நானும் என் உலகும்
சனி, 11 ஜூன், 2022
விக்ரம் - 2022 - There lived a ghost
புதன், 8 ஜூன், 2022
இறவான் - பா.ராகவன் | இசையிற் பெருந்தக்க யாவுள ?
![]() |
” ஒரு மேதையின் பெரும் சிக்கலே அவன் ஒரு மேதையாக இருப்பதும் அதை அவன் அறிந்திருப்பதும் தான்.இது விவரிக்க முடியாத பாடு. சராசரிகளுக்குப் புரியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் சராசரிகளின் உலகில் தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. தன் குழந்தையின் சந்தோஷத்துக்காக மண்டி போட்டு யானை போல நடந்துகாட்டும் தந்தைகளைப் போலத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். தந்தைகள் சில நிமிடங்களில் விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்துவிடுகிறார்கள். மேதைகள் இறக்கும்வரை மண்டிபோட்டே நடக்கவேண்டியதாகிவிடுகிறது”
-இறவான் (பா.ராகவன்)
சிறிதொரு இடைவெளிக்குப் பின் ஒரு புனைவு நூலைக் கையிலெடுக்கலாமென முடிவு செய்ததும் வாசிக்கத் தேர்ந்தெடுத்த புத்தகம் ’இறவான்’. மேற்கண்ட பத்தி நாவலின் ஒரு பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் மேதைகள் என்போர் யார் ? மேதைமை எனும் பண்பு ஒரு தனி மனிதருக்கு பிறவியிலேயே அமையப்பெற்ற ஒன்றா ? அல்லது கடுமையான பயிற்சியினால் அடையப் பெறுவதா ? போலவே ஒருவரின் மேதைமையைக் கண்டுணர எல்லோராலும் முடியுமா ? அல்லது சக பேரறிவாளர்கள் மட்டுமே கண்டு காமுறுவரா ? எத்தனை எத்தனைக் கேள்விகள்...!
இந்தப் புத்தகம் அப்படியொரு இசைமேதையான ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசப் என்கிற சந்தானப்ரியனைப் பற்றியது. எட்வினின் சிறுவயதில் ஓர் நாள், அப்பா வாங்கித் தந்த 5 ரூபாய் புல்லாங்குழலில் அற்புதமான திரைப்பாடலை பிசிறின்றி வாசிக்க அவனது பெற்றோர் வியந்து திகைத்துப் போகிறார்கள். முறையாக எந்த வகை இசைப் பயிற்சியையும் அதுவரை மேற்கொண்டிராத எட்வின் அந்த தருணத்திலிருந்து 'Prodigy' ஆகிறான். எந்த இசைக்கருவியிலும் எந்த இசையையும் வாசிக்கக்கூடிய மகா மேதையாகிறான்.
இசை மேதைமை அவனை தேடிக் கண்டடைந்த அதே நேரத்தில் மனப் பிறழ்வும் அவனை ஆட்கொள்கிறது. தனது பெயர் ‘ஆப்ரஹாம் ஹராரி’ எனவும் தான் ஒரு யூதன் எனவும், இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் சொல்லத் துவங்குகின்றான்.சிறுவயதில் எங்கோ கேட்ட ஒரு பெண்குரலின் பாடலை மனதில் வரித்துக் கொண்டு அவளை, அவளது குரலை தேடியலைவதில் தொடங்கி, இசைக்குழு அமைத்து நண்பர்களுடன் பாடிக்கொண்டு திரிவதிலிருந்து, திரைப்படத்திற்கு இசையமைப்பது, அதுவரையில் உலகம் கேட்டிடாத ஒரு சிம்பொனியை எழுதி பெர்லினில் அரங்கேற்ற விழைவது, இசையைத் தேடி நாடோடியாய் போதையில் அலைவது, தன்னை ஒரு யூதனாக அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டுமென நினைப்பது, என ஒரு இலக்கேயில்லாமல் காற்றிலலையும் இலையாய் திரிகிற எட்வின் என்கிற ஆப்ரஹாம் என்கிற சந்தானப் ப்ரியனுக்கு என்ன ஆனதென்பது மீதிக்கதை.
எட்வினின் இசைக்குழுவில் ட்ரம்மராக வரும் ஜானவியின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் தெளிவான ரகளையான ஒன்றாக இருந்தது. ஆனாலும் தேய்வழக்காக இசையைத் தவிர ஏதுமறியா மேதையை விழுந்து விழுந்து காதலிக்கிற, அவனுக்காக எதையும் செய்யத் துணிகிற, முற்றிலும் சரணடைந்து விடுகிற ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது.ஆனால் காதல் பற்றிய திருமணம் அவளுடைய புரிதலும் தெளிவாகவே இருக்கிறது. அதை அவள் எட்வினிடம் எடுத்துச் சொல்லும் விதமும் அட்டகாசம்.
//”காதல் வண்ணமயமானதில்லை. அது ஒற்றை வண்ணம் கொண்டது. கருஞ்சாம்பல் வண்ணம் . ஆனால் சரணாகதி வண்ணமற்றது. நீரைப் போன்றது. தாகத்துக்கோ கு*டி கழுவவோ மிகவும் உபயோகமானது”
-இறவான் (பா.ராகவன்)//
மெண்டல்ஷானையும் , இளையராஜாவையும், மொசார்ட்டையும், அவர்களின் இசையை தரம்பிரித்து ஆராய்ந்து இது சரி இது தவறு என மதிப்பீடு செய்கிற ஒரு ஏதிலியை , அவன் உண்மையான மேதையாகவே இருந்தாலும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவோ, அவன் சொல்வதை ஒப்புக் கொள்ளவோ தயாராக இல்லை என்கிற எதார்த்தத்தை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.
//நூறு நூறு வருடங்களாக உலகம் ஏற்றுக்கொண்டு பீடத்தில் ஏற்றி அமர வைத்து சிலையாக்கிவிட்ட சில மேதைகளை இந்த அற்பன் மட்டம் தட்டுகிறான் என்று தோன்றும். அப்படித்தோன்றினால் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிழையில்லை.அவர்கள் மேதைகள் என்பதும் உண்மை. நான் அற்பன் என்பதும் உண்மை. மட்டம் தட்டுவதாகத் தோன்றுவது மட்டும் பிழை. ஒரு தராசுக்குரிய மரியாதையை இச்சமூகம் தருவதில்லை
-இறவான் (பா.ராகவன்) //
இசைக்கருவிகளை வாசித்தல் குறித்தும், இசை குறித்தும், ஒரு மேதையின் சிந்தனைப் பாட்டை சாமானியர்கள் (அலட்சியமாக) எதிர்கொள்கிற விதம் குறித்தும், மனப்பிறழ்வு கொண்டவனான எட்வினின் குரலாக பேசும் அத்தனையுமே தனித்தனியாக பொன்மொழியாகக் கொண்டாடப்பட வேண்டியவை. உண்மையில் இசைகுறித்த கூர்நோக்கும், உணர்வுகள் பற்றிய ஆழமான சிந்தனையும் இல்லாமல் ஒரு புனைவில் கூட இந்த மாதிரியான சொற்றொடர்களை எழுதிவிட முடியாதென தோன்றுகிறது.
// எனக்கென்னவோ கலைமனம் என்று ஒன்று இருந்துவிட்டால் கருவிகள் ஒரு பொருட்டில்லை என்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.மனத்துக்குள் இசை நிரம்பியிருந்தால் போதும் குறிப்பிட்ட கருவியின் அடிப்படை சூட்சுமம் குறித்த அறிவு இருந்தால் போதும். சில் தடுமாற்றங்களுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கிவிட முடியும் என்றே நினைத்தேன்.
-இறவான் (பா.ராகவன்) //
இறுதி அத்தியாயத்தை வாசிக்கையில் பா.ரா நிகழ்த்தியிருக்கிற சொல் விளையாட்டுகளை முதலில் அச்சுப்பிழை என்றே கருதியிருந்தேன். பின்பு தான் கதையின் போக்குடன் இணைத்து அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. Brilliance...! நாவலின் துவக்கத்தில் கதை தொடங்குகிற நிகழ்கிற சூழல் தெளிவாகத் தெரிந்த பின்பும் கதையின் ஓட்டத்தில் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டு இறுதி அத்தியாயத்தில் நமக்கு திடீரென மூளையில் உதிக்கிற போது எல்லாமும் முடிந்து விடுகிறது.
ஒரு பாடலையோ அல்லது இசைத்துணுக்கையோ நேரடியாகக் கேட்டால் நாம் உணர்ந்து கொள்ளுவதை , வெறுமனே அந்த உணர்வைப் பற்றி எழுதுவதன் மூலம் கடத்திவிட முடியுமா என்ன ? இந்த நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கிற வெவ்வேறு பாடல்களையும், இசை துணுக்குகளையும் , எட்வின் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கிற அத்தனையையும் தனது எழுத்தின் வழியே நமக்கு கடத்திவிடுகிறார் எழுத்தாளர் பா.ராகவன். ஒருவேளை இன்னாரைப் பற்றிய கதையாக இருக்குமோ, அல்லது அவராக இருப்பாரோ என நாம் யாரை நினைத்தாலும் அவர்களையும் கதையினூடாகவே உலவவிட்டு எட்வின் என்னும் மேதை இவர்களினின்று மாறுபட்டு தனித்து நிற்பவன் என நிறுவிவிடுகின்றார்.இதுவரையில் பா.ரா அவர்களின் எழுத்தில் புனைவல்லாதவையையே வாசித்திருந்த எனக்கு, அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்திருந்தது இறவான் நாவல்.
இறவான் - இசையைத் தேடி <3
இறவான் - பா.ராகவன் | எழுத்து பிரசுரம்| 329 பக்கங்கள் | ரூ.350/-
இறவான் நாவலில் இடம்பெற்ற பாடல்களை யூட்யூப் ப்ளேலிஸ்ட்டாகத் தொகுத்தளித்திருக்கும் சிவராமன் கணேசன் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி <3.
இணைப்பு இங்கே - https://www.youtube.com/playlist?list=PLeuoo_Cwzt0BtcnE6lsFD3CyLYnkv3m1T
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
காலங்களில் அது வசந்தம் - இளம்பரிதி கல்யாணகுமார்
ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியானது. ரசனை என்கிற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாக சுவையுணர்ச்சி அல்லது சுவையுணர்தல் எனச் சொல்லலாமா தெரியவில்லை. இசை, மொழி, உணவு, இலக்கியம், கலை என அத்தனையிலும் தனக்கு ஏற்ற ஒன்றையோ அல்லது தன்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றையோ கண்டுணர்வது, மெச்சுவது, அதனை தனக்கானதாகக் கருதுவது; இவையனைத்தையுமே ரசனை என்கிற வரையறையின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு திரைப் பாடலையோ அல்லது திரைப்படக் காட்சியையோ நாம் ரசிப்பதற்கு, பல காரணங்கள் இருக்கலாம்.ஏதோ ஓர் நினைவுடன் அவை பிணைந்திருப்பதாலோ, நமது வாழ்வின் முக்கியமானதொரு கட்டத்தில் அந்தப் பாடலை நாம் கேட்டதாலோ, மனதுக்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு அது விருப்பமான பாடல்/படம் என்பதாலோ , கடந்த காலத்தை மனதில் மீட்டுருவாக்கம் செய்வதாலோ, ஒரு பாடல் அல்லது திரைப்படம் நமக்கு முக்கியமானதாகி விடுகின்றது. நமக்கு விருப்பமான , முக்கியமான அந்தப் பாடல் வேறொருவருக்கு வேறு மாதிரியான உணர்வையும் நினைவுகளையும் தந்திருக்கலாம். அந்தப் பாடலுக்கான களமும், காட்சியும், பாத்திரங்களும் அவர்களின் மனதில் முற்றிலும் வேறொன்றாக இருக்கலாம். பாடல் ஒன்றே; பார்வைகளோ பல்லாயிரம்.
அப்படி, ஒரு தலைமுறைக்கே பல நினைவுகளையும், உணர்வுகளையும் அள்ளித்தந்த பாடல்களுள் ஒரு நூறு பாடல்கள் பற்றிய புத்தகமே ‘காலங்களில் அது வசந்தம்’. உண்மையில் பொதுமக்களின் ரசனையென்பது கால/சமூக மாற்றங்களுக்கேற்ப பத்தாண்டுகளுக்கொரு முறை மாறிக் கொண்டேயிருக்கும் (அல்லது நான் அப்படி நினைக்கிறேன்). அவ்வகையில் கையில் இருக்கிறவற்றை ரசிக்கும் அதே வேளையில், கடந்த காலத்தில் கொண்டாடப்பட்டவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.
அதனாலேயே நண்பர் இளம்பரிதி அவரது முந்தைய புத்தகமான ‘மடை திறந்து’ போல பாடல்வரிகள் (சொல் நயம், சந்தம்) பற்றி மட்டும் எழுதாமல் இந்நூலில் ’இடம் சுட்டி பொருள் விளக்கம்’ சொன்னாற்போல் பாடல்கள் எழுதப்பட்ட சூழல், பாடல் இடம்பெற்ற திரைப்பட உருவாக்கம் குறித்த தகவல்கள், பாடலாசிரியர்களின் அனுபவங்கள், இயக்குநருக்கும் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான உறவு பற்றி, பாடல் படமாக்கப் பட்ட விதம், பாடல்வரிகள் கதையுடன் பொருந்திபோகும் விதம் என இத்தனையையும் தன்னுடைய ரசனையின் பார்வையில் அழகாக எழுதியிருக்கிறார். வெறுமனே சொல்லக்கேள்வியாக இல்லாமல், சொல்லியிருக்கிற தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் கடுமையாக உழைத்திருக்கின்றார்.
உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமானவை என்றால், அப்பாவும் அம்மாவும், தாத்தாவும் மனமுருகி ரசித்த பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், தமிழ்த் திரையிசையின் மேல் காதல் கொண்டவரென்றால், உறுதியாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
காலங்களில் அது வசந்தம் - திரையிசையின் நினைவோடையில் ஒரு அழகிய படகுப் பயணம் <3 <3 <3 நன்றியும் வாழ்த்துகளும் இளா..!
பி.கு:
புத்தகத்தில் எனக்கு சிக்கலாகப் பட்ட விஷயங்களைப் பற்றி சொன்னபோது திறந்த மனதுடன் செவிசாய்த்த இளாவுக்கு என் அன்பு <3 உருவாக்கத்திலும், அச்சுக்கோர்ப்பிலும் திருத்தம் தேவைப்படும் இடங்களையும் பதிப்பாளர்களிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் எனது நன்றி <3
’காலங்களில் அது வசந்தம்’
இளம்பரிதி கல்யாணகுமார்
377 பக்கங்கள் - விலை ரூ:420.00
வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் வாங்க - தொடர்புக்கு: 9942633833, 9790443979
ஆன்லைனில் வாங்க: https://www.commonfolks.in/books/d/kaalangalil-athu-vasantham
சனி, 8 ஜனவரி, 2022
என்னுடைய 2021 – ஒரு பார்வை
#My2021 #my2021recap #sudharsanh


