நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 8 ஜூன், 2022

இறவான் - பா.ராகவன் | இசையிற் பெருந்தக்க யாவுள ?

 


” ஒரு மேதையின் பெரும் சிக்கலே அவன் ஒரு மேதையாக இருப்பதும் அதை அவன் அறிந்திருப்பதும் தான்.இது விவரிக்க முடியாத பாடு. சராசரிகளுக்குப் புரியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் சராசரிகளின் உலகில் தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. தன் குழந்தையின் சந்தோஷத்துக்காக மண்டி போட்டு யானை போல நடந்துகாட்டும் தந்தைகளைப் போலத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். தந்தைகள் சில நிமிடங்களில்  விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்துவிடுகிறார்கள். மேதைகள் இறக்கும்வரை மண்டிபோட்டே நடக்கவேண்டியதாகிவிடுகிறது”

              -இறவான் (பா.ராகவன்)

சிறிதொரு இடைவெளிக்குப்  பின் ஒரு புனைவு நூலைக் கையிலெடுக்கலாமென முடிவு செய்ததும் வாசிக்கத் தேர்ந்தெடுத்த புத்தகம் ’இறவான்’.  மேற்கண்ட பத்தி நாவலின் ஒரு பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் மேதைகள் என்போர் யார் ? மேதைமை எனும் பண்பு ஒரு தனி மனிதருக்கு பிறவியிலேயே அமையப்பெற்ற ஒன்றா ? அல்லது கடுமையான பயிற்சியினால் அடையப் பெறுவதா ? போலவே ஒருவரின் மேதைமையைக் கண்டுணர எல்லோராலும் முடியுமா ? அல்லது சக பேரறிவாளர்கள் மட்டுமே கண்டு காமுறுவரா ? எத்தனை எத்தனைக் கேள்விகள்...! 

இந்தப் புத்தகம் அப்படியொரு இசைமேதையான ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசப் என்கிற சந்தானப்ரியனைப் பற்றியது. எட்வினின் சிறுவயதில் ஓர் நாள், அப்பா வாங்கித் தந்த 5 ரூபாய் புல்லாங்குழலில் அற்புதமான திரைப்பாடலை பிசிறின்றி வாசிக்க அவனது பெற்றோர் வியந்து திகைத்துப் போகிறார்கள். முறையாக எந்த வகை இசைப் பயிற்சியையும் அதுவரை மேற்கொண்டிராத எட்வின் அந்த தருணத்திலிருந்து 'Prodigy' ஆகிறான். எந்த இசைக்கருவியிலும் எந்த இசையையும் வாசிக்கக்கூடிய மகா மேதையாகிறான்.

 இசை மேதைமை அவனை தேடிக் கண்டடைந்த அதே நேரத்தில் மனப் பிறழ்வும் அவனை ஆட்கொள்கிறது. தனது பெயர் ‘ஆப்ரஹாம் ஹராரி’ எனவும் தான் ஒரு யூதன் எனவும், இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் சொல்லத் துவங்குகின்றான்.சிறுவயதில் எங்கோ கேட்ட ஒரு பெண்குரலின் பாடலை மனதில் வரித்துக் கொண்டு அவளை, அவளது குரலை தேடியலைவதில் தொடங்கி, இசைக்குழு அமைத்து நண்பர்களுடன் பாடிக்கொண்டு திரிவதிலிருந்து, திரைப்படத்திற்கு இசையமைப்பது, அதுவரையில் உலகம் கேட்டிடாத ஒரு சிம்பொனியை எழுதி பெர்லினில் அரங்கேற்ற விழைவது, இசையைத் தேடி நாடோடியாய் போதையில் அலைவது, தன்னை ஒரு யூதனாக அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டுமென நினைப்பது, என ஒரு இலக்கேயில்லாமல் காற்றிலலையும் இலையாய் திரிகிற எட்வின் என்கிற ஆப்ரஹாம் என்கிற சந்தானப் ப்ரியனுக்கு என்ன ஆனதென்பது மீதிக்கதை. 

எட்வினின் இசைக்குழுவில் ட்ரம்மராக வரும் ஜானவியின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் தெளிவான ரகளையான ஒன்றாக இருந்தது. ஆனாலும் தேய்வழக்காக இசையைத் தவிர ஏதுமறியா மேதையை விழுந்து விழுந்து  காதலிக்கிற, அவனுக்காக எதையும் செய்யத் துணிகிற, முற்றிலும் சரணடைந்து விடுகிற ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது.ஆனால் காதல் பற்றிய திருமணம் அவளுடைய புரிதலும் தெளிவாகவே இருக்கிறது. அதை அவள் எட்வினிடம் எடுத்துச் சொல்லும் விதமும் அட்டகாசம். 

//”காதல் வண்ணமயமானதில்லை. அது ஒற்றை வண்ணம் கொண்டது. கருஞ்சாம்பல் வண்ணம் . ஆனால் சரணாகதி வண்ணமற்றது. நீரைப் போன்றது. தாகத்துக்கோ கு*டி கழுவவோ மிகவும் உபயோகமானது”              

-இறவான் (பா.ராகவன்)//

மெண்டல்ஷானையும் , இளையராஜாவையும், மொசார்ட்டையும், அவர்களின் இசையை தரம்பிரித்து ஆராய்ந்து இது சரி இது தவறு என மதிப்பீடு செய்கிற ஒரு ஏதிலியை , அவன் உண்மையான மேதையாகவே இருந்தாலும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவோ, அவன் சொல்வதை ஒப்புக் கொள்ளவோ தயாராக இல்லை என்கிற எதார்த்தத்தை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர். 

//நூறு நூறு வருடங்களாக உலகம் ஏற்றுக்கொண்டு பீடத்தில்  ஏற்றி அமர வைத்து சிலையாக்கிவிட்ட சில மேதைகளை இந்த அற்பன் மட்டம் தட்டுகிறான் என்று தோன்றும். அப்படித்தோன்றினால் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிழையில்லை.அவர்கள் மேதைகள் என்பதும் உண்மை. நான் அற்பன் என்பதும் உண்மை. மட்டம் தட்டுவதாகத் தோன்றுவது மட்டும் பிழை. ஒரு தராசுக்குரிய மரியாதையை இச்சமூகம் தருவதில்லை

              -இறவான் (பா.ராகவன்) //

இசைக்கருவிகளை வாசித்தல் குறித்தும், இசை குறித்தும், ஒரு மேதையின் சிந்தனைப் பாட்டை சாமானியர்கள் (அலட்சியமாக) எதிர்கொள்கிற விதம் குறித்தும், மனப்பிறழ்வு கொண்டவனான எட்வினின் குரலாக பேசும் அத்தனையுமே தனித்தனியாக பொன்மொழியாகக் கொண்டாடப்பட வேண்டியவை. உண்மையில் இசைகுறித்த கூர்நோக்கும், உணர்வுகள் பற்றிய ஆழமான சிந்தனையும் இல்லாமல் ஒரு புனைவில் கூட இந்த மாதிரியான சொற்றொடர்களை எழுதிவிட முடியாதென தோன்றுகிறது.

// எனக்கென்னவோ கலைமனம் என்று ஒன்று இருந்துவிட்டால் கருவிகள் ஒரு பொருட்டில்லை என்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.மனத்துக்குள் இசை நிரம்பியிருந்தால் போதும் குறிப்பிட்ட கருவியின் அடிப்படை சூட்சுமம் குறித்த  அறிவு இருந்தால் போதும். சில் தடுமாற்றங்களுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கிவிட முடியும் என்றே நினைத்தேன்.

              -இறவான் (பா.ராகவன்) //

இறுதி அத்தியாயத்தை வாசிக்கையில் பா.ரா நிகழ்த்தியிருக்கிற சொல் விளையாட்டுகளை முதலில் அச்சுப்பிழை என்றே கருதியிருந்தேன். பின்பு தான் கதையின் போக்குடன் இணைத்து அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. Brilliance...! நாவலின் துவக்கத்தில் கதை தொடங்குகிற நிகழ்கிற சூழல் தெளிவாகத் தெரிந்த பின்பும் கதையின் ஓட்டத்தில் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டு இறுதி அத்தியாயத்தில்  நமக்கு திடீரென மூளையில் உதிக்கிற போது எல்லாமும் முடிந்து விடுகிறது. 

 ஒரு பாடலையோ அல்லது இசைத்துணுக்கையோ நேரடியாகக் கேட்டால் நாம் உணர்ந்து கொள்ளுவதை , வெறுமனே அந்த உணர்வைப் பற்றி எழுதுவதன் மூலம் கடத்திவிட முடியுமா என்ன ? இந்த நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கிற வெவ்வேறு பாடல்களையும், இசை துணுக்குகளையும் , எட்வின் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கிற அத்தனையையும் தனது எழுத்தின் வழியே நமக்கு கடத்திவிடுகிறார் எழுத்தாளர் பா.ராகவன். ஒருவேளை இன்னாரைப் பற்றிய கதையாக இருக்குமோ, அல்லது அவராக இருப்பாரோ என நாம் யாரை நினைத்தாலும் அவர்களையும் கதையினூடாகவே உலவவிட்டு எட்வின் என்னும் மேதை இவர்களினின்று மாறுபட்டு தனித்து நிற்பவன் என நிறுவிவிடுகின்றார்.இதுவரையில் பா.ரா அவர்களின் எழுத்தில் புனைவல்லாதவையையே வாசித்திருந்த எனக்கு,  அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்திருந்தது இறவான் நாவல். 

இறவான் - இசையைத் தேடி <3


 இறவான் - பா.ராகவன் | எழுத்து பிரசுரம்| 329 பக்கங்கள் | ரூ.350/- 

 இறவான் நாவலில் இடம்பெற்ற பாடல்களை யூட்யூப் ப்ளேலிஸ்ட்டாகத் தொகுத்தளித்திருக்கும் சிவராமன் கணேசன்  அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி <3.

 இணைப்பு  இங்கே - https://www.youtube.com/playlist?list=PLeuoo_Cwzt0BtcnE6lsFD3CyLYnkv3m1T

 



வெள்ளி, 22 ஏப்ரல், 2022

காலங்களில் அது வசந்தம் - இளம்பரிதி கல்யாணகுமார்


 ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியானது. ரசனை என்கிற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாக சுவையுணர்ச்சி அல்லது சுவையுணர்தல் எனச் சொல்லலாமா தெரியவில்லை.  இசை, மொழி, உணவு, இலக்கியம், கலை என அத்தனையிலும் தனக்கு ஏற்ற ஒன்றையோ அல்லது தன்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றையோ கண்டுணர்வது, மெச்சுவது, அதனை தனக்கானதாகக் கருதுவது; இவையனைத்தையுமே ரசனை என்கிற வரையறையின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு திரைப் பாடலையோ அல்லது திரைப்படக் காட்சியையோ நாம் ரசிப்பதற்கு, பல காரணங்கள் இருக்கலாம்.ஏதோ ஓர் நினைவுடன் அவை பிணைந்திருப்பதாலோ, நமது வாழ்வின் முக்கியமானதொரு கட்டத்தில் அந்தப் பாடலை நாம் கேட்டதாலோ, மனதுக்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு அது விருப்பமான பாடல்/படம் என்பதாலோ , கடந்த காலத்தை மனதில் மீட்டுருவாக்கம் செய்வதாலோ, ஒரு பாடல் அல்லது திரைப்படம் நமக்கு முக்கியமானதாகி விடுகின்றது. நமக்கு விருப்பமான , முக்கியமான அந்தப் பாடல் வேறொருவருக்கு வேறு மாதிரியான உணர்வையும்  நினைவுகளையும் தந்திருக்கலாம். அந்தப் பாடலுக்கான களமும், காட்சியும், பாத்திரங்களும் அவர்களின் மனதில் முற்றிலும் வேறொன்றாக இருக்கலாம்.  பாடல் ஒன்றே; பார்வைகளோ பல்லாயிரம்.

அப்படி, ஒரு தலைமுறைக்கே பல நினைவுகளையும், உணர்வுகளையும் அள்ளித்தந்த பாடல்களுள் ஒரு நூறு பாடல்கள் பற்றிய புத்தகமே ‘காலங்களில் அது வசந்தம்’. உண்மையில் பொதுமக்களின் ரசனையென்பது கால/சமூக மாற்றங்களுக்கேற்ப பத்தாண்டுகளுக்கொரு முறை மாறிக் கொண்டேயிருக்கும் (அல்லது நான் அப்படி நினைக்கிறேன்).  அவ்வகையில் கையில் இருக்கிறவற்றை ரசிக்கும் அதே வேளையில், கடந்த காலத்தில் கொண்டாடப்பட்டவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். 

அதனாலேயே நண்பர் இளம்பரிதி அவரது முந்தைய புத்தகமான ‘மடை திறந்து’ போல பாடல்வரிகள் (சொல் நயம், சந்தம்) பற்றி மட்டும் எழுதாமல் இந்நூலில் ’இடம் சுட்டி பொருள் விளக்கம்’ சொன்னாற்போல் பாடல்கள் எழுதப்பட்ட சூழல், பாடல் இடம்பெற்ற திரைப்பட உருவாக்கம் குறித்த தகவல்கள், பாடலாசிரியர்களின் அனுபவங்கள், இயக்குநருக்கும் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான உறவு பற்றி, பாடல் படமாக்கப் பட்ட விதம், பாடல்வரிகள் கதையுடன் பொருந்திபோகும் விதம் என இத்தனையையும் தன்னுடைய ரசனையின் பார்வையில் அழகாக எழுதியிருக்கிறார். வெறுமனே சொல்லக்கேள்வியாக இல்லாமல், சொல்லியிருக்கிற தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் கடுமையாக உழைத்திருக்கின்றார்.

உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமானவை என்றால், அப்பாவும் அம்மாவும், தாத்தாவும் மனமுருகி ரசித்த பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், தமிழ்த் திரையிசையின் மேல் காதல் கொண்டவரென்றால், உறுதியாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

காலங்களில் அது வசந்தம் - திரையிசையின் நினைவோடையில் ஒரு அழகிய படகுப் பயணம் <3 <3 <3 நன்றியும் வாழ்த்துகளும் இளா..! 

பி.கு:

புத்தகத்தில் எனக்கு சிக்கலாகப் பட்ட விஷயங்களைப் பற்றி சொன்னபோது திறந்த மனதுடன் செவிசாய்த்த இளாவுக்கு என் அன்பு <3 உருவாக்கத்திலும், அச்சுக்கோர்ப்பிலும் திருத்தம் தேவைப்படும் இடங்களையும் பதிப்பாளர்களிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் எனது நன்றி <3 


’காலங்களில் அது வசந்தம்’

இளம்பரிதி கல்யாணகுமார்

377 பக்கங்கள் - விலை ரூ:420.00

வாசகசாலை பதிப்பகம்

புத்தகம் வாங்க - தொடர்புக்கு: 9942633833, 9790443979

ஆன்லைனில் வாங்க: https://www.commonfolks.in/books/d/kaalangalil-athu-vasantham




 

 

சனி, 8 ஜனவரி, 2022

என்னுடைய 2021 – ஒரு பார்வை

 #My2021 #my2021recap #sudharsanh

இது என்னுடைய self-reconciliation அல்லது self-appraisal எப்படி வேணா வெச்சுக்கலாம். பெருந்தொற்றுக் காலத்துல பிழைத்துக் கிடப்பதே சாதனை தான். ஆனாலும் எல்லாரும் அவங்கவங்களோட நோக்கத்துக்காக ஓடிட்டேதான் இருந்துருக்காங்க. நாம ஓடலைன்னாலும் எந்தளவு நடந்துருக்கோம்னாவாது பாத்துக்கத்தான் இந்த பட்டியல்
 

 
1. வாசகசாலையின் புரவி முதல் இதழில் மனுஷ்யபுத்திரனுடைய நேர்காணலுக்காக அவரை புகைப்படம் எடுத்தது. அதற்காக ’புகைப்படம்:சுதர்சன்’ என என்னுடைய பெயர் புரவி முதல் இதழில்இடம்பெற்றது. இது போக ஆஸ்கருக்கு தேர்வான திரைப்படங்கள் குறித்து ஒரு கட்டுரையும், நெட்ஃப்ளிக்ஸ்ல வெளிவந்த ஆவணக் குறுந்தொடர் பற்றி ஒரு கட்டுரையும் ’புரவி’க்காக எழுதியிருக்கிறேன். அது போக திரைக்களம் நிகழ்வில் மண்டேலா திரைப்படம் குறித்தும், கதையாடல் நிகழ்வில் எம்.கே.மணி அவர்களின் சிறுகதை குறித்தும் பேச வாய்ப்பமைந்தது. அடுத்த ஆண்டில் நான் கலந்து கொள்ளவிருக்கும் முதல் நிகழ்வும் வாசகசாலையுடனே. தொடர்ந்து பயணிக்கும், வாய்ப்பளிக்கும் அருணுக்கும், கார்த்திக்கும் நன்றியும் அன்பும் ❤
 

 
 
 2. இரண்டாவது முழு அடைப்பின் போது என்ன செய்வதெனத் தெரியாத வேளையில் சென்றடைந்த இடம் தான் ‘Clubhouse’. ஆரம்பகட்டத்தில் புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், அரசியல் என பல குழுக்களில் பங்கேற்ற நான், என்னுடைய யூட்யூப் சேனலான ‘Read Ride Rant’ன் பெயரிலேயே ஒரு குழுமத்தைத் துவக்கி புத்தகங்கள்/பயணங்கள் குறித்து பேசத்தொடங்கினேன். இப்போதுவரை குழுவை 1000 பேருக்கு மேல் பின் தொடர்ந்தாலும், பின்னாட்களில் ஊரடங்கில் தளர்வுகள் வந்தவுடன் Clubhouse பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோனது;என்னுடைய செயல்பாடுகளும் நின்று போனது.
ஆனாலும் பல்வேறு புதிய நண்பர்களின் அறிமுகம் , நட்பு என அள்ளித்தந்தது க்ளப்ஹவுஸ் . Loads of love to my Clubhouse amigos ❤ who were part of our celebrations, ears to my ups and downs last year. Clubhouse நண்பர் ஒருவரின் பரிந்துரையிலேயே வேறு ஒரு புது நிறுவனத்திற்கு மாறினேன்
 
3. ஆம்.. 🙂 என்னுடைய பணி அனுபவத்திற்கும், திறனுக்கும் ஏற்ற, கற்றுக்கொள்ளவும் வளரவும் நிறைய வாய்ப்புகளிருக்கிற ஒரு நல்ல நிறுவனத்தைத் தேர்வு செய்து இணைந்திருக்கிறேன். வேலை பட்டையை கிளப்புகிறது . Thank you Vincent
❤
 
4. என்னுடைய பணி சார்ந்த அடுத்தடுத்த படிநிலைகளுக்கு அடிப்படைத் தகுதியாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் கூடுதலாக உதவும் என , நண்பர்களிடம் பேசி முடிவெடுத்து, ஒரு பல்கலைக்கழகத்தில் MBA (for working executives) – பகுதிநேரமாக சேர்ந்து, வெற்றிகரமாக முதல் செமஸ்ட்டர் தேர்வுகளையும் எழுதிமுடித்து விட்டேன். பெரும் குழப்பங்களோடு படிக்கும் திட்டத்தை தள்ளிப்போட்டபடி இருந்தவனை , கட்டணம் கட்டி, தைரியமூட்டி சலிக்காமல் ஊக்குவித்த என் சுரேகாவுக்கு ❤ Love you
 
5. யூட்யூப் சேனல் ஆரம்பித்ததே 2020ல் தான். இந்த ஆண்டு மற்ற பணிகளின் காரணமாக பயணம், புத்தகங்கள் என 4,5 காணொலிகள் மட்டுமே பதிவேற்ற முடிந்தது. என்னுடைய கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும் காரணம். ஆனாலும் எனக்கு மற்றுமொரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த நுழைவுச்சீட்டாக என்னுடைய யூட்யூப் வீடியோக்களே உதவின
இதுவரை சப்ஸ்க்ரைக் பண்ணவில்லை எனில் இப்போது பண்ணவும்
6. தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சிக்காக எழுத்தாளர்களையும், பிற படைப்பாளிகளையும் நேர்காணும் வாய்ப்புக் கிடைத்ததை தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய ஒன்றாகக் கருதுகிறேன். It’s a paid gig too. கருந்தேள் ராஜேஷ் முன்பு எப்போதும் சொல்கிற விஷயம் ஒன்று உண்டு ;” எந்த ஒரு விஷயத்தை நாமாக விரும்பி, கற்றுக்கொண்டு செய்யத் தொடங்கி, அதைச் செய்யவும், கற்றுக்கொடுக்கவும் பிறர் நமக்கு ஊதியம் தருமளவு வளர்கிறோமோ அதுவே நம்முடைய passion” என. அந்தவகையில் நான் மகிழ்கிற வளர்ச்சி இது; மூன்று மாதங்களில் ஐந்து நேர்காணல்களோடு, ஒரு நிகழ்ச்சிக்கு இணைப்பு-தொகுப்பாளராகவும் பணி செய்திருக்கிறேன். வாய்ப்பு அமையக் காரணமாக இருந்த த.ராஜனுக்கும், தொடர்ந்து வாய்ப்பளிக்கும் விஜயன் அவர்களுக்கும் என்மனம்நிறைந்த நன்றி
Podhigai Interview -Youtube Playlist: https://www.youtube.com/playlist...
அதுபோக சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் விஜய் டிவியின் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறேன்
 
 

7. வாசிப்பு 2021 – ஆண்டின் தொடக்கத்தில் அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்-ன் பட்டக்காடு, கார்த்திக் பாலசுப்ரமணியம் எழுதிய நட்சத்திரவாசிகள் உள்ளிட்ட நாவல்களை படித்திருந்தாலும் மேற்கொண்டு நிறைய படிக்க நேரம் போதவில்லை. டிசம்பர் மாதம் கடைசியாக வாசித்தது கிருஷ்ணமூத்தியின் ‘பாகன்’ நாவல் .
ஆண்டின் இறுதியில் சரியாக தேர்வுகளுக்கு முன்பு ,நிறுவனம் மாறும் இடைவெளியில் ஸீரோ டிகிரி-தமிழரசி அறக்கட்டளையின் நாவல் போட்டிக்காக முதல் சுற்றில் 23 நாவல்களை (ஒரு மாத காலத்தில்) வாசித்தவர்களுள் நானும் ஒருவன். மனதுக்கு நெருக்கமான நல்ல படைப்புகளாகத் தெரிந்த பெரும்பாலான படைப்புகள் நெடும்பட்டியலிலும், குறும்பட்டியலிலும் இடம்பெற்றன. எனக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி சென்னை புத்தகத்திருவிழா சமயத்தில் எழுதவும், வீடியோக்கள் வெளியிடவும் முயல்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் காயத்ரிக்கும் ராம்ஜிக்கும் நன்றியும் அன்பும் ❤
பொதிகைத் தொலைக்காட்சி நேர்காணல்களுக்காக தொடர்புடைய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து குறிப்பெடுக்க வேண்டியிருந்ததால் அதனைத் தாண்டி பெரிதாக புத்தகங்கள் வாசிக்க முடியவில்லை.
 
8. எல்லாவற்றுக்கும் இடையே திரைப்படங்கள்/தொடர்கள் என நிறையவே பார்த்தேன். பார்த்தவற்றில் பெரும்பாலானவை பற்றி சிறியதும் பெரியதுமாய் 50 அறிமுகங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கின்றேன்.
Facebook link for ‘What I watch 2021’ album - https://www.facebook.com/media/set/...
 
9. தனிப்பட்ட முறையில் அதிகம் கவனம் செலுத்த முடியாத, நேரம் ஒதுக்க முடியாத விஷயங்கள் என்றால் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு , பயணங்கள், தனிநபர் நிதி மேலாண்மை ஆகியவற்றைச் சொல்லலாம்.
அடுத்த ஆண்டு நிச்சயம் இவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம்…!
 
10. பிரச்சனைகள் எதுவுமே இல்லையா எனக் கேட்டால்.. இல்லாமலில்லை. அம்மாவின் உடல்நலம் உட்பட பல தனிப்பட்ட பிரச்சனைகளும், பணிச்சுமை, உறவுச்சிக்கல்கள் , பொருளாதார நெருக்கடி என எல்லாமும் கொஞ்சமும் ஆட்டம் காட்டின தான். அத்தனையையும் தாண்டித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். உலகமே அப்படி இருக்கும்போது நாம் மட்டுமென்ன விதிவிலக்கா. ஆனாலும் எனக்கு நானே திரும்பத்திரும்ப நினைவூட்டிக் கொண்ட ஒரு விஷயம் ‘Move at your own pace’ என்பதைத்தான். இன்னும் நிறைய படிச்சு, எழுதி, பேசி, பாட்டுப்பாடி ,பயணிச்சு, சிரிச்சு மகிழ
வாழ்த்துகள்
…!
மற்றபடி, had an eventful 2021 and looking forward to an exciting 2022…! Loads of love and wishing you all a happy new year…! ❤

 

வெள்ளி, 31 டிசம்பர், 2021

Turning Point : War on terror - Netflix - திருப்புமுனை - 2021

 


 அண்மையில்  அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியதும் , அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மத அடிப்படைவாத தீவிரவாத அமைப்பான தாலிபன்கள் வசம் சிக்கியதும் உலகம் முழுக்க கவனம் பெற்ற ஒரு நிகழ்வு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னணி என்ன ? அதன் பின்னான தீவிரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் என்ன? உண்மையில் அமெரிக்காவின் ஆஃப்கன் உடனான போர் எப்போது, எந்த நோக்கத்திற்காக தொடங்கியது ? தாலிபன்கள் உருவானது எப்படி ? அமெரிக்காவின் ஈராக் மீதான போருக்கு என்ன காரணம் ? இப்படியான இன்னும் பல கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கின்றது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series)

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலுக்கு முன்பு, நான்கு உள்நாட்டு விமானங்கள் கடத்தப்பட்ட செய்தியில் தொடங்கி பின்பு முதல் விமானம் மோதியதும் மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த நூறு மாடிக் கட்டிடத்திலிருந்து இறங்க முயற்சி செய்தது , கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து மக்களை மீட்கப் போராடிய தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்தது, அடுத்தடுத்த விமானங்கள் இன்னொரு கோபுரத்திலும் பெண்டகன் எனப்படும் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை  பெருவளாகத்திலும் மோதியது  என பரப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகிறது தொடர்.

அமெரிக்க இராணுவத்தின் பெரும் பதவியில் இருந்தவர்கள், சட்ட வல்லுநர்கள்,9/11 சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்க  முன்னாள் உளவுத்துறையினர்தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர், முன்னாள் தாலிபன் தலைவர்கள், ஆஃப்கன் போர்ப்படைத் தளபதிகள், ஆஃப்கன் அரசியல் தலைவர்கள் என பலருடனான நேர்காணலில் இந்நிகழ்வின் முன்னும் பின்னும் நடந்த பல சம்பவங்களை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு அல்காயிதா தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனத் தெரியவந்தபின் அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்கிற வரலாறும் காட்டப்படுகின்றது.

2021 ஆண்டு வரையிலுமான அமெரிக்காவின் ஆஃப்கன் மீதான இருபது ஆண்டுகால போர் தொடங்குவதற்கு முக்கிய தூண்டுகோளாக  இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதத் தாக்குதலே அமைந்திருக்கின்றது. முன்பு 1979முதல் 89 வரையிலுமாக பத்தாண்டுகள் ஆஃப்கானிஸ்தான்ரஷ்யா இடையிலான போரின் போது ஆஃப்கன் போராளிகளான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்காவே மறைமுகமாக போர்ப்பயிற்சியும் ஆயுதங்களும் தந்து உதவியதாக சொல்லப்படுகிறது. பின்னாட்களில் இவர்களே தாலிபன்களாக மாறியதாகவும், ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாத அமைப்பிலும் சேர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

அமெரிக்க இராணுவம் ஆஃப்கானிஸ்தானிலிருந்து சிறை பிடித்த நூற்றுக்கணக்கான கைதிகளை க்யூபாவில் அமைந்திருக்கிற க்வாண்டனமோ பே ( guantanamo bay) சிறைச்சாலையில் அடைத்து வைத்து enhanced interrogation techniques என்கிற பெயரில் செய்த கொடுமைகளைப் பற்றியும் பேசியிருக்கின்றார்கள். இவர்களில் 9/11 சம்பவத்துடன் நேரடித் தொடர்புடைய குற்றவாளிகள் ஓரிருவர் இருந்திருந்தாலும் , பெரும்பாலானோர் சட்டப்படி எந்தக் குற்றமும் சாட்டப்படாமல் (accused) தீவிரவாதிகளாகவோ அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாகவோ இருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே சிறைபிடிக்கப்பட்டு ஆஃப்கானிஸ்தானிலிருந்தும் இன்னபிற நாடுகளிலிருந்தும்  நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனையையும் அனுபவித்திருக்கிறார்கள்

  பெட்டிச்செய்தி:


ஒரு சர்வதேசக் குற்றவாளியோடு தொடர்பில் இருந்ததாகவும், அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களுக்குக் காரணமானவர்களுள் ஒருவராகவும் கருதப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார் மொஹ்மதூ ஸ்லாஹி.அவருடைய நாடான மொரிட்டானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள க்வாண்டனமோ தீவின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட மொஹ்மதூ, செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து, பின்பு பலரின் முயற்சியாலும் சட்டப்போராட்டங்களாலும் விடுதலை அடைந்தார். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியானது தான் ’The Mauritanian’ திரைப்படம். இத்திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.

 ஆஃப்கானிஸ்தானில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் புஷ் தலைமையிலான அரசு, அதிபர் சதாம் உசேன் பேரழிவை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள் (Weapons of mass destruction) வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக் நாட்டின் மீதும் போர் தொடுக்க முடிவெடுக்கிறது. எந்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை அறிந்தால் நாம் மனம் நொந்து போகக் கூடும்.  ஒரு கட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் எந்த இலக்குமின்றி நிகழ்ந்ததைப் பற்றியும், ஆஃப்கனில் அமைந்திருந்த ஹமீது கர்சாய் தலைமையிலான அரசு ஊழலும் லஞ்சமும் நிறைந்த ஒன்றாக இருந்ததையும் அமெரிக்க முன்னாள் அரசு அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

தாலிபன்களைத் தோற்கடிக்க ஆஃப்கானிஸ்தானின் வடக்கு கூட்டணி (Northern alliance) இராணுவக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்காவுக்கு, காபூலிலிருந்தும் காந்தஹாரிலிருந்தும் தாலிபன்களை விரட்டியடித்தபின் அந்நாட்டில் என்ன செய்வது என்கிற தெளிவான திட்டம் ஏதும் இல்லை. அத்துடன் மீண்டும் அங்கு இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தவும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் எதுவுமே செய்யாத ஹமீது கர்சாய் தலைமையிலான மோசமான  அரசாட்சியும்  தாலிபன்கள் புத்துயிர்ப்புடன் மீண்டும் செயல்பட முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. ஆவணக் குறுந்தொடரின் இறுதிப் பகுதியில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவின் பேரில், பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் சர்வதேசக் குற்றவாளியும் தீவிரவாதியுமான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நிகழ்வும் அது தொடர்பான சம்பவங்களும் பேசப்படுகின்றன.

இறுதியாக ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளும், பிற நாட்டு அரசியல்/இராணுவ அதிகாரிகளும் முழுமையாக வெளியேறிபின் தாலிபன்கள் தலைமையிலான அரசு அமைந்திருக்கிற  இவ்வேளையில், இரு தரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்சேதத்தையும் , பெருமளவிலான பொருட்சேதத்தையும் ஏற்படுத்திய இந்தப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தீவிரவாத செயல்களால் ஏற்படுகிற பாதிப்புகளையும் இழப்புகளையும் பற்றிப் பேசியிருக்கும்  அதே அளவு நாடுகளுக்கிடையேயான போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்கிற பாதிப்புகளையும்  இழப்புகளையும் பற்றி விரிவாகப் பேசியிருக்கின்றது இந்த ஆவணக் குறுந்தொடர் .

’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...