நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 15 ஏப்ரல், 2013

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி



இப்போது இப்படி இருக்கும் ஒரு விஷயம் ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கும் ?? இந்த கேள்வி பொதுவா எல்லோருடைய மனங்களிலும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இருக்கும். சிலருக்கு பழசைப் பேசுவது பிடிக்காது. ஏனைய சிலருக்கு பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அசைபோடுவதில் தனி ஆனந்தம்…! இந்த உணர்வை தான் ஆங்கிலத்தில் ’நாஸ்டால்ஜியா’ (Nostalgia) என்கிறோம். இணையான தமிழ் வார்த்தை எதுவும் தட்டுப்படவில்லை.

இந்த ‘நாஸ்டல்ஜியா’வுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.தங்கள் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களையும், இளமைக் காலத்தில் வசித்த இடங்களையும் நினைத்துப் பார்த்து அசை போடுவது யாருக்குத் தான் பிடிக்காது. இந்த புத்தகமும் கிட்டத்தட்ட தில்லியில் ஐம்பது வருடங்களைக் கழித்த ஒரு தமிழரின் மறக்கவியலா அனுபவங்களும், கடந்து வந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களும், பயணங்களும் நிறைந்த ஒரு நாஸ்டால்ஜிக் புத்தகம் தான்.

ஏற்கனவே சுகா அவர்களின் ’மூங்கில் மூச்சு’ மற்றும் ’தாயார் சன்னதி’ ஆகிய புத்தகங்களை அவை தந்த உணர்வுகளுக்காகவே மிகுந்து ரசித்தவன் நான். சுகா அவர்கள் தனது தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பின்பே புத்தகத் திருவிழாவில் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’-ஐ வாங்கலானேன். எழுதியவர் திரு.பாரதி மணி அவர்கள். பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்ததே S.K.S.மணி-ஆக இருந்தவர் ‘பாரதி’ மணி ஆகக் காரணம். பாபா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரை பார்த்தது நினைவிருக்கலாம் உங்களுக்கு.
உயிர்மையில் பல்வேறு காலங்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் ‘பாரதிமணி அவர்களைப் பற்றி அவருடைய நண்பர்களின் எண்ணங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த புத்தகம்.

இன்று உலகறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரோடு பாரதி மணி அவர்கள் சக நடிகராக நடித்த இன்டோ-ஆங்கிலத் திரைப்படம் ‘தி எலக்ட்ரிக் மூன்பற்றியது முதல் கட்டுரை.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது இந்தத் திரைப்படம். அந்த எழுத்தாளர் – அருந்ததி ராய் அவர்கள்…!! நாற்பத்தைந்தே நாட்களில் அட்டகாசமான திட்டமிடலோடு தயாரான இந்த திரைப்படத்தின் உருவாக்கம் நிச்சயமாக வியப்பூட்டுகின்றது

பாரதி மணி அவர்கள் பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று வந்திருப்பதால் பல பயணங்களில் எதிர்பாராதவிதமாக பல பெரும்புள்ளிகளை எதிர்கொண்டிருக்கிறார். உதாரணம்: அன்னை தெரசா அம்மையார், முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள்...! இப்படி ஆச்சரியப்படுத்துகின்றது இந்தப் பட்டியல்.

நாடகங்களைப் பொருத்தவரை S.V.சேகர், க்ரேஸி மோகன், Y.G.மகேந்திரன் ஆகியோர் வாயிலாக மட்டுமே மேடை நாடகம் என்ற விஷயத்தைக் கேள்விப்படும் இந்த தலைமுறையைச் சேர்ந்த நமக்கு டில்லி வாழ் தமிழர்கள் மேடை நாடகங்களுக்குத் தந்த முக்கியத்துவமும் அங்கீகாரமும் பற்றி பாரதி மணி அவர்கள் குறிப்பிடும்போது வியப்பேற்படுவதை தவிர்க்க முடியவில்லை. நாடகங்களின்பால் அவர் கொண்ட ஈடுபாடும் ,அதன் பொருட்டு ஆற்றிய பங்களிப்பும் அளப்பரியவை.

காருக்குறிச்சியாரையும், திருவாவடுதுறை பிள்ளைவாள் அவர்களின் நாதஸ்வர வாசிப்பை சிலாகிப்பதாகட்டும்... செம்மீன் படத்துக்கு எப்படியாவது தேசிய விருது கிடைத்துவிடவேண்டுமென பிரயத்தனப்பட்டதாகட்டும்....வங்கத்தந்தை முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மகள், கனவரோடு ரகசியமாய் இந்தியாவில் தங்கியிருந்தபோது அவர்களுக்காக ஹீல்ஸா மீன் கொண்டு சென்றதாகட்டும்....!! அத்தனை நிகழ்வுகளையும் அவர் விவரித்திருக்கும் நடை அலாதியானது. அத்தனை ஆச்சரியங்கள்...சுவாரஸ்யங்கள். எழுத்தாளார் சுஜாதா, நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்,இசை விமர்சகர் சுப்புடு,எதேச்சையாக கூட அமர்ந்து தேனீர் அருந்தும் ஆங்சாங் சூகி (!!), நாடக விழாவுக்கு தலைமை தாங்கிய பிரதமர் நேரு அவர்கள்... எத்தனை மனிதர்கள்... எத்தனை விவரணைகள். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ‘நிகாம்போத் சுடுகாடு’ கட்டுரை. மரணமும் மரண நிமித்தமுமாய் உதிர்த்திருக்கின்ற வார்த்தைகளைத்தும் அத்தனை நிதர்சனமானவை...உணர்வுப்பூர்வமானவை.

பல நேரங்களில் பல மனிதர்கள்
ஆசிரியர்:பாரதி மணி
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ.100

உயிர்மை தளத்தில் படிக்கக் கிடைக்கும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சிலவற்றின் சுட்டிகள் கீழே:

வெள்ளி, 29 மார்ச், 2013

இந்த 'கலாச்சாரம்'னா என்னங்க…??



பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது”.

"பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள்அறிவு பரம்பல்கள்வாழ்வியல் வழிமுறைகள்சமூக கட்டமைப்புஎன்பனவற்றை சுட்டி நிற்கின்றதுமொழிஉணவுஇசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்." இப்படிச் சொல்கிறது விக்கி.

சாதாரணமான வார்த்தைகளில் சொல்லனும்னா ஒரு நாடுன்னு எடுத்துகிட்டா அங்க இருக்கிற மக்களுடைய உணவுப்பழக்கம், உடைகள், இனம், பேசும் மொழி, பழங்கால இலக்கியங்கள்,  வாழ்வியல், இசை, நாகரிகம், ரசனை, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் வழக்கங்கள், விளையட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகள் ஆகியவையே அடிப்படைக் காரணிகள் (Basic Factors). இவை அனைத்தின் அடிப்படையிலேயே இந்த கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை வரையறுக்கப்படுகின்றன.

உலக அளவில் பல நாட்டு மக்களிடையே பலவகை கலாச்சாரங்கள் பழக்கத்தில் இருந்தாலும் இந்திய நாட்டைப் பொறுத்தவரை இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகளாக நாம் குறிப்பிட்டவை அனைத்துமே மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டவையாகத் திகழ்கின்றன. இன்னும் அணுக்கமாகப் பார்த்தால் நம் தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகள் வேறுபடும்.(உதாரணம் – பேச்சு வழக்கு, உணவு பழக்கம், இறை வழிபாடு, சடங்குகள்)

இந்த கலாச்சாரத்தின் முக்கியமான கூறாக நான் கருதுவது இதன் மாற்றம் அல்லது வளர்ச்சி. இந்த மாற்றமும் வளர்ச்சியும் காலத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. இந்த காலத்தினால் ஏற்படும் மாற்றம் என்பது ‘கலாச்சாரம்மட்டுமல்லாது  சமூகத்தில் உள்ள ஏனைய விஷயங்களிலும் எதிரொலிக்கும். உதாரணமாக எண்பதுகளில் மக்களின் இசை ரசனை, பெல் பாட்டம் உடைகள், ஹிப்பி ஹேர்ஸ்டைல், அதன் பிறகு 90களில் ஏற்பட்ட மாற்றங்கள், இப்போது இந்த விஷயங்களில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி முன்னேற்றம் இவைகளே.


இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்களாக நான் கருதுவது புத்தகங்களும் ,திரைப்படங்களும் தான். அதனாலேயே வித்தியாசமான கலாச்சாரங்களையும், வெவ்வேறு காலகட்டங்களையும்,அந்தந்த காலகட்டத்தின் ரசனைகளையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கக்கூடிய புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடித்தேடி பார்க்கத் தொடங்கியிருக்கின்றேன்…!!

என்னாலியன்றவரையிலும் எனக்குப் புரிந்தவரையிலும் அவைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்கின்றேன்…!! உங்களுக்குப் பிடித்தமான,மேற்சொன்ன வரையரைக்குள் வருகின்ற திரைப்படங்களையும், புத்தகங்களையும் பற்றி பின்னூட்டங்களில் மறக்காமல்  பகிர்ந்து கொள்ளுங்கள்…!!
Images Courtesy: Original uploaders

திங்கள், 18 மார்ச், 2013

பாலாவின் ‘பரதேசி’


பாலாவின் பரதேசி பார்த்தாகிவிட்டது. ஊர் உலகமே படம் பற்றி நிறைய பேசவும் எழுதவும் செய்கின்றார்கள். எனக்கும் இந்த படம் பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

முதலில் ஆங்கிலத்தில் ‘Red Tea’யாக எழுதப்பட்டு பின்பு தமிழில் ‘எரியும் பனிக்காடு’-ஆக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தின் முழுமையான தழுவலாக இந்த படம் இல்லை. ஆதலால் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பது நலம். தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக பஞ்சம் பிழைக்கச் சென்று ஆங்கிலேயர்களின் கொடுமைகளுக்கு ஆளான மக்களின் கதை என்ற அடிப்படையை மட்டும் எடுத்துக்கொண்டு அதன்மீது ஒரு திரைக்கதையினைக் கட்டமைத்திருக்கின்றார் பாலா.

படம் வெளிவரும் முன்பு வெளியிடப்பட்ட டீசரை பார்த்துவிட்டு கொஞ்சமும் புரிதல் இல்லாமல் இயக்குனர் பாலாவை இந்தாளு ஒரு சைக்கோ என்று பேசியவர்களெல்லோரும் படம் பார்த்தபின் அந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றியிருப்பார்கள். பாலாவின் Perfection ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகின்றது. கதை என்றவகையில் கொஞ்சம் அழுத்தமில்லாமல் சோகையாகிப்போனது வருத்தமே. ஆனாலும் ஒரு தேயிலைத்தோட்ட அடிமைகளாகச் சென்றழிந்த மக்களின் வாழ்வைப்பற்றிய குறிப்பிடத்தக்க ஆவணமாக ’பரதேசி’ நிச்சயம் திகழும்.

அதர்வாவுக்கு இந்தப் படம் ஒரு மைல்கல். அப்பாவி ஒட்டுப்பொறுக்கி ‘ராசா’வாக அப்படியே அள்ளிக்கொண்டு போகின்றார். இறுதியில் பாறை மீது உட்கார்ந்துகொண்டு ”கொஞ்சம் இரக்கம் காட்டுங்க நியாயமாரே” என்று கதறும்போது நம்மைக் கலங்கடிக்கின்றார். கங்காணியாக நடித்திருக்கும் இயக்குநர் ஜெர்ரி, அங்கம்மாவாக வரும் வேதிகா, இரண்டாம் பாதியில் வரும் தன்ஷிகா, கருத்தக்கன்னி ரித்விகா, சாலூர் ராசாவின் கூன் பாட்டி, சோக்காளி ஊர்ப்பெரிசாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன்  என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே பாலா பட்டறையில் பட்டை தீட்டப்பட்டு மின்னுகின்றார்கள் .

ஒளிப்பதிவாளர் செழியன் பாலாவின் கண்களாகவே செயல்பட்டிருக்கின்றார். முதல் காட்சியில் தடதடவென ஓடி சாலூர் கிராமம் மொத்தத்தையும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையையும் காட்டிவிடுவதில் தொடங்கி சாலூர் மக்கள் கால்நடைப் பயணமாக சென்று தேயிலைத் தோட்டங்களினூடே தங்கள் வாழ்வைத் தொலைப்பது வரையிலுமான அத்தனைக் காட்சிகளிலும் தனித்து தெரிகின்றார்.

படத்தின் நெருடலாக குறிப்பிட வேண்டியவை என்று சொன்னால் இரண்டே விஷயங்கள் தான். ஒன்று சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு அவர்களை மதம் மாற்றிய கிறிஸ்தவ மிஷனரிக்கள் பற்றிய பகுதியை காமெடியாக்கியது. அதனைத் தவிரவும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுநிலையை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கொஞ்சமாவது முன்னேற காரணமாக இருந்தவையும் இந்த கிறிஸ்தவ மிஷனரிகள் தாம். நாவலின் அடிப்படையில் பார்த்தால் இங்கு சிவசங்கர் மாஸ்டர் ஏற்றிருக்கும் டாக்டர் கதாப்பாத்திரமே (நிஜத்தில் டாக்டர்.டேனியல்) அந்த மக்களின் துயரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியவர். 'ரெட் டீ'யை  எழுதியவரும் இவரே.அதனை இப்படி கோமாளித்தனம் ஆக்கியிருக்க வேண்டாம். நிச்சயமாக இன்னும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க வேண்டிய விஷயமிது. அதிலும் அந்த ‘அல்லேலோயா’ பாடல் படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் அழுத்தத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. ரிலாக்சேஷன் என்று நினைத்து அந்த பாடலை பாலா வைத்திருக்கலாம். (ஆனாலும் பாட்டு எனக்கு பிடித்திருந்தது ’கானா’ பாலாவின் குரலுக்காகவும் இயக்குநர் பாலாவின் நையாண்டிக்காகவும் J)

மற்றொன்று ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. அப்பட்டமான இளையராஜா சாயல் ‘அவத்தப் பையா’ பாடலும், வைரமுத்துவின் வரிகளுக்காக ‘செந்நீர்தானா’ பாடலையும் தவிர இசையைக் குறிப்பிட்டு சொல்ல வேறெதுவுமில்லை. ஷெனாயை உச்சஸ்தாயியில் அலறவிடுவது தான் உணர்வுப்பூர்வமான இசை என்று இவருக்கு யார் கற்றுக்கொடுத்தார்களெனத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் சரி this movie deserves Raja sir…!!

திரையரங்கை விட்டு வெளியேவரும்போது இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள் “இதே மத்த டைரக்டரு எவனாவது எடுத்துருந்தா ஹீரோ கங்காணியையும் வெள்ளைக்காரனையும் அடிச்சுப்போட்டுட்டு ஜனங்களையெல்லாம் காப்பாத்துற மாதிரி காட்டிருப்பானுகடா மாப்ள..! நல்லவேள பாலா அப்புடி செய்யலை. செஞ்சிருந்தான்னா அது பாலா படம் இல்ல…”

அது.. அது தான் பாலா…!! இந்த மாதிரி படமெடுக்க பாலாவை விட்டா தமிழ் சினிமாவுக்கு வேற ஆளே கிடையாது.
Thank you Bala sir – For an emotional journey through the lives of thousands of people…!!

கண்டிப்பாக பார்க்கவேண்டிய இரண்டு காணொளிகள் கீழே
படத்தின் முழுமையான மேக்கிங் வீடியோ


விஜய் டி.வி-இல் வெளியான ’பரதேசி’ படக்குழுவினரின் உரையாடல்


Images courtesy: Moviegalleri.net

திங்கள், 11 பிப்ரவரி, 2013

Into the wild (2007) - அடையாளங்களைத் துறத்தல்



"Two years he walks the earth. No phone, no pool, no pets, no cigarettes. Ultimate freedom. An extremist. An aesthetic voyager whose home is the road. Escaped from Atlanta. Thou shalt not return, 'cause "the West is the best." And now after two rambling years comes the final and greatest adventure. The climactic battle to kill the false being within and victoriously conclude the spiritual pilgrimage. Ten days and nights of freight trains and hitchhiking bring him to the Great White North. No longer to be poisoned by civilization he flees, and walks alone upon the land to become lost in the wild. - Alexander Supertramp May 1992 " 


நீங்கள் யார் ? 

இந்த கேள்விக்கு எத்தனை பதில்கள் இருக்க முடியும். 

என் பெயர் இன்னது… நான் இந்த ஊரைச் சேர்ந்தவன்… இன்னார் என் பெற்றோர்… இந்த இடத்தில் படித்தவன்… இவரின் நண்பன்… இந்த இடத்தில் பணிபுரிகின்றேன்… இந்த படிப்பு படித்திருக்கின்றேன்… 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மேற்கண்ட எதுவுமே ‘நீங்கள் யார்?’ என்ற கேள்விக்கான விடையே அல்ல.நமது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், ஊர், தெரு, கல்வி, பதவி, பணியிடம் என பல காரணிகளால் நமக்கு ஏற்பட்ட/ஏற்படுத்தப்பட்ட அடையாளாங்கள்.உண்மையில் சொல்லப் போனால் இந்த கேள்விக்கு நம்மால் பதிலளிக்கவே முடியாது.தத்துவரீதியான விளக்கங்கள் இருக்கலாம்.தர்க்கரீதியான விளக்கங்கள் அளிப்பது கடினம்.

இந்த அடையாளங்கள் எல்லாமே ஒரு வகையில் உங்களை அன்றாட வாழ்வில் இணைத்து வைத்திருக்கும் பிணைப்புகள் (Commitments) என்று சொல்லலாம். திடீரென ஒரு நாள் உங்களை கட்டிவைத்திருக்கின்ற அடையாளங்கள் அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு இலக்கில்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கின்றதா?



இந்த எண்ணம் துள்ளலும் துடிப்புமான இருபத்தியோரு வயது இளைஞனுக்கு ஏற்படுகின்றது.அப்படி ஒரு பயணத்தை அவன் நிஜமாகவே மேற்கொள்கின்றான். க்ரிஸ்டோஃபர் ஜான்சன் மெக்கேண்ட்லஸ் (Christopher Johnson McCandles) எமரி பல்கலைக் கழகத்தில் தன்னுடைய பட்டமளிப்பு விழா முடிந்து வந்த அன்று முடிவு செய்கின்றான் இப்படியொரு பயணத்தை தான் மேற்கொள்ள வேண்டுமென்று.வங்கியில் எஞ்சியிருந்த சேமிப்பு மொத்தமும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி கொடுத்தாயிற்று. தான் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான அத்தனை அடையாளங்களையும், கையில் உள்ள பணத்தையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு… விரும்பிப் படிக்கும் சில புத்தகங்களையும் இயற்கையோடு இணைந்த வாழ்வில் உயிர்பிழைத்து வாழ தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னுடைய பழைய காரில் கிளம்புகின்றான். தனக்குத்தானே புதிய பெயரை (Alexander Supertramp) சூட்டிக்கொள்கின்றான்.

எந்த திட்டமிடலும் இல்லாத… எந்த கட்டுப்பாடுகளுமில்லாத… தன் வேகத்தையும் பாதையையும் தானே தேர்ந்தெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போல… நதி போல.. காற்றை போல ஒரு பயணம்…!! எத்தனை ஆச்சர்யங்கள்… எத்தனை சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும் இப்படி ஒரு பயணம்..??!! அலெக்ஸின் இறுதி குறிக்கோள் அலாஸ்கா செல்வது. காட்டின் நடுவே வாழ்வது.

ஜார்ஜியாவிலிருந்து கிளம்பும் அலெக்ஸ் அரிசோனா மாகாணத்தை அடையும்போது ஒரு திடீர் ஆற்று வெள்ளத்தில் அவனது கார் அடித்துச் செல்லப்பட்டுவிட அதன்பின் கிடைக்கும் வழிகளில்/வாகனங்களில் தனது பயணத்தை தொடர்கின்றான்.அவனுடைய பயணத்தில் அலெக்ஸ் முதலில் சந்திப்பது ஹிப்பி தம்பதிகளான ஜேன் புர்ரே (Jan Burres), ரெய்னி (Rainey) ஆகியோரை.அவர்கள் இருவரிடையேயான உறவுச் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் அலெக்ஸை அவர்கள் இருவருமே பெரிதும் விரும்புகின்றார்கள். அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவழித்தபின் மீண்டும் தன் பயணத்தை தொடரும் அலெக்ஸ் பின் தெற்கு டக்கோடா (South Dacota) மாகாணம் வந்தடைகின்றான்.அங்கு வெய்ன் (Wayne) என்ற விவசாயியுடைய வயலில் கொஞ்ச நாள் வேலை செய்கின்றான். வேறொரு குற்றத்திற்காக காவல் துறையினால் அலெக்ஸின் நண்பர் வெய்ன் கைது செய்யப்பட்டுவிட வேறு வழியின்றி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கின்றான்.



ஆற்றைக் கடக்க சிறு படகில் பயணம், பின் சரக்கு ரயில் என பலவாறாக பயணிக்கும் அலெக்ஸ் மீண்டும் அந்த ஹிப்பி தம்பதிகளை சந்திக்க நேர்கின்றது.அவர்களுடன் சில மாதங்களை கழிக்கும் அலெக்ஸ், தன் மீது காதல் கொண்டு தடுமாறும் ஹிப்பி கூட்டத்து பதின்பருவ பெண், யாருமில்லாமில்லாமல் தனிமையில் வாழ்கின்ற: அலெக்ஸின் மீது மிகுந்த பாசம் கொண்ட ஒரு முதியவர் என பலரையும் தன் பயணத்தில் சந்தித்து கடந்துவரும் அலெக்ஸ் இறுதியாக தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருக்கும் அலாஸ்கா வந்தடைகின்றான்.

அங்கு ஒரு உடைந்து போன பேருந்தை அவனது வாழ்விடமாக மாற்றிக் கொண்டு அவன் நினைத்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கின்றான். சிறிது காலத்துக்குப் பின் இயற்கையோடான அவனது போராட்டம் துவங்குகின்றது.மோசமான வானிலை காரணமாக அலெக்ஸுக்கு உணவு கிடைக்காமல் போகின்றது. கையிருப்பாக இருந்தவையும் தீர்ந்து போக அவனது உடல் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் குன்றத் தொடங்குகின்றது.பசியை அடக்க ஒரு தாவரவியல் புத்தகத்தைப் பார்த்து ஒரு காட்டுச் செடியைப் பறித்து உண்கின்றான்.பசி மயக்கத்தில் தான் பறித்தது விஷச் செடி என அறியாமல் அதை உண்டுவிடும் அலெக்ஸ் பின் புத்தகத்தைப் பார்த்தபின்பே அதனை உணர்கின்றான்.அழுது புலம்பும் அலெக்ஸ் கிட்டத்தட்ட அந்த காட்டிற்குள்ளே உடைந்த பேருந்தினுள் தான் சிறை பட்டு போனதாக உணர்கின்றான்.அந்த செடி Slow Poison போல அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பிக்கின்றது.மகிழ்ச்சி என்பது பிறரோடு பகிர்ந்து கொள்ளும்போது தான் முழுமையடைகின்றது என்பதனை உணர்கின்றான்.


அலெக்ஸ் பிழைத்தானா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.க்ரிஸ்டோஃபர் மெக்கேண்ட்லஸ் என்ற இளைஞரின் வாழ்க்கையை/உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜான் க்ராகர் (Jon krakauer) என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘Into the wild’ என்ற புத்தகமே பின்னாளில் I am Sam புகழ் ஷான் பென் (Sean Penn) திரைக்கதைஅமைத்து இயக்கி 2007ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம்.படத்தின் ஒளிப்பதிவும் Non-Linear ஆக பயணிக்கின்ற திரைக்கதையும் நிச்சயமாக ஒரு மறக்கவியலா அனுபவத்தை நமக்கு தரும்.படத்தொகுப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் இது.வசனங்கள் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவை.ஒவ்வொரு வசனமும் ஒரு Quote போலவே மிகுந்த ஆழமான வார்த்தைகளைக் கொண்டிருக்கும். படத்தில் நிஜ க்ரிஸ்ஸாகவே வாழ்ந்திருக்கும் எமைல் ஹிர்ஷ் (Emile Hirsch) பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.அத்தனை உணர்வுப் பூர்வமான நடிப்பு...!

இது நிஜம்

இது நிழல்

மொத்தத்தில்

Into the wild – அடையாளங்களைத் துறந்து அலைதலின் அழகியல்

படம் பார்க்காதவர்கள் கட்டாயம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லவும். 

Photos Courtesy: Original Uploaders

Related Posts Plugin for WordPress, Blogger...