நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நீஸெவின் வேர்க்கனி - மயிலன் ஜி சின்னப்பன் - சால்ட் பதிப்பகம்


இந்த ஆண்டு படித்து முடித்த முதல் நாவல் (குறுநாவல் ?!) மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் நீஸேவின் வேர்க்கனி. நூற்றியிருபது பக்கங்களுக்குள் என்பதால் எளிமையாகப் படித்து முடித்து விடலாம் என்கிற முன்முடிவுடன் தொடங்கினேன். எதிர்பார்ப்பிற்கு மாறாக மயிலனின் வழக்கமான மொழிநடையிலிருந்து மாறுபட்டு அதிகம் கவனக்குவிப்பைக் கோருகிற ஒரு நாவலாக அமைந்திருந்தது ‘நீஸேவின் வேர்க்கனி’. 

பதினேழாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையானது டானிஷ் நிலப்பிரபுக்களான விர்கஸ், நேதா இருவரின் கலை சார்ந்த ஓர் அற்புதமான உரையாடலுடன் துவங்குகிறது. அதன் பின் நாவல் முழுவம் உரையாடல்கள் குறைந்து போய் பெரும்பகுதி விவரணைகளாலேயே நிரம்பியிருக்கின்றது. அதீத விருப்பம் , எல்லை, துன்பம் எனப் பொருள்படும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நாவல் , எனக்கு துயரங்களின் தொகுப்பாகவே தொன்றியது.

மன்னரின் ஆசியுடன் டானிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவி இந்தியாவில் வாணிபத்தை விரிவாக்கிடும் பொருட்டு டச்சுக்காரர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு கீழைத்திசையில் இரு கப்பல்களில் பயணப்படும் விர்கஸும் நேதாவும் இந்தப் பெரும்பயணத்தில் இழந்தவையும் பெற்றவையுமே இந்த நாவல். தொடக்கத்தில் காலனியாதிக்கவாதிகளின் பாடுகளை அவர்களின் பார்வையில் தெரிந்து கொள்வதில் எனக்கு என்ன கிட்டும் என்கிற மேலோட்டமான நெருடலுடனே வாசிக்கத்துவங்கி ஒரு கட்டத்தில் கதையின் ஓட்டத்தில் கதைப்பாத்திரங்களோடும் அவர்தம் வாழ்வினோடும் ஒன்றிவிட்டு, பின்பு அதே நெருடலுடன் ’உங்களுக்கு வேணும்டா; என சிறுபிள்ளைத்தனமாக என்னை விலக்கிக் கொள்ள முயன்றதும் நடந்தது.
முதல் அத்தியாயத்தின் கலை குறித்த பின்வரும் உரையாடல்கள் உண்டு 

 // “நற்கலை எப்போதும் பெருவலியிருந்தும் உளப்பிணியிலிருந்தும் வருத்தும் ஏழ்மையிலிருந்துமே பிறக்கமுடியும்”
“கேளிக்கை மனத்திலிருந்து கலையுருவாக்கம் நிகழமுடியாது என்று நான் சொல்வதை கலை என்பதையே வலியின் வெளிப்பாடாகத் திரிக்கிறேன் என எடுத்துக்கொள்ள சாத்தியமுண்டு. வெளிப்பாட்டுத் தளத்திலல்லாமல் , உள்ளீடு சார்ந்தவொன்றை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கலை நிர்ப்பந்திக்கும் அக்கறையும் சிரத்தையும் மிதவை மனங்களால் எட்டமுடியாதது. உத்தேசிக்கும் வெளியீடு, காதலாகவோ களிப்புணர்வாகவோ கொண்டாட்டமாகவோ இருந்தாலும் அதற்கான அழுத்தமான, பிரத்தியேகமான ஊன்றல் வேண்டும்.செல்வச்செழுமை அந்த ஊன்றலை அனுமதிக்காது” //

மேற்கண்ட உரையாடல்களே இந்த நாவலின் மொத்த சாரத்தையும், வாசிக்கிறவர்கள் இந்த படைப்பிலிருந்து பெறுவதென்ன எனபதையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

நாவலின் தலைப்பான நீஸே குறித்து முதல் அத்தியாத்தில் ஒரு குறிப்பு உண்டு. நேதாவும் விர்கஸும் கலைமனம் குறித்தான விவாதத்தின் முடிவில் நேதா உருவாக்கிக்கொண்டிருக்கிற நீஸேவின் மரச்சிற்பத்தை விர்கஸிடம் காட்டுவான். நீஸே (Nisse) என்பது டானிஷிய தொன்மங்களிலும் நாட்டார்வழக்கிலும் சொல்லப்படுகிற ஒரு வகை நல்லாவி. உருவத்தில் சிறியவையான இவை வயதில் முதிய தோற்றத்துடன் வீட்டிற்குள் இருந்தபடி அன்றாட வேலைகளைச் செய்கிற பணியாள் போன்றவை. ஆனால் தொன்மங்களில் சொல்லப்பட்டது போலன்றி இளமையான அழகான உருவத்தில் நீஸேவை வடித்திருப்பான் நேதா. நீஸேவின் வேர்க்கனி என்கிற தலைப்பிற்கும் இதற்குமான தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

காலம்காலமாக வழக்கத்திலிருக்கும் ஒன்றை நம்முடைய பார்வையில் முற்றிலும் வேரொன்றாக உருவகித்து மீட்டுருவாக்குவது(ம்) தான் கலைமனம் செய்யக்கூடியதென நேதா முயன்றான் எனில் மயிலன் இந்த நாவலின் வழி செய்ய முயன்றிருப்பதுவும் அது தானா? 

நாவல் டென்மார்க்கின் கோப்பன்ஹேகனில் தொடங்கி, இலங்கை, திரிகோணமலை, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ரகுநாத நாயக்கர் என அத்தனையையும் தொட்டு தரங்கம்பாடியின் டன்ஸ்பர்க் கோட்டையில் முடிகிறது. கப்பல் பயணத்தின் பிற நிகழ்வுகளைக் குறிப்பிட்டால் வாசிக்கிறவர்களுக்கு எதுவும் மிஞ்சாது என்பதால் அதனை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளவும் . Well written and very demanding work of fiction. வாழ்த்துகள் மயிலன்...! <3

சால்ட் பதிப்பகம் அவர்களுடைய வழக்கமான அழகியலுடன் மிகச் சிறப்பாக புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்கள். வடிவமைப்பாளரும் ஓவியருமான பழனிவேலன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
Related Posts Plugin for WordPress, Blogger...