகாரையும் ஒரே மாதிரி தான் எடுத்துக்கனும். Partialஆ அறம் பேசக் கூடாது…!


எனக்கு எழுந்த இன்னொரு கேள்வி, இந்த #CancelCulture மாதிரியான விஷயங்களைப் பத்தி இங்க நம்முடைய தமிழ் சமூகத்துல ஏன் பரவலான விவாதங்கள் எதுவும் நடக்கல ? குழப்பத்துல இருக்குறவன் தன்னுடைய referenceக்காக தேடுனா கூட இங்க எந்த ஆய்வுகளோ விவாதங்களோ கட்டுரைகளோ இல்லை…இந்த போஸ்ட் எழுத அதுவும் ஒரு காரணம்.


உங்களுடைய கருத்துகளை சொல்லுங்க. I’m eager to learn, unlearn and listen


(மேற்கண்ட போஸ்ட் நான் ஃபேஸ்புக்கில் எழுதிய. பின்னாட்களில் referenceக்காக இங்கே பதிகிறேன். கூடவே நண்பர்களுடைய கருத்துகளையும்)



புதன், 30 மே, 2018

மரணம் - Closure - மறத்தலும் கடத்தலும்



பொதுவாகவே யாருடைய மரணமும் அதீதமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கு. பைக் பயணம் தொடங்கிய நாள் முதல் சாலை விபத்துகளில் உயிரழந்தோர் குறித்தான செய்திகள் மிகையாய் பாதிக்கும்.சாலையில் உயிரிழந்தவர்களை அதுவும் இருசக்கர வாகனமென்றால் ரொம்பவே நெருக்கமாய் உணர்வேன். எந்த வண்டி ? யாருடைய தவறு ? எந்த சாலை ? விபத்தின் காரணிகள் என ? இந்த விபத்து எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் ? எப்படித் தவர்த்திருக்கலாம் ? எனப் பலவாறாக யோசித்து மனம் ஒரு முடிவுக்கு வந்து ஆற்றுப்படும் வரையில் சிந்தனையும் செயலும் அளவுக்கதிகமாய் உழலும்.

எதிலும் கவனம் செலுத்த முடியாது. போலவே தற்கொலைகள் குறித்த செய்திகளும், உயிரிழந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தையும் பதிவுகளைக் காண நேர்தலும் ஒரு துன்பியல் அனுபவம். இந்தப் புகைப்படத்தைப் பதிவிடும்போது தன் உயிரை மாய்த்துக் கொள்கிற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமா ? கடைசியாக யாரோடு பேச வேண்டுமென நினைத்திருப்பார் ? தன்னைச் சார்ந்தவர்கள் குறித்தான கவலை இருந்திருக்குமா ? எல்லா நம்பிக்கைகளுமே அற்றுப்போய் உயிரை மாய்த்துக் கொள்ளமுடிவு செய்யுமளவுக்கு என்ன பிரச்சனை இருந்திருக்க முடியும் ? நம் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டிருந்து பேச நேர்ந்திருந்தால் என்னவென்று கேட்டறிந்திருக்கலாமோ ? இப்படி கேள்விச் சுழல் தொடரும்.

பொதுப் பிரச்சனைகள்; அரசியல் காரணங்கள்: சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற வன்முறையால் உயிரிழந்தவர்கள்; இந்த ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளால் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறவர்கள்;இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியான மரணங்களும் துயரிலாழ்த்தி குற்றவுணர்ச்சியில் தள்ளும். I'll mourn with guilt over the grief of the lives lost even though I absolutely don't have any control over what has happened to the corresponding indivduals.

அனிதாவின் மரணச்செய்தியை அறிந்தபோது குடும்பத்தோடு குற்றாலத்திலிருந்தோம். தம்பி வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததால் திட்டமிட்ட பயணம் அது. அறையைவிட்டு அருவியில் இறங்க கொஞ்சமும் மனம் ஒப்பவில்லை. அதற்கு முந்தைய நாள்வரை குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் கூட எங்கும் பகிரவில்லை. Guilt, helplesness and incapability..! எவ்வளவு தேடியும் சரியான காரணம் இன்னதென முடிவுக்குவர முடியவில்லை. அந்த closure கிடைக்கவேயில்லை. மறதியும் மற்ற வேலைகளின் ஊடாகவும் மட்டுமே அந்த மரணத்தை என்னால் கடக்க முடிந்தது.

தேனி தீவிபத்தின் போது மரணித்தவர்களில் ஒருவர் கூட நேரடியான அறிமுகம் இல்லை. ஆனாலும் அத்தனை மன அழுத்தத்தில் தள்ளியது அந்த மரணம். மீண்டும் அதே கேள்விகள். தேடல். ஒவ்வொருவரின் பெயரும் அவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் (புது மணத்தம்பதிகள் etc), அவர்கள் பயணித்த பாதை; காட்டுத்தீ பரவியிருக்கக் கூடிய சாத்தியங்கள்; அது இதுவென மனம் ஆற்றுப்பட ஏதோவொரு காரணத்தை தொடர்ந்து தேடிக்கொண்டேயிருந்தது. பழிசுமத்தவும், கைகாட்டவும், ஏதோவொன்றைத் தேடிப் பற்றி பாரமிரக்கிவிட்டு தப்பித்தோடுகிறது பாழ்மனம். ஓஹ் இதனாலதான் இப்படியாச்சு..இல்லன்னா கண்டிப்பா தப்பிச்சுருக்கலாம் என பொய்யாகவேனும் உச்சுக்கொட்டி மறந்துதான்..மறைத்துதான் கடக்கவேண்டியிருந்தது.

இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைச்சம்பவம்...! அதில் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் பெயர்கள்; புகைப்படங்கள்; குடும்பத்தாரின் அரற்றல்கள்; அரசாங்கத்தை நோக்கி அவர்கள் எழுப்புகிற கேள்விகள். இன்னும் முழுதாக அதிலிருந்து மீளவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படுகின்றது; இந்த கொலைச்சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. எல்லா திசையிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கின்றது. நான் உட்பட எல்லோருக்குமே ஒரு தற்காலிக closure கிடைத்துவிடுகின்றது. ஐபிஎல்’லோ,அடுத்து வெளிவரும் திரைப்படமோ, ஏதோவொன்று மொத்தமாய் கவனம் திருப்பி நம்மை மடைமாற்றிவிடக்கூடும்.
ஆனால்...தொக்கி நிற்கிற மரணங்களையும் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயத்தையும் யார் கேட்பார்கள் ? என்னவாகும் அந்த உயிர்கள் ? What is the least I could do ? Forget and Move on ?

எப்போதுமே மேற்சொன்ன மாதிரியான எந்தவொரு நிகழ்வின் போதும் உடனடியாக அதைப் பற்றிய செய்திகளையோ என்னுடைய கருத்தையோ பகிராமல் பேசாமல் கடக்க முயல்வேன். உடனடி எதிர்வினை பெரும்பாலும் emotional outburstஆக மட்டுமே இருக்குமென்பதாலும், உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் அடிப்படை அறவுணர்வு மறையக்கூடுமென்பதாலுமே அந்த அழுத்தமான மெளனம். முடிந்தவரையில் அறத்தோடு தர்க்கம் பேசி பிரச்சனை குறித்து எழுதப்படுகிற, என் அலைவரிசைக்கு ஒத்துப் போகிற கருத்துகளை பகிர்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ளக் கூடும்.

எதுவும் கையாலாகாதபோது இப்படி மனம்போனபடி எழுதித் தப்பித்துக்கொள்ளலாம். இந்த எல்லா பிரச்சனைகளைக் குறித்தும் தர்க்க நியாயங்களோட எழுதப்படுகிற கட்டுரைகளைப் படித்தும், என் அன்றாட வேலைகளில் எல்லாவற்றையும் மறந்தும் கடந்து போகலாம்.

ஆனாலும்... 


ஹேராம் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. சாகேத் ராம் தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்குப் பின் மறுபடியும் கல்கத்தா வருவான். தான் அபர்ணாவோடு வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அவள் வரைந்த காளி ஓவியத்தை எடுத்துக்கொண்டு கையில் வைத்தபடி சாலையில் நடந்து வருவான். அப்போது ஒரு கூட்டம் சுரவர்த்தி (அப்போதைய கல்கத்தா ப்ரீமியர்/கவர்னர்) ஒழிக என்று கோஷம் போட்டபடி நகரும். சாகேத்ராமையும் தங்களோடு இழுத்துக் கொண்டு ஒரு கட்டடத்தின் முன் சென்று நிற்பார்கள். மாடியிலிருந்து ஜன்னல் கதவைத் திறந்து கொண்டு மகாத்மா காந்தி தோன்றுவார்; கூடவே கவர்னர் சுஹ்ராவர்த்தியும். கவர்னரைக் கண்டதும் சாகேத்ராம் வெகுண்டெழுந்து அவரை நோக்கி “ Were you not responsible for the killings in Calcutta and Bengal last year ?" என்று கேள்வியெழுப்ப, "We all are responsible",என மழுப்பலாக பதில் சொல்லுவார். 

அந்த பதிலில் சமாதானமடையாமல் சாகேத்ராமன் , “ No please, please answer the question. Were you not responsible as the premier of this state ? Were you not directly responsible for making murderers out of ordinary men ?" என குரல் உரக்க, கூட்டமும் அவனோடு சேர்ந்து கொண்டு சுஹ்ராவர்த்தியை பதில் சொல்ல வற்புறுத்தும். கவர்னர் கொஞ்சம் திகைத்து, “Yes. It was my responsibility. And... I was responsible" என தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிய, உடனே சமாதானமடைகிற கூட்டம் கைதட்டி வாழ்க கோஷம் போட்டு ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது. இப்போது சாகேத்ராம் இந்தக் கூட்டம் இவ்வளவு எளிதாக புத்தியை மாற்றிக்கொள்வதைக் கண்டு திகைத்துப் போய் கோபமாக வெளியேறுவான். 

சாகேத்ராம் திரும்பும் வழியில் நீண்டகாலத்துக்குப் பின் எதிர்பாராதவிதமாக எதிர்படும்  நண்பன் அப்யங்கர் மக்களின் இந்த மனப்போக்கைக் குறித்து காந்தியின் மீதான நம்பிக்கை குறித்தும் பேசும்போது சொல்லுவான், "இந்த ஜனங்களுக்கு ஞாபகசக்தியே கெடையாது. உனக்கும் எனக்கும் மட்டுந்தான்”

கிட்டத்தட்ட சாகேத்ராமனின் அப்போதைய மனநிலைதான் எனக்கும்.

I didn't get my closure yet or I'm still feeling guilty about the loss of lives. மறுபடியும் கேட்கிறேன்.

What is the least I could do? Forget and Move on?

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

எங்கேயோ கேட்ட குரல்...!!

பிசிறடிக்கிற பெண் குரலுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த வசீகரம் இருப்பதாய் உணர்கிறேன். வழமைபோல மென்மையாகவோ, கீச்சுக் குரலாகவோ, கணீர் வெண்கலக்குரலாகவோ, மொத்தமாய் மிரட்டுகிற முரட்டுக் கடுமையாகவோ அல்லாமல் கொஞ்சம் அங்கும் இங்குமாய் எத்தன்மைக்கும் மையமாய் ஒலிக்கிற குரல்.
முகங்களின் சாயல் தேடுகிற மனிதர்கள் பற்றியோ அல்லது முகங்களின் சாயல் பற்றியோ, வாசனைகளை அடையாளம் காணுபவர்கள் பற்றியோ, கட்டாயமாக மனுஷ்யபுத்திரன் போல யாரேனும் கவிதைகளாகவும், ஜி.ஆர்.சுரேந்திரநாத் போல யாரேனும் கதைகளாகவும், ராஜ சுந்தர்ராஜன் போல யாரேனும் கட்டுரைகளும், எங்கேனும் எப்போதேனும்  எழுதியிருக்கக் கூடும்.
இம்மாதிரி குரல் சாயல் தேடுதல் கொஞ்சம் வித்தியாசம். காலங்காலமாய்க் காதறிந்த பாடகிகளின் குரல் சாயலல்ல நான் சொல்வது. பாட்டுப்பாட வாகில்லாத குரல் பதம் அது. என் நினைவில் நிற்கிற சற்று பிசிறடிக்கிற குரல் கொண்ட தேவதைகள் பெரும்பாலும் பாட்டுப் பாட விரும்பாத அல்லது பாடப் பிடிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.நிறையவும் பேசப் பிடித்தவர்களாய் இருந்திருக்கலாம். கவிதைகளையோ அல்லது பாடல்வரிகளையோ உரக்க வாசித்துக்க விரும்புபவர்களாய் இருந்திருக்கலாம். குரல்கள் நினைவிருக்குமளவு முகங்களோ குணங்களோ நினைவிலில்லை.
ஆட்டோக்ராஃப் படத்தில் மலையாளத்தில் கொஞ்சுகிற கோபிகாவின் குரல் இந்த வகையறா. அந்தக் குரலுக்காகவே அந்தப் படத்தை நிறைய பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் இதற்கிணையாய் காதுகளில் ஒலித்த பெரும்பான்மை மலையாளக் குரல்களென்பது தற்செயலா தெரியவில்லை.
அதற்கு முன்பு இதே ஒலிச்சாயலில் கேட்டது ஹேராம் திரைப்படத்தில் பெங்காலிக் கவிதை சொல்லும் ராணி முகர்ஜியின் குரல். இப்போதும் ’நீ பார்த்த பார்வை’ பாடல் தொடங்கி நாற்பத்தி ஒன்பதாவது நொடியில் ஜிபோனந்த தாஸின் ஆகாஷ் ஜ்யோத்ஸ்னா கவிதையை ராணி தன் பிசிறடிக்கிற குரலில் பியானோ பின்னிசையோடு உச்சரிக்கத் தொடங்குகையில் சர்வநிச்சயமாய் நமக்குப் பைத்தியம் பிடிக்கும்.
இன்று மாலை காஃபிக் கோப்பையோடு அலுவலகம் அமைந்திருக்கிற பெருவளாகத்தில் வெயில்வாங்கி நடந்து கடக்கையில் தூரத்தில் யாரோ ஒரு பெண் ஒருமாதிரி உடைந்த உத்தரப்பிரதேசத்து இந்தியில் செல்ஃபோனில் கெஞ்சிக் கொஞ்சி பேசியபடி என்னை தாண்டிச் சென்றாள்.
அதே...கொஞ்சமாய்ப் பிசிறடிக்கிற மென்குரல்...!
Related Posts Plugin for WordPress, Blogger...