நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 6 ஏப்ரல், 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன் ஜி சின்னப்பன்



Like most human behavior, suicide is a multi causal act. Teasing out the strongest predictive variables is difficult, particularly because such internal cognitive states may not be accessible even to the person experiencing them. We cannot perceive the neurochemical workings of our brain, so internal processes are typically attributed to external sources. Even those who experience suicidal ideation may not understand why or even if and when ideation might turn into action.

-Michael Shermer , Scientific American

இவ்வுலகில் பிறந்த ஒவ்வோர் உயிரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இயற்கையாகவோ அல்லது வேறு புற காரணிகளின் பொருட்டோ தத்தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்வதை, அல்லது நின்று போவதை, நாம் மரணம்/மரணித்தல் என்கிறோம். மனிதர்களாக இருக்கும் வகையில் அவர்கள் உருவாக்கிய நினைவுகளின் வாயிலாக, அவர்தம் சுற்றத்தோடு கொண்டிருக்கிற உறவின் வாயிலாக, அவர் கொண்டிருந்த (அல்லது கொண்டிருந்ததாக அனைவரையும் நம்பவைத்த)  பண்புநலன்களின் வாயிலாக, இறந்துபோனவரைக் குறித்த ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளுகிறோம்.

இறந்துபோனவர் குறித்து நாம் உருவாக்கிக் கொள்ளுகிற மனச்சித்திரம் முழுக்கவே நமது பார்வைக் கோணமே அன்றி அவரை இன்னார் என்று விளக்கிச் சொல்கிற வரையறையாகிவிடாது. Our opinion or perception is entirely what we interpret about the deceased person rather than being the definition of their personality.

ஓர் உயிரின் மறைவு, அதை எல்லோராலும் எடுத்தாளப்படுகிற, உரிமை கோரப்படுகிற ஒன்றாகவும் மாற்றிவிடுகிறது. இறந்தவரைப் பற்றி யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; நல்லவிதமாகவோ அல்லது வெறுப்புடனோ அல்லது தனிபட்ட வெறுப்புக்கு கணக்குத் தீர்க்கும் வகையிலோ; எப்படியானாலும் மறைந்தவர் வந்து கேள்வி கேட்கப் போவதில்லையல்லவா ?

தனிப்பட்ட முறையில் மரணங்களால் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகும் ஆள் நான்; எந்த ஒரு உயிரிழப்பையும் எளிதாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.  இது குறித்து நண்பர்களோடு நிறையவே பேசியிருக்கிறேன். தெரிந்தவர்கள் என்று இல்லை; கொஞ்சம் கூட தொடர்பில்லாத யாரோ ஒருவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்டாலும் அதே உணர்வு தான்.சாலை விபத்துகள், இயற்கை மரணம், தற்கொலை, மூப்பு, நோய் என எப்படி நிகழ்ந்த மரணமாக இருந்தாலும் அதற்கு காரணங்களும் விளக்கங்களும் தேடி மனதை ஆற்றிக் கொள்ளவும் தேற்றிக்கொள்ளவும் முயல்கிற பெரும்பாலானோர் போலவேதான் நானும்.

என் அம்மா அடிக்கடி சொல்கிற விஷயம் ஒன்று உண்டு. ”செத்துப் போறவங்களுக்கு அந்த ஒரு நிமிஷ வலிதான். சுத்தியிருக்குறவங்களுக்கு அவங்களோட வாழ்நாள் முழுக்க அது வலி.” இயற்கை மரணமே இப்படியென்றால், உண்மையில் தற்கொலை முடிவை எடுக்கிறவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களை வாழ்நாள் முழுமைக்கும் தண்டித்துவிடுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியொரு தற்கொலையில் தான் தொடங்குகிறது ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’. நாம் நினைப்பதைப் போல இங்கு கூறாய்வு செய்யப்படுவது அவனுடைய உயிரற்ற உடல் அல்ல. பிரபாகரனுடைய நண்பனாகிய கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. மாறாக அவனுடைய பார்வையில், அவன் வழியாகத் தான் பிரபாகரனைக் குறித்து நாம் அறிந்து கொள்கிறோம். பிரபாகரனின் மரணத்திற்கான /தற்கொலைக்கான காரணத்தை அறியும் பொருட்டே துவங்குகிறது கதைசொல்லியின் தேடல்.

கதைசொல்லியின் ஐயங்களும், முன்முடிவுகளும், தீர்மானங்களும், அற்பத்தனங்களும், கேள்விகளும், மனவுளைச்சலும் நம்முடையதாகிவிடுகின்றன.ஒருகட்டத்தில் வாசிக்கிற நாமே கதைசொல்கிறவராக மாறிவிடுகிறோம்.  நாவலின் முதல் பாதி முழுக்க நாம் சந்திக்கிற உரையாடுகிற ஒவ்வொருவரும் தத்தமது உலகத்தில் தம்மையே முன்னிறுத்தி தங்களுடைய கோணத்தில் சொல்கிற கதைகளில் நாமும் பிரபாகரனும் துணைப் பாத்திரங்களே.

பிரபாகரனின் உற்ற நண்பனாகத் தன்னைக் நிறுவிக் கொள்கிற சதாசிவம் தொடங்கி, செவிலி நாஸியா, மணி, தாமோதரன், பாஸ்கர், லீமா, அன்வர் என அத்தனை பேரும் ஒவ்வொரு முடிச்சைப் போட்டு பிரபாகரனின் மரணத்துக்கு வெவ்வேறு சாயங்களைப் பூசிச் செல்கின்றனர்; காதல் தோல்வி, குடும்பச் சிக்கல், பணி நிமித்தமான மன அழுத்தம், போதைப் பழக்கம்,  அகந்தை, ஏன்.. அமானுஷ்ய சாயமும் கூட. எல்லா தேடல்களையும் போலவே பிரபாகரனின் மரணத்திற்கான விடைதேடலும் இடைநிறுத்தத்திற்குள்ளாகிறது.

புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் ஏழாண்டுகளுக்குப்பின்  மீண்டும் தொடர்கிற தேடலில் ஒவ்வொரு முடிச்சும் கதைசொல்லியின் பார்வையிலேயே அவிழ்க்கப்படுகிறது. இறுதியில் நாம் எதிர்பார்க்கிற விடை கிடைத்ததாவென புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு பாத்திரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைவராக வருகிற மயில்சாமியுடையது. ஒரு அரசியல் கட்சிக்கு கொஞ்சமும் குறையாத அளவு அதிகாரத்திமிரும், பதவி தருகிற மிதப்பும், உள்ளரசியலும், தனிமனித வஞ்சம் தீர்த்தலும் மருத்துவத்துறையில் (லும்) நிறைந்திருப்பதே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது

மேலே குறிப்பிட்ட எல்லா பாத்திரங்களுமே சமூகத்தின் வெவ்வேறு பண்புநலன்களைக் கொண்ட வெவ்வேறு முகங்களின் மாதிரிகள் எனச் சொல்லலாம். நாவலின் முதல்பாதியில் அவர்களுடைய தரப்பு நியாயங்களையும் விளக்கங்களையும் கேட்டறிந்து கருத்துருவாக்கம் செய்யும் நாம், இரண்டாம் பாதியில் ஒவ்வொருவர் சொல்கிற தகவலுக்கும் பின்னாலிருக்கிற தரவுகளைப் பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கிறோம். Like a detailed case study or psychoanalysis.

மயிலனின் சிறுகதைகளில் நான் தொடர்ந்து கவனித்து வருகிற கூறு ஒன்றுண்டு. பாத்திரங்களின் வழி தனிமனிதர்களின் ego குறித்தும் அவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் குறித்தும் நிறையவே பேசப்படும். அந்த ego சிறிதளவேனும் சீண்டப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ, போலி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டு சில்லறைத்தனங்கள் அத்தனையும் வெளிப்படும். பின்பு சுய பரிசோதனையும், கேள்விகளுமாய்த் தொடர்ந்து இறுதியில் தெளிவடைவதோடு , தன் அற்பத்தனத்தை தானே நொந்துகொள்கிற புரிதலோடு முடியும். இந்த படிநிலைகளின் விரிவான வடிவமாகவே ’பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலாகப் பார்க்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ’மனநலம்’ என்பதே அதிகம் பொருட்படுத்தப் படாத இன்றைய சூழலில், லூசு மெண்ட்டல் மாதிரியான சொற்கள் அத்தனை சுளுவாக புழங்குகிற சமூகத்தில், மருத்துவர்களின் (மாணவர்களின்) மன அழுத்தம் குறித்தும் அதற்கான புற காரணிகளைக் குறித்தும்  விரிவானதொரு  உரையாடலையும் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ வாயிலாகத் துவக்கி வைத்திருக்கிறார் மயிலன்.

இதுவரை மரணம் குறித்தும் உயிர்வாழ்தல் குறித்தும் இத்தனை விரிவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசிய புத்தகங்கள் எவையெனக் கேட்டால் ஆங்கிலத்தில் Atul Gawande எழுதிய Being Mortal, Paul Kalanithy எழுதிய When breath becomes air ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டு புத்தகங்களை எழுதியவர்களுமே மருத்துவர்கள்; நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள். அன்றாடம் பிறப்பையும் இறப்பையும் ஒர் நாளின் சுழற்சியில் பல முறை கடக்கிறவர்களுக்கு அவற்றின் பின்னாலிருக்கிற உணர்வுகளும் மதிப்பீடுகளும் அற்றுபோய்விடும் என்ற பொது நம்பிக்கையை மாற்றிய புத்தகங்கள் இரண்டுமே. தமிழில் இவ்வகையான எழுத்துக்கு ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ ஒரு துவக்கமாக இருக்குமென நம்புகிறேன்.

An awesome medical-psychoanalysis-thriller in Tamil..and that's a first..! நிச்சயமாகத் தவறவிடக் கூடாத புத்தகம்...!

வாழ்த்துகள் மயிலன்...! :)

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்

புதன், 4 மார்ச், 2020

Half a day for caste ? - பெரியார், ராஜாஜி, காமராஜர் , கல்வி


ஓரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எழுந்த விவாதங்கள் குறித்தும் ஓரளவு அறிந்திருப்போம். மும்மொழிக் கொள்கை, மூன்று வயது முதலே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, பல்கலைக் கழகங்களின் உரிமைகளில் மாற்றம், தேசிய அளவிலான திறனறி தேர்வுகள், என நடைமுறைச் சிக்கல் மிகுந்த விஷயங்களை முன்வைத்ததும், கல்வியின் மீது மாநில அரசுகளுக்கு இருக்கிற உரிமைகளை மறுதலிக்கும் வகையிலும் இருப்பதாக சர்ச்சைகளும் கருத்து முரண்களும் எழுந்தன.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரின் தொடர் போராட்டங்களுக்குப் பின் இந்தக் கல்விக் கொள்கை வரைவில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டதெனினும், எந்தளவு நடைமுறை படுத்தப்படுமோ அறியோம்.

இந்நிலையில் விடுதலைக்குப் பிறகான இந்தியாவில்,  முதன் முதலில் நாடு முழுவதும்  பெரும் எழுச்சிக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்ட ஒரு கல்விக் கொள்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

1953 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜி என்கிற ராஜகோபாலாச்சாரி முன்வைத்ததுதான் ’குலக்கல்வித் திட்டம்’ என்று அறியப்பட்ட ‘மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்’ (Modified System of Elementary Education - MSEE) .இந்தப் புத்தகம், ராஜாஜி முன்வைத்த கல்வித்திட்டம் குறித்தும் அதற்கு முன்னும் பின்னுமான தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் விரிவாகப் பேசிய (மறைந்த) பேராசிரியர் D.வீரராகவன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது. கட்டுரையையும் இன்னபிற தகவல்களையும் அவை வெளியான காலத்தின் பொருட்டு செப்பனிட்டு சரிபார்த்து தொகுத்து வெளியிட்ட திரு.A.R.வெங்கடாசலபதி அவர்கள், மிக விரிவானதொரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார்

முதலில் காலவரிசையில் சில நிகழ்வுகளையும்  அவை தொடர்பான சில தகவல்களையும் பார்ப்போம். அதன் பின் புத்தகத்தின் மையமான கல்விக் கொள்கை குறித்து பார்க்கலாம்.

1916 ஆம் ஆண்டு - பிராமணரல்லாதோர் கூட்டறிக்கை (Non-Brahmin manifesto) மதராஸ் மாகாணாத்தில் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ / ’நீதிக் கட்சி’ நிறுவப்படுகிறது

1917 ஆம் ஆண்டு - சேலம் மாவட்டத்தில் வழக்கறிஞர் ராஜாஜி நகராட்சி மன்ற தலைவராகிறார்

1920 ஆம் ஆண்டு - தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ராஜாஜி சென்னைக்கு குடிபெயர்கிறார்

1924 ஆம் ஆண்டு - விருதுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் காமராஜ் வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்கிறார்

1930 ஆம் ஆண்டு - காந்தியைப் பின்பற்றி ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட காங்கிரஸ் போராட்டங்களில் தொடர்ந்து முன்நின்று பலமுறை சிறை செல்கிறார் காமராஜர்.

1936 ஆம் ஆண்டு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தி அவர்களும் செயலாளராக காமராஜரும் பதவியேற்கிறார்கள்

1937 ஆம் ஆண்டு -  அப்போதைய மாகாணங்களுக்கு தன்னாட்சி (provincial autonomy) வழங்கும் பொருட்டு நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகிறார் (Premier) ராஜாஜி

அடுத்த பத்தாண்டுகளில் இரண்டாம் உலகப் போர், காந்தி முன்நின்று நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் ப்ரிட்டிஷாருக்கு ஆதரவாக முடிவெடுத்ததன் காரணமாக காந்திக்கும் ராஜாஜிக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கின்றன; காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அவருடைய செல்வாக்கு குறைகிறது. அதே வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக யார் எந்தப் பதவிக்கு செல்ல வெண்டுமென முடிவு செய்கிற அளவுக்கு காமராஜரின் கை ஓங்குகிறது.

1947 ஆம் ஆண்டு - சுதந்திர நாடாகிறது இந்தியா - பிரிவினைக்குப் பிந்தைய மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்படுகிறார் ராஜாஜி

1948 ஆம் ஆண்டு - மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குப் பின் 1950ல் குடியரசு நாடாகும் வரை, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கிறார் ராஜாஜி

1950 ஆம் ஆண்டு - தொடங்கி 1952 வரை நேருவின் அமைச்சரவையில் இடம்பிடித்தாலும், உடல் நலத்தை காரணம் காட்டி பதவி விலகுகிறார்

1952 ஆம் ஆண்டு - மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கையும், மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக்கவும் உச்சகட்டமாக பல போராட்டங்கள் வலுப்பெற்ற சூழல் அது. இந்திய குடியரசின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தேர்தலில் போட்டியிடாத ராஜாஜியை , மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தபின் முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் பிரகாசா அழைப்பு விடுக்கிறார். பதவியேற்றபின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து இரண்டாவது முறையாக மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார் ராஜாஜி.
// A new class of government servants had to be created and groomed, a class, in the words of Macaulay, of 'interpreters between us and the millions whom we govern; a class of persons, Indians in blood and colour, but English in taste, in opinions, in morals and in intellect'. Macaulay dealt the final blow to whatever native institutions of learning existed and planted modern English education instead, to train up a stratum of docile executants of the English cut off from every type of contact with their people.//
p 68 - Half a day for caste? - By D.Veeraraghavan
கல்வி குறித்தும் கிராம பொருளாதாரம் குறித்தும் காந்தி கொண்டிருந்த நம்பிக்கைகளை சுருக்கமாகப் பேசிச் செல்கிறார் வீரராகவன். நவீன தொழில்நுட்பமும், தொழிற்சாலைகளும், மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளிவிடும் எனவும், அப்படி இந்திய நாடு தொழில்துறையில் வளார்ச்சி பெற்றால் அது ஏனைய வளரும் நாடுகளை சுரண்ட நேரிடும் எனவும் காந்தி திடமாக நம்பினார். தற்சார்பு கொண்ட கிராம பொருளாதாரத்தை அமைப்பதே சுதந்திர இந்தியாவின் நோக்கம் என்றார். பெண்களுக்கெதிரான அடக்குமுறை,தீண்டாமை, சாதிக் கொடுமைகள், குழந்தைத் திருமணம், இவை ஏதுமற்ற சமூகம் அமைய வேண்டுமெனவும் அவர் விரும்பியதாக வீரராகவன் குறிப்பிடுகிறார்.காந்தி முன்வைத்த கல்விக் கொள்கைகளும் அவருடைய இந்த சமூக-பொருளாதார நம்பிக்கையைச் சார்ந்ததாகவே இருந்தது. காந்தியின் இத்தகைய கல்விக் கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டவராக விளங்கினார்  ராஜாஜி.
//His views on Varnashrama dharma were more conservative than even those of Gandhi. He believed in the continuance of the traditional family apprenticeship.However, unlike Gandhi, Rajaji did not believe in institutional education for children. Schools were prison houses, where they were imprisoning the pupils too long in the classrooms; he would be content if he could get the Madras teachers to agree only to that part of his scheme cutting down the school hours even if nothing else was possible//
p-73 - Half a day for caste  - By D.Veeraraghavan                      
1952 ஆம் ஆண்டு ராஜாஜி, மதராஸ் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்றபின், அப்போதைய கல்வி அமைச்சர் M.V.கிருஷ்ணாராவ் அப்போதைய கல்விக் கொள்கையிலுள்ள குறைகளைக் களையவேண்டுமானால ஆரம்பப் பள்ளிகளையும் அவை இயங்கும் முறையையும் ஆராய்ந்து மறுசீரமைப்பு செய்ய வேண்டுமெனவும் சொல்லிவிட்டு ஒரு புதிய திட்டத்தினை முன்வைக்கிறார். அந்த திட்டத்தின் படி ஒரு நாளில் இரண்டு ஷிஃப்டுகளில் பள்ளிகள் இயங்கவேண்டுமெனவும், மாணவர்களுக்கு அரை நாள் மாத்திரம் கல்வி கற்கவும், மீதமுள்ள அரை நாள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலை பள்ளியிலோ அல்லது பள்ளிடோடு அமைந்த பட்டறையிலோ கற்றுக் கொள்ளவும் ஏதுவாக இருக்குமென சட்டசபையில் கூறுகிறார். பள்ளிகளில் சத்துணவு வழங்கவும் அரசாங்கம் கருத்தில் கொண்டிருந்தது. அப்போது பட்ஜெட் தொடர்பாக அவையில் எழுந்த தொடர் விவாதங்களால் இந்த பிரச்சனை அவ்வளவாக கவனம் பெறவில்லை.

ஆனாலும், முதல்வர் ராஜாஜி அப்போதைய மாநில கல்வித்துறை இயக்குநரைத் (Director of Public Instruction - DPI) தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட திட்டம் தொடர்பாக தீர ஆராய்ந்து ஒரு திட்ட வரைவை உருவாக்க ஆணையிடுகிறார். அதனைத் தொடர்ந்து கல்வித்துறை இயக்குநர் கோவிந்தராஜுலு அப்போதைய இணை இயக்குநர் சுந்தரவடிவேலுவுக்கு உடனடியாக ஒரு கடிதம் அனுப்புகிறார் . முதலமைச்சரின் ஆணையின் பேரில் கிராமப்புற ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரை நாள் கல்வி கற்கவும், அரை நாள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலைப் பழகவும் ஏற்ற வகையில் ஒரு கல்வித் திட்டத்தை வடிவமைக்கப் பணிக்கப்படுகிறார்.

சுந்தரவடிவேலு கடுமையான மனப்போராட்டத்திற்கு ஆளானாலும் , இதற்கு முந்தைய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு  இதே போன்ற திட்டங்களைச்  சிறிய அளவில் செயல்படுத்த முயன்று தோல்வியுற்ற நிகழ்வுகளை விளக்கி பதில் கடிதம் எழுதுகிறார். ஆனாலும் சில மாதங்களுக்குப் பின் முதல்வர் ராஜாஜியின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியே இன்றி ,திட்ட வரைவை உருவாக்குகின்றார்.

Modified Scheme of Elementary Education (MSEE) - மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. மாணாக்கர்களுக்கான பள்ளி நேரம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரங்கள் மட்டுமே.

2. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். காலையில் ஒரு பிரிவினரும் மாலையில் ஒரு பிரிவினரும் கல்வி கற்கலாம்

3. இரு பிரிவுகளுக்கும் பொதுவான ஆசிரியர்களே பாடமெடுப்பார்கள்

4. கல்வி நேரம் அல்லாத அரை நாள் வேளையில் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும். பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில் இல்லாமல் இருந்தாலோ அல்லது குடும்பத்தொழில் ஏதுமில்லாமல் இருந்தாலோ, அந்த மாணவர்கள் ஒரு விவசாயியுடனோ அல்லது ஒரு கைத்தொழில் கலைஞருடனோ பணியமர்த்தப் படுவார்கள்

திட்டம், இன்னும் பல கூறுகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் முக்கியமானது , இந்தக் கல்வித்திட்டம் கிராமப்புற தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்கு/ பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், நகர்ப்புற மாணாக்கர்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தாதெனவும் குறிப்பிட்டதே ஆகும்.

கல்வித்திட்டத்தின் வரைவு தயாரானபின் முதலமைச்சரின் ஆணையின் பேரில், சட்டமன்றத்தில் கலந்தாலோசிக்காமல், பிற உறுப்பினர்களுக்கோ, துறை சார் நபர்களுக்கோ (அப்போதைய கல்வி அமைச்சர் உட்பட)  கூட எந்தத் தகவலும் சொல்லப்படாமல் அனைத்து செய்தித்தாள்களுக்கும், நாளிதழ்களுக்கும் இந்தக் கல்வித்திட்டம் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.

அடுத்த நாளிலிருந்தே சமூகத்தின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்குகின்றது. தென்னிந்திய ஆசிரியர்கள் சங்கம் (South Indian Teacher's Union - SITU) ,தமது எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமல்லாமல் இத்திட்டத்தை ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இத்திட்டம் குறித்த தங்களுடைய மனக்குறையை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்டுகளும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை சட்டசபையில் விவாதத்திற்கு கொண்டுவராமல் ஜனநாயகத்துக்கு எதிரான வகையில், தன்னிச்சையாக செயல்பட்டமைக்காக ராஜாஜிக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்; இத்திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
//Rajaji had always exhibited such supreme confidence in his own wisdom and intellect that he did not even for a moment think it worth consulting stakeholders. J.B Kripalani's remarks on the introduction of Basic Education are relevant here:
"It is not much the matter as the manner of introduction of his schemes that creates misunderstanding and opposition.This process of ushering in before the public. the finished product of one's own labours may be appropriate in art, it is scarcely suited for introducing practical reforms in which merely passive acquiescence is not sufficient but active cooperation and participation are of the essence." //
p-88 - Half a day for caste  - By D.Veeraraghavan
தந்தை பெரியார் தமது ‘விடுதலை’ பத்திரிக்கையில் . சேலம் திராவிட ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் திரு.A.வையாபுரி, ராஜாஜி முன்வைத்த புதிய கல்வித்திட்டத்தின் தீமைகள் குறித்து எழுதிய மிக விரிவானதொரு கடிதத்தைப் பதிப்பிக்கிறார். தொடர்ச்சியாக இந்தக் கல்வித்திட்டம் குறித்து சமூகத்தில் நிகழ்ந்த முக்கியமான உரையாடல்களையும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் ‘விடுதலை’யில் பதிவு செய்கிறார். ராஜாஜி முன்வைத்த கல்வித்திட்டத்தை குலக்கல்வித் திட்டம் எனவும் வர்ணாஸ்ரம கல்வித்திட்டம் எனவும் முதலில் குறிப்பிட்டது பெரியார் தான்.  ராஜாஜி தொடர்ச்சியாக பிராமணரல்லாதோருக்கு எதிராகச் செயல்படுவதைச் சொல்லி முதல்வராக இருந்தபோது அவர் செய்த காரியங்களைப் பட்டியலிடுகிறார் பெரியார்.
  • 1937-39 ராஜாஜி மதராஸ் மாகாணாத்தின் ப்ரீமியராக இருந்தபோது கல்விக்கான கூடுதல் வரி நீக்கம் காரணமான தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு 60 மாணாக்கர்களுக்கு குறைவாக இருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாது 2500 தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டன
  • பொருளாதரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வனத்துறை கல்லூரி மூடப்பட்டது
  • கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலின மாணவர்களுக்கான கல்வி மானியங்கள்/சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன
  • 1952-54 ஆண்டுகளில் ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோதும் 6000 தொடக்கப் பள்ளிகளுக்கு மேல் மூடப்பட்டன
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மும்முனைப் போராட்டம் தொடங்கியதும் இதே 1953 வருடத்தில் தான்.

  • மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்துக்கான எதிர்ப்பைத் தெரிவிக்க முதல்வர் ராஜாஜியின் வீட்டை முற்றுகையிடுதல்
  • கல்லக்குடி ரயில்நிலையத்துக்கு டால்மியாபுரம் என்ற பெயரை சூட்டுவதற்கான எதிர்ப்பைத் தெரிவித்து ரயில் மறியல்
  • நேரு திமுகவினரின் கோரிக்கைகளுக்கு (ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கும்படி கேட்டது) செவிசாய்க்க மறுத்து ,‘நான் சென்ஸ்’ என சொன்னதை எதிர்த்து ரயில் நிறுத்தும் போராட்டம்

இவையே மும்முனைப் போராட்டத்தின் நோக்கங்கள்.

சட்டமன்றத்தில் அத்தனை எதிர்ப்பையும் தாண்டி, எதிர்க்கட்சியின் தீர்மானங்களை மறுதலித்த ராஜாஜி,  இந்தக் கல்வித் திட்டம், மாநில அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதாலும், சட்டம் /சட்டத்திருத்தம் அல்ல என்பதாலும் அதனை உடனடியாக செயல்படுத்த ஆணையிடுவதோடு R.V.பாருலேக்கர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்து இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யவும் பரிந்துரைக்கிறார். இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல். சில மாதங்களுக்குப் பிறகு பாருலேக்கர் கமிட்டி ஆய்வறிக்கையைச் (PCR - Parulekar Committee Report) சமர்ப்பித்தபின் இந்தப் பிரச்சனை இன்னும் பூதாகாரமாக வெடித்தது.

இதன் பிறகு மாநிலம் முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பலைகளின் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, முதல்வராகப் பதவியேற்கிறார் காமராஜர். முதல் வேலையாக ராஜாஜி கொண்டுவந்த கல்வித்திட்டம் கைவிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அழகப்ப செட்டியார் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்து புதிய கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்க ஆணையிடுகிறார் காமராஜர்.

அழகப்ப செட்டியார் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு முழு மூச்சாக தொடக்கக் கல்வியை வலுப்படுத்தும் முனைப்பிலிருந்தார் காமராஜர். மத்திய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் வழங்கிய நிதியைக் கொண்டு கிராமங்களெல்லாம் ’ஒரு-ஆசிரியர்’ பள்ளிகள் தொடங்கப்பட்டன. 4267 தொடக்கப் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன. சராசரியாக 4 லட்சம் மாணவர்களுக்கு மேல் புதிதாக பள்ளிக் கூடங்களில் சேர்ந்தனர். இன்றுவரை பேசப்படும் திட்டமான சத்துணவுத் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டது.
//Between 1956-57 and 1971-72, the number of schools increased from 25,268 to 32,021 and the number of pupils from 30.88 lakhs to 65.77 lakhs.
Every child between 6 and 7 years of age was compulsorily enrolled in school. No child was allowed to withdraw before reaching the fifth standard or attaining 12 years of age, whichever was earlier. As a result of this measure, more than 3 lakh children were additionally enrolled , and about 6,600 more teachers employed. //
//  The most spectacular measure was the midday meals scheme. Kamaraj revived the scheme and placed it on a regular footing by subsidizing the costs as part of the Education Plan on a 60:40 basis - 60 percent being the state's share while the rest was covered by local public voluntary contribution. By 1962, an overwhelming 26,406 schools out of 27,135 were covered by the scheme.
11,80,000 pupils were benefited at a cost of Rs.1.15 Crores. In addition to the midday meals scheme, the Scholl Improvement Scheme was launched all over the state, by which local people were involved voluntarily in the development of school facilities and in providing books, slates, uniforms, etc for poor children.//
 p-137-138 - Half a day for caste  - By D.Veeraraghavan 
இன்றைக்கும்  மாநிலத்தின் உரிமைகளுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டாலோ, அமைப்புரீதியான ஒடுக்குமுறை கொண்டு நமது மாணவர்களின் கனவுகளைத் தகர்க்கும் வண்ணம் ஏதும் நடந்தாலோ, அடிப்படைக் கல்வியைக் கூட பெற முடியாதவாறு தடைக்கற்களை அரசுகளே முன்நின்று உருவாக்கினலோ..  இந்த உரிமைகளுக்குப் பின்னே மறைந்து கிடக்கிற பல மாமனிதர்களின் போராட்டங்களையும் , பெருமுயற்சிகளையும், தொலைநோக்குப் பார்வையையும், சிந்தனைத் திறத்தையும் ஒரு பெருமூச்சோடு நினைவு கூர்வதைத் தவிற நம்மால் என்ன செய்து விட முடியும் ?

அதே சமயம் ஒரு மாநிலத்திற்கோ அல்லது நாட்டுக்கோ தலைமைப் பதவியை ஏற்கும் ஒருவர், தனது தனிப்பட்ட கொள்கைகளுக்கும்/நம்பிக்கைகளுக்கும் முன்னுரிமையளிக்காமல், தான் சார்ந்திருக்கிற சாதி/மதம் குறித்த மனச்சாய்வுகள் ஏதுமின்று, சமூகத்தின் அனைத்து படிநிலையில் இருக்கிற மக்களையும் அவர்தம் நல்வாழ்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு தொலைநோக்குடன் செயல்பட வேண்டுமென்பது தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது. 

கல்வியாளர்களும், ஆசிரியர்களும், அரசின் கொள்கை முடிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அக்கறை கொண்டவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்

Half a day for caste ? (Education and Politics in Tamilnadu, 1952-55)
By D.Veeraraghavan | Left Word | Rs.250 | ISBN 9788194357902

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க : https://www.amazon.in/Half-Caste-Education-Politics-Tamil/dp/819435790X

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

தீம்புனல் - ஜி.கார்ல் மார்க்ஸ்

”நிலம் என்பது வெறும் கண்ணும் மனசுமல்ல.மொத்த உடலும்தான்”
-தீம்புனல், ஜி.கார்ல் மார்க்ஸ்
இன்றைக்கு தமிழ் சினிமாவில் அதிகம் கொத்துக் கறி போடப்படுகிற விஷயமாகவும்,  நீயா நானா மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் புண்ணியத்தில் ’ஐடி வேலைய விட்டுட்டு ஆர்கனிக் ஃபார்மிங் பண்ணப்போறேன்’ என fashion statementஆகவும் திகழ்கிற ஒன்று ‘விவசாயம்’.  உண்மையில், இந்த வீக்கெண்ட் விவசாயிகள் உள்ளிட்டோர் உழவுத்தொழிலை பெருமைக்கு எருமை மேய்க்கிற பாங்கிலேயே அணுகிக்கொண்டிருப்பவர்கள்.

 நிலத்திலேயே உழன்று, உழைத்துக் கொட்டி, நிலத்தைச் சுற்றியே தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டு இறுதியில் நிலத்தை நம்பியே உயிரை விடுகிற டெல்டா விவசாயிகளில் யாரேனும் ஒருவரிடம் கேட்டாலே போதும்; அவர்கள் விடுகிற இரத்தக் கண்ணீரில் ‘விவசாயம்’ குறித்து மனதில் நாம் வறித்துக் கொண்டிருக்கிற போலிச் சித்திரங்கள் மொத்தமாய் சிதைந்துவிடக் கூடும்.

தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு வயலும் விவசாயமும் வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதிகள். கோடையோ, வாடையோ, வசந்தமோ, எந்த பருவகாலத்தில் நாங்கள் பேருந்து ஏறினாலும் பசுமையின் எதோவொரு நிறம் கண்களில் பட்டபடியே இருக்கும். எங்கள் கதைகளில் வாய்க்கால்களும், ஆற்றுப் பாலங்களும், வரப்புகளும், மதகுகளும், வயல்களும், தோப்புகளும், கட்டாயம் இருக்கும். சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ, பக்கத்து சிற்றூர்களில் எங்கோ கொஞ்சமாவது நிலம் இருந்து மகசூல் பார்த்து, வருடத்திற்கு ஒரு முறை நெல்மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கியிருக்கும்.

ஆனால் இன்றைக்கு, இவையெல்லாமே பத்திருபது வருடப் பழங்கதைகள். காலமும் மாறி காட்சிகளும் மாறிவிட்டன. மழைவெள்ளம், வறட்சி, காவிரி நீர், நகர்மயமாக்கம், சாலைகள் விரிவாக்கம், மோசமான நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் அளவு, ஆற்றுமணல் கொள்ளை என விவசாயம் நொடித்துப் போக காரணிகளைப் பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும். இவையத்தனையும் தாண்டியும் விருப்பத்தின் பேரிலோ கட்டாயத்தின் பேரிலோ இன்றும் உழவைக் கைக்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறாக நிலம் குறித்து கண்முன்னே நமக்குப் புலப்படும் அனைத்திற்குப் பின்னாலும், பிறந்து வாழ்ந்து மறைகிற மனிதர்களைப் பற்றிய கதையே தீம்புனல்.

முதலில், இத்தனை பசுமையை எழுத்தில் கொண்டுவந்த படைப்பாக அண்மையில் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஒவ்வொரு முறையும் யாரேனும் படலைத் திறந்துகொண்டு வயலிலோ, தோட்டத்திலோ, கொல்லையிலோ, தோப்பிலோ நுழைகையில் பச்சைக் கொடிகளின் வாசனையை நீங்களும் உணரக்கூடும். அத்தனை உயிர்ப்பான அழகான விவரனைகள் புத்தகம் முழுக்கவும் விரவிக்கிடக்கின்றன. இந்தப் பசுமை இத்தனை நெருக்கமாகிவிடுவதால் தானோ என்னவோ, பின்பு எல்லாம் மாறிப் போகிற போதான வெம்மையையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

வீம்பும், வீராப்பும், வைராக்கியமும், மோடுமுட்டித்தனமுமான  எத்தனை மனிதர்கள்; நிலத்தின் மீதான பிடிப்பால் அதன் மீது தனக்கிருக்கிற உரிமையை நிலைநாட்டத் துடிக்கும் சோமு, கசந்து போன திருமணத்தால் தோட்டத்தை வசிப்பிடமாக்கிக் கொள்கிற கலியமூர்த்தியின் வைராக்கியம், எழுத்தாளரின் மொழியில் “தன்னையும் அழித்துக் கொண்டு பிறரையும் சாம்பலாக்கும் பிரத்யேக குணவார்ப்பைக்” கொண்ட கலியமூர்த்தியின் மனைவி விசாலாட்சி...! இன்னும் எத்தனையோ பேர்...! தத்தமது உடல் தளர்வின் பொருட்டும், பிற தேவைகளுக்காகவும் பிள்ளைகளையோ அல்லது ஏனைய மற்றோரையோ சார்ந்திருக்க வேண்டி சர்க்கஸ் கூண்டின் புலிகளாக மாறிவிட்ட பெரியவர்களையே அதிகம் பார்த்துப் பழகிய நமக்கு இத்தனை வைராக்கியமான உறுமலும் சீற்றமுமான வயசாளிகளின் இருப்பே வியப்பூட்டக்கூடிய விஷயம் தான்.

நான் வியந்த மற்றொரு விஷயம் நிலத்தின் மீது எழுத்தாளர் கொண்டிருக்கிற அபரிமிதமான புரிதல். ஒரு இடத்தில் “வேளாண்மையிலிருந்து விலகிச் செல்லும் ஒருவனை நிலம்  மீண்டும் தன்னிடம் சேர்த்துக்கொள்வதில்லை.அவனால அதனுடன் ஒன்றிணைய முடிவதில்லை.இழந்துவிட்ட சொர்கத்தின் கனவுடன் நிலத்தைக் கொத்துபவனுக்கு அது இளகிக் கொடுப்பதில்லை.அவனை முழுக்கவும் நிராகரிக்கிறது. அப்படித் தோற்றவர்கள் நிலத்தின் மீது வன்மம் கொண்டவரானார்கள்” என மணல் கொள்ளைக்குத் துணை போகிற வேளாண் குடிமக்களைப் பற்றி சொல்லும்போது குறிப்பிடுகிறார்.

நிலவுடைமையாளனாகப் பிறந்து பின்பு செட்டியாரின் வழக்கால் நிலங்களனைத்தும்  துண்டாடப்பட்டு, இருக்கிற சொற்ப நிலத்தில் விவசாயமும் கைவராமல், ஹார்ட்வேர் கடைக்கு வேலைக்குப் போகிற ராஜேந்திரன், அடையாளச் சிக்கலில் உழல்கிற வாழ்ந்துகெட்ட இரண்டாம் தலைமுறை நிலவுடைமையாளனின் பிரதிநிதி. கடை முதலாளியோடு மனதளவில் முரண்பட்டு, பின் வேலை மும்முரத்தில் அத்தனையும் மறத்துப் போகிற இடம் ,பிழைப்புவாதத்தின் சான்று.

ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் நான் பார்த்த என் சுற்றத்து மனிதர்களோடு பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாத்திரத்தை மட்டும் என்னால் நான் கடந்து வந்த பெரும்பாலான குடும்பங்களில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது சோமுவின் மூத்த மருமகள் ரமணி. ரமணிக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, சுதந்திரமோ இருப்பதாகத் தெரியவில்லை. அல்லது அவள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எதைப் பற்றியும் அவளுக்கு கேள்விகளும் இல்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் வீடு தேடி வருபவர்களுக்காகவும் சமைத்துப் போடவே பிறப்பெடுத்ததைப் போல நடந்துகொள்கிறாள். அவளுடைய உலகம் பெரும்பாலும் வீட்டின் உள்ளேயே முடிந்து போகிறது. குடும்பம் பொருளாதாரரீதியாக நலிந்து போகையில் வந்து ஒட்டிக்கொள்கிற பிடிக்காத சொந்தங்களோடு உறவாட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே, அவளுடைய தனித்தன்மையும் மன வார்ப்பும் வெளிப்படுகிற இடம். அல்லது நமக்கு அப்போதே சொல்லப்படுகிறது.

திருடன் பெரியசாமியின் பாத்திரம் தஞ்சை பிரகாஷின் ஒரு கதையில் வருகிற திருடனை நினைவுபடுத்துவது போலிருந்தது.

அரசியல் தெளிவோடு கட்டுரைகள் எழுதுகிற ஒருவர் புனைவெழுத வந்தால், அவருடைய அரசியல் கட்டாயம் படைப்பிலும் வெளிப்படுமல்லவா. அது தீம்புனலிலும் உண்டு; ராஜேந்திரனின் திராவிடக் கட்சியின் மீதான ஈர்ப்பு, கடைசி மகன் மகேந்திரனின் கடவுள் மறுப்புக் கொள்கை, தமிழ்த் தேசியம் பேசுகிற புலவர், எம்ஜியார் கட்சியின் கோபால், பேராசிரியர் ரத்தினம், இறுதியாக ரஞ்சிதத்தின் காதலைத் தொடர்ந்து சாதியின் பெயரால் நடக்கிற நிகழ்வுகளும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் என அடித்தாடியிருக்கிறார். கேலி கிண்டலுக்கும் குறைவில்லை. இலுப்பைத் தோப்புக்கு போகிற இன்ஸ்பெக்டர் பற்றிய விவரிப்பில் நீங்கள் விலா நோகச் சிரிப்பது உறுதி.

இன்னும் மனதைக் கவர்ந்த பாத்திரங்களையும் அவற்றின் வார்ப்பையும் பற்றிப் பேசுவதானால் மொத்தக் கதையையும் சொல்ல வேண்டியதாய் இருக்கும். ஆகையால் இப்போதைக்கு இது போதும். அவ்வப்போது எனக்குப் பிடித்த மனதில் நின்ற பத்திகளை எடுத்துப் போடுகிறேன். பேச வாய்ப்புக் கிடைத்தால் புத்தகம் குறித்து விரிவாகப் பேசுவேன்.

தமிழ் இலக்கியத்தில், நிலம் சார்ந்து அல்லது நிலத்தின் வழியாக கதை சொல்லப்படுவது நமக்குப் புதிதன்று. பூமணியின் வெக்கை உள்ளிட்ட பல கதைகள்  இருந்தாலும், மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கையோடு ’தீம்புனலில்’ கார்ல் மார்க்ஸ் ஒட்டுமொத்தமாய்ச் சொல்லிச் செல்கிற கதைகள் அசாத்தியமானவை. உங்களுக்கு நிலவுடைமைச் சட்டம் குறித்தோ, நில உச்சவரம்பு குறித்தோ, வேளாண்மை சார்ந்த வேறு எதுவுமோ, ஒன்றுமே தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ‘தீம்புனல்’ நாவலைப் படித்துவிடுங்கள்; கட்டாயமாய் உங்களுக்கொரு மறக்கமுடியாத வாசிப்பனுபவத்தைத் தரும்...!

வாழ்த்துக்கள் கார்ல்...!
”எல்லோருக்கும் ஏதோ ஒன்று தேவையானதாக இருக்கிறது. அந்த ஏதோ ஒன்று மிகவும் அற்பமானதாக இருக்கிறது. அது கிடைத்துவிடுகிறபோது கண்முன் இருக்கிற இந்த பரந்த வாழ்க்கையே அவர்களுக்கு பொருளற்றதாக மாறிவிடுகிறது. தன்னளவில் அவர்கள் மிகவும் சுருங்கிப் போகிறார்கள். பதட்டமடைந்து விடுகிறார்கள். எல்லாவற்றிலும் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள். பழைய நினைவைத் தூண்டும் மனிதர்களிடம் இருந்து அப்புறப்பட்டுவிடுவது அதன் முதல் நடவடிக்கையாக இருக்கிறது. அது எளிது என்பது மாத்திரம் அல்ல, அதுவொரு சவுகரியமும் கூட”-தீம்புனல், ஜி.கார்ல் மார்க்ஸ்

புதன், 27 நவம்பர், 2019

காணாமல் போன தேசங்கள் - நிர்மல்

நிர்மல் அவர்களின் ‘ காணாமல் போன தேசங்கள்’ புத்தகம் குறித்து...

"இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இனக்குழு என்பது பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு காட்டும் தனி முக்கியத்துவமும் மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே முக்கிய பிரச்சனை. அதிகாரத்தை வைத்து நில வளங்கள் மற்றும் வேலை வாய்ப்பை தங்களுக்குள் வைத்துக் கொண்டு சிலரை ஒதுக்குவதே இனக்குழு பிரச்சனையின் மூலம். இதுதான் பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்கள்."
Geopolitics - politics, especially international relations, as influenced by geographical factors. புவியியல் காரணிகள் , சர்வதேச அளவில் பிற நாடுகளோடான உறவு, இவை சார்ந்த அரசியலே - புவியரசியல்.

‘காணாமல் போன தேசங்கள்’ -தலைப்பே விவரிப்பது போல, கால ஓட்டத்தில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன நாடுகள் குறித்தும் அந்தந்த நாடுகளின் அரசியல், மொழி, கலாச்சாரம், இனக்குழுக்கள் (Ethnic groups) , வாழ்வியல், சந்தித்த பிரச்சனைகள், பிற நாடுகளின் தலையீடுகள் குறித்தும் மிக விரிவாக பேசியிருக்கிறார்.

யூகோஸ்லாவியா தொடங்கி ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா வரை காணாமல் போன இந்த தேசங்களின் வரலாறுகளை உற்று நோக்கினால் இனம், மொழி, மதம், அரசியல், கலாச்சாரம் என பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கிற நாடுகள், மொழியின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ, ஏதோவொரு ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்களைத் திணிக்க முயல்வதே புரட்சியும் வன்முறையுமாய் சிதறிப் போக காரணமாக இருந்திருக்கிறது.

ஒவ்வொரு நாடுகளின் இடர்பாடுகள் உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்து வாசிக்கும்போதும் நம் நாட்டில் அதே மாதிரியான ஒரு நிகழ்வோடு அதனை ஒப்புநோக்கத் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. ஈழம், காஷ்மிர் என பலவற்றை நிர்மல் அவரே விரிவாக ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காலம் காலமாக நாம் சமூக அறிவியல் புத்தகங்களில் படித்துவந்த இந்திய நாட்டின் ’Unity in diversity - வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியக் கூறுகள் குறித்தும் உண்மையான நிலை குறித்தும் நமக்கொரு தெளிவான புரிதல் கிடைக்கிறது. நிலவுடைமை, நிலப்பிரபுத்துவம், பண்ணை அடிமை முறை,தேசியவாதம், தனிப்பட்ட மனிதர்களின் அதிகார வெறியால் பாதிக்கப்பட்ட நாடுகள், இயற்கை வளங்களின் மேலாண்மை, மூன்றாம் உலக நாடுகளில் வல்லரசுகளின் சூழ்ச்சி விளையாட்டுகள், என அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
For every Nationalism there will be a counter Nationalism. ஏனென்றால் தேசிய உணர்வு என்பது மிக எளிதில் மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய உணர்வு. அது மிக எளிதாக முன் பின் தெரியாத நபர்களை இணைக்கும், போராட வைக்கும்.... அந்த இணைப்பு சிலரையோ, பலரையோ தனிமைபடுத்தக் கூடும்.
திராவிட சித்தாந்தம் முன்வைக்கிற மாநில சுயாட்சி (State Autonomy), இறையாண்மை (Sovereign state) ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவம் பற்றி பேசுகிற அதே வேளையில் தேசியம் (Nationalism), இன அடையாளங்களை (Ethnic identity) பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்படுகிறது.
இறுதியாக ஒரு தேசம் அதன் மக்களிடையேயான இன/மத/மொழி/கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக தன்னாட்சி செய்வதால் விளைகிற நன்மைகளையும் அதற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்தின் ஆட்சிமுறை/அரசியலமைப்பை சொல்வதோடு முடிகிறது.

த்ரில்லர் வகைக் கதைகளும்,திரைப்படத்தின் சுருக்கமான வடிவிலான கதைகளும், காதல் கதைகளுமாய் நிறைந்து கிடக்கிற இந்த #PenToPublish போட்டியில் இத்தனை தீவிரத்தன்மை வாய்ந்த ’புவியரசியல்’ (Geopolitics) பேசுகிற கட்டுரைத் தொகுப்பை எழுத முடிவு செய்ததற்கே தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள். புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் reference புத்தகங்களின் பட்டியல் மட்டும் நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அத்தனை அசுரத்தனமான உழைப்பு & விவரணை. So far, this has been the most sincere effort which has been made for 2019 #PenToPublish contest.

தமிழ் இலக்கியப் பரப்பில் புனைவல்லாத படைப்புகளுக்கான இடம் பயணக் கட்டுரைகள், இலக்கியவாதிகளின் அனுபவக் கட்டுரைகள் என்கிற அளவில் பெரும்பான்மையாகவும்,  மாநில/தேசிய அரசியல், வரலாறு, அறிவியல் பேசுகிற புத்தகங்கள் ஓரளவும் புழக்கத்தில் இருக்கின்றன. அபுனைவின் முக்கியமான சிக்கல் அவற்றில் பெரும்பாலானவை கொண்டிருக்கிற ஆய்வுக்கட்டுரை மாதிரியான கடுமையான மொழியே. வளர்-இளம் பருவத்தினருக்கான (Teen & Young adults) எளிமையான மொழியைக் கொண்ட அபுனைவுகள் இல்லாத குறையை  , இந்தப் புத்தகம் போக்கும் என நிச்சயம் நம்புவோம்.மீண்டுமொரு முறை மனம்நிறைந்த  வாழ்த்துக்கள் நிர்மல்.வாய்ப்பும் நேரமும் அமைந்தால் தொடர்ந்து எழுதவும்...!

புத்தகம் ஆன்லைனில் வாங்க: இங்கு
Related Posts Plugin for WordPress, Blogger...