நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

புல்லட் டைரி - ’வட்டக்கனல்’ - பறவையே எங்கு இருக்கிறாய் ?




இந்த வாட்டி தமிழ் புத்தாண்டோட சேத்து எனக்கு நாலு நாட்கள் லீவு இருந்துச்சு. கண்டிப்பா எங்கேயாவது ரைட் போயே ஆகனும்னு நெறைய நண்பர்கள்கிட்ட கேட்டுப் பாத்தேன். எல்லாரும் ஏதோ ஒரு கமிட்மெண்ட்ல இருந்ததால நாம இந்தவாட்டி தனியாவே போய்டுவோம்னு முடிவு பண்ணேன். இதுக்கு முன்னாடி திருவாரூர், கடலூர், பாண்டி, வடலூர், பண்ருட்டின்னு பல ஊர்களுக்கு solo ride போயிருந்தாலும் மலைப்பாதைகள் இருக்கிற இடங்கள் எதுக்கும் தனியா போனதில்ல.


வட்டக்கனல் பத்தி என் மச்சான் ஒருத்தன் ரெண்டு மூனு வருஷம் முன்னாடி நெறைய சொல்லிருக்கான். அப்பவே போகனும்னு நெனச்சிட்டே இருந்தேன். இப்பதான் வாய்ப்பு கெடைச்சுது. கொடைக்கானலுக்கு உள்ள ஒரு 7 கிலோமீட்டர்ல இருக்கு வட்டக்கனல். சென்னைலேர்ந்து 14ஆந்தேதி சாயந்திரம் நாலு மணிக்கு தான் கெளம்புனேன். திருச்சி-திண்டுக்கல் ரூட்ல போறதாதான் திட்டம். ஆனா திருச்சி தாண்டும்போது மனசு மாறி மதுர போய் போவோம்னு முடிவு பண்ணேன். போற வழில விராலிமலைல நிறுத்தி பரோட்டா சாப்டுட்டு அப்டியே மதுர டவுன தொட்டு அடுத்ததா வத்தலகுண்டு போய்ச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட பத்து மணி. அதுக்குள்ள ஃபேஸ்புக்ல போட்ட போஸ்ட்ட பாத்துட்டு சக ரைடர் ஒருத்தர் ஃபோன் பண்ணி “எதுக்கு ப்ரோ தனியா போறீங்க. நம்ம பசங்க கொஞ்சம் பேர் கொடைக்கானல் தான் போயிருக்காங்க. அவங்ககிட்ட பேசுங்க”ன்னு சொன்னாரு. நானும் அவங்க கூட போய் தங்கிக்கலாம்னு யோசிச்சு ஃபோன் பண்ணா, அவங்க பண்ணைக்காடுங்குற ஊர்ல தங்கிருக்குறதா சொன்னாங்க.  (நைட்டு மலைப்பாதைகள்ல வண்டியோட்ற த்ரில் பத்தியெல்லாம் ஏற்கனவே நெறைய பேசிருக்குறதனால இப்போ அதப்பத்தி எதுவும் சொல்லப்போறதில்ல)

கொடைக்கானலுக்கு 28 கிலோமீட்டர் முன்னாடி இருக்கு அந்த ஊர். அங்க போய் சேரும்போது மணி கிட்டத்தட்ட 12.00 மணி. ஊர்ல ஏதோ திருவிழா போல. சீரிய்ல் செட்டு, சாமி ஊர்வலம்னு ஜெகஜ்ஜோதியா இருந்துச்சு ஊரே. என்னோட நண்பர்கள் ஒரு கல்யாண மண்டபத்துல ரூம் எடுத்து தங்கிருந்தாங்க. அவங்க கூடவே தங்கிட்டேன். நைட்டு குளிர் தாங்க முடியாம உடம்பு தூக்கித் தூக்கி போட ஆரம்பிச்சுது.  அப்டியொரு நடுக்கம். கால்ல சாக்ஸ மாட்டிகிட்டு, முகத்த ரெண்டு balaclava போட்டு மூடிகிட்டு, ரைடிங் ஜாக்கெட்டோட தெர்மல் லைனர எடுத்து போட்டுட்டு அதுக்கு மேல கம்பளியால போத்திகிட்டு தூங்க முயற்சி பண்ணேன். பயங்கரமா பித்தம் தலைக்கேறி தலவலி, பிரட்டல், இருமல்னு கஷ்டப்பட்டு சுத்தி இருந்தவங்களையும் கஷ்டப்படுத்தி ஒருவழியா ரெண்டு மூனு மணிக்கு என்ன அறியாம தூங்கிட்டேன். காலைல ஊர்ல ஸ்பீக்கர் கிழிச்ச கிழில 7.30க்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு. சட்டு புட்டுன்னு குளிச்சு கெளம்பி, பக்கத்துல இருந்த ஒரு சின்ன கடைல காலை உணவ முடிச்சு, gear-up பண்ணி ரெடி ஆனேன். நண்பர்கள்ல சொல்லிகிட்டு வட்டக்கனல் நோக்கிய பயணத்த ஆரம்பிச்சேன். நெஜம்மா அங்க தங்குற எண்ணமெல்லாம் இல்ல. இடமும் எதுவும் முன்னாடி புக் பண்ணி வைக்கல. சும்மா அங்க என்னதான் இருக்குன்னு பாப்போமேன்னு ஒரு ஆர்வம். அவ்ளோதான். 

கொடைக்கானல்ல இது சீசன். போதாக்குறைக்கு long weekend வேற. கேக்கவே வேணாம். சீனிவாசபுரத்துல ஆரம்பிச்சு உள்ள லேக் வரைக்கும் கார்,பஸ், வேன் எல்லாம் வரிசகட்டி நின்னுச்சு. ஒருவழியா ஊடால புகுந்து புகுந்து போய் 11.00 மணி வாக்குல வட்டக்கனல் போய்ச்சேர்ந்தேன். சரி மொதல்ல டால்ஃபின் நோஸ் பாயிண்ட்டுக்கு போய்ட்டு வந்து அப்புறம் எங்க போறதுன்னு முடிவுபண்ணிக்கலாம்னு பைக்க பார்க் பண்ணிட்டு டேங்க் பேக். ட்ரைபாட், எல்லாத்தையும் தூக்கிகிட்டு ரைடிங் கியர்ஸோட இறங்கி நடக்க ஆரம்பிச்சேன். முழுக்க முழுக்க கடினமான பாறைகளாலும் மர வேர்களாலும் நெறைஞ்ச ஒரு பாதை அது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் இறங்குனேன்.
முதல் view point வந்ததும் இதோட நிறுத்திக்குவோம்னு முடிவு பண்ணி அங்க கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் தூக்கிகிட்டு மேல ஏற ஆரம்பிச்சேன்.

Wheezing ரொம்ப டார்ச்சர் பண்ணுச்சு. கொஞ்ச தூரம் போனதுக்கே முடியல. மூச்சிரைக்க அப்டியே உக்காந்து உக்காந்து தான் போனேன். மேல ஏற இன்னும் கொஞ்ச தூரம் இருந்தப்ப தான் ஒரு பாறைல உக்காந்தேன். அப்போ தான் எதிர்ல இருந்த ஒருத்தர் என்னப் பாத்து பேச ஆரம்பிச்சாரு. "Are you a biker ? I see that you are with your riding gears. What are you riding ? " அப்டின்னு கேட்டுகிட்டே ” கமான் மச்சா, சிட் வித் அஸ்” ன்னு கூப்டதும் போய் பக்கத்துல உக்காந்தேன்.கூட இன்னொரு வெளிநாட்டுக்காரரும் இருந்தாரு.  என்ன கூப்பிட்டு பேசுனவன் தன்னை ஜித்தின்னு அறிமுகப்படுத்திகிட்டான். மத்தியப் பிரதேசத்துல செட்டிலான மலையாளின்னு சொன்னான். அப்புறம் பேச்சு முழுக்க முழுக்க கார்கள்,பைக்குகள் பக்கம் திரும்புச்சு. ஜெர்மன்காரன்  ஃபெலிக்ஸ் ஜெர்மனியோட ஆட்டோபான் ரோடுகள் பத்தியும் அங்க அதிகபட்ச வேக அளவுகள் பத்தியும் சொல்ல ஆரம்பிச்சான். ஸ்போர்ட்ஸ் பைக்குகள வாடகைக்கு எடுத்துகிட்டு ஆட்டோபான்ல் ட்ரிப் போறதப் பத்தி பேசுனான்
கொஞ்ச நேரத்துக்கப்புறம் ஜித்தின் “What's you itinerary dude ? Where are you staying ?" னு கேட்டதும், எனக்கு எந்த திட்டமும் இல்ல; இப்போதைக்கு எங்கேயும் தங்கல; இந்த ட்ரெக்கிங் முடிச்சுட்டு அப்டியே மன்னவனூர், பூண்டின்னு சுத்தலாம்னு ப்ளான் பண்ணிருக்குறத சொன்னேன்.

"If you don't have a place to stay, you can stay in our accommodation. Its very closer"ன்னான். சரின்னு வண்டிய கீழ பார்க் பண்ணிட்டு saddle bag, tank bag , tripod, helmet எல்லாத்தையும் கைல தூக்குனா அப்போதான் ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டான் ஜித்தின். அவங்க தங்கியிருந்த accommodationக்கு போறதுக்கு கிட்டத்தட்ட ஒரு நூறு படி மலை மேல ஏற வேண்டியிருந்தது. நான் கைல லக்கேஜோட பெக்க பெக்கன்னு முழிக்கிறதப் பாத்த ஃபெலிக்ஸ் "I'm a back packer. I can carry all your stuff. I see that you are struggling to breath"னு சொல்லிட்டு டபடபன்னு என் கைல இருந்து எல்லாத்தையும் வாங்கிகிட்டு மேல ஏற ஆரம்பிச்சான். ஜித்தினும் அவன் பங்குக்கு helmet, tripod, knee guard எல்லாத்தையும் வாங்கிகிட்டு "you walk freely macha.."அப்டின்னு அவனும் படியேற ஆரம்பிச்சேன். நான் இருந்த நெலைமல அவங்க ரெண்டு பேரும் தெய்வம் மாதிரி தெரிஞ்சாங்க.

இந்த இடத்துல வட்டக்கனல் பத்தி ஒரு trivia. மேஜிக் மஷ்ரூம்னு ஒரு சமாச்சாரம் கேள்விப்பட்டிருப்பீங்களான்னு தெரியல. பச்சையா சொன்னா போதைக் காளான். வட்டக்கனல்ல முக்காவாசி வெளிநாட்டு ஆளுங்கதான். பெரும்பாலும் backpackers. ஐடி ப்ரூஃப், அது இதுன்னு எந்த தொல்லையும் இல்லாததுனால அவங்க இங்க தங்குறதை விரும்புறாங்க. ஒரு நாளைக்கு குறைந்தபட்ச வாடகையே 300 ரூபா தான். Off-seasonனா இன்னும் கம்மி. ஆங்..அந்த மேஜிக் மஷ்ரூம் பத்தி சொன்னேன்ல, அதோட availability இங்க ரொம்ப அதிகம். சமீபத்துல இந்த மஷ்ரூம் ரொம்ப ஓவரா சாப்ட்டு போதையாகி நெறைய ஃபாரினர்ல் மலைல குதிச்சு செத்துப் போனதால போலிஸ் கெடுபிடி ரொம்ப அதிகமாயிட்டதா உள்ளூர்க்காரங்க சொல்றாங்க.

ஒரு வழியா நின்னு நின்னு படியேறி மேல போய்ச் சேர்ந்தேன். ஆச்சரியமான விஷயம் கீழ தெரிஞ்ச வெய்யில் மேல இல்ல. மத்தியானத்துக்கே ஜில்லுன்னு இருந்துச்சு. நான் ட்ரெஸ் மாத்திட்டு ரூம் வாசல்ல வந்து உக்காந்தேன். பக்கத்து ரூம்ல ஒரு பெங்களூர் பையனும் டார்ஜிலிங் பொண்ணும் தங்கியிருந்தாங்க. அவங்களும் வெளில சேர் போட்டு உக்காந்ததும் பேச ஆரம்பிச்சோம்.அவங்க நாலு பேருக்கு மத்தியில ஒரு ஜாயிண்ட் சுத்தி வர ஆரம்பிச்சுது. ஃபெலிக்ஸ் இதுவரைக்கும் 20 நாடுகளுக்கு மேல பயணம் பண்ணியிருக்குறதப் பத்தியும் எல்லா இடத்துலயும் மக்கள அரசாங்கம் எப்படியெல்லாம் exploit பண்ணுதுங்குறதப் பத்தியும் பேசுனான். தன்னுடைய உடம்புல இருக்குற ஒவ்வொரு டாட்டூவுக்கும் ஒரு விளக்கம் தந்தான்.

ஃபெலிக்ஸ் ஜெர்மனில தேசிய அளவிலான ஸ்கேட்போர்டிங் சேம்பியன். சில பல நிறுனங்களுக்கு brand ambassador. அதுல கெடைக்கிற பணத்த வெச்சு தான் உலகம் பூரா சுத்துறதா சொன்னான்.. பெரும்பாலும் ஐரோப்பிய ஆஃப்ரிக்க நாடுகள்ல தான் சுத்தியிருக்கான். இந்தியா வர்ரதுக்கு முன்னாடி கானா (Ghana)வுலயும் இன்ன பிற ஆஃப்ரிக்க நாடுகள்லயும் தங்கியிருந்ததப் பத்தி நெறைய பேசுனான். LGBT சமூகத்தினரை கடவுளுக்கு எதிரான சாத்தானின் தூதுவர்களா பாக்குறதா சொன்னான். சட்டப்படியும் அங்கே ஓரினச்சேர்க்கை குற்றம் தானாம், அங்க இருக்குற ரேசிஸம் வேற மாதிரியானது. அவங்கள பொறுத்தவரைக்கும் வெள்ளையர்கள் எல்லாருமே பணக்காரங்க. கைல எப்பவும் காச வெச்சுகிட்டே திரியுறவங்க. யாராவது ஒரு Ghana குடிமகன் ரோட்ல ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரர பாத்தாங்கன்னா ”Hey Oburoni (வெள்ளைத் தோல்காரா),you have so much money. Why don't you buy me a car ?"னு கேட்டபடி பின்னாடியே நடந்து வருவாங்களாம். ஆனா ஒருபோதும் டூரிஸ்ட்டுங்க மேல, அதும் white டூரிஸ்ட் மேல கண்டிப்பா வன்முறைய கையாளவே மாட்டாங்களாம். டூரிஸ்ட்டுங்கள அடிச்சிட்டா எங்க தங்களோட நாட்டு மேல மத்த நாடுகள் போர் தொடுத்துடுமோன்னு ஒரு பயம் தான் காரணமாம்.

ஒரு வாட்டி ஃபெலிக்ஸ அன்பா கட்டிப்பிடிச்ச ஒரு கானா காரர் பர்ஸ உருவிட்டாராம். இவன் டக்குன்னு நோட் பண்ணி அவரோட கைய பிடிச்சிருக்கான். அவரு தப்பிக்க முயற்சி பண்ணாம பர்ஸ தரமாட்டேன்னு அடம்பிடிச்சிருக்காரு. போலிஸ் சுத்தமா செயல்படாதுங்குறத தெரிஞ்சதனால இவன் என்ன பண்றதுன்னு தெரியாம "thief..thief.. "னு கத்தியிருக்கான். உடனே உள்ளூர் ஆட்கள் கொஞ்சம் பேரு ஓடி வந்து அந்த பிக்பாக்கெட்ட அடிச்சு ஒதச்சுட்டு பர்ஸ மீட்டு இவன்கிட்ட குடுத்துட்டு திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டாங்களாம். அந்த பிக்பாக்கெட்டும் கடைசில சாரி சொல்லிட்டு போனானாம்.

அப்புறம் பேச்சு weed பக்கம் திரும்புச்சு.  மூளைக்குள்ள இருக்குற டோப்பமைன் சேமிப்பிலிருந்து அப்பப்ப கொஞ்சமா release ஆகி அதுல கெடைக்குற சந்தோஷம், உற்சாகம்லாம் பத்தாம மொத்த டோப்பமைனையும் ஒரே நேரத்துல மூளைக்குள்ள drain பண்ணி (இதப்பத்தி கொழந்த ஒரு கட்டுரைல செமத்தியா விளக்கியிருக்காரு) ஒரு மாதிரி sustained excitementக்கு கொண்டு போறது Marijuana தான்னு சொல்லிட்டு கடைசியா ஒரு இழுப்பு இழுத்து முடிச்சான். பேச்சு மறுபடியும் சர்வதேச அரசியல் பத்தியும் சமூக நீதி பத்தியும் திரும்புச்சு. மக்களுக்கு நியாயம் கெடைக்குறதுக்காக உருவாக்கப்பட்ட நீதி அமைப்புகள் உலகம் பூராவுமே ஒழுங்கா செயல்படாம மக்களுடைய நிம்மதியைக் குலைக்கிறதப் பத்தி ரொம்ப ஆதங்கப்பட்டான் (கைல ஒரு நீதிதேவதை டாட்டூ இருந்துச்சு) கால்ல ஒரு டாட்டூ 'Fick die Polizei' (Fuck the police) ன்னு சொல்லுச்சு. அதுக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சான்.

முன்னாடியெல்லாம் ஜெர்மனில போலிஸ் ஆகுறது ரொம்ப கஷ்டம். வருஷக்கணக்காகும் selection,training எல்லாம் முடிய. தகுதியான ஆஃபிசர்ஸ் மட்டும் தான் வெளில வருவாங்க. ஆனா இப்போ மூனு மாசத்துலயே போலிஸ் ஆகிடலாம். இவங்களுக்கு சட்டமும் தெரியல ஒரு மண்ணும் தெரியல. ஏதாவது சின்னதா ஒரு demonstration (போராட்டம்) பொது இடத்துல நடந்தா இவங்களுக்கு எப்படி கையாளனும்னு தெரியாம உடனே கண்ணீர்புகை , அது இதுன்னு வன்முறைல இறங்கிடுறாங்கன்னு கோவப்பட்டு பேசுனான். என் கைல இருக்க ஸ்டீல் வளையத்தப் பாத்துட்டு இதுக்கு பின்னாடி ஏதாவது கதை இருக்கான்னு கேட்டான். ஏண்டான்னு கேட்டா, ஜெர்மனில முதலாளித்துவத்தை வெறுக்கிறவங்க நெறைய பேர் இருக்காங்க. அவங்க யாரவது ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பாத்தா உடனே கடுப்பாகி அந்த லோகோவ உடைச்சிடுவாங்க. அந்த ஸ்டார உடைச்சு தூக்கிப்போட்டுட்டு வளையத்த பெருமையா ("See, I fucked a Mercedes") கைல மாட்டிட்டு சுத்துவாங்கன்னு ஒரு தகவல சொன்னான்.


இப்படியாக பேச்சு எங்கெங்கேயோ சுத்துனபடி இருந்துச்சு. அப்புறம் ஜித்தின் அவனுடைய UK அனுபவங்கள் பத்தி கொஞ்சம் பகிர்ந்துகிட்டான். அவன் ஒரு பல் மருத்துவன்னு அப்போதான் தெரியவந்துச்சு. சாய்ந்திரம் ஃபெலிக்ஸுக்கு கொடைக்கானல்ல பஸ். அங்கிருந்து பழனி-கொச்சின் போய்ட்டு அடுத்த நாள் நேபாளத்துக்கு ஃப்ளைட் ஏறுறதா திட்டம் வெச்சுருந்தான். ஜித்தினும் நானும் மன்னவனூர்/பூம்பாறை ஏரியாவெல்லாம் கொஞ்சம் சுத்தலாம்னு முடிவுபண்ணோம். ரூமை பூட்டிகிட்டு ஒரு ஃபெலிக்ஸ் கூட நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு கீழ எறங்குனோம். வண்டில ட்ரிபிள்ஸ் போய் ஃபெலிக்ஸ பஸ் ஸ்டாண்ட்ல எறக்கி விட்டுட்டு நானும் ஜித்தினும் மன்னவனூர் கெளம்புனோம். அட்டகாசமான பாதை. அவனும் பைக்கர் தான்ங்குறதனால நான் என்னதான் வளைச்சு வளைச்சு ஓட்னாலும் கொஞ்சம் கூட பயமில்லாம இருந்தான். இருட்ட ஆரம்பிச்சதும் நாங்க பூம்பாறை மட்டும் போய்ட்டு திரும்பிடலாம்னு முடிவு பண்ணோம். அதே மாதிரி பூம்பாறை போய்ட்டு கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்துட்டு. திரும்ப வர ராத்திரி ஆயிடுச்சு. வந்து கொஞ்ச நேரம் திபெத்தியன் மார்க்கெட்ல சுத்திட்டு, ரூம் போகலாம்னு முடிவு பண்ணோம், ஜித்தின் தன் நண்பன் ஒருத்தன பாத்துட்டு அவன்கூட வரேன்னு சொன்னதால நான் ரூமுக்கு கெளம்புனேன்.

அன்னைக்கு ராத்திரி தூங்குனது ரொம்ப நிம்மதியான தூக்கம். ஜித்தின் 1.00 மணிக்கு மேல தான் ரூமுக்கு வந்தான். நான் காலைல எந்திரிக்கவே மணி 9.00 ஆயிடுச்சு. ஒருவழியா குளிச்சு கெளம்பி gear-up பண்ணி ஜித்தினுக்கு பிரியாவிடை சொல்லி அங்கிருந்து கெளம்புனேன். (திரும்பி வந்த கதையெல்லாம் ஃபேஸ்புக்ல பாத்துருப்பீங்க. அதனால மொக்க போடல)
பொதுவா எந்த திட்டமும் இல்லாத பயணங்கள் தான் நெறைய சுவாரஸ்யமான அனுபவங்களையும் புதுப்புது மனுஷங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும். அந்த பயணத்த தொடங்கும்போது இருந்த மனநிலை பயணத்தை முடிக்கும்போது மாறியிருக்கும். நிச்சயமா புதுசா எதாவது ஒரு விஷயமாவது கத்துட்டு இருப்போம். இந்தப் பயணமும் இந்த டெம்ப்ளேட் மாறாம தான் முடிஞ்சுது.

பெரும்பாலும் எதாவது லாங் ரைட் போனா, வீட்டுக்கு வந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு பயணம் பத்தின நினைவுகள அசைபோட்டபடி இந்த பாட்ட கேப்பேன். மனசு ஒரு மாதிரி முழுமையடைஞ்சிட்டதா தோணும்.


I'd rather be a sparrow than a snail
Yes I would, if I could, I surely would
I'd rather be a hammer than a nail
Yes I would, if I only could, I surely would

Away, I'd rather sail away
Like a swan that's here and gone
A man gets tied up to the ground
He gives the world its saddest sound
Its saddest sound

I'd rather be a forest than a street
Yes I would, if I could, I surely would
I'd rather feel the earth beneath my feet
Yes I would, if I only could, I surely would



பயணங்கள் முடிவதில்லை...

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பாழ்மனம்

Courtesy: http://drawingschool.net
பாழ்மனம்
மனம் எந்த நொடியில் உடைந்துபோகுமோ
எனத் தெரியாத ஒரு கனத்தில் தான்
ஏதொவொரு பாடல்வரியோ
யாரோ ஒருத்தியின் புன்னைகையோ
எந்தப் பித்தனின் கவிதையோ
ஒரு பழைய புத்தகத்தின் தலைப்போ
காலில் மிதிபடுகிற பூவின் நிறமோ
வெகுதூரத்தில் தென்படும் மலைச்சிகரமோ, மொழிதெரியா ஊர்வழி செல்கிற சாலையோ
ஒரு பழைய மாநகரப் பேருந்தோ
கோவில் வாசலில் குவிந்து கிடக்கிற செருப்புகளில் ஒரு ஜோடி சிகப்பு செருப்புகளோ
ஓர் நிறம் மங்கிய கைக்குட்டையோ
சாலையோர மரத்தில் செதுக்கப்பட்ட ஏதோவொரு பெயரோ
நாடோடியொருவன் விற்றுச்செல்கிற மரவளையல்களோ
’பேரன்பின்’ எனத்தொடங்கி எழுதாமல் விட்ட கடிதம் தாங்கிய கசங்கிய தாளோ
நினைவுகளைச் சுண்டிவிடுகிற ஓர் நறுமணமோ
நுரைத்த காப்பியோடான ஓர் பீங்கான் கோப்பையோ
நிலவில்லாத முழுமையான ஓர் இரவோ
ஒழுங்கற்று கலைந்துகிடக்கிற பொருட்களோடான மேஜையோ
ஏதோவொன்று...
இவைகளில் ஏதோவொன்று

அல்லது புதிதாய் ஏதோவொன்று
நினைவெச்சங்களை சுமந்தபடி வந்து
முழுமையாய்க் கலைத்துப் போட்டு விடுகிறதென்னை...!

முழுதாய்த் தேர.. இன்னும் எத்தனை இரவுகள் தீருமோ..!

சனி, 18 மார்ச், 2017

பதிலற்ற கேள்விகள் - Exhortation

நான் பேசித்தீர்க்கிற வார்த்தைகளை
கேட்க யாருமற்ற பொழுதுகளே
கடிதமெழுத உந்தித்தள்ளி
உறக்கமற்ற இரவுகளைப் பரிசளிக்கின்றன.
https://in.pinterest.com/pin/523965737873453107/

பேரன்பின் பார்ட்னருக்கு,


மீண்டும் ஓர் கடிதமெழுத வாய்த்ததை எண்ணி மகிழ்வதா அன்றி வருந்துவதாவெனத் தெரியாத நிலையில் எழுதத் தொடங்குகிறேன் பார்ட்னர்.புத்தகங்களுள் மூழ்கிவிடமுடியாத, பாடல்களில் கரைந்துவிடமுடியாத, திரைப்படங்களில் தொலைந்துவிட முடியாத இரவுகள் மிகக் கொடுமையானவை . ஒரு பக்கம் மனம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்திருந்தாலும் மறுபக்கம் ஈடுசெய்யமுடியாத இருன்மையும் தனிமையும் சூழ்ந்தழுத்தித் திணறடிக்கின்றன. நான் ஓடிக்கொண்டிருக்கிற பாதையில் இலக்கென நான் நினைக்கிற இலக்குகளையும், வெற்றி என நான் நினைக்கிற வெற்றிகளையும், சாதாரணர்கள் தங்கள் அளவுகோல்களால் அளந்து ஒதுக்கி உதாசீனப்படுத்திவிடுகின்றார்கள். அன்னோரின் அறுவை சிகிச்சைக் கேள்விகளுக்கு அருஞ்சொற்பொருள் சொல்லும் நிலையில் நான் இல்லை பார்ட்னர். ”அதென்னடா.. விளக்கங்களுக்கும் பதில்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிற ஆணவமுனக்கு ? கடவுளா நீ ?” எனக் கேட்பாயானால் வெறுமையாகச் சிரித்தபடி ”அற்பன்” என்பேன் பார்ட்னர்.

அவ்வப்போது நிறைகிற காரணமில்லாத கண்ணீருக்கே இன்னும் பதிலறியாதவன் நான். ஒரு கட்டத்துக்கு மேல் வாழ்க்கையாலும் சுற்றத்தாலும் ’வளர’ நிர்ப்பந்திக்கப் படுகிற கனவுலாவிகளால் நிஜங்களின் வெம்மையை கொஞ்சமும் தாங்கமுடியாது பார்ட்னர். நான் எப்போதும் பதிலளிக்கத் தயாராயிருக்கிற கேள்விகளை உன்னையன்றி யாரும் கேட்டதில்லை... கேட்பதில்லை...அல்லவா ? எப்போதும் தனிமையையும் துயரத்தையுமே உன்னோடு பகிர்கிறேனென நினைக்காதே. மனங்கொள்ளா மகிழ்ச்சியான ஓர் கனத்தில்  அருகே நீயில்லாமல் தவித்துப் போனேன் பார்ட்னர். ’சலங்கை ஒலி’ திரைப்படம் பார்த்திருப்பாயென நினைக்கிறேன். தனக்கான முதல் வாய்ப்பு கிடைத்துவிட்டதை அறிந்த அக்கனத்தில் அந்த மகா கலைஞன் தன் அருகிலிருக்கிற தேவதையின் கைகளைப் பற்றி முகம் புதைத்து குலுங்கியழுவான். அப்படியொரு நிகழ்வு நீயிருந்திருந்தால் நடந்தேறியிருக்கக் கூடும் பார்ட்னர்.

போகட்டும்; நடக்கவிருக்கிற நல்லவைகளுக்கு இஃதோர் தொடக்கமென மனந்தேற்றிக் கொள்ளுகிறேன். பதில்களையும் விளக்கங்களையும் குறித்த என்னுடைய நிலைப்பாட்டையே நான் உன்னிடத்திலும் கொண்டிருக்கின்றேன் பார்ட்னர். எவ்வகையிலும் நீயெனக்கு மறுமொழி சொல்லவேண்டிய நிர்ப்பந்தமில்லை. கதை கேட்க சற்றே நீ மனந்தந்தால் போதுமெனக்கு. உன் வானத்து நிலவொளியை நான் மறைக்க விருப்பமில்லை. உன் வானம் உனக்கு. என் வானம் எனக்கு, பொதுவாய் இரவின் கீழ் கதை கேள் அது போதும்.

பூஞ்சையான மனங்கொண்ட மனிதர்கள் எடுக்கிற அதிதீவிர முடிவுகளைக் குறித்தான அச்சமும் ஆச்சர்யமும் எப்போதும் எனக்கு உண்டு. அம்மென்மனங்களை அந்நிலைக்குள்ளாக்குமளவு என்ன துயரம் இருந்துவிடப்போகிறதென யோசித்தவனுக்கு இப்போதுதான் சாமான்யர்களின் உலகத்து நியதிகள் விளங்க ஆரம்பிக்கின்றன பார்ட்னர். காலவோட்டத்தின் ஓவ்வொரு சுழற்சியிலும் எனக்காக நான் செய்கிறவையன்றி இந்த உலகுக்கு நான் என்னை நிரூபித்துக்கொள்ளும்பொருட்டு செய்யப் பணிக்கப்படுகிறவற்றை எல்லாம் முற்றிலும் வெறுக்கிறேன். ” உங்கள் சில்லறை உலகில் நான் இல்லை. விட்டுவிடுங்கள்” என ஏதோவோர் கவிஞன் மன்றாடியதாய் நினைவு. நமக்கான கனவை எப்போதும் யாரும் காணவே முடியாது பார்ட்னர்.
எழுத்தாளர்களின், குறிப்பாய் கவிஞர்களின் பிறழ்வுநிலை குறித்து சமீபத்தில் நிறைய அறியநேர்ந்தது. பெரும் கவிஞர்களும் கனவுவாதிகளும் தங்களை புற உலகத்தினின்று விலக்கியே வைத்திருந்ததன் காரணம் விளங்கத் தொடங்குகின்றது பார்ட்னர். நானும் என்னை ஓர் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துகொண்டு புற உலக சப்தங்களினின்று விடுபட்டு நடமாட விரும்புகின்றேன்.நானொன்றும் மகா படைப்பாளியென என்னைச் சொல்லிகொள்ளவில்லை. என் கனவுகளை நான் வாழும் பொருட்டே என்னைச் சார்ந்தோரின் கனவுகளையும் கொஞ்சம் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு அற்ப கனவுவாதி.  நானொரு அற்ப கனவுவாதி பார்ட்னர். அவ்வளவே..!!

மற்றோரின் கேள்விகட்கு பதிலில்லையே அன்றி எனக்கென கேள்விகள் இல்லாமலில்லை.உறவுகளைக் குறித்தும், பிரிவுகளைக் குறித்தும், மனிதர்களின் எண்ணவோட்டம் குறித்தும், கனவுகளைக் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகள் தொடர்ந்து எந்தன் தூக்கம் கெடுக்கின்றன. ஒர் உறவின் மென்னிழை எப்போது பின்னப்படுகிறதென்றும் எப்போது அறுந்துபோகிறதென்றும் யாராலும் சொல்லவே முடியாது பார்ட்னர். ஒரு கட்டத்துக்குமேல் எல்லா உறவுகளின் மேலான பிடிப்பும் அற்றுப்போய்விடுகின்றதல்லவா. என்னைப் பற்றிக் கொள்ள நீளாத கைகளை நானெதற்கு பற்றித்திரிய வேண்டும். கூடச் சிரிக்கவும், கூடிச் சிரிக்கவும், தேடி அழவும், தேவதைகள் வாய்க்கப்பெற்றவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் பார்ட்னர்.

எப்போதோ... யாராரோ... யாராருக்காகவோ... எழுதிய கடிதங்களிலிருந்து எனக்கான வார்த்தைகளை பொறுக்கி சேர்த்துவைத்துக் கொள்கிறேன் நான். முகந்தெரியாதவர்களால் முகந்தெரியாதவர்களுக்காக எழுதப்பட்ட பிரியமும் கோபமும் சோகமும் காதலும் வாதையும் நிரம்பிய வார்த்தைகளே வலியிலுழலும் இந்த வெற்றுத் தனியனுக்கு பேராறுதல் பார்ட்னர். நில்லாத இசையாலும் நீளமான கடிதங்களாலும் சூழப்பட்டு  நெடிந்து நீள்கிற சாலையின் மேலே நான் மிதந்துகொண்டேயிருக்கிற கனவொன்றில் மூழ்க விரும்புகிறேன் பார்ட்னர்.உறக்கமே வாய்க்காதவனுக்கு கனவேது ?

நூற்றி சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எழுத்தாளன் ஒருவன் இளங்கவி ஒருவனுக்கு சொன்ன வார்த்தைகளை  இங்கே சொல்ல விரும்புகிறேன் பார்ட்னர்.

”You must not let yourself be diverted out of your solitude by the fact that something in you wants to escape from it. Precisely this desire, if you use it calmly and judiciously as a kind of tool, will help you to extend your solitude over a greater expanse of ground."

"We know little, but that we must hold fast to what is difficult is a certainty that will never forsake us. It is good to be alone, for solitude is difficult; that something is difficult should be one more reason to do it. To love is also good, for love is hard" 

Letters to a Young Poet - Rainer Maria Rilke

இவற்றை எனக்கான வார்த்தைகளாய் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் பார்ட்னர். சாதாரணர்களற்ற என் தனிமை வெளியில் எனக்கான தீர்வை நானே முயன்று கொண்டிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் உனக்கு. எவ்வகையிலும் உன்னிடமிருந்து ஒரு பதிலை நான் எதிர்நோக்கவில்லை பார்ட்னர்.

என் வானம் எனக்கு. உன் வானம் உனக்கு.

மகிழ்ந்திரு..!!

தேடித் திரியுமொரு தனியனாய்,
நான்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

யட்சியின் காதல் - Tête-à-Tête

Cortesy: http://cdn.pcwallart.com/images/abstract-painting-wallpaper-2.jpg
கனவில் வந்து கைப்பிடித்து அழைத்துச் சென்ற யட்சிக்கு,

எதிர்பாராத தருணத்தில் கிடைக்கிற அன்பைவிடவும், விரல்கோர்த்து நடக்கிறபோது உள்ளங்கைகளுக்கிடையே உருவாகிற கதகதப்பைவிடவும் ஒரு உன்னதத்தை, ஒரு வெற்றுத்தனியன் அனுபவித்திடக் கூடுமா என்ன ?

மேல் தளங்களில் காடுகளைக் கொண்டிருந்த விநோதக் கட்டடங்களின் பல நூறு படிக்கட்டுகளில் ஏறி இறங்கினோம் நாம். அடர்வனத்தின் அரசிபோல அடர் பச்சை உடையணிந்திருந்த நீ, ஒரு யானையின் சங்கிலியைப் பிடித்திழுத்துச் செல்கிற குழந்தைபோல என் கரம் பற்றியிழுத்துப் போனாய். எத்தனை தூரம் நடந்திருப்போம்; எத்தனைக் காடுகள் கண்டிருப்போம்..! எதுவும் பதியவில்லை எனக்கு. வலியை ரசித்து அனுபவித்துப் பழகியவனாகையால் இன்பத்தை உணரமுடியாது திணறிக்கொண்டிருந்தேன் நான்.  தேவதைகளையும் சாத்தான்களையும் போலல்லாது யாருடைய வரையறைக்கும் உட்படாதவர்கள் யட்சிகள். யட்சியின் அன்பை ஒரு எளியவன் பெறுவது அத்தனை சுளுவா ? வரங்களைப்போலவும், சாபங்களைப்போலவும் வழங்கிவிடமுடியாதது உன் அன்பு. தேடித்தேர்ந்து கூடச்சேர்ந்து மூழ்கித் திளைக்கும் ஒரு பெருங்கடலின் பேரலை நீ. உன்னில் தஞ்சமடைந்த, உடைந்த ஒற்றை மூங்கில் நான்.

கொம்பு தேடாத காட்டுக் கொடி போல,
யுகங்களுக்கொருமுறை பூக்கிற ஒற்றைப் பூ போல,
ஒன்றைப் போல மற்றொரு இறகைக் கொண்டிருக்காத தொலைதேசத்துப் பறவை போல,
மழைக்குப் பின்னான பனி சூழ் பிற்பகலின் மென் வெப்பம் போல,
மனிதத்தடம் இல்லாப் பெருவனத்தின் சுனை நீர் போல,
வார்த்தைகளில் அடங்காத பாடல்போல,
யாழின் நரம்புகளால் மீட்ட முடியாத நாதம்போல,
எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு சுழித்தோடுகிற காட்டாறு போல,
ஒற்றைக் கண்ணீர்த் துளியுடன் அரும்புகிற புன்னகை போல,
மலைச்சிகரங்களின் பாறைவெடிப்புகளில் விழுந்தோடுகிற கோடை மழை போல,
பகுத்துக் கூற முடியாத வண்ணத்தின் ஒளிக் கீற்று போல,
எந்த வரைமுறைக்குள்ளும் வர்ணனைக்குள்ளும் அடக்கமுடியாத யட்சி நீ.

எனக்கான நிழலை உன் ஒற்றைத் தொடுகையில் உணர்வேனென நினைந்தேனில்லை. எதிர்பாரா முதல் முத்தத்தின் தருணத்தில் சுற்றம் மறக்கிற பேதைக் காதலன்போல உன் முகம் பார்த்து அந்த அடர்கானகத்தில் உருகித் தொலைந்துகொண்டிருந்தேன் நான். இதயம் படபடக்க, உடல் விதிர்த்து, நரம்புகள் அதிர்கிற அந்த ஒற்றைக் கணமே, கனவுலகுக்கும் நினைவுக்குமான சுவற்றை உடைக்கிற நொடி. யட்சியின் அருகாமை வேறென்ன செய்யும் என்னை?

கனவில் நிகழ்கிற நம் உரையாடல்கள் பெரும்பாலும் குரலற்றவைகள்தான். ஆனாலும் காடதிர நீ சிரிக்கிற ஓசையை உணர்ந்துகொள்ளமுடிகிறது. பிரிவும் பிரிவின் நிமித்தமுமாய்க் கடந்து கொண்டிருந்தவனின் நெடும்பயணத்தில் நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொள்கிற நொடிப் பொழுதுகளை கனவாய்ப் பெற்றவன் எத்தனை அதிர்ஷ்டசாலி தெரியுமா ? ஒரு பிறவி நீச்சலுக்கிடையேயான இளைப்பாறல் அது. ஈரக்கூந்தலோடு, கண்கள் சிரிக்க, காதுமடல் சிவக்கப் பேசுகிறவளின் முன்பு வார்த்தைகளா தோன்றுமெனக்கு ?
உன் முன் முழந்தாளிட்டு உன் பாதத்திலல்லவா முத்தமிடத் தோன்றும்.
என் கண்ணீரும் புன்னகையும் ஒன்றாய்ச் சந்திக்கிற அற்புதக் கணமது.

யட்சிகளைக் குறித்த வர்ணனைகளைக்காட்டிலும் வசீகரமானவள் நிஜ நீ. சிரித்துச் சிவந்த உன்னையன்றி,  சினந்துச் சிவந்தவளைக் கண்டேனில்லை. பறக்க சிறகு வாய்த்தவள் என்னை நடத்தி அழைத்துச் சென்றதேனாம்? அடுத்த கனவிலேனும் என்னைச் சுமந்து பறந்து சென்றுவிடேன். 

கவிஞர்களுக்கும் காவியங்களுக்கும் நடுவே  கடிதத்தில் பேசவிரும்புகிறவனுக்கு, யட்சியின் காதலைவிடவும் எழுத உவப்பானது வேறேது...!! இப்போது உணர்கிற நிறைவு என்றென்றைக்குமான முழுமையா எனத் தெரியாவிட்டாலும், வெறுமையை சற்றேனும் இல்லாமல் ஆக்கிய யட்சிக்கு...

முத்தங்கள்...!!

தேடித் திரிந்தாலும்... 
இன்று தீராக் காதலனாய், 

நான்...!
Courtesy: wallarthd.com

Related Posts Plugin for WordPress, Blogger...