நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 11 ஜனவரி, 2012

நீ நான் மற்றும் நம் நினைவுகள்...!!!


அழகான பூந்தோட்டங்களின் ஊடே

கை கோர்த்தபடி

மகிழ்ச்சியாக

சுற்றித் திரிகின்றோம் நாம்..



பூக்களை நுகர்ந்தபடி

சிரித்து சிரித்து

என்னவோ

பேசிக்கொண்டேயிருக்கின்றாய் நீ...

தலையசைத்தபடியே உன் முகத்தை

பார்த்துகொண்டு நடக்கின்றேன் நான்..



ஏதோவொரு பாடலை

முணுமுணுக்கிறாய் நீ..

உலகின் மிக

இனிமையான பாடலாக

அது இருந்திருக்கவேண்டும்

என்பதுபோல்

ரசிக்கத் தொடங்குகிறேன் நான்...



வசந்த காலத்தின் வாசம்

நம்மைச் சுற்றிலும்...

பின்பு கடற்கரை

மணல்வெளியில்

கால்தடம் பதிக்கத் தொடங்கிறோம்....

நம்மை பிடிக்க முயன்ற

அலைகளோடு விளையாடி நகர்கிறோம்..



திடீரென்று கையை உதறிவிட்டு..

முடிவில்லா கடலின் நடுவே

ஓட ஆரம்பித்தாய் நீ...



என்னென்னவோ

அழுது அரற்றியபடி

பின் தொடர்ந்து

ஓடிவருகின்றேன்  நான்...



ஓடி ஓடி..

சிறு புள்ளியாய்.. ஒளிக்கீற்றாய்..

தேய்ந்து மறைந்தாய் நீ..!!



அழுது சோர்ந்த

கண்களோடு..

அயர்ச்சியில்

விழித்தெழுகின்றேன் நான்...!!

கனவுகளின்

மிச்சமாய் எச்சமாய்

சிதறிக்கிடந்த உன் நினைவுகளை

அசைபோட்டபடி...

திங்கள், 9 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவன் - Survival of the Fittest


முன்பே மூன்று புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இது யுவகிருஷ்ணா அண்ணனின் முதல் புதினம் என்பதால் மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன் 'அழிக்கப் பிறந்தவனு'க்காக.வலைப்பூவில் வெளியிட்டிருந்த அத்தியாயங்கள் வேறு ஏகத்துக்கும் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டபடியால்... வெளியிட்ட அன்றே வாங்கியாயிற்று இந்த புத்தகத்தையும்... அன்றிரவே படித்தும் முடித்தாயிற்று.


ஒரு கொலை,ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட், இதனைத் தொடர்ந்து கோர்வையாக நடக்கும் விசாரணைகளும்,தொடர் கொலைகளும் விறுவிறுப்பை அதிகமாக்குகின்றன.பர்மா பஜார் பெருந்தலை காதர் பாய், அவரின் சிஷ்யன் மாரி, அவனுடைய நண்பன்...இப்படி வரிசையாக அறிமுகமாகும் ஒவ்வொரு கேரக்டரும் கதையை அடுத்தடுத்த  கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.

தட தடவென எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் போல அப்படியொரு வேகமான நடை கதையிலே... கதாபத்திரங்களின் படைப்பு, அவர்களின் பின்னணி, அவர்கள் புழங்கும் இடங்கள்...அத்தனையிலும் அப்படி ஒரு டீட்டெய்லிங் ().பர்மா பஜார் வியாபாரம்,திருட்டு வி.சி.டி கும்பல், கடல் வழி கடத்தல்,சினிமா விநியோக உரிமை, என கொடுத்திருக்கும் ஒவ்வொரு டீட்டெய்லுக்கும் ரொம்பவே உழைத்திருப்பது தெரிகின்றது..

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.மாரியின் காதல் எபிசோடை கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்பது என் வருத்தம்.. :) :)

ஒரு கமர்ஷியல் த்ரில்லர் சினிமாவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்டிருக்கின்றான் இந்த 'அழிக்கப் பிறந்தவன்'.
யுவா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!
அடுத்த நாவலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...!!

டிஸ்கி: 


நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... :) :)







ஞாயிறு, 8 ஜனவரி, 2012

’தெர்மக்கோல் தேவதைகள்’ - உணர்வுகளின் தொகுப்பு


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப்பின் இப்போது தான் இந்த பக்கம் வருகின்றேன்.
So... I'm back..!! :) :) :)


லெமன் ட்ரீ, கொத்து பரோட்டா, மீண்டும் ஒரு காதல் கதை... ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சமீபத்திய (4/01/2012) ரிலீஸ் தான் ‘உபதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் தெர்மக்கோல் தேவதைகள் சிறுகதைத் தொகுப்பு.

கேபிள் அண்ணனின் நேரேஷன் ஸ்டைல்தான் எனக்கு அவரிடம் மிகப் பிடித்த விஷயம்.உணர்வுகளை அப்படியே வார்த்தைகளில் கடத்துவதில் வல்லவர்.
செவிட்டில் அறையும் நிதர்சனங்களையும், மெல்லிய உணர்வுகளையும் அவரது சிறுகதைகள் எப்போதும் பிரபலிக்கத் தவறியதில்லை.

அப்படி நெஞ்சைத்தொட்ட நிதர்சனக் கதைகளின் தொகுப்பு தான் இந்த் தெர்மக்கோல் தேவதைகள். ஜூஸ் கடைகளில் ஃபலூடா என்று ஒரு மிக்ஸ் உண்டு.ஜிகர்தண்டாவின் காஸ்ட்லி வெர்ஷன். தனித்தன்மையும், தனிச்சுவையும் கொண்ட பல லேயர்களை அடுக்கியிருப்பார்கள்.அவைகளை கலந்து ஒன்றாக சாப்பிடுவது ஒரு அலாதியான இன்பம்.
இந்த சிறுகதைத் தொகுப்பும் அந்த மாதிரி தான்.ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன நமக்கு.

சில பாத்திரங்கள் உங்களுக்கு வாழ்க்கையை உணர்த்தலாம், சில பாத்திரங்கள் உங்களை காதலிக்கத் தூண்டலாம், சில உங்களை அழ வைக்கலாம்... இப்படி உணர்வுகளின் குவியலாகவே இருக்கின்றார்கள் கதை மாந்தர்கள்...

எனக்கு எப்போதுமே கேபிள் அண்ணன் கதைகளில் உலவும் பெண் பாத்திரங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு... 80 வயது சேச்சுப் பாட்டியாகட்டும், இருபதுகளில் உலவும் ஜெயா,ராஜியாகட்டும் அப்படி ஒரு கேரக்டரைசேஷன்... அழகுப் பெண்களைப் பற்றிய வர்ணனைகளில் சில க்ளிஷேக்கள் இருந்தாலும் (உ.தா இரானியச் சிவப்பு, செர்ரி உதடு) JJ
கேரக்டரைசேஷனிலும்,மெல் உணர்வுகளைச் சொல்வதிலும் கேபிள் அண்ணன் ஒரு குட்டி சேத்தன் பகத்.. J J

என்னுடைய ஃபேவரைட்ஸ்:
1.வன்மம்
2.பிரியாணி
3.ஜன்னல்
4..காளிதாஸ்
5.ராஜலட்சுமி
6.ஜெயா

கேபிள் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!


டிஸ்கி:

நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... J J J

டிஸ்கி 2:

தெர்மக்கோல் தேவதைகள் வாங்கிய அன்றே யுவகிருஷ்ணா அண்ணனின் ‘அழிக்கப் பிறந்தவனையும் வாங்கிவிட்டேன்... இரண்டு புத்தகங்களையும் விடிய விடிய அன்றே படித்தும் முடித்தாயிற்று. சோ அடுத்த பதிவில் ‘அழிக்கப் பிறந்தவனோடுசந்திக்கிறேன்.




ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மருத்துவக்காப்பீடு - இந்தியாவுக்கு சரி வருமா


சமீபத்தில் எனது பணி நிமித்தமாக அமெரிக்க மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் பற்றியும், தனி நபர் மருத்துவக்காப்பீட்டின் செயல்பாடுகளையும், அது தொடர்பான
அமெரிக்க அரசின் சட்டங்களையும் பற்றி படிக்க நேர்ந்தது....

  ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு மருத்துவக்காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் காப்பீடு  செய்யப்பட்டிருக்கின்றார்கள்.ஆக நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை சார்ந்தே இருக்கின்றது.அங்கு அவர்கள் மருத்துவர்களை அணுகும் முறையும் வித்தியாசமானது.

 நம் நாட்டைப்போல் உடல் நிலை சரி இல்லை  என்றால் நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற முடியாது. PCP (Primary Care Physician) எனப்படும் முதன்மை மருத்துவ ஆலோசகரிடம் சென்று தங்கள் தற்போதைய உடல் கோளாறை பரிசோதித்து, அவரின் பரிந்துரையின்படியே மேற்கொண்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் செல்வதா அல்லது நேரடியாக சிகிச்சை பெற்றால் மட்டும் போதுமா என முடிவு செய்யப்படுகிறது.

இதில் முதலில் நோயாளி சந்திக்கின்ற PCP - இடம்  மட்டும் ஒரு பொதுவான Consulting Fees ஐ செலுத்துகின்றார்கள். மேற்கொண்டு செய்யப்படும் சிகிச்சைக்கு ஆகும் செலவினை இவர்கள் காப்பீடு  செய்திருக்கின்ற திட்டத்தின் கீழ் (நிபந்தனைகளுக்கு உட்பட்டு) காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறது.இப்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் எப்படி முழு சிகிச்சைக்கு ஆகும் செலவினை பெறுவார். நோயாளிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைக்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி செலவான தொகையை திரும்பப்பெறுகிறார் (Re-Imbursement)

. இந்த முறைக்கு ஏகப்பட்ட சட்டதிட்டங்களும், அரசு நிபந்தனைகளும் உள்ளன.அவற்றுள் முக்கியமானது HIPAA எனப்படும் Health Insurance Portability and Accountability Act. சாதாரண குடிமக்கள் அன்றி ஆதரவற்றோர், முதியோர்,பெற்றோரில்லாத பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள் ஆகிய சிலருக்கான  மாத தவணைத்தொகையை (Premium) அரசாங்கம் செலுத்துகின்றது.இந்த முழு இயக்கத்தையும் படித்த பிறகு என்னுள்ளே நிறைய கேள்விகள் எழுந்தன.நம் நாட்டில் இப்போதுதான் ஓரளவு செயல்படுத்த ஆரம்பித்திருக்கும் திட்டம் எந்தளவுக்கு வெற்றி பெறும்.(இன்னொரு சந்தேகம் தமிழ் நாட்டில் செயல்படத்தொடங்கியிருக்கும் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மத்திய அரசுடையதா அல்லது மாநில அரசின் திட்டமா..? தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்)

 அப்படி நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டால் வறுமைக்கோட்டிற்கு கீழ் (சராசரி ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக உள்ள) மக்களுக்கான தவணைத்தொகையை அரசாங்கம் செலுத்துமா? அவர்கள் இலவச மருத்துவ உதவி பெறுவதற்கான வழி செய்யுமா? ஒருவேளை அவ்வாறு நாட்டின் மொத்த மக்கள் தொகையும் தனியார் நிறுவனங்களினால் காப்பீடு செய்யப்படுவதால் ஒட்டுமொத்த அரசாங்கமும், நாட்டின் பொருளாதாரமும் தனியார் நிறுவனகளின் பிடிக்குள் போய் விடாதா? இப்படி அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குவதன்மூலம் தனியார் நிறுவனங்கள் அடையும் ஆதாயங்கள் என்னென்ன...? இனி பதிவுலக விவாதங்களில் இந்த கேள்விகளுக்கான விடை கிடைக்குமென நம்புகின்றேன்...

மறக்காமல் உங்கள் கருத்துகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்...
நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...