நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 16 மே, 2013

’ஒன்று’ - ரா.கண்ணன், ராஜுமுருகன் - விகடன்



கொஞ்சம் விறுவிறுப்பும் கொஞ்சம் காதலுமாய் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கின்ற வகையிலான சிறுகதைகள் எப்போதுமே என்னைக் கவரத் தவறியதேயில்லை. முதன் முதலில் சிறுவர்மலரில் தான் தொடங்கியது என் வாசிப்பு. பின் குமுதத்தில் தொடர்கதை (’பிளஸ் ஒன்’ தொடர்கதை– பிரியா கல்யாணராமனின் எழுத்துக்கு அடிமை நான்.) படித்து அப்படியே விகடுனுக்கு மாறி ‘சுஜாதா’வை அடையாளங்கண்டு நூலகம் சென்று தனி புத்தகங்கள் அதிகம் வாசிக்கத்தொடங்கிய நேரமது. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது.

இன்று வணிக எழுத்து என்று ‘இலக்கிய’வாதிகளால் பெரும்பாலும் ஒதுக்கப்படுகின்ற அங்கீகரிக்கப் படாத ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், ப்ரியா கல்யாணராமன் (’சுஜாதா’வையும் இப்பட்டியலில் சேர்ப்போரும் உண்டு) உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளே பெரும்பாலானோருக்கு வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்திருக்கும் அல்லது ஆர்வமேற்படுத்தியிருக்கும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. என் அம்மா எனக்கு மு.வ அவர்களையும் தி.ஜா வையும் அறிமுகப்படுத்தினாலும் நானென்னவோ குமுதத்தையும் விகடனையும் தான் அதிகம் விரும்பினேன்.

 நிற்க. எதற்காக இவ்ளோ பெரிய பில்டப் என்று கேட்கலாம். விஷயத்துக்கு வருகின்றேன். ’லைட் ரீடிங்’ (light reading) என்று விளிக்கப்படுகின்ற ‘மென் வாசிப்பு’க்கு நான் எப்போதுமே பெரிய ரசிகன். வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் பெரும்பாலும் அவை தருகின்ற சின்ன சின்ன சஸ்பென்ஸுக்காகவும், திடீர் திருப்பங்களுக்காகவும்,கொஞ்சம் இளமைக்காகவும்,பொங்கும் காதலுக்காகவும் நிறையவே ரசித்திருக்கின்றேன்.அந்த வகையில் சமீபத்தில் அண்ணன் யுவகிருஷ்ணா அவர்கள் பேஸ்புக்கில் பரிந்துரைத்ததன் பேரில் விகடனில் தொடராக வெளிவந்த ‘ஒன்று’ கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். தொடராக வந்தபோதே பட்டையை கிளப்பியது ஆதலால் ஒரு மினிமம் கேரண்டி நம்பிக்கை இருந்தது.
 அப்போது எழுத்தாளரின் அடையாளத்தை வெளியிடாமல் ‘இருவன்’ என்று பெயர் மட்டும் வந்தது. யார்ரா அந்த ‘இருவன்’ இப்படி எழுதுகிறாரென்று நினைப்பேன். புத்தகமாய் வெளிவரும்போது தான் தெரிந்தது ‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகனும், ரா.கண்ணன் அவர்களும் தான் அந்த ’இருவன்’ என்று. மிகவும் மோசமான மனநிலையில் வாசிக்கத் தொடங்கிய நான் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிக்கத் தொடங்கி அப்படியே மூழ்கிப்போனேன். எனக்குள்ளே நிறைய சிரித்துக் கொண்டேன். என் முன்னே நின்ற பிரச்சனைகள் மறந்து போயின. கொஞ்சம் காதலும் கவிதையுமாய் கனநேர கிறுக்கொன்று பிடித்தது. ஒவ்வொரு கதையாய் படித்து முடித்தவுடன் ”அடச்சே..அதுக்குள்ள முடிச்சுப்புட்டானுவளே’ என்று வருந்தவும் செய்தேன்.

எழுத்துநடையில் துள்ளலும் எள்ளலுமாய் தட தடவென பக்கத்து வீட்டு அழகு தேவதைகளினூடாகவும்… காதலில் சொதப்பிய காதல் மன்னர்களினூடாகவும்… அழைத்துச் செல்லும் ஒரு வேகமான ரயில் பயண அனுபவம். அவ்வப்போது நெகிழவும் முகிழவும் சிரிக்கவும் வைக்கத் தவறவில்லை இந்தக் கதைகளின் எழுத்தாளர்களான இருவர்(ன்).

சில நேரங்களில் நாம் வாசிக்க விரும்பும் புத்தகமோ பார்க்க விரும்பும் திரைப்படமோ அது முழுமையான கலைப் படைப்பாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆசானாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் நம்முடைய அந்த நேரத்து பிரச்சனைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் கொஞ்சம் விடுபட வைத்தாலே போதுமானது. ‘ஒன்று’ புத்தகம் அந்த வகை.

கதைகளிலிருந்து நான் ரசித்த வரிகள் சில…!!

’தேடித் தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும் தீர்ந்துவிட்ட பிறகு, கிடைக்கிற மெளனம் எவ்வளவு அழகானது. மெளனத்திலும் தேடினால், ஆழத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் பிய்த்தெறிய முடியாத மச்சம்போல் ஒட்டிக்கிறது பிரியம். ஆமாம்..இதை எல்லாம் பிரியம் என்றே அழைத்தாலென்ன? ஆகவே பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்.’

‘காதல்… வயசையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர் பூதம். ஆதி நெருப்பின் கதகதப்பு. உலகின் முதல் உன்மத்தம். பாதாதிகேசம். கேசாதிப் பாதம். இது கெமிஸ்ட்ரியின் ஹிஸ்டரி.’

’நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்’

‘லாலி என் அருகே இருக்க, ஒரே நேரத்தில் என்னைக் காளான் குடையாகவும் குறிஞ்சி மலராகவும் உணர்ந்தேன். அந்த இரவில் அவள் மழையாகவும், நான் ஈசலாகவும் பிறந்து வந்ததாய் தவித்தேன்’

‘ஏ.டி.எம் ஸ்லிப் பின்னால்கூட ஹைக்கூ எழுதும் மனசுக்காரன் நான். சாலையில் சைரன் கேட்டாலே அதில் பயணிக்கும் நோயாளிக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கும் ஒருத்தி எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை’

’அது அந்தாக்‌ஷரி’ அல்ல தோழர்...என் வாழ்வின் வழிப்பாதை. விரல் பிடித்து விழியாக வாழ்ந்து காட்டக் கிடைக்கவிருக்கும் ஒரு வரம். யார் யாரோ கஷ்டப்பட்டு இத்தனை காலம் திரை இசையை எங்களுக்காகவே படைத்ததாய் தோன்றிய கனம் அது தோழர்’

‘காதலி சென்றுவிட்ட பிறகு காதல் பகிர்ந்த இடங்களைப் பார்ப்பது துயரம். நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்துகிடக்கின்றன பிரியங்கள்.’

’நதியைப்போலக் கடந்துவிட்டது காலம். காதலும் பிரியமும் கடல்போல் நிற்கிறது. போய்ப் பார்ப்பதும் கால் நனைப்பதும் அவரவர் விருப்பம். அவரவர் துயரம்.’

’ஒவ்வொரு நினைவும் ஜனனம். ஒவ்வொரு பிரிவும் மரணம். காதல் விதைத்த பார்வையின் முதல் நொடியையும், பிரிவைக் கொடுத்த வார்த்தையின் கடைசிப் புள்ளியையும் யார் அறிவார்.’

மீதியை புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்:
புத்தகம்: ‘ஒன்று’
எழுதியவர்கள்: ரா.கண்ணன், ராஜு முருகன்
விகடம் பிரசுரம்
விலை:ரூ.85
ஆன்லைனில் வாங்க : http://books.vikatan.com/index.php?bid=2061


திங்கள், 15 ஏப்ரல், 2013

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி



இப்போது இப்படி இருக்கும் ஒரு விஷயம் ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கும் ?? இந்த கேள்வி பொதுவா எல்லோருடைய மனங்களிலும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இருக்கும். சிலருக்கு பழசைப் பேசுவது பிடிக்காது. ஏனைய சிலருக்கு பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அசைபோடுவதில் தனி ஆனந்தம்…! இந்த உணர்வை தான் ஆங்கிலத்தில் ’நாஸ்டால்ஜியா’ (Nostalgia) என்கிறோம். இணையான தமிழ் வார்த்தை எதுவும் தட்டுப்படவில்லை.

இந்த ‘நாஸ்டல்ஜியா’வுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.தங்கள் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களையும், இளமைக் காலத்தில் வசித்த இடங்களையும் நினைத்துப் பார்த்து அசை போடுவது யாருக்குத் தான் பிடிக்காது. இந்த புத்தகமும் கிட்டத்தட்ட தில்லியில் ஐம்பது வருடங்களைக் கழித்த ஒரு தமிழரின் மறக்கவியலா அனுபவங்களும், கடந்து வந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களும், பயணங்களும் நிறைந்த ஒரு நாஸ்டால்ஜிக் புத்தகம் தான்.

ஏற்கனவே சுகா அவர்களின் ’மூங்கில் மூச்சு’ மற்றும் ’தாயார் சன்னதி’ ஆகிய புத்தகங்களை அவை தந்த உணர்வுகளுக்காகவே மிகுந்து ரசித்தவன் நான். சுகா அவர்கள் தனது தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பின்பே புத்தகத் திருவிழாவில் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’-ஐ வாங்கலானேன். எழுதியவர் திரு.பாரதி மணி அவர்கள். பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்ததே S.K.S.மணி-ஆக இருந்தவர் ‘பாரதி’ மணி ஆகக் காரணம். பாபா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரை பார்த்தது நினைவிருக்கலாம் உங்களுக்கு.
உயிர்மையில் பல்வேறு காலங்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் ‘பாரதிமணி அவர்களைப் பற்றி அவருடைய நண்பர்களின் எண்ணங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த புத்தகம்.

இன்று உலகறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரோடு பாரதி மணி அவர்கள் சக நடிகராக நடித்த இன்டோ-ஆங்கிலத் திரைப்படம் ‘தி எலக்ட்ரிக் மூன்பற்றியது முதல் கட்டுரை.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது இந்தத் திரைப்படம். அந்த எழுத்தாளர் – அருந்ததி ராய் அவர்கள்…!! நாற்பத்தைந்தே நாட்களில் அட்டகாசமான திட்டமிடலோடு தயாரான இந்த திரைப்படத்தின் உருவாக்கம் நிச்சயமாக வியப்பூட்டுகின்றது

பாரதி மணி அவர்கள் பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று வந்திருப்பதால் பல பயணங்களில் எதிர்பாராதவிதமாக பல பெரும்புள்ளிகளை எதிர்கொண்டிருக்கிறார். உதாரணம்: அன்னை தெரசா அம்மையார், முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள்...! இப்படி ஆச்சரியப்படுத்துகின்றது இந்தப் பட்டியல்.

நாடகங்களைப் பொருத்தவரை S.V.சேகர், க்ரேஸி மோகன், Y.G.மகேந்திரன் ஆகியோர் வாயிலாக மட்டுமே மேடை நாடகம் என்ற விஷயத்தைக் கேள்விப்படும் இந்த தலைமுறையைச் சேர்ந்த நமக்கு டில்லி வாழ் தமிழர்கள் மேடை நாடகங்களுக்குத் தந்த முக்கியத்துவமும் அங்கீகாரமும் பற்றி பாரதி மணி அவர்கள் குறிப்பிடும்போது வியப்பேற்படுவதை தவிர்க்க முடியவில்லை. நாடகங்களின்பால் அவர் கொண்ட ஈடுபாடும் ,அதன் பொருட்டு ஆற்றிய பங்களிப்பும் அளப்பரியவை.

காருக்குறிச்சியாரையும், திருவாவடுதுறை பிள்ளைவாள் அவர்களின் நாதஸ்வர வாசிப்பை சிலாகிப்பதாகட்டும்... செம்மீன் படத்துக்கு எப்படியாவது தேசிய விருது கிடைத்துவிடவேண்டுமென பிரயத்தனப்பட்டதாகட்டும்....வங்கத்தந்தை முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மகள், கனவரோடு ரகசியமாய் இந்தியாவில் தங்கியிருந்தபோது அவர்களுக்காக ஹீல்ஸா மீன் கொண்டு சென்றதாகட்டும்....!! அத்தனை நிகழ்வுகளையும் அவர் விவரித்திருக்கும் நடை அலாதியானது. அத்தனை ஆச்சரியங்கள்...சுவாரஸ்யங்கள். எழுத்தாளார் சுஜாதா, நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்,இசை விமர்சகர் சுப்புடு,எதேச்சையாக கூட அமர்ந்து தேனீர் அருந்தும் ஆங்சாங் சூகி (!!), நாடக விழாவுக்கு தலைமை தாங்கிய பிரதமர் நேரு அவர்கள்... எத்தனை மனிதர்கள்... எத்தனை விவரணைகள். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ‘நிகாம்போத் சுடுகாடு’ கட்டுரை. மரணமும் மரண நிமித்தமுமாய் உதிர்த்திருக்கின்ற வார்த்தைகளைத்தும் அத்தனை நிதர்சனமானவை...உணர்வுப்பூர்வமானவை.

பல நேரங்களில் பல மனிதர்கள்
ஆசிரியர்:பாரதி மணி
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ.100

உயிர்மை தளத்தில் படிக்கக் கிடைக்கும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சிலவற்றின் சுட்டிகள் கீழே:

வெள்ளி, 29 மார்ச், 2013

இந்த 'கலாச்சாரம்'னா என்னங்க…??



பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது”.

"பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள்அறிவு பரம்பல்கள்வாழ்வியல் வழிமுறைகள்சமூக கட்டமைப்புஎன்பனவற்றை சுட்டி நிற்கின்றதுமொழிஉணவுஇசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்." இப்படிச் சொல்கிறது விக்கி.

சாதாரணமான வார்த்தைகளில் சொல்லனும்னா ஒரு நாடுன்னு எடுத்துகிட்டா அங்க இருக்கிற மக்களுடைய உணவுப்பழக்கம், உடைகள், இனம், பேசும் மொழி, பழங்கால இலக்கியங்கள்,  வாழ்வியல், இசை, நாகரிகம், ரசனை, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் வழக்கங்கள், விளையட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகள் ஆகியவையே அடிப்படைக் காரணிகள் (Basic Factors). இவை அனைத்தின் அடிப்படையிலேயே இந்த கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை வரையறுக்கப்படுகின்றன.

உலக அளவில் பல நாட்டு மக்களிடையே பலவகை கலாச்சாரங்கள் பழக்கத்தில் இருந்தாலும் இந்திய நாட்டைப் பொறுத்தவரை இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகளாக நாம் குறிப்பிட்டவை அனைத்துமே மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டவையாகத் திகழ்கின்றன. இன்னும் அணுக்கமாகப் பார்த்தால் நம் தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகள் வேறுபடும்.(உதாரணம் – பேச்சு வழக்கு, உணவு பழக்கம், இறை வழிபாடு, சடங்குகள்)

இந்த கலாச்சாரத்தின் முக்கியமான கூறாக நான் கருதுவது இதன் மாற்றம் அல்லது வளர்ச்சி. இந்த மாற்றமும் வளர்ச்சியும் காலத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. இந்த காலத்தினால் ஏற்படும் மாற்றம் என்பது ‘கலாச்சாரம்மட்டுமல்லாது  சமூகத்தில் உள்ள ஏனைய விஷயங்களிலும் எதிரொலிக்கும். உதாரணமாக எண்பதுகளில் மக்களின் இசை ரசனை, பெல் பாட்டம் உடைகள், ஹிப்பி ஹேர்ஸ்டைல், அதன் பிறகு 90களில் ஏற்பட்ட மாற்றங்கள், இப்போது இந்த விஷயங்களில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி முன்னேற்றம் இவைகளே.


இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்களாக நான் கருதுவது புத்தகங்களும் ,திரைப்படங்களும் தான். அதனாலேயே வித்தியாசமான கலாச்சாரங்களையும், வெவ்வேறு காலகட்டங்களையும்,அந்தந்த காலகட்டத்தின் ரசனைகளையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கக்கூடிய புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடித்தேடி பார்க்கத் தொடங்கியிருக்கின்றேன்…!!

என்னாலியன்றவரையிலும் எனக்குப் புரிந்தவரையிலும் அவைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்கின்றேன்…!! உங்களுக்குப் பிடித்தமான,மேற்சொன்ன வரையரைக்குள் வருகின்ற திரைப்படங்களையும், புத்தகங்களையும் பற்றி பின்னூட்டங்களில் மறக்காமல்  பகிர்ந்து கொள்ளுங்கள்…!!
Images Courtesy: Original uploaders

திங்கள், 18 மார்ச், 2013

பாலாவின் ‘பரதேசி’


பாலாவின் பரதேசி பார்த்தாகிவிட்டது. ஊர் உலகமே படம் பற்றி நிறைய பேசவும் எழுதவும் செய்கின்றார்கள். எனக்கும் இந்த படம் பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

முதலில் ஆங்கிலத்தில் ‘Red Tea’யாக எழுதப்பட்டு பின்பு தமிழில் ‘எரியும் பனிக்காடு’-ஆக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தின் முழுமையான தழுவலாக இந்த படம் இல்லை. ஆதலால் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பது நலம். தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக பஞ்சம் பிழைக்கச் சென்று ஆங்கிலேயர்களின் கொடுமைகளுக்கு ஆளான மக்களின் கதை என்ற அடிப்படையை மட்டும் எடுத்துக்கொண்டு அதன்மீது ஒரு திரைக்கதையினைக் கட்டமைத்திருக்கின்றார் பாலா.

படம் வெளிவரும் முன்பு வெளியிடப்பட்ட டீசரை பார்த்துவிட்டு கொஞ்சமும் புரிதல் இல்லாமல் இயக்குனர் பாலாவை இந்தாளு ஒரு சைக்கோ என்று பேசியவர்களெல்லோரும் படம் பார்த்தபின் அந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றியிருப்பார்கள். பாலாவின் Perfection ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகின்றது. கதை என்றவகையில் கொஞ்சம் அழுத்தமில்லாமல் சோகையாகிப்போனது வருத்தமே. ஆனாலும் ஒரு தேயிலைத்தோட்ட அடிமைகளாகச் சென்றழிந்த மக்களின் வாழ்வைப்பற்றிய குறிப்பிடத்தக்க ஆவணமாக ’பரதேசி’ நிச்சயம் திகழும்.

அதர்வாவுக்கு இந்தப் படம் ஒரு மைல்கல். அப்பாவி ஒட்டுப்பொறுக்கி ‘ராசா’வாக அப்படியே அள்ளிக்கொண்டு போகின்றார். இறுதியில் பாறை மீது உட்கார்ந்துகொண்டு ”கொஞ்சம் இரக்கம் காட்டுங்க நியாயமாரே” என்று கதறும்போது நம்மைக் கலங்கடிக்கின்றார். கங்காணியாக நடித்திருக்கும் இயக்குநர் ஜெர்ரி, அங்கம்மாவாக வரும் வேதிகா, இரண்டாம் பாதியில் வரும் தன்ஷிகா, கருத்தக்கன்னி ரித்விகா, சாலூர் ராசாவின் கூன் பாட்டி, சோக்காளி ஊர்ப்பெரிசாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன்  என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே பாலா பட்டறையில் பட்டை தீட்டப்பட்டு மின்னுகின்றார்கள் .

ஒளிப்பதிவாளர் செழியன் பாலாவின் கண்களாகவே செயல்பட்டிருக்கின்றார். முதல் காட்சியில் தடதடவென ஓடி சாலூர் கிராமம் மொத்தத்தையும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையையும் காட்டிவிடுவதில் தொடங்கி சாலூர் மக்கள் கால்நடைப் பயணமாக சென்று தேயிலைத் தோட்டங்களினூடே தங்கள் வாழ்வைத் தொலைப்பது வரையிலுமான அத்தனைக் காட்சிகளிலும் தனித்து தெரிகின்றார்.

படத்தின் நெருடலாக குறிப்பிட வேண்டியவை என்று சொன்னால் இரண்டே விஷயங்கள் தான். ஒன்று சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு அவர்களை மதம் மாற்றிய கிறிஸ்தவ மிஷனரிக்கள் பற்றிய பகுதியை காமெடியாக்கியது. அதனைத் தவிரவும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுநிலையை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கொஞ்சமாவது முன்னேற காரணமாக இருந்தவையும் இந்த கிறிஸ்தவ மிஷனரிகள் தாம். நாவலின் அடிப்படையில் பார்த்தால் இங்கு சிவசங்கர் மாஸ்டர் ஏற்றிருக்கும் டாக்டர் கதாப்பாத்திரமே (நிஜத்தில் டாக்டர்.டேனியல்) அந்த மக்களின் துயரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியவர். 'ரெட் டீ'யை  எழுதியவரும் இவரே.அதனை இப்படி கோமாளித்தனம் ஆக்கியிருக்க வேண்டாம். நிச்சயமாக இன்னும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க வேண்டிய விஷயமிது. அதிலும் அந்த ‘அல்லேலோயா’ பாடல் படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் அழுத்தத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. ரிலாக்சேஷன் என்று நினைத்து அந்த பாடலை பாலா வைத்திருக்கலாம். (ஆனாலும் பாட்டு எனக்கு பிடித்திருந்தது ’கானா’ பாலாவின் குரலுக்காகவும் இயக்குநர் பாலாவின் நையாண்டிக்காகவும் J)

மற்றொன்று ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. அப்பட்டமான இளையராஜா சாயல் ‘அவத்தப் பையா’ பாடலும், வைரமுத்துவின் வரிகளுக்காக ‘செந்நீர்தானா’ பாடலையும் தவிர இசையைக் குறிப்பிட்டு சொல்ல வேறெதுவுமில்லை. ஷெனாயை உச்சஸ்தாயியில் அலறவிடுவது தான் உணர்வுப்பூர்வமான இசை என்று இவருக்கு யார் கற்றுக்கொடுத்தார்களெனத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் சரி this movie deserves Raja sir…!!

திரையரங்கை விட்டு வெளியேவரும்போது இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள் “இதே மத்த டைரக்டரு எவனாவது எடுத்துருந்தா ஹீரோ கங்காணியையும் வெள்ளைக்காரனையும் அடிச்சுப்போட்டுட்டு ஜனங்களையெல்லாம் காப்பாத்துற மாதிரி காட்டிருப்பானுகடா மாப்ள..! நல்லவேள பாலா அப்புடி செய்யலை. செஞ்சிருந்தான்னா அது பாலா படம் இல்ல…”

அது.. அது தான் பாலா…!! இந்த மாதிரி படமெடுக்க பாலாவை விட்டா தமிழ் சினிமாவுக்கு வேற ஆளே கிடையாது.
Thank you Bala sir – For an emotional journey through the lives of thousands of people…!!

கண்டிப்பாக பார்க்கவேண்டிய இரண்டு காணொளிகள் கீழே
படத்தின் முழுமையான மேக்கிங் வீடியோ


விஜய் டி.வி-இல் வெளியான ’பரதேசி’ படக்குழுவினரின் உரையாடல்


Images courtesy: Moviegalleri.net
Related Posts Plugin for WordPress, Blogger...