நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

இந்தியாவைச் சுற்றிவர 80 ரயில்கள்


80trains.tmblr.com
கொஞ்ச நாள் முன்னாடி தான் 'Around India in 80 trains'ங்குற புத்தகத்த படிச்சு முடிச்சேன். ஒரு நாள் தூக்கமில்லாம கண்டபடி ஏதேதோ பயணக்கட்டுரைகள எல்லாம் தேடித் தேடி படிச்சுட்டு இருந்தப்ப இந்த புத்தகம் பத்தி ஒரு ப்லாக்ல எழுதியிருந்தாங்க. உடனே ஆர்டர் பண்ணிட்டேன் . இங்கிலாந்துல இருந்து மோனிஷா (journalist) அவங்க வேலைய விட்டுட்டு இந்தியா முழுக்க ட்ரெய்ன்ல சுத்திப் பாக்கனும்னு முடிவு பண்ணி துணைக்கு ஒரு ஃபோட்டோக்ராஃபர் நண்பனையும் கூட்டிகிட்டு வராங்க. Jules verne எழுதுன 'Around the world in 80 days'ஓட தாக்கத்துல இந்தியா முழுக்க 80 ட்ரெய்ன்கள்ல சுத்தனும்னு முடிவு பண்ணி அதுக்கான திட்டத்தோட பயணத்த தொடங்குறாங்க. 

இந்திய ரயில்வே பத்தி அவ்வளவு தகவல்கள். படிக்கப் படிக்க மலைப்பா இருக்கு.கண்டிப்பா நம்ம நாட்டோட உள்கட்டமைப்புக்கும் வளர்ச்சிக்கும் மக்களோட வாழ்க்கைநிலை முன்னேற்றத்துக்கும் ரயில்வே ஒரு மிகப்பெரிய காரணியா இருந்துருக்குன்னு தோணுது.
'Palace on wheels'னு அழைக்கப்படுற கிட்டத்தட்ட ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் மாதிரியான மகாராஜா எக்ஸ்ப்ரஸ் தொடங்கி , ஊட்டி-டார்ஜீலிங் ஆகிய இடங்கள்ல இருக்குற 'toy trains',கூட்டம் நெருக்கித் தள்ளுற மும்பை மெட்ரோ ரயில், இந்தியாவுலேயே ரொம்ப அழகான பயணப்பாதையைக் கொண்ட ரயிலான 'Mandovi express' , நடமாடும் மருத்துவமனையான 'Lifeline express'னு எவ்வளவோ விதமான ரயில்கள்...!! ரயிலை தங்களோட வாழ்க்கையின் ஒரு பகுதியா மாத்திக்கிட்ட லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பயணிகள்..!!
http://images.catchnews.com/

எத்தனையோ ரயில்கள் பத்தின தகவல்கள் இருந்தாலும், இந்த லைஃப்லைன் எக்ஸ்ப்ரஸ் உருவான விதம் ரொம்ப ரொம்ப நெகிழ வெச்சுது. இந்த ரயிலோட கதை 1981ல, வருஷம் ஐக்கிய நாடுகள் சபை அந்த வருஷத்த சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் வருஷமா அறிவிக்கும்போது தொடங்குது. அப்போ எல்லா நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்களும் ஒன்னு கூடிப் பேசுறாங்க. கிட்டத்தட்ட உலகம் முழுக்க 50 கோடி மாற்றுத்திறனாளிகள் இருக்காங்கன்னும் இதுல பாதி பேருக்கு மேல சரியான சிகிச்சை மூலமா குணப்படுத்தக் கூடியவங்கதான்னும் முடிவுக்கு வராங்க.
சரியா கவனிக்காம விட்டா இந்த 50 கோடி 2000ஆம் வருஷத்தப்ப 100 கோடியா மாறும்னு பயப்படுறாங்க. அதனால அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களோட கூட்டு சேர்ந்து இதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரணும்னு முடிவாகுது

வளரும் நாடுகளில் கண்பார்வையின்மையை தடுக்குறதுக்காக பல வழிகள்ல உதவிகள் செஞ்சுட்டு இருந்த சர்.ஜான் வில்சன் கிட்ட இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுது. பிலிப்பைன்ஸுக்கு பயணமாக இருந்த அவர இந்தியாவுக்கு வரச்சொல்லி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கேக்குறாங்க. இந்தியாவுக்கு வந்த அவரு இங்க டாட்டா குழுமத்தோட கலந்து பேசி 'Impact India' ங்குற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்குறது.

சில வருஷங்களுக்கு அப்புறம்... இந்த Impact India உடைய அப்போதைய தலைவரான செல்மா லசாரஸ் (Zelma Lazarus) அவங்க நிறுவனத்துக்கு நன்கொடையா வழங்கப்பட்ட ஒரு நவீன மருத்துவ வசதிகள் கொண்ட பேருந்தை வாங்கிக்குறதுக்காக இந்தியா வராங்க. விமானத்துல அவங்க கூட பயணம் பண்ற டாக்டர். பேட்ரிக் ரொசாரியோ, அவரு வழக்கமா மலையேற்றத்துக்காக இமாலயா வரும்போது அங்க இருக்குற கிராமவாசிகள் கிட்ட அடுத்த முறை வரும்போது அவங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள செய்றேன்னு வாக்குக் கொடுத்த விஷயத்த சொல்றாரு. அதக் கேட்ட செல்மா , அவங்களோட அந்த நடமாடும் மருத்துவமனை பேருந்த அவரைய எடுத்துக்க சொல்றாங்க. அதுமட்டுமில்லாம தானும் அவங்க கூட வர்ரதா சொல்றாங்க.

அடுத்த நாள் காலைலேர்ந்து கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் செஞ்சு முடிச்சு களைச்சுப்போயி கேம்ப் ஃபயர சுத்தி ஓய்வெடுத்துகிட்டு இருக்கும்போது , செத்துப் போனதா சொல்லி ஒரு சின்னப் பையன தூக்கிட்டு பதறியடிச்சுட்டு வராங்க ஊர் மக்கள். அந்தப் பையன பரிசோதனை பண்ண மருத்துவர்கள் அவன் சாகலைன்னும் அவனுடைய வயித்துல குடல்வால் (appendix) வெடிச்சிருக்குன்னும் கண்டுபிடிக்குறாங்க. பல மணி நேர போராட்டதுக்கு அப்புறம் அந்தப் பையனுக்கு சிகிச்சை குடுத்து பொழைக்க வைக்குறாங்க. மறுபடியும் எல்லாரும் களைச்சுப் போய் கேம்ப் ஃபயர சுத்தி உக்காந்திருக்கும் போது தூரத்துல மலை ரயிலோட சத்தம் செல்மாவுக்கு கேக்குது.

மேற்கொண்டு அவங்க வார்த்தைகள்லையே படிங்க.
"Suddenly, I said, 'How wonderful it would be if a train could come to these children.All night the idea thundered in my head. A train. A train that goes around India. A train that goes where it is needed. A train that prevents children from being crippled by polio. A train that prevents people from losing their sight to cataracts. A train...!!"

யோசிச்சவங்க அதோட நிக்காம உடனே டெல்லிக்குக் கெளம்பிப் போறாங்க. அப்போதைய ரயில்வே அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்னண்டஸ் இவங்களை சந்திக்க அஞ்சு நிமிஷம் அப்பாயின்மெண்ட் குடுக்குறாரு. செல்மா தன்னுடைய திட்டத்தை சொல்லி இதுக்கு ஒரு புது ட்ரெயின் வேணும்னு கேக்க, அதேல்லாம் முடியாது மூனு கேரேஜ் மட்டும் தான் இப்ப அப்ரூவ் பண்ண முடியும்னு சொல்றாரு.அதப் போய் பாத்துட்டு திரும்பி வாங்கன்னு சொல்லி அனுப்பி வைக்கிறாங்க. சரின்னு ஒத்துக்கிட்டு செல்மா அந்த கேரேஜ்களை பாக்க வராங்க. அவங்க கால் வெச்சு உள்ள ஏறும்போதே ஒடச்சுகிட்டு உள்ள போகுது. விதியை நொந்தபடி திரும்ப அமைச்சர பாக்க வராங்க.

“கேரேஜ்களைப் பாத்தீங்களா..?”

“பாத்தேன்.”

”சரி பண்ண எவ்வளவு செலவாகும்னு தெரியுமா ?”

“தெரியாது”

“ஒரு கோடி ஆகும். உங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கா ?”

”இல்ல. ஆனா அதையெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க இந்த கேரேஜ்களை எடுத்துட்டு போறதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க போதும்.”

“சரி அப்புறம் உங்க இஷ்டம்”

செல்மா அடுத்து மும்பைக்குக் கெளம்பிப் போறாங்க. அங்க ரோட்டரி சங்கத்துல இருந்த அவங்களுடைய மருத்துவ நண்பர்கள் சில பேர்கிட்ட உதவி கேக்குறாங்க. மருத்துவர்கள் தங்களுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி மருத்துவ உபகரணங்கள் தர்ர நிறுவனங்கள் கிட்டப் பேசி இந்த மாதிரி ஒரு நோக்கத்துக்காக சில உபகரணங்கள் தேவைப்படுது, கொஞ்சம் சலுகை விலைல தரமுடியுமான்னு கேட்க அந்த நிறுவனங்கள் ஒத்துகிட்டு தேவைப்படுற எல்லா கருவிகளையும் அனுப்பி வைக்கிறாங்க.

இலவசமாகவே...!!!

https://www.tkbsen.in/wp-content/uploads/2016/07/Lifeline-Express-16072016.jpg


ஒரு வழியா லைப்லைன் எக்ஸ்பிரஸ் 1991ஆம் வருஷம் தன்னுடைய பயணத்தைத் தொடங்குது.  Cleft lipsனு சொல்லப் படுற அன்னப்பிளவுக்கான அறுவை சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை, போலியொமைலெட்டிஸ்னு சொல்லப்பட்ற போலியாவால பாதிக்கப் பட்டவங்களுக்கான அறுவை சிகிச்சைன்னு இதுவரைக்கும் லட்சக்கணக்கான அறுவை சிகிச்சைகள் இந்த ட்ரெயின் மூலமா செய்யப்பட்டிருக்கு. இன்னைய தேதி வரைக்கும் கிட்டத்தட்ட 10லட்சம் இந்தியர்களுக்கு மேல பயனடைஞ்சிருக்காங்க. 25 வருஷங்களா தன்னுடைய பயணத்தை இந்தியாவின் குக்கிராமங்களுக்குக் கூட தன்னுடைய சேவையை வழங்கிட்டு வர்ர இந்த ட்ரெயினுக்கு இன்னொரு பேர் இருக்கு,,,!!

ஜீவன் ரேகா - தமிழ்ல உயிர் நாடி...!! எவ்வளவு பொருத்தமான பெயர் இல்ல..!!

இந்த லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் பத்தின BBCயுடைய டாக்குமெண்டரி கீழே




மோனிஷா ராஜேஷின் புத்தகத்தை வாங்க: http://goo.gl/57l2s2

லைஃப்லைன் எக்ஸ்ப்ரஸின் ப்ராஜக்டுகளுக்கு நீங்க ஏதும் பங்களிக்கனும்னு நெனச்சா : https://www.impactindia.org/make-an-impact.php


புதன், 29 ஜூன், 2016

தேவதைமொழிச் சாபம் - Soliloquy

உரையாடல்களுக்கு உடனிருக்காமல்
நினைவுகளை மட்டும் துணையிருத்தி
பறந்து போதல்
தேவதைமொழிச் சாபம்...!!

http://mangaworkshop.net/images/art/7235/27821.jpg
அன்பின் பார்ட்னர்,

நலமாகவே இருப்பாயென நம்புகிறேன். இடத்தைப் பழக்கிக் கொள்ளலும் மனிதர்களை அறிந்து கொள்ளலும் அத்தனை கடினமில்லையுனக்கு. எங்காயினும் யாராயினும் பறந்து திரிவாய் நீ... சிறகில்லாப் பட்சி...! நான் சாதாரணனல்லவோ.  நாட்களைக் கடத்தியபடி முடிவில்லாச் சாலைகளையும், எதிர்காற்றையும், இஞ்சின் உறுமலையும் உணர்ந்தபடி என்னைப் புதுப்பித்துக் கொள்கிற எனது நெடும்பயணங்களுக்காய் காத்திருக்கிறேன். காப்பி உறிஞ்சுவதை நிறுத்தவில்லை. உன் முன்னால் கொட்டிவிடும் பொருட்டு காலநேரம் பாராது சேர்த்துவைத்த கதைகளின் பாரம் தலைமேல் கனக்கிறது.ஆதலால் புத்தகங்கள் படிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன். உனக்குச் சொல்லும் பொருட்டு மூளையில் கோர்வையாக்கிய தனி நிகழ்வுகளை உதிர்த்துவிடாமல் அப்படியே காய்ந்துபோகவிட்டிருக்கிறேன்

உனக்கான மாலைநேரமாய் இருந்ததை நானும் எனது ஒரு கோப்பை காப்பியும் வலிந்திழுத்துத் தனியாய்ப் பழ(க்)க முயன்றுகொண்டிருக்கிறோம்.
நான் நல்ல கதைசொல்லியா எனத் தெரியாது. ஆனால் உன்னைக் காட்டிலும் பொறுமையாய்க் கதை கேட்கும் வேறெவளையும் எனக்குத்தெரியாது. இன்னமும் புத்தகங்கள் படிக்கிறாயா ? வாசனைகளை வியக்கிறாயா ?
மனிதப் பதர்களின் மன முரண்களை ஒற்றைப் புன்னகையில் கடந்துவிடுகிறாயா ? உனக்கான பிரத்யேகப் புன்முறுவலை யார் முகத்திலும் தேட விருப்பமில்லையெனக்கு. கிடக்கட்டும்...யாவும். அரற்றுதல் பொருட்டாய் விழுகிற வார்த்தைகளைக் கண்டுகொள்ளாதே. இந்த பொறுப்புத் துறத்தல் உன்னிடத்தில் தேவையில்லையெனத் தெரியுமெனக்கு.

அப்புறம், வார்த்தைகளின் பாரம் குறித்துச் சொன்னேனல்லவா ? அதற்காகத்தான் இந்தக் கடிதம். தாள்மடித்து உரையிலிட்டு முகவரி எழுதியனுப்புகிற மரபுக்கடிதமல்ல. கண் இமையில் ஒரு முடி உதிர்ந்தால்...பருத்தி வெடித்து பறந்த விதை கையில் அகப்பட்டால்.. கண்மூடி வேண்டியதைச் சொல்லி ஊதிப்பறக்க விடுவதுபோல் ஒன்று.
ஒப்படைப்பு, அரற்றல், ஓதல், உதறல், சிதறல்..... உளறல்..கோரிக்கை  ஏதோவொன்றெனக்கொள்..!

எனக்கான உனது வார்த்தைகளை எங்கே கொட்டிக் குவிக்கிறாய் ? கேட்பாருண்டா ? பின்னே... சிறப்பாய்ச் சொல்லிக் கொள்ளும்படி உன் இன்மை அன்றி வேறேதுமில்லை இங்கே. நான் முன்பொருமுறை உன்னிடத்தில் சொன்னது போல், நீயில்லாத வெற்றிடத்தை அற்றவைகளால் இட்டுநிரப்புதல் கூடுமா என்ன ? சக பைத்தியத்தைக் கண்டடைதல் சாதாரணமல்லவே.

போகட்டும்..!பின்னொரு யாருமற்ற பின்னிரவில் எழுதுகிறேன் உனக்கு. மகிழ்ந்திரு..! It was great running into you..!!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான். 

வெள்ளி, 17 ஜூன், 2016

Underdog கழுகு


Underdog: 

-a competitor thought to have little chance of winning a fight or contest.

-a person or group of people with less power, money, etc. than the rest of society

இப்படித்தான் அர்த்தம் வருது  இந்த வார்த்தைக்கு..!!

பொதுவா “இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் மச்சி..” அப்டின்னு மத்தவங்க மட்டம் தட்ற ஆள Underdogனு சொல்லலாம்.

விளையாட்டு, சினிமா, அரசியல் எல்லாத்துலையும் நீங்க இந்த மாதிரி ஆளுங்கள பாக்கலாம், அவங்ககிட்ட நெஜம்மாவே திறமை இருந்து சுத்தி இருக்குறவங்க மட்டம் தட்றதுனாலேயோ அல்லது சரியான வாய்ப்பு கிடைக்காததுனாலேயோ அவங்க அந்த விஷயத்த சரியா பண்ணாம இருக்கலாம்.ஆனா என்ன பிரச்சனைன்னா போராடி ஜெயிச்சு தன்னை  நிரூபிக்குறவரைக்கும் சுத்தி இருக்கிறவங்க யாருமே நம்பவும் மாட்டாங்க மதிக்கவும் மாட்டாங்க.இந்த மாதிரியானவர்களுக்கு கண்டிப்பா ஒரு நோக்கம் இருக்கும்.அதை அடியுறதுக்கான பாதை எப்படிப்பட்டது... யார் என்ன சொல்லுவாங்க... நாம சரியான திசைலதான் போறோமான்னு எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது. அதப்பத்தின கவலையும் இருக்காது.

 எனக்கு இப்படியான underdogs மேல ஒரு தனிப்பாசம் உண்டு. ஸ்கூல் படிக்கும்போது நானும் என்ன ஒரு underdogஆ நெனச்சுகிட்டது ஒரு காரணமா இருக்கலாம்.Physically ரொம்ப வீக்கான பையன். மூக்குக் கண்ணாடி வேற (1000+ பசங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஒருத்தன்மட்டும் தான் கண்ணாடி.. அப்போ எங்க ஊர்ல இதான் நெலம) So பசங்க எந்த விளையாட்டுலயும் சேத்துக்க மாட்டாங்க. சேத்தாலும் ஒப்புக்கு சப்பானி இல்லேன்னா umpire தான். இவனுங்க என்ன விளையாண்டாலும் நான் அம்ப்பயர் தான். கடுப்பா இருக்கும். திடீர்னு டெய்லியும் க்ரவுண்ட்ல ஓடலாம்னு ஆரம்பிப்பேன். ஒரு ரவுண்டு ஓடி முடிக்கிறதுக்கு முன்னாடியே மூச்சு இரைக்கும். அப்படியே மண்ல படுத்துகிட்டு அந்த ஆசைய விட்ருவேன். Kho kho டீம்ல போய் சான்ஸ் கேப்பேன். பி.டி வாத்தியார் கண்ணாடி..போடான்னு விரட்டி விட்ருவாரு. பசங்க விளையாடும்போது கூடப் போயி ஓடி விழுந்து வாரி முட்டிய தேச்சுட்டு வருவேன். 


லாங் ஜம்ப் தாண்டுறேன்னு தாண்டி   கண்ணா பின்னானு லேண்ட் ஆகி உள்ளங்கால் கிழிஞ்சு வருவேன். ஸ்கூல் க்ரவ்ண்ட் ஓரத்துல கெடக்குற டபுள் பார்ல தெனமும் போய் தலைகீழா தொங்கிகிட்டு பல்டி அடிச்சுட்டு கெடப்பேன். கையெல்லாம் தேய்ஞ்சு போவும். ஒரு கட்டத்துல கடுப்பாகி இது எதுவுமே நமக்கு வராதுன்னு முடிவு பண்ணி இலக்கிய மன்ற போட்டிகள்னு எங்க ஸ்கூல்ல நடக்குற எல்லா போட்டியிலயும் பேர் குடுத்து கலந்துக்க ஆரம்பிச்சேன். கதை, கட்டுரை, ஓவியம், பாட்டு, பேச்சு,  வினாடி-வினா, பக்தி இலக்கியங்கள் ஒப்புவித்தல், பாவேந்தர் கவிதைகள் ஒப்புவித்தல், அது இதுன்னு ஒன்னு விடாம கலந்துக்கவும் செஞ்சேன். பத்துல கலந்துகிட்டா எட்டு போட்டில கண்டிப்பா பரிசு அடிப்பேன். ரெண்டுலேர்ந்து மூனு முதல் பரிசாவது வரும். ஆண்டு விழால நம்ம பேர படிச்சு நாம ஸ்டேஜ் ஏறி பரிசு வாங்குறது இருக்கே அது ஒரு தனி சுகம். அன்னைக்கு பெத்தவங்க மத்தவங்க எல்லார் முன்னாடியும் நாம தான் ஹீரோ. அப்புறம் வருஷா வருஷம் அந்த obsession அதிகமாகி ஒரு கட்டத்துல படிப்ப விட இந்த காம்படிஷன் தான் முக்கியம்னு யோசிச்சு பன்னெண்டாவதுல புட்டுக்குற வரைக்கும் அடங்கல.

யாருக்கு எதை நிருபிக்குறதுக்காக இதப் பண்ணோம்னு யோசிச்சா இப்பவும் தெரியல. இப்ப யோசிச்சாலும் கல்லூரி, வேலை, வாழ்க்கைன்னு எந்த இடத்துலயும் என்னோட இந்த கேரக்டர் மாறவே இல்ல. எப்பவும் ஏதாவதொரு வகைல எதையோ competitive பண்ணி அதுல ஜெயிக்கிற அந்த சந்தோஷத்த அனுபவிச்சபடி போய்க்கிட்டே இருக்கேன். அது எனக்கு வெற்றியா இல்லையாங்குறதப்பத்தி மத்தவங்க என்ன யோசிக்கிறாங்கன்னு கருத்துல எடுத்துக்காம விட்ருவேன்


 ரைட்டு எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எதையாவது பாத்தா படிச்சா உடனே நம்மள அந்த எடத்து வெச்சுப் பாக்குறதுதான நம்ம புத்தி. பொதுவா biopicனாலே மொக்கையா (சில விதிவிலக்குகள் தவிர்த்து) தான் இருக்கும். அதுவும் விளையாட்டு வீரர்னா கேக்கவே வேணாம். இந்த மாதிரி underdog sports teams and sports people பத்தி ஹாலிவுட்ல நூற்றுக்கணக்கான படங்கள் வந்துருக்கு. பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட் தான்.அப்படியான ஒரு படமா நெனச்சு தான் இந்த படத்த டவுன்லோட் பண்ணேன்.

Michael Edwards. இங்கிலாந்துல சாதாரண குடும்பத்துல பொறந்த சாதாரணமான பையன் தான். ஒலிம்பிக்ல கலந்துகிட்டு நாட்டுக்காக மெடல் வாங்கனும்ங்குறது தான் கனவு. ஒரு கட்டத்துல அப்படி இப்படி மனசு மாறி Ski-jumping தான் தனக்கான sportனு முடிவு பண்றாரு. அப்பா அம்மா வழக்கம்போல பையன நெனச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க. சுத்தி இருக்குறவங்களுடைய கேலி கிண்டலுக்கு நடுவுல குளிர்கால ஒலிப்பிக் போட்டில ski-jumping தகுதி அடைய என்ன பண்ணனும்னு யோசிச்சு ரொம்ப வருஷமா இங்கிலாந்துலேர்ந்து யாருமே ski-jumping ல கலந்துக்காம இருக்குறதுனால விதிமுறைகள் மாறாம இருக்குங்குறத தெரிஞ்சுக்கிட்டு அந்த தூரத்த தாண்டிடுறாரு. ஆனாலும் இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டி இவரு ஒலிம்பிக் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணி தகுதிக்கான தூரத்த இன்னும் அதிகப்படுத்திடுறாங்க. மனச விடாம தானே பயிற்சி எடுத்து கண்டபடி விழுந்து அடிபட்டு வேறொரு வாழ்ந்து கெட்ட பயிற்சியாளர் (நம்ம வுல்வரின் புகழ் Hugh Jackman) ஒருத்தரோட உதவியால ஒரு வழியா அந்த குறிப்பிட்ட தூரத்த தாண்டி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைஞ்சு 1988ஆம் வருஷம் கனடாவுல நடந்த போட்டியில கலந்துக்குறாரு.
அவரு ஜெயிச்சாரா இல்லையா... அட்லீஸ்ட் அடிபடாம வந்து சேர்ந்தாரா... 70 மீட்டர் தாண்டுறதுக்காக பயிற்சி எடுத்துட்டு 90 மீட்டர் உயரத்தையும் தாண்டனும்னு ஆசைப்பட்டா என்னாகும்..?? அவ்வளவு கஷ்டத்துக்கப்புறம் ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டதுக்கு ஏதும் பிரயோஜனம் இருக்கா இல்லையா...?
Courtesy: historyvshollywood.com

இதையெல்லாம் படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க...!!

கடைசில நீங்களே ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி ஒரு சந்தோஷம் வரும். கொஞ்சம் எமோஷனல் பார்ட்டியா இருந்து கண்ல ரெண்டு சொட்டு தண்ணி கூட வரலாம்...!!

Eddie the eagle..!!  ட்ரெய்லர் இங்க...!!



ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

புல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1


ஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத்தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந்தாச்சு அதுக்கப்புறம்.ஆனாலும் ஆகும்பே ட்ரிப் பார்ட் 2 எழுதும்போது திரும்ப வரும்போது நடந்த ஒரு விபத்து பத்தி எழுத முடியாம தான் ஒரு மாதிரி அப்டியே மூளை block ஆகி எழுதமுடியாமப் போச்சு.விட்ட எடத்துலேர்ந்து எழுதும்போது பேச்சு வழக்குலேயே தொடர்ந்து எழுதிட்டேன்.. இனி...

======================================================================


நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட் ஆகும்பேவுக்கு சற்று முன்பு ஊருக்கு வெளியே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது.ரொம்பவும் அமைதியான இடம்.நன்றாகத் தூங்கியெழுந்த பின் காலை (மதியம்..??!!) உணவுக்குத் தயாரானோம். குறைந்தது அருகிலுள்ள இடங்களையாவது சுற்றிப் பார்த்துவிட வேண்டுமெனக் கிளம்பினோம். இதற்குள் கொஞ்சம் நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே இருந்த 'Cave walk' என்றழைக்கபடுகிற இடத்துக்குச் சென்று திரும்பியிருந்தார்கள். துபாய் சுரேஷ் அண்ணனும் அருணும் தொப்பல்லபுராவிலிருந்து 250 சொச்சம் கிலோமீட்டர்கள் நான்ஸ்டாப்பாக வந்து காலையில் எங்களோடு சேர்ந்தார்கள்.
துபாய் சுரேஷ் அண்ணன், அருண்


நான், ரத்னா அண்ணன், பேய் சுரேஷ் (இது காரணப் பெயர் :) ),மணிப்பூர் சஞ்சீப், கார்த்தி,சதீஷ் அண்ணன், அஷ்வின் மட்டும் அருகிலிருந்த ‘ஜோகிகுந்தி’ அருவிக்குக் கிளம்பினோம், எங்களோடு வழிகாட்டுவதற்காக ரிஸார்ட்டிலிருந்தே ஒரு பெரியவரை கூட அனுப்பியிருந்தார்கள், அவரையும் கூட்டிக் கொண்டு மொத்தம் நாலு வண்டிகளில் பறந்தோம். மெலிதான மழை அப்போதும் நிற்காமல் தூறிக்கொண்டிருந்தது. சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பி கொஞ்சம் கரடு முரடான பாதையில் போய் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். அட்டகாசமான அருவி..! கொஞ்ச நேரம் நின்று படமெடுத்துக்கொண்டு அடுத்த அருவிக்குக் கிளம்பினோம். ’கட்டின மடிகே’ என்று அழைக்கப்படும் அந்த இடத்துக்கு போகும் வழியே செம்ம Off-road ஆக இருந்தது. சாலையின் குறுக்கே ஓடிய ஒரு சிற்றோடையையும் கடந்து இன்னும் கொஞ்ச தூரம் போய்ச்சேர்ந்தோம். அதற்கு மேல் மழை தாறுமாறாக கொட்ட ஆரம்பித்தது.. மண் சாலை சகதியானது மட்டுமல்லாம.. பயங்கர மேடாகவும் இருந்ததால் திரும்பிவிட முடிவு செய்தோம். மழை வலுக்கும் முன்பு ரிஸார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


அஷ்வின், பேய் சுரேஷ், சஞ்சீப்

போபண்ணாவின் மஞ்சள் குதிரை 
மழையில் கொஞ்ச நேரம் வாலிபால் ஆடிவிட்டு குளியல் போட்டு தூங்கியெழுந்து அடுத்து ஆரவாரமாய் இரவு உணவையும் முடித்து ஆட்டம் போட்டு அடுத்தநாள் அதிகாலை கிளம்பத் தயாரானோம்.மலைப் பாதைகளில் பகலில் இறங்குவது தனி சுகம். அதுவும் ஓரளவு வண்டியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கற்றுக்கொண்ட பின் மிகவும் ரசித்து ஓட்டமுடியும். மதியம்போல சக்லேஷ்பூரில் ஒரு கரடு முரடான off-roadஐ கடந்து மாலை கிட்டத்தட்ட பெங்களூருக்கு முந்தைய நெடுஞ்சாலையை அடைந்தோம்.கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சோர்வுறத்தொடங்கியது.




பெங்களூர் ட்ராஃபிக்ல நாங்க ஒரு அஞ்சு பேரு மட்டும் மத்தவங்கள விட்டு பிரிஞ்சுட்டோம். மழை வேற செம்ம டார்ச்சரா இருந்துச்சு. பெங்களூரு ஹோசுர் ரூட்ல நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள போறதுக்கு இடது பக்கம் ஒரு சரிவான சின்ன பாதை அங்கங்க இருக்கும். அது நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள சர்வீஸ் ரோட்ல இறங்குறதுக்கு மட்டும் தான். ஊர்களுக்கு உள்ளேர்ந்து நெடுஞ்சாலைக்கு வரவங்களுக்கு வேற மாதிரியான, சிக்னலோட இணைப்பு சாலைகள் இருக்கும்.

ஆங்... என்ன சொல்லவந்தேன்னா... இந்த மாதிரி ஊருக்குள்ள இறங்குற சின்ன ரோடு இருக்குல்ல... அதுலேர்ந்து முழுவேகத்துல ஒரு வண்டி ராங் ரூட்ல பறந்துகிட்டு வந்துச்சு.. எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே புரியாம டக்குனு லெஃப்ட்ல வண்டிய சாய்ச்சு கட் பண்ணேன்.கட்டுப்பாட்ட இழந்து வந்த வேகத்துல என் வலது ஹாண்டில்பார்ல இடிச்ச அந்தாளு அப்டியே எனக்கு பக்கத்துல வந்த தீனோட வண்டி இடது ஹாண்டில்பார்ல ஒரு இடி இடிச்சாரு.. தீன் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குங்குறதனால அவரும் சுதாரிச்சு ரைட்ல ஒரு ஷார்ப் கட் பண்ணி தப்பிச்சாரு. மூனாவது இம்பாக்ட் எங்க ரெண்டு பேருக்கு பின்னாடி வந்த அருண் வண்டில. 1 2 3ன்னு ஒரு zig zag மூவ்மெண்ட்ல.. அருண் சுதாரிக்கல. அருணுடைய இடது கை மணிக்கட்டுல மோதி அந்த ஆள் தனியா அவரோட ஸ்டார் சிட்டி வண்டி தனியா போய் விழுந்தாங்க.


அருண் வண்டி டெஸர்ட் ஸ்டார்ம் 500, so அவன் இருந்த எடத்துலேர்ந்து ஒரு அடி அசையல. ஆனா இடது கை சுண்டு விரல் மூட்டு ஒடஞ்சு ரெண்டு இன்ச் உள்ள போய்டுச்சுன்னு அவனுக்கு தெளிவா தெரிஞ்சுச்சு. ஒரு நிமிஷம் எங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல. இருட்டு.. மழை.. ஹைவே வேற... வண்டிய அப்டியே ஸ்டாண்ட் போட்டுட்டு கீழ விழுந்த அந்த ஆள தூக்க கிட்ட போனோம். கைலி கட்டியிருந்ததனால ரெண்டு கால் முட்டியிலயும் சிராய்ப்பு.. செம்ம போதை.. தள்ளாடி தள்ளாடி எழுந்தவன தூக்குனது மணிப்பூர் பையன் சஞ்சீப் தான். அந்தாளு செம்ம குடிச்சிருக்கான்னு தெரிஞ்சதும் சஞ்ஜீப்புக்கு செம்ம கோவம். This fucker is full drunk. Tell me fucker.. Are you drunk..are you drunk னு கேட்டுகிட்டே ரெண்டு அறை விட்டான். நான் என்ன பண்றதுன்னு புரியாம அருண எப்டி கூட்டிட்டு போறதுன்னு தெரியாம பேயறஞ்ச மாதிரி நின்னுட்டு இருந்தேன். அதுக்குள்ள அந்த ஆள் “ டேய் ...**@@யாப் பசங்களா என்ன அடிச்சுட்டீங்கள்ள..இருங்கடா வரேன்னு எறங்கி ஊருக்குள்ள நடக்க ஆரம்பிச்சான். சஞ்சீப் உடனே guys..lets get the fuck outta here.. on the bikes.. come on ன்னு கத்துனான்... அதுக்குள்ள எங்களுக்காக கிருஷ்ணாகிரிக்கு முன்னாடி ஒரு பெட்ரோல் பங்க்ல காத்துகிட்டிருந்த மத்தவங்களுக்கு ஃபோன பண்ணி தீன் விஷயத்த சொல்லியிருந்தாரு. எல்லாரும் அவங்கவங்க வண்டில ஏறுனோம்... என் வண்டி ஸ்டார்ட் ஆகல பேட்டரி டவுன். செல்ஃப் எடுக்கல.. கிக்கரும் வேல செய்யல...நான் காலை உந்தி உந்தி வண்டிய தள்றேன்.. தீன் வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு கத்துறேன்...


சஞ்சீப் இன்னொரு வண்டி பில்லியன்லேர்ந்து எறங்கி man... put it on second gear and release the clutch.. I'll pushனு கத்திகிட்டே வண்டிய வேகமா தள்ளுனான். தீன் ஒருபக்கம் டோ பண்ற மாதிரி காலால தள்ளிகிட்டே வந்தாரு ஒரு வழிய வண்டி ஸ்டார்ட் ஆகி எல்லாரும் 6கிலோமீட்டருக்கு அடுத்து எங்களுக்காக காத்திருந்த ரைடர்ஸோட வந்து சேர்ந்தோம். அருண் ஒடஞ்ச விரலோடவே வண்டியோட்டிட்டு வந்திருந்தான். ரொம்ப பதட்டமா இருந்தான்.அவன் backup support கார்ல ஏத்திவிட்டுட்டு வேற ஒரு டெக்னீஷியன் அருண் வண்டிய ஓட்டிட்டு வந்தாரு. எல்லாருமே பதட்டத்துல தான் இருந்தாங்க. மழை..குளிர்..பயம்...எல்லாம் சேர்ந்து எனக்கு உடல் நடுங்க ஆரம்பிச்சுது ஆக்ஸிலேட்டரை முறுக்க முடியல.. ஹரி நான் ஸ்வீப் பண்றேன்னு சொல்லிட்டு கடைசில வந்தாரு. ஹெல்மெட் வைசர் வேற condensationனால கண்ண மறைக்க ஆரம்பிச்சுது நான் வைசர தொறந்துட்டு முகத்த தொடச்சபடி பொறுமை ஓட்டிகிட்டே வந்தேன். ஒரு எடத்துல ஹரி வண்டிய ஓரம்கட்டி நிறுத்த சொன்னாரு. நான், ஹரி, ரிஷி மூனு பேரும் மட்டும் ஓரமா நின்னுட்டோம் மத்தவங்க எல்லாம் முன்னாடி போய்ட்டு இருந்தாங்க. ஹரி என் ஹெல்மெட்ட வாங்கி வைசர க்ளீன் பண்ணி மாட்டிக் குடுத்தாரு. உங்களால ஓட்ட முடியுமா சுதர்சன்.. இல்ல கார்ல வரீங்களான்னு கேட்டாரு. ரிஷியும் என்னாச்சு மச்சி முடியலையான்னு கேட்டான். இல்ல.. மழை வேற நான் பொறுமையாவே வரேன்னு சொன்னேன். ரிஷி உடனே ஹரி கிட்ட “நான் இவன கூட்டிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்கன்னு” ஹரிய அனுப்பி வெச்சான். என்கிட்ட வந்து ”மச்சான்..ஒன்னும் பயப்படாத ஒன்னும் இல்ல.. வண்டிலாம் ஸ்லிப் ஆகாது... காத்து கொஞ்சம் கொறஞ்சு இருக்கும்..அதனால friction கெடைக்கும். நீ என் டெயில் லாம்ப்ப மட்டும் பாத்து ஃபாலோ பண்ணிட்டு வா.. நான் பொறுமையாவே போறேன்”னு சொன்னான்.

நானும் சரின்னு ஒத்துகிட்டு அவன ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். ஒரு 10-15 கிலோமீட்டர் வரைக்கும் 70கிமீ தாண்டல.அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வேகத்த அதிகரிக்க ஆரம்பிச்சான்.என்னாலையும் அத உணர முடிஞ்சுது. 80..85..90..95..100..ன்னு ஒரு வழியா வேகம் பிடிச்சுது என் வண்டி. மழை கொட்ட ஆரம்பிச்சுது. ரிஷி பின்னாடி வந்து எனக்குப் பக்கத்துல கட்டி விரலை உயர்த்துனான்.அப்டியே கைய காமிச்சு இன்னும் போ மச்சான்..இப்டியே போ..விட்றாதன்னு கத்தி சொன்னான்... முறுக்குனேன் நான் 100..110..115... மழையும் தெரியல ஒன்னும் தெரியல... ஒவ்வொரு வண்டியா 16+ வண்டிகளையும் தாண்டித் தாண்டி லீட் கிட்டவே போய்ட்டேன் ரிஷியும்..ஹரியும் கூடவே வந்து எனக்கு கைய உயர்த்தி செம்மன்னு சிக்னல் காட்னாங்க. மூட் மாறி சிரிப்பு வந்துச்சு. மறுபடியும் ஆக்ஸிலேட்டர ஒரு முறுக்கு மேல்மருவத்தூர் வரைக்கும் அதே formல வந்து சேர்ந்தேன்.

ரிஷி...!!
இந்த எடத்துல ரிஷி பத்தி சொல்லியே ஆகனும்.அவன் ஒரு horse trainer.அதிகம்
பேச மாட்டான்.லாரி ஸ்டியரிங் மாதிரியா ஒரு பெரிய ஹேண்டில்பார் வெச்ச Thunderbird 500 தவிர ஒரு Yamaha R1 (R15 அல்ல..இது 1000cc)ம் வெச்சுருக்கான். ட்ராக் ஓட்ற ப்ரொஃபஷனல் ரேசர்/ரைடர்.எனக்கு மலைப்பாதைகள் மேல இருக்குற பயத்தைப் போக்குனது தொடங்கி..wet road riding... வண்டிய கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுருக்குறது... bends போடுறதுன்னு பல விஷயங்கள்ல எனக்கு குரு இவன் தான். ரைட் அப்போ.. பேய் சுரேஷ் தோனின்னா...இவன் சச்சின்... செம்ம classy rider. இந்த ட்ரிப்புக்கு அப்புறம் தான் ரிஷி இன்னும் நெருக்கமானான்.


மழை விட்டுருந்ததனால எல்லாரும் அவங்கவங்க ஈர ஆடைகள மாத்திகிட்டு காஃபி..டீ குடிச்சபடி உக்காந்திருந்தோம். கடைசி 100 சொச்சம் கிலோ மீட்டர்கள். ஒரு வழியா அதிகாலை மூனு மணி வாக்குல சென்னை வந்து சேர்ந்தோம். வழக்கம்போல ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட்ல எல்லாரும் ஃபோட்டொ எடுத்துகிட்டு ஒவ்வொருத்தரும் அடுத்த ரைட்ல சந்திப்போம்னு ஹக் பண்ணிட்டு தனித்தனியா பிரிஞ்சு கெளம்புனோம். 4.00 மணி வாக்குல கே.கே நகர் வந்து சேர்ந்தேன் நான்,.. மனசு நடந்தத எல்லாம் அசை போட்டபடி இருந்துச்சு..செம்ம களைப்போட அடுத்த ரைட எதிர்பார்த்தபடி தூங்கிப்போனேன் நான்.


Related Posts Plugin for WordPress, Blogger...