நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 24 செப்டம்பர், 2022

அம்பரம் - போர்கண்ட நெஞ்சம்

ambaram-book-cover

 

மனிதன் தன் நிலத்தின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறான். பருவகாலங்களுக்குத் தக்கபடி நிலம் தன்னை மாற்றிக் கொண்டு முன்னகர்த்திச் செல்லும்போதெல்லாம் மனிதன் அச்சம் கொள்கிறான். மற்றங்களைப் புரிந்து கொண்டு வாழப்பழகாமல் நிலம் தன்னைக் கைவிட்டுவிட்டதான அச்சத்தில் ஓடத்துவங்கும் போது இடம்பெயர்தல் நிகழ்கிறது.

- அம்பரம்/ ரமா சுரேஷ்

 ***********************************************************************************

  உண்மையில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்பது என்ன ?   அவனுடைய நாடா ? அவன் பேசும் மொழியா ? அவன் கடைபிடிக்கும் மதமா ? அவனுடைய தொழிலா ? அவனுடைய பெற்றோரும் சுற்றத்தாருமா ? ஒரே இடத்தில் பிறந்து , வளர்ந்து, அங்கே புழக்கத்தில் இருக்கிற மொழியைப் பேசி, வாழ்ந்து, பின்பு மரித்துப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் மேற்கண்டபடி நிலையான அடையாளமாய் சொல்லிக் கொள்ள ஏதேனும் இருக்கலாம். ஆனால், உயிரையும் உடைமைகளையும் , குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும், உயிர்பிழைத்துக் கிடக்கவும் புலம் பெயர்கிறவர்களுக்கு அப்படியான நிலையான அடையாளமென்று ஏதுமிருப்பதில்லை. அவர்கள் செல்லும் எந்த நாடும், வாழும் எந்த ஊரும் , பேசும்  எந்த மொழியும், அவர்களுக்கான  நிலையான அடையாளமாக இருந்ததில்லை. அப்படி நிலையான அடையாளங்களை அவர்கள் கைக்கொள்வதையும் ஏனையோர் விரும்பியதில்லை. மனதில் நினைவுகளைச் சுமந்து கொண்டு என்றாவது ஓர் நாள் ஊர்திரும்பிவேண்டுமென அன்றாடம் ஓடிக்கொண்டேயிருக்கிற அல்லது தங்களது வேர்களை வேறிடத்தில் பதியம் போட்டுக்கொள்ளத் துடிக்கிற ஒருவனின் கதையைத் தான் அம்பரம் நாவல் பேசியிருக்கின்றது.

 ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் மோக்லி பதிப்பகம் வெளியிடும் நாவல்; அதுவும் பர்மாவை கதைக்களமாகக் கொண்ட நாவல் என்பதே போதுமானதாக இருந்தது ‘அம்பரம்’ நாவலை வாசிப்பதற்கு. 1824ல் பர்மாவில் துவங்குகிறது கதை. முதல் ஆங்கிலோ-பர்மிய போர்க்கால பின்னணியில்,  ஸ்வெடகன் பகோடா என்னும் பழமையான பெளத்த ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ‘சிண்ட் கூ’ எனும் பெரிய மணியையும் எடுத்துச் செல்ல ப்ரிட்டிஷாரின் முயற்சிகளும் அதனைத் தடுக்க முயலும் பெளத்த பிக்குகளின் முயற்சிகளுமாக காட்சிகள் விரிகின்றன. முதல் பதினைந்து பக்கங்களைப் படிக்கையில் ஒருவேளை இந்த நாவல் ஒரு முழு வரலாற்று நாவலாக இருக்குமோ என யோசிக்க வைத்தாலும், பின்பு கதை வேறு திசையில் வேறு கோணத்தில் பல்வேறு பாத்திரங்களினூடாகவும் அவர்தம் வாழ்வினூடாகவும் நகர்கின்றது.

 பர்மியனான ’மெளன் போ’வைக் காதலித்துக் கரம்பிடித்து, பின்னாட்களில் அவன் தன் தன்னையும் தன் மகனையும் விட்டு எங்கோ சென்றுவிடுகையில் மகனின் கைபிடித்து கணவனைத்தேடி புறப்படும் ஆயிஷாவின் கதை; எங்கோ மன்னார்குடியில் பிறந்து நாகப்பட்டிணத்தில் வளர்ந்து, பிழைப்புத் தேடி கப்பலில் சிங்கப்பூருக்கு செல்வதாக எண்ணிக்கொண்டு பர்மாவில் செட்டியார்கடைக்கு பெட்டிப்பையனாக வந்து சேர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தையும் சமூக அந்தஸ்த்தையும் வளர்த்துக் கொண்டு பர்மாவில் காலூன்றும் சிவராமனின் கதை: ஆயிஷா பெற்ற மகனாக இருந்து பின்பு சிவராமனின் வளர்ப்பு மகனாய் மாறுகிற நாவலின் மையப்புள்ளியான முகமக யூசுப்பின் கதை. இம்மூவரைத் தவிர்த்து மற்ற பாத்திரங்களும் அவர்களின் வாழ்வும் இம்மூவரைச் சுற்றியே எழுதப்பட்டுள்ளது.

யூசுப் ஆயிஷாவிடமிருந்து சிவராமனிடம் வந்து சேர்தல், அதன் பின் பர்மாவில் ஒரு குத்துசண்டை வீரனாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட விதம் ,காஜியாவுடனான அவனுடைய காதல்,  பாஹிர் உடனான அவனது நட்பு என பர்மாவிலும் சிங்கப்பூரிலுமாக யூசுப்பின் வாழ்வில் நடப்பவையே ’அம்பரம்’ நாவலின்  மீதிக்கதை. குத்துச்சண்டை குறித்த வர்ணணைகள் எழுதப்பட்டிருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. போலவே சிட்-போ வுக்கும்  யூசுப்பிற்குமான நட்பை எழுதியிருந்த விதமும் புதியதாய் இருந்தது. போட்டி மனப்பாங்கு கொண்ட இரண்டு முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரர்களுக்கிடையேயான நட்பை  (almost bromance !?)  இத்தனை மென் உணர்வுகளுடனான ஒன்றாக எழுதமுடியுமா என யோசிக்க வைத்திருக்கிறார் ரமா சுரேஷ் . முகமது யூசுப்பின் பாத்திரப்படைப்பு என அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலியை நினைவூட்டியது. காரணம் என்னவென நாவலை வாசிக்கையில் உணர்ந்து கொள்வீர்கள். இங்கு குறிப்பிடப்படாத மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் கதைகளும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் பின்னணியில் அமைந்த நாவல் என்று ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாதபடி, பர்மாவின் வரலாறு, ப்ரித்தானிய காலனியாதிக்கம், பெளத்த மத தத்துவங்கள், ஷின்பியு உள்ளிட்ட பல பர்மிய கலாச்சார நிகழ்வுகள் , அங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை, இந்தியா-பர்மா-சிங்கப்பூர்-சீனா-ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளின் இரண்டாம் உலகப்போர் காலத்து சர்வதேச புவியரசியல் நிகழ்வுகள்,  என அத்தனையையும் 400 பக்கங்களுக்குள் சொல்லிவிட முயன்றிருக்கிறார். 1930ஆம் ஆண்டில் பர்மாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், Prince of Wale, Repulse உள்ளிட்ட பிரித்தானிய போர்க்கப்பல்கள் ஜப்பானால் சிங்கப்பூர் படையெடுப்பின் போது மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு, ஜப்பானியர்கள் சிங்கப்பூரிலும் பர்மாவிலும் இந்திய சீன போர்க்கைதிகளை நடத்திய விதம், சீனாவின் மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது சீனாவுக்கு உதவும் பொருட்டு ப்ரிட்டிஷ் உதவியுடன் அமைக்கப்பட்ட  லெடோ சாலை (Ledo road),  INA வின் தோற்றமும் மலேயாவிலும், பர்மாவிலும் சிங்கப்பூரிலும் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர்கள் பெருமளவில் INAவில் சேர்ந்ததற்கான காரணமும், என பல உண்மை நிகழ்வுகளையும் துல்லியத்தன்மையுடன் நாவலின் போக்கில் இணைத்து சிறப்பாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ரமா சுரேஷ் அவர்கள்.

இந்த அதீதமான வரலாற்றுத் தகவல்களும் , நிலவியலை விளக்க துல்லியத்தன்மைக்காக குறிப்பிடப்படும் அளவீடுகளும் எண்களுமே ( 4000 சதுர கிலோ மிட்டர் பரப்பளவு, 300 அடி உயரம் , இங்கிருந்து கிழக்கே அங்கிருந்து வடமேற்கில்.. மாதிரியான அளவீடுகள் தொடர்ந்து வருவது) கதையை விட்டு நம்மை கொஞ்சம் வெளித்தள்ளிவிடுகின்றன. போலவே கதைக்களம் சூழல் பற்றி விவரணைகளுக்கும், கதைப் பாத்திரங்கள் அவர்களுடைய உணர்வுகள் பற்றி விவரணைகளுக்குமான சமநிலை சரியாக அமையாதது போலவும் தோன்றியது.மேலும் ‘அம்பரம்’ நாவலில் அந்தந்த  நாடுகளைச் சார்ந்த நிறைய கலாச்சார கலைசொற்களும், நிலவியல் குறிச்சொகளும் இடம்பெற்றிருக்கின்றன.  

எ.கா: 

தணக்கா (Thanaka) - பர்மியர்கள் முகத்தில் அழகுக்காக பூசிக்கொள்ளும் ஒருவகை மாவு

ஏ கலா - பர்மியர்கள் தமிழர்களைக் குறிப்பிடும் விளி

சுவெ மொடா பயாச்சி (Shwehmawdaw Pagoda) - பர்மாவின் பெகு நகரில் அமைந்துள்ள ஒரு பெளத்தமடாலயம்

இம்மாதிரியான சொற்களுக்கு எந்தவகையான அடிக்குறிப்போ (footnote)  இணையான ஆங்கில உச்சரிப்போ குறிப்பிடப்படவில்லை. நாவலில் சொல்லியிருக்கிற தகவல்கள் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ள இணையத்தை நாடுவதிலும் சிரமமிருந்தது. 

அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, கடல், உயர்ந்த வெளி, வானம், என பல பொருள் சொல்லுகிறது இணைய அகராதி. நாவல் புலம்பெயர்ந்தோரின் நிலம் சார்ந்த அடையாளம் குறித்தது என்பதால் நிலத்தைக் கடலாகவும், அடையாளத்தை ஆடையாகவும் உருவகித்துக் கொண்டால் இரண்டுக்கும் ‘அம்பரம்’ எனும் தலைப்பு பொருந்திப் போகின்றது

இறுதியாக, தன்னுடைய முதல் நாவலுக்கு இத்தனை பெரிய கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதன் வழியே தத்துவம், மதம், சர்வதேசிய அரசியல், போரினால் சாமனியர்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம், புலம்பெயர்வோரின் அடையாளச்சிக்கல்கள் ,தனி மனிதர்களின் உணர்வுப்போராட்டகளென அத்தனையையும் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் எழுத்தாளர். அவருடைய முன்னுரையிலிருந்து இந்த நாவலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்திருப்பதையும், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகப் பயணித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த உழைப்பு வீண்போகவில்லை. நாவலின் இறுதிவடிவம் சிறப்பாக அமைந்ததற்கு அந்தக் கடுமையான உழைப்பே காரணமென நினைக்கிறேன்.

 ரமா சுரேஷ் அவர்களுக்கும், பதிப்பாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் <3 

அம்பரம் | ரமா சுரேஷ் | மோக்லி பதிப்பகம் | 400 பக்கங்கள் | விலை ரூ. 350

புத்தகம் வாங்க: இணைப்பு இங்கே

References:

https://en.wikipedia.org/wiki/First_Anglo-Burmese_War

https://en.wikipedia.org/wiki/Shinbyu

https://en.wikipedia.org/wiki/1930_Bago_earthquake

https://en.wikipedia.org/wiki/Ledo_Road

https://en.wikipedia.org/wiki/Second_United_Front

https://en.wikipedia.org/wiki/Thanaka

https://en.wikipedia.org/wiki/Shwemawdaw_Pagoda

https://www.bbc.com/news/world-asia-28832296


புதன், 3 ஆகஸ்ட், 2022

லகுடு - அதிர்ஷ்டத்தின் சூதாட்டம்

 


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

குறள் 932 - அதிகாரம்: சூது

பொருள்:    ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

 நாம் தற்செயல் என்றோ அதிர்ஷ்ட்டம் என்றோ நினைக்கிற விஷயங்கள் உண்மையில்  தற்செயலானவை தானா ? நிகழ்தகவுகளைக் கொண்டு எண்களோடு விளையாடி பெரும்பாலான களங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான எல்லா வாய்ப்புகளையும் கணித்து விட முடிந்தாலும், உண்மையில் நிகழக்கூடியவை நமது தனிப்பட்ட அனுமானங்கள் எல்லாவற்றையும் மிஞ்சியவையாக இருந்தால் என்ன செய்வது ? காரண காரியங்களை ஆராய்ந்து கேள்விகளுடன் துறத்தி , சூட்சுமங்களை அறிந்துகொண்டு எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துவிட முடியுமா ? ஒரு தனிமனிதன் செய்யக் கூடியவையா இவையெல்லாம் ? 

 கால்பதித்து நடப்பதற்கு சரியான பாதையோ, கையால் பற்றிக்கொண்டு மேலெறி விட கொடிகளோ எதுவுமற்ற பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு மலையுச்சியையும் தாண்டி பறக்கத் துடிக்கிறவனின் கதை தான் லகுடு. ’லகுடு’ என்பது ஒரு வகைக் கழுகின் பெயர்; கிட்டத்தட்ட அதற்கு இரையாகிவிடக் கூடிய ஒரு சிற்றுயிரைப் போன்றவன், வேட்டைப் பறவையாக உணவுச் சங்கிலியின் மேலேயிருக்கிற லகுடாக தன்னை வறித்துக்கொள்கிறான். அவன் மனதளவில் எப்போதுமே உயரங்களை விரும்புகிற உயரப்பறத்தலை விரும்புகிற ஒரு வேட்டைப் பறவையாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்ளுகிறான்.  

காலில் கட்டியிருக்கிற சிறுநூலை வெட்டி அறுத்துவிட்டு  எப்போது பறப்பது ? எது உயரமென எப்போது தெரியும்? எனக்குக் கற்றுக் கொடுக்க ஆளில்லையா ? 

’லகுடு’- சரவணன் சந்திரன்

 சூதின் வேறொரு பெரு வடிவமான லாட்டரிச்சீட்டுகளின் உலகம் தான் கதைக்களம், அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணியாக, தெருத்தெருவாய் லாட்டரிச் சீட்டு விற்கிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டு ஏதேனும் ஒரு இழையைப் பிடித்து மேலேறிவிடத் துடிக்கிறவன் லகுடு. அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் செய்கிற சில்லறைத் தொழிலில் நியாயமும் நேர்மையும் வேண்டுமென நினைக்கிறவர் அப்பா. அதிர்ஷ்டத்தை தற்செயல் என எண்ணிக்கொண்டு அதை எதிர்நோக்கி காத்திருக்கிற இடத்தில் இருந்து தான் நினைக்கிற நேரத்தில்  விரும்புகிற ஆளுக்கு அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுத் தரக் கூடிய இடத்திற்கு நகர்கிறான் கதைசொல்லி. ஒவ்வொரு கட்டத்திலும் அந்தத் தொழிலின் நெளிவுசுளிவுகளை அறிந்து கொண்டு யாராவது ஒருவரின் கைபிடித்து மேலேறிவிடத் துடித்தவன் கடைசியில் என்னவானான் என்பது மீதிக்கதை 

உள்ளூரில் துணை நிற்கிற கதிர்வேலு, அடுத்தகட்டத்துக்கு இழுக்கிற பாலக்காடு ஜோசப் என்கிற செல்வம், லகுடை நம்பி தொழிலில் இறங்கிய அந்தப் பெயரில்லாத முதலீட்டாளர், காசு பணம் பார்த்தாலும் நிதர்சனம் பேசுகிற நண்பன் சோலைச்சாமி, வேளொரு தளத்தில் கூட நிற்கிற நண்பன் மாணிக்கவாசகம், காலைத்தாங்கி நடந்து தேய்ந்தாலும் நேர்மை பேசும் அப்பா,  அம்மா விட்டுப் போன மாதா சிலைய, கடைசியாக நிலாப் பெண் அர்ச்சனா என அத்தனை பாத்திரங்களும் மனதில் நிற்கின்றார்கள். 

உண்மையில் லாட்டரிச்சீட்டுகள் பற்றியும் அது எத்தனை பெரிய வலைப்பின்னல், எத்தனை கைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன, அதிர்ஷ்டம் யாரால் யாருக்காக நிர்ணயிக்கப்படுகிறது என்கிற  விவரங்களையும் படிக்கையில் வியப்பும் ஆயாசமுமே ஒருசேர மிஞ்சுகிறது. சரவணன்சந்திரன் அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியினால் நம்மை இந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறார்.ஒரு காலத்தில் அதிர்ஷ்டத்தின் பெயரால் எத்தனையோ உழைக்கும் மக்கள் தங்களுடைய் வருமானத்தையும் வாழ்வாதரத்தையும் லாட்டரிச்சீட்டுகளில் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில், இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமாவது லாட்டரிச்சீட்டுகளை அரசு முழுமையாக தடை செய்திருப்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளமுடிகிறது. 

 ’லகுடு’ நாவலில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தமான விஷயம் எதுவென்றால், அடிமட்டத்தில் இருக்கிற ஒருவன் கடைத்தேற்றம் பெறுவான் என்கிற முகக்குறி தெரிந்தால் சுற்றியிருப்பவர்கள அவனை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவன் பாதை மாறி போவது தெரிந்தால் ‘தம்பி இது தப்புடா, ஒதுங்கிப்போ’ என எச்சரிப்பார்கள். மனம் நிறைய நம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு வெறும் கையோடு நிற்கிறவனுக்கு தைரியம் சொல்லி சரியான நேரத்தில் கைதூக்கி விடாவிட்டாலும் வழியாவது காட்டிவிடுவார்கள். இந்த நாவல் முழுக்கவும் அந்த மாதிரி நிகழ்வுகளும் மனிதர்களும் உண்டு. என்னுடைய வாழ்விலும் வெவ்வேறு தருணங்களில் அப்படியானவர்களைக் கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரியான தருணத்தில் படிக்க வேண்டுமென இரண்டாண்டுகளாய் காத்திருந்துவிட்டு, ஒரு வழியாக 7800  அடி உயர மலைமேல்  தேயிலைத்தோட்டத்தின் குளிர் சாரலில் அமர்ந்து கொண்டு, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படித்து முடிக்கையில் ஒரு லகுடாக பறந்து கொண்டிருந்தேன். இதுவரை அவருடைய ‘அஜ்வா’ நாவலை எனக்கானதாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி அந்த இடம் ‘லகுடு’க்கு தான். சுபிட்ச முருகனிலும், அத்தாரோவிலும் எனக்கு பிடிபடாதது லகுடுவில் பிடிபட்டதாக உணர்கிறேன்.

வாழ்த்துகளும் நன்றியும் அண்ணே..! <3

லகுடு - சரவணன் சந்திரன்

கிழக்கு பதிப்பகம் | விலை ரூ. 200 | 183 பக்கங்கள்

புதன், 22 ஜூன், 2022

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்

நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்
-------------------------------------------------

முதன்முதலில் நட்சத்திரங்களை எப்போது வியந்து பார்க்கத் தொடங்கினேன் என யோசித்துக் கொண்டிருக்கிறேன் ? 

சிறு வயதில் நட்சத்திரங்களுக்கும் விட்டில் பூச்சிகளுக்கும் வேறுபாடு தெரியாதவனாக இருந்திருக்கலாம்.

வளர்ந்து, கேள்வி கேட்டு, வாசித்து, தேடத் துவங்கியபின் நட்சத்திரங்களைப் பார்த்தல் என்பது எப்போதுமே வியப்புக்குரியதாகிப் போனது

இந்த அண்டத்தின் எங்கோ ஓர் மூலையில் பல நூறாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் வாழ்ந்து ஒளிர்ந்து மறைந்து போன ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆயுளின் ஒரு கனத்தை, ஒரு நொடியின் ஒளிச்சிமிட்டலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தர்க்கப்பூர்வமாய்... இரவு வானில் நட்சத்திரங்கள் பார்த்தலென்பது கடந்தகாலத்தைப் பார்த்தல் தானே ?

சில நாட்களுக்கு முன் வீட்டின் பழைய காகிதங்களுக்கு நடுவே ஏதோ ஓர் ஆவணத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் கைகளில் தட்டுப்பட்டன 

நூறாண்டுகள் பழைய புகைப்படமொன்றும்
நூறாண்டுகள் பழைய திருமண அழைப்பிதழொன்றும்

அப்பா சொன்னார்.. என் பாட்டனுக்குப் பாட்டனாரின் குடும்பப் புகைப்படமென்றும், அவர் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் அதுவென்றும்

பழுப்பேறிய அந்த புகைப்படத்தையும் அழைப்பிதழையும் கைகளில் ஏந்துகையில் நூறாண்டுகளின் வரலாற்றையும், மூதாதையரின் கதைகளையும், அவர்தம் வாழ்வின் மிச்சத்தையும் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது 

கடந்தகாலத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது

ஒரு நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது...!

<3

சனி, 11 ஜூன், 2022

விக்ரம் - 2022 - There lived a ghost

விக்ரம் பாத்து முடிச்சு ரெண்டு மூனு நாளா திரும்பத் திரும்ப படத்த மண்டைக்குள்ள ஓட்டிப் பாத்து, ஒவ்வொரு mass moment ஆ  recollect பண்ணி சந்தோஷப் பட்டுட்டு இருந்தேன்.

பயங்கரமா பசியெடுத்து ரொம்ப நேரம் ஆன பிறகு சாப்பாடு கெடச்சா அது நமக்கு ரொம்ப பிடிச்ச உணவா இருந்தாலும் வழக்கமா சாப்பிட்ற அளவு கூட இல்லாம கொஞ்சமா சாப்ட்ட உடனள தெகட்டிடும். ஒரு சில திரைப்படங்களுக்கு ஏற்பட்ட இந்த அதீத hype அந்தப் படங்கள ஒரு சராசரி ரசிகனா ரசிக்க முடியாம பண்ணியிருக்கு.

ஒரு சில திரைப்படங்கள் தான் இதுக்கு விதிவிலக்கா அந்த hypeக்கும் குடுத்த காசுக்கும் worthஆ இருந்துருக்கு.
இந்த வருஷம், முதல்ல நான் அப்டி என்னை மறந்து தேட்டர்ல ரசிச்ச படம் 'மாநாடு'. அவ்ளோ flawless ஆ ன்னு கேட்டா இல்லைதான்... ஆனா சின்னச்சின்ன விஷயங்கள ஊதிப் பெருசாக்கி பாக்க ஆரம்பிச்சா எந்த கலைவடிவத்தையும் முழுசா ரசிக்க முடியாம போயிடுமோங்குற பயத்துல I always choose to tell myself, if you get lost in a movie for those two and half hours then it's totally worth itனு. அதுக்கப்புறம் 'விக்ரம்' படத்துக்கு தான் அப்படியொரு feel கெடச்சுது.

கமல்ங்குற பேரே excitementக்கு போதுமானதா இருந்தாலும் Lokesh and team + Fahad+ VJS +Anirudh இவங்க எல்லாருடைய பெயர்களும் சேர்ந்ததால எதிர்பார்ப்பும், excitementம் இன்னும் அதிகமா இருந்துச்சு. கடைசியா படம் வெளியாகி தேட்டர்ல பாக்கும் போது கொஞ்சம் கூட ஏமாத்தல.

Mild spoilers ahead

Masked men sequenceல தொடங்கி அமர் ஒவ்வொரு விஷயமா தேடித்தேடி investigate பண்ணப் பண்ண பரபரப்பு அதிகமாகிட்டே போனாலும் Interval block reveal க்கு கொஞ்சம் முன்னாலேயே ' இந்த sceneல நான் தான் ஹீரோ' dialogue kinda gave it away... Still I was so lost and engrossed in the movie that I was screaming my hearts out. 

Stunt choreo, cinematography, editing, இசைன்னு எல்லாமே சிறப்பா அமைஞ்சு அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயார்படுத்திகிட்டே இருந்த மாதிரி இருந்தது. Anirudh has done a tremendous job as well (இசை பத்தி டெக்னிக்கலான விஷயங்கள எனக்கு சொல்லத்தெரியாது.. My opinion is just based on the engagement factor)

 கதை,கைதி படத்துல நடக்குற சம்பவங்களை இந்தப் படத்தோட இணைச்ச விதம், flow of events, scene sequences, கடைசில ரோலக்ஸ் intro,  பத்தியெல்லாம் எல்லாருமே  நிறையவே பேசிட்டாங்க. நாம புதுசா சொல்ல எதுவுமில்ல.

ஹாலிவுட்ல Harrison Ford, Clint Eastwood, Mel Gibson, Bruce Willis, Liam Neeson, Denzel Washington, Samuel Jackson மாதிரியான ஆக்ஷன் கிழ சிங்கங்கள் நடிச்ச பல படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை RED (Retired and Extremely dangerous), Expendables, Equalizer, Shaft, மாதிரியான படங்கள் அந்த பட்டியல்ல உண்டு.

இந்த வகை படங்கள் மேல சொல்லபட்ற முக்கியமான குற்றச்சாட்டு Engagement factor இருக்குற அளவுக்கு emotional factor இல்லன்னு.. விக்ரம் படத்துக்கும் அதே தான் சொல்றாங்க... ரொம்ப shallowஆ இருக்குன்னு தான். இன்னும் dark and grim, emotionally strong plot இருந்துருக்கலாம்னு. But if the movie reaches to the mass audience and satisfies , I don't actually think there's any harm in it. 

ஆனா பிரச்சனை அது இல்ல இவ்வளவு விஷயங்கள மெனக்கெட்டு திட்டமிட்டு பண்ற படக்குழு அந்த emotional depth quotientஐயும் கொஞ்சம் effort போட்டுப் பண்ணா இதே mass appeal படத்தோட output இன்னும் பல காலம் நிலைச்சு நிக்குற ஒரு cult classicஆ மாறலாம் இல்லையா?  ஆனாலும் ஒன்னும் மோசமில்ல. எனக்கு, கர்ணன் தன்னுடைய மகனுக்காக வருந்துற பகுதியும், அதைத் தொடர்ந்த போர் கண்ட சிங்கம் பாடல் பகுதிகளுமே போதுமானதா இருந்துச்சு.

விஜய் சேதுபதியுடைய நடிப்புமே அவருடைய வழக்கமான ஸ்டைல்ல இருந்து மாறுபட்டு நல்லா இருந்துச்சு. ஒரு மாதிரி நளினமா, தன்னை குறுக்கிக் கொள்கிற உடல்மொழியோட ஒரு கொடூர வில்லன் ரோல். கடைசியா இந்த மாதிரி பாத்த வில்லன்  'அஞ்சாதே' படத்துல தயா (Prasanna nailed it - Actually Mysskin thr GOAT nailed it) VJS ஓட intro தொடங்கி கல்யாண fight வரைக்கும் மனுஷன் மெரட்டி விட்ருக்காரு. 

ஃபஹத் பத்தி சொல்லியே ஆகனும். உண்மையில கமலுக்கு இந்திய சினிமால ஒரு protégéன்னு சொல்லனும்னா அதுக்கு எல்லா வகைலயும் தகுதியான ஆள் ஃபகத் பாசில் தான். எப்படி கமல் calibreக்கு விக்ரம் role பஞ்சு முட்டாய் சாப்புட்ற மாதிரியோ ஃபகத்துக்கும் இந்தப்படம் அப்படியே.

Best reveal of the movie ன்னா இடைவேளைக்கு பிறகான அந்த female agent ஓட intro and சண்டை தான். அப்படியொரு goosebumps எனக்கு. 'Raid' ன்னு ஒரு Indonesian படத்துல பெரிய stunt sequence ஒன்னு வரும்... நான் நிறைய முறை பாத்த hand to hand combat அது. அதுக்கப்புறம் தமிழ்ல அந்தளவு intense ஆ பாத்த சண்டை sequence இதான். (இதுலயும் தலைவன் Mysskin has done a similar sambavam with Cheran and a nail cutter knife🔥🔥🔥) 

கடைசி கடைசியா விக்ரம்ல  துப்பாக்கிகள் பத்தி இவ்வளவு details வந்ததும், பலருக்கும் என்னோட all time favorite 'வட்டாரம்' படம் நினைவுக்கு வந்துருக்கு. Facebookல இயங்குற 'வட்டாரம் appreciation club' ஓட நீண்டகால உறுப்பினரா I felt so happy 😜

லோகேஷ் கனகராஜ் உடைய  execution பத்தி தான் திரும்ப திரும்ப யோசிச்சுட்டே இருந்தேன். இப்படி ஒரு ensemble castஅ வெச்சுகிட்டு எல்லா பக்கத்துல இருந்தும் வந்த அழுத்தங்கள் தன்னை பாதிக்க விடாம அட்டகாசமா ஒரு படத்த குடுத்துட்டு இன்னும் நாலு படத்துக்கு தேவையான premiseஐயும் செட்டப் பண்ணிட்டு முடிச்சுருக்காரு. Tremendous efforts and control...! ❤️ வாழ்த்துகள் 

As much as Kamal needed this we Tamil audience also needed this one after disappointing outings from big stars. And it feels wholesome to see him happy and content....! 😊❤️

Please do not miss it on theatres. நான் இன்னும் ரெண்டு மூனு முறையாவது பாப்பேன்னு நினைக்கிறேன்.

Once upon a time
There lived a ghost
He was known to be a killer
And fear the most...

He is not a myth anymore... His name is... 

விக்ரம்ம்ம்ம்ம்... Absolutelyyyy lit 💥💥💥🔥🔥🔥
Related Posts Plugin for WordPress, Blogger...