நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 3 மார்ச், 2019

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

 
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.

எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்ற வரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம்.  ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு. 
- ஜெயமோகன் (சுபிட்ச முருகன் நாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து)
சரவணன் சந்திரன் எழுதத் தொடங்கி முதல் புனைவு வெளிவந்த போது, நிறைய பேர் அவருடைய எழுத்தில் சாருவுடைய தாக்கம் நிறையவே இருப்பதாகச் சொல்வார்கள். அவரிடமே கேட்கும்போதும், ”அது அந்த ஃபார்ம் தான் தம்பி. ஆனா உள்ளுக்குள்ள மொத்தமா வேற தான்.“ என்று சொல்வார். சாருவும் சரவணன் சந்திரனின் படைப்புகளை அறிமுகப்படுத்தியும் விதந்தோதியும் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், இந்த நாவலுக்கு ஜெயமோகனின் முன்னுரை எனும்போதே நான் யோசித்தேன், இவருடையது முற்றிலும் வேறுபட்ட தளமாயிற்றே என. சுபிட்ச முருகன் வாசித்து முடிக்கையில் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டிருந்தது.

ச.ச வின் புனைவுகளில் ஒரு பொதுத்தன்மை இருக்கும் .தன்மையில், பெரும்பாலும் கதைசொல்லியின் பார்வையிலேயே நிகழ்கிற கதையில் அவர்களுடைய பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. அச்சம், வெறுப்பு, வஞ்சம், ஆசை, காமம், சாபம், போதை என ஏதோவொரு உணர்வால் சூழப்பட்டு மனச்சுழலில் தன்னிலை மறந்து வீழ்ந்து கிடப்பார்கள். தூரத்து ஒளிக்கீற்றாய் ஒன்றைப் பற்றிக் கொண்டு தேடல், பயணம் , மீட்சி என மீண்டு வருவார்கள். சுபிட்ச முருகனும் கிட்டத்தட்ட இந்த அமைப்போடு ஒத்துப் போகிற படைப்புதான். ஆனாலும், விவரணையிலும், ஜெயமோகன் முன்னுரையில் சொல்லியிருக்கிற  ’அன்றாடமின்மை’யையும் (ஆங்கில நிகர் சொல் unusualness என வைத்துக்கொள்வோம்),  கையாண்டிருக்கிற அடர்த்தியான மொழிபுமே (narrative) இந்த படைப்பினை தனித்து அடையாளப் படுத்துகின்றன.

அந்த மலையடிவார மண்ணின் வெக்கையை அவன் உணரும்போது, அவனுடைய மனப்பிறழ்வின் போதும், கால்கள் செயலிழந்து உடலை இழுத்துக்கொண்டு அவன் தரையில் தேயும்போதும் , இறுதியாய் ‘சுபிட்ச முருகனை’ கைகளிலேந்தி பெருமழையில் நனைகிறபோதும், தீயில் கருகிய மரத்தில் மஞ்சள் முகம் செதுக்கிய மரப்பாச்சியாய் இளங்கா அத்தையின் மஞ்சள் முகம் அவனைத் துரத்தும்போதும்,  சத்தியமாக நீங்களும் வெக்கையில் வியர்த்து, உடல் சோர்ந்து, பயந்து, மழையில் நனைந்து ஆற்றுப்படுத்திக் கொள்ளக்கூடும்.

எஸ்.ரா எப்போதும் சொல்கிற விஷயமுண்டு.”எத்தனை பெரிய காவியமாக எழுதப்பட்டிருந்தாலும், நம்மாட்களுக்கு அதனுடைய நாலு வரி கதைச்சுருக்கம் வேண்டும்” என. இதுதானே கதை...இதுதான பிரச்சனை...இதுதானே முடிவு..என அத்தனையையும் ஒற்றைப்படையாக அணுக முயல்வது . ஊழ்வினையாலும் பெண் சாபத்தாலும், அவனுக்கு  காமம் சார்ந்து ஏற்படுகிற உடல் தடைக்கும் பிணிக்கும் , பழனி மலையடிவாரத்தில் ஆன்மிகத்தேடலோடும் முருகனின் அருளோடும் தீர்வு கிட்டி அனைத்தும் நீங்கிவிடுகிறதென... ஒற்றைப்படையாய் கதைச்சுருக்கம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எழுத்து குறித்த விவாதங்களை எப்போதுமே கூர்ந்து கவனிப்பதுண்டு. இன்னது தான் எழுத்து; இப்படித்தான் எழுதப்பட வேண்டும்; இவ்வாறு தொடங்கி இங்கே முடிக்கவேண்டுமென ஏகப்பட்ட வரையறைகள். எல்லாமுமே நமக்கு நாமே வகுத்துக் கொண்டவை. ”நான் ஒரு கதையை மற்றவர்களுக்கு சொல்லும் பொருட்டே எழுத விழைகிறேன்.அது இன்னதென புரியவைப்பதே எனது நோக்கம்” என எழுதுவது ஒரு வகை.

“நான் உணர்ந்த கதையை...அல்லது ஒரு அனுபவத்தை ஏதோவொரு வகையில் வெளிக்கொணர்ந்தேயாக வேண்டும். நான் எழுத முடிவெடுத்து எழுத்துக்களில் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். எதையும் யாருக்காகவும் சொல்ல விழையாமல், கதைசொல்லலுக்கான சராசரி சமரசங்கள் ஏதுமில்லாமல் ,நானுணர்ந்ததை கதையினூடாகவே அதே அடர்த்தியுடன் எழுதியிருக்கிறேன். இதையே வேறு யாரும் உணர்ந்தால் அதுவே இந்த மனப்பதிவின் வெற்றி” என்ற கருதுகோளோடு எழுதுவது இன்னொரு வகை.

இதில் சரவணன் சந்திரனின் ‘சுபிட்ச முருகன்’ இரண்டாவது வகை. இதுவரை நீங்கள் அவருடைய புனைவுகளையோ கட்டுரைத் தொகுப்புகளையோ படித்திருந்து  இப்போது ’சுபிட்சமுருகன்’ வாசிப்பீர்களேயானால், அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறான ஒரு படைப்பாளியாக ’சுபிட்சமுருகன்’ அவரை முன்னிறுத்தக்கூடும்.

மேலும் சுபிட்ச முருகன் குறித்து இரண்டு வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளின் இணைப்புகள் கீழே.

நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை? - டி. தருமராஜ்

மெய்யறிதலின் அபூர்வத் தருணங்கள்! - லஷ்மி சரவணகுமார்

சுபிட்ச முருகன் - புத்தகம் வாங்க:

https://www.commonfolks.in/books/d/subitcha-murugan

வெள்ளி, 25 ஜனவரி, 2019

வீரா, தாரா & யாழினி - Absurd Love

பேரன்பின் வீராவுக்கு,

மிகத் தாமதமானதொரு பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லிவிடும் பொருட்டே உனக்காக இந்த கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன் நான். எல்லோரும் எல்லோரிடத்தும் சொல்லிக் கொள்கிற சம்பிரதாயமான ‘வாழ்த்துகள்’ என்கிற சொல்லோடு நான் சொல்லிக் கடந்துவிடக்கூடியவளல்ல நீ. சாலைகளோடி, ஊர்த்தேடி திரியும்பொருட்டே பிழைத்து வாழ்கிற, என் போலான சக நாடோடிப் பறவையன்றோ நீ.

நான் உட்பட சுற்றியுள்ள யாவரிடத்தும் நிறைய பேச முயற்சி செய்தபடியே இருக்கிறாய் நீ. உன் அழுகைக்கான காரணத்தையும் கூட நீ சொல்கிறாய். யாரும் எந்த விளக்கமும் கேட்பதில்லை உன்னை. எப்போதும் மலையுச்சிகளை நோக்கியே இருக்கிறது உன் மனம். எந்த பயணமும் முடிவுற விரும்புவதில்லை நீ. ”இன்னும் கொஞ்ச தூரம் ”... “இன்னும் கொஞ்ச தூரம்” என்றபடி காலத்தை நீட்டிக்க முயல்கிறாய்.


Kahaan hoon main ab..
Aahein, darr, khushi, raaste
Kachchi baatein, sachche vaaste
Kahin pe in sab mein
Kahaan hoon.. main ?
என சுக துக்கங்களிலும், உறவுகளிலும், பயணங்களிலும் உன்னைத் தேடியபடியே இருப்பவள் நீ.

Main ekaaki de daya ki bheekh rajaKya tujhe aabhaas bhi mera.. என உன்னை நொந்தபடி பெயர் தெரியாத ஊரில் இருளில் ஓடும்போதும் சரி,

Heera para bajaar mein
Raha chhaar laptaaye
keetehi moorakh pachhe mohe
Koi Parakhi Liya Uthaaye
என சந்தையில் கிடக்கும் வைரமான உன்னை தேடிக் கண்டடையும் ஒருவனுக்கான நம்பிக்கையை சொல்லும்போதும் சரி,

உன்னை... இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காதலிக்கத் தோன்றுகிறது.



 எத்தனை தூரம் பயணித்திருப்பாயோ ? எந்த ஊர் கடல்களில் கால் நனைத்திருப்பாயோ? எந்தெந்த மலைகளின் மீது மேகம் தொட்டிருப்பாயோ ? எந்தெந்த காடுகளின் சுனை பருகியிருப்பாயோ ? அறிந்தேனில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. நான் சேருமிடம் முந்துமோ... நீ சேருமிடம் முந்துமோ.. யாரிருக்க யார் கடப்பாரோ அறியேன். இந்த இரவின் கடுங்குளிரையும் , இன்னும் சில இரவுகளின் நட்சத்திரங்களையும் , நாளைய விடியலையும் , வெண்பனி மலைகளினூடாய் இன்னும் சில விடியல்களையும்... நாம் கைகோர்த்தபடி, நீ என் மீது சாய்ந்தபடி, நாம் ஒன்றாய் நடந்தபடி... கடக்க வாய்த்திருக்கலாம்.ஆனாலும் இந்தப் பயணத்தின் இந்தத் தருணத்தில் நானுந்தன் சக பயணி.


வெவ்வேறு பயணங்களில் வெவ்வேறு உலகங்களில் நீயும் நானும் வெவ்வேறு பெயர்களில் சந்தித்திருக்கக்கூடும்.  ’தாரா’வாக நீயிருந்த மற்றோர் உலகிலும் உன்னோடு பயணித்திருக்கிறேன் நான். வீராவைக் காட்டிலும் தாரா கொஞ்சம் தெளிவானவள் எனத் தோன்றுமெனக்கு.  எங்கோ ஒரு ஊரில் அடையாளங்களைத் துறந்து கவலைகள் மறந்து பெயர்களற்று போலியான சுயமில்லாது ஆடித் திரிந்திருக்கின்றோம்.பின்பு
கனவுலாவியான நான், இவ்வுலகில் பிழைத்தலின் பொருட்டு சிலகாலம் அணிந்து கொண்ட ’சராசரி ஆள்’ எனும் முகமூடியை அத்தனை ரசிக்கவில்லை நீ.எனது போலி முகமூடியை அடையாளங்கண்டு கிழித்தெறிந்து மீண்டும் என்னைக் கதைசொல்லியாக மாற்றியவள் நீ. 

’இதுவே நான்’ என இவ்வுலகை நம்ப வைத்த விம்பத்தை அத்தனை இலகுவாய் நீ அடித்து நொறுக்கியதை கொஞ்சமும் தாங்க முடியாமல், எனது கையறு நிலையை கோபம் வன்மமுமான வார்த்தைகளால் உன் மீது கொட்டிவிட்டு ஓட முயன்றேன்.
அப்போதும்

pal bhar Theher jaao
dil ye sambhal jaaye
kaise tumhe roka karoon
meri taraf aata
har gham phisal jaaye
aankhon mein tumko bharoon,
bin bole baatein tumse karoon,
gar tum saath ho,
agar tum saath ho..


என என்னோடு பேசி என்னை நிறுத்த முயன்றாய். எனக்கு உன்னோடு போராட எதுவுமேயில்லை. மொத்தமும் என்னோடுதான்...என்னுள்ளேதான். 

wo jise DhoonDha zamaane mein
mujhi mein tha
wo mere saare jawaabon ka
safarnaama..

நமது இந்தப் பயணம் உன்னில் தொடங்கி உன்னில் முடிந்து உன்னோடே தொடர்ந்தது.

Ho.. safarnaama..
sawaalon ka safarnaama
shuru tumse, khatam tumpe
safarnaama

You fell in love with my weirdest self and you only wanted that version of me. 



வேறோர் உலகில்...யாழினியாக உனக்கு இத்தனை குழப்பங்களும் வலிகளும் இல்லை.எளிமையான முடிவுகளையே கொண்ட சின்னச் சின்னச் சிக்கல்கள் நிறைந்தது உன் வாழ்க்கை. 'எனக்கு சில குறிக்கோள் இருக்கு..ஆனா உங்களுக்கு சொன்னா புரியாது ‘ என்றோ ‘உங்கள பாத்தா எனக்கு பயம் வரல’ என்றபடி ஒரு சிறிய அணைப்பிலோ, ‘சும்மா...ஜாலியா’ என்றபடி தலையிலடித்துக் கொள்ளும்போதோ, நீ பேசுவதும், பேசாத மற்றேனையும் இலகுவாய்ப் புரிந்து கொள்வேன். அசட்டுத்தனங்களும் அசட்டுத்தனமான துணிவும் இல்லாத வாழ்க்கை ஏது ? எல்லாவற்றையும் சிறு புன்னகையோடு கடந்துவிட இது மட்டுமே போதுமல்லவா ?

இனி இந்த உலகின் இந்தப் பயணத்தை நீ யாழினியாகவே தொடர விரும்புகிறேன்...!

//
கனவில் நின்னேனே
நான் நான் நானாய் ஆனேனே
மின்மினிப் பூ ஆனேனே

விண்மீன் துள்ளும் அருவியாய் போனேனே
வான் மேகம் பூச்செண்டாய் மாறக் கண்டேனே
கண் காணா பூட்டு ஒன்னு ஒடச்சு வந்தேனே...!

ஏன்னா ராணி நான்
தேன்னா தேனீ நான்...!! //

போ...பற...தீராமல் வாழ்ந்து தீர்,
காதலுடன்,
நான் <3 nbsp="" p="">


புதன், 24 அக்டோபர், 2018

காத்திருப்பின் முடிவும் பயணத்தின் தொடக்கமும் - Iktsuarpok

Courtesy: http://www.kenig-artwork.com/portfolio/abstract-painting/ - Non-Commerical Usage

பேரன்பின் உனக்கு,

பின்னிரவுகள் பிரத்தியேகமானவை. எத்தகைய அதீத உணர்வையும் இன்னும் தீவிரமாக்கி எவ்வகையிலேனும் நம்மைத் துன்பிக்கிற தன்மை கொண்டவை.
சிவபானம் புகைக்கிறவர்கள் எப்போதும் சொல்கிற விஷயமிது. நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும் அப்போது புகைத்தால் அது இன்னும் தீவிரங்கொள்ளுமென. கிட்டத்தட்ட பின்னிரவுகள் அப்படியானவைதான். தனிமை என்றால் உயிர் கொன்று கருந்துளையாய் முற்றும் உறிஞ்சிக்கொள்கிற தனிமையாகும். மென்சோகம் உயிர் உடைக்கிற பெருஞ்சோகமாகும். ஒரு புன்சிரிப்புடன் கூடிய மென்மனம், கூத்தாட வைக்கிற பேரானந்தம் கொள்ளும். கொஞ்சமாய் உன்மீது கொண்ட காதலோ, மொத்தமாய் உன்மத்தங் கொண்டு மோகித்து உருகவைக்கும். ஒற்றை வார்த்தைகள் கவிதைகளாகும். வெற்று வார்த்தைகள் கடிதங்களாகும். முத்தத் தீண்டல்கள் மோக மழையாகும்.

அங்ஙனமாய்க் காதலுற்று கண்மல்கி புன்சிரித்த உன்முகங்கண்ட நாளின் பின்னிரவில்... இக்கடிதத்தை எழுதத்துவங்குகிறேன். வார்த்தைகளிடத்தே தருணங்களும் , தருணங்களிடத்தே வார்த்தைகளுமாய்த் தோற்றுத் துவளுகிற பெருஞ்சுழலாய்க் கடந்தோடுகின்றன நாம் கைகோர்த்து அருகமர்ந்த மாலைகள். எதுவாகினும் எதிர்கொள்ளத் திண்ணம் கொண்டாலும், ஏதும் அவ்வாறு நிகழ்ந்து விடலாகாதென நான் வேண்டித் தொடங்கும் நெடும்பயணங்களுக்கு முன்பான மனநிலையை ஒத்தது தற்போதைய உன் மனநிலை.

இந்த என் இரவை உன் நினைவுத் தொடுகையால் நிறைத்து நிற்கிறாய் நீ. காரிருளில் கைப்பிடித்து காலம் மறந்து பறக்கக் காத்திருக்கிறேன் நான்.
உன் அருகாமையில் எப்போது முகம் பார்த்தாலும் நீ முன்பொருமுறை நாணிக் காண்பித்த உன் குழந்தைப் பருவத்துக் காணொளிக் காட்சி கண்முன்னே வந்து செல்கின்றது. எப்போதும் நீ எனக்காய் எங்காவது காத்திருப்பாயானால், கொஞ்சம் தூரத்திலிருந்தபடியே நீ எனக்காய் காத்திருக்கிருக்கின்ற அந்தக் காட்சியை நின்று நிதானித்து உள்வாங்கிக் கொள்வேன் நான். சுற்றம் முற்றும் மறந்தும், நீ தனித்ததோர் உலகத்தே புன்சிரித்து நகங்கடித்துக் காத்திருப்பாய். காற்றடிக்கும் பருவமாயின், உன் மேல் படர்ந்து  உன் ஃபெரோமோன்களின் வாசம் சுமந்தபடி கடந்து, பின் எனைத் தீண்டி நிறைக்கும் வாகில், திசைபார்த்தே உன்னருகே அமர்ந்துகொள்வேன் நான்.

கேள்விகளும் சிந்தனையும் பொருளற்று, ஒரு நிறைந்த மெளனத்தோடும் அணைப்போடும் கொஞ்சமாய் இடைவெளிவிட்டு நடக்கின்ற சிறுநடையோடுமே கடத்திக் கொண்டிருந்திருக்கிறோம் நமது சந்திப்புகளை. கடிதத்துக்கான வார்த்தைகளை ஒவ்வொன்றாய் தேடித் தேர்ந்து கோர்க்கக் கோர்க்க, வான் இருண்டு பெருமழை பொழியத்தொடங்குகின்றது. இதைப் படிக்கின்ற நொடியில் நீயுமே அந்த மழையில் நனையக்கூடும். முன்பொரு மழையிரவில் அந்த மழையும் குளிரும் எனக்களித்த கதகதப்பைப்பைப் பற்றி உன்னிடத்தில் பேசும்போது, நீ மழையிரவுகளை ஏன் வெறுக்கிறாயென என்னிடம் சொல்லியிருக்கிறாய். என்னை அணைத்ததாய் நானுணர்ந்த மழை, உனக்கு  தனிமையும் வீடுதிரும்பலுக்கான ஏக்கமும் நிறைந்ததான உன் பால்யத்து விடுதிநாட்களை நினைவுபடுத்துவதாக சொன்னாய். இனி வரும் நாட்களில் என்றாவதோர் மழைக்கால இரவில், நீ கண்டடையும் வெம்மை என்னுடைய இருப்பை மட்டுமே நினைவுபடுத்துமாயின் அதுவே போதுமானது எனக்கு.

இது நம்மிருவருக்குமேயான யுகங்களின் காத்திருப்பு. என் எல்லா நெடும் பயணங்களைப் போலவே மிகுந்த எதிர்பார்ப்போடும் தயாரிப்போடுமே நம்முடைய இந்த நீள் நெடும்பயணத்தையும் தொடங்கிக் காத்திருக்கின்றேன் நான்.  

உனக்காய் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றேயொன்று தான். இங்கு நீயோ நானோ தனிப்பயணிகள் அல்ல...! 
சகபயணிகள்...! 

வாழ்ந்து தீர்ப்போம் வா...!

தீராக்காதலுடன்,
நான்.!! <3 nbsp="" p="">



வெள்ளி, 15 ஜூன், 2018

நாடோடித்தடம் - ராஜ சுந்தர்ராஜன்


புனைவல்லாதவற்றில் இத்தனை ஈர்ப்போடான ஒரு புத்தகத்தைப் படித்தேனில்லை. தனித்தமிழ் மிளிர் கவித்துவ உரைநடை தொடக்கத்தில் சற்றே தடுக்கினாலும், போகப் போக சுவையுணர்த்தி போதையில் கிறங்கடிக்கச் செய்யும். வார்த்தைகளின் கோவையும் உணர்வுகளின் குவியலுமாய் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு தேடல்களோடு திரிந்தலைந்து, கடவுளும், கவிதையும், காமமும் நிறைந்து/நிறைத்துக் கதை சொல்லுகிற நாடோடியின் பெருங்குரல் பாடலெனக் கொள்ளலாம்.

புனைவுகளில் கூட morality தேடுபவர்களாயின் இது உங்களுக்கான புத்தகமன்று. முகத்திலறைகிற நிஜங்கள் எப்போதுமே தனிப்பட்டவர்களின் அரசியல்/ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. முன்பொருமுறை இப்புத்தகம் குறித்து  யாரோ கேட்டபோது இப்படிச் சொல்லியிருக்கிறேன், சாருநிவேதிதா முழுமையாய் கவிஞராய் இருந்து பின் பத்தியெழுத வந்திருந்தால் நிச்சயம் இப்படித்தான் இருந்திருக்குமென.

கலைச்சொற்களின் பயன்பாடு, ஆங்காங்கு தனித்தமிழ் அழகியல் அத்தனையையும் தாண்டி தனிக் கட்டுரைகளாய் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு எப்படி ஒரு பொதுவான மையச்சரடைக் கொண்டிருக்கமுடிந்தது ?
அதை என்னவென்று விளக்கிச்சொல்லக் கேட்பீர்களானால் இன்னதென சுட்டிவிடமுடியாது என்னால். Abstract என்பதற்கு அருவமானது எனப் பொருள் சொல்கிறது இணையம். அதுவே பொருத்தமா எனத் தெரியவில்லை. I'd probably say, what connects these writeups which gives us the feeling of reading a novel; is probably an abstract sense of truth...! And abstracts necessarily need not to anything. It could be physical, metaphysical, poetic, naked, truth, lust, love...! Anything...!

ராஜ சுந்தர்ராஜன் நம்மை வெவ்வேறு களங்களுக்கு அழைத்துச் சென்று கதை சொல்ல பயன்படுத்துகிற வாகனமாக/கருவியாக மொழியையும், சாலையாக/ பாதையாக அவருடைய SPIC பணியையும் உருவகப்படுத்திக்கொள்ளலாம். தோரோவ் (Hendry David Throreau) சொன்னதுபோல after all , "the world is but a canvas to our imagination". Autobiographyயை autofictionஆக எழுதிவிட்டு (taking all the liberty fiction  could offer) புனைவில் படைப்பாளியைத் தேட முற்படாதீர்கள் என அறைகூவும் படைப்பாளிகளைக் கண்ட நமக்கு, “கோழையாகையால் நான் ஓடி ஒளிகிறேன் என்பதல்ல,ஓடி ஒளிவதால் நான் கோழையாகிறேன் என்பதே சரி. இதன்படி, ஒளிவுமறைவற்று வெளிப்பட்டு இருக்கிறது எழுத்து எனது இந்த எழுத்தும்.என்றால் இதில் புனைவே இல்லையா ? மொழிநடையில் இல்லாமல் இல்லை; நிகழ்ச்சிகளில் இல்லை. ஆம்” என தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகின்றார் கவிஞர்.

ஒரு நல்ல கவிதை எழுதப்படுவதற்கு முன்போ அல்லது ஒரு மிகச்சிறந்த புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்போ ஒரு leading moment இருக்குமென்றும், அந்த நொடியில் உணர்வுகள் ஏற்படுத்துகிற வெற்றிடத்தை ஒரு புகைப்படத்தாலோ கவிதையாலோ இட்டுநிரப்புகிற முயற்சிதான் படைப்பூக்கம் என்றும் நம்புகிறேன் நான். Also it is at the creator's liberty whether he/she decides to capture a speck of that moment or let it pass. இப்படியான leading moment அல்லது ஒன்றை நோக்கிச் செலுத்துகிற நிகழ்வுகளின் விளைவுகள் , (அவை பொதுவில் வைக்கப்படும்பட்சத்தில்) படைப்பாளிக்கு நிகழ்ந்த அதே உணர்வெழுச்சியை வாசிக்கிறவருக்கும்/பார்க்கிறவருக்கும் கடத்திவிடக்கூடும். ’நாடோடித் தடம்’ முழுக்க முழுக்க அந்த மாதிரியான தருணங்கள் நிறைந்து கிடக்கின்றன. Now that I've identified those moments of creations, I'd love to see those creations now. அவருடைய கவிதைகளை இதுவரை படித்ததில்லை. நிச்சயமாகப் படிக்கவேண்டும்.

எனக்கு மிகவும் விநோதமானதொரு pattern recognition habit இருப்பதாக உணர்ந்திருக்கின்றேன். முகங்கள், அலைப் பேசி எண்கள், குரல்கள், வாசனைகள், சாலைகள் என அனைத்திலுமே மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாததொரு symmetry/சீர்மையை அடையாளம் கண்டிருக்கின்றேன். ஏதோவொரு ஒற்றுமை; ஏதோவொரு சாயல்.  ஒரு இடத்தில் இந்த சாயல் குறித்து இப்படிச் சொல்கிறார் கவிஞர்.
"சாயல் என்பது பழமையின் நீழல். எனில் பழஞ்சுவைக்கு மீளும் பயனிலை தானோ மகிழ்ச்சி இன்பம்? பண்டே கண்டு கடக்கப்பட்டது, பழையதென்று கழியாமல், இன்றுக்கும் நாளைக்கும் இலக்குவிதி ஆவதென்ன? இத்தனை கிண்ணங்கள் மாறி மாறி நான் எத்தகு போதையின் சாயலை விழைகிறேன்? கைக்கொள்ளும் ஓரொரு கிண்ணத்திலும் பழமையின் சாயல் படிந்திருக்கிறதா? அல்லது அவ்வாறு நம்பித்தான் புதைகிறோமா? Happiness: a talent or a gift? "
இங்கே மேலே சொல்லப்படுகிற போதையும் கிண்ணங்களும் abstracts. எனக்குப் பயணங்களும் புத்தகங்களுமாயும் வேறொருவருக்கு மற்றொன்றுமாயும் இருந்திருக்கலாம்.

அவருடைய மொழியாளுமையில் நான் ரசித்த மற்றொரு விஷயம் usage of negatives. ஆஃப்ரிக்க அமெரிக்கர்களுக்கென பேச்சுவழக்கில் ஒரு பிரத்தியேகமான double negatives பயன்பாடு உண்டு. உ.ம்: ain't never seen no such thing, nobody ain't never have done that. இது பற்றி உலகம் முழுக்க பல மொழி ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு signature பயன்பாடு. நினைக்கவில்லை; பார்க்கவில்லை; செய்யவில்லை என்பதற்குப் பதிலாய் நினைந்தேன் இல்லை; பார்த்தேன் இல்லை; செய்தேன் இல்லை. இலக்கண விளக்கம் அறியாவிடிலும் நான் மிகவும் நுணுக ரசித்த மொழிக்கூறு இது.

சோதிடமும், வானவியலும், மத போதனைகளும், போதையும், காமமும், பெண்களும், வேதியியலும், இயற்பியலும், அரசியலும், மொழிவளமும், இலக்கணமும், சங்க  இலக்கியமும், வேற்று மொழி படைப்புகளும் என எல்லாவற்றைப் பற்றியும் இந்த நெடும்பயணத்தினூடே தன் தனித்துவ மொழியில் பேசிக்கொண்டேயிருக்கிறார். இந்தியாவில் பெரும்பகுதியும் உலகில் கொஞ்சமும் பயணித்திருக்கின்றார்.  கவிஞருடைய அறிவின் விரிவு நிச்சயமாய் நம்மை அயர்த்தி விடுகின்றது. ராமாயணம் குறித்தும் அதன் வரலாற்றுத் தன்மை குறித்து தன் சக ஊழியருக்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய மின்னஞ்சலை இப்போது பொதுவில் வைத்தால் பல விவாதங்களைக் கிளப்பக் கூடும்.

கடைசி அத்தியாயமான ‘கனவுக்கதை மனிதன்’ நாடோடித்தடத்தின் ஒட்டுமொத்த சாரம் எனப் பட்டது எனக்கு. Observing one's astral self as a third person and writing it all down in words. பா.வெங்கடேசனின் சிறு(!)கதைகளுள் ஒன்றில் இப்படியான ஒரு narrative உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி, நிதானமாக நினைவுகளை அசைபோடுகிற திண்ணைப் பெரியவர்களின் மனநிலையிலல்லாது ஆரவாரமாய், கொண்டாட்டமாய்  நம்மோடு நினைவு பகிர்கிறார் கவிஞர்.

It has been an absolute pleasure traveling with you sir..!!

நாடோடித்தடம் - ராஜசுந்தர்ராஜன்
தமிழினி பதிப்பகம்
மறுபதிப்பு: வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் வாங்க: இங்கு


Related Posts Plugin for WordPress, Blogger...