நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை, முறைசாரா தொழிலாளர்கள், Skilled labourers


 

சென்ற ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசு வெளியிட்ட போது எழுந்த விவாதங்கள் பலவற்றில், இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிவரும் பலரும் குறிப்பிட்டுப் பேசும் விஷயம் skilled labourers எனப்படும் திறன் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடும், தேவையும் பற்றி தான் . மரவேலை செய்பவர்கள் தொடங்கி, எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள், நெசவாளர்கள் என பல துறைகளிலும் இந்த வகை திறன் தொழிலாளர்கள் உண்டு. புதிய கல்விக் கொள்கை -2020 வழிகாட்டலின் படி ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வியை அறிமுகம் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் நாட்டில் இந்த திறன் தொழிலாளர்களுக்கான தேவையை இட்டு நிரப்பிட முடியும் என்பது ஒரு தரப்பினரின் வாதம். இது நியாயமான தீர்வாக இருக்க முடியுமா ?

இப்படியான திறன் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் , இவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் ஆகியவற்றை நெறிப்படுத்தவும் மத்திய அரசோ மாநில அரசோ எந்த , வரைமுறைகளையும் இதுவரை செயல்படுத்தவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் unorganized sector எனப்படும் முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதும் ஒரு காரணம். (mostly level 1 and 2)

முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008 (The Unorganized Workers' Social Security Act (2008)) -ன் படி, மத்திய மாநில அரசுகள் சில பல காப்பீட்டுத் திட்டங்களையும் , இழப்பீடுகளையும் பரிந்துரைக்கிறதே அன்றி கட்டாயமாக்கவில்லை. மேலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் தெளிவான விளக்கங்கள் இல்லை. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வாரியங்களை அமைத்திருக்க வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசங்கள் உட்பட வெறும் பதினோரு மாநிலங்கள் மட்டுமே இதைச் செயல்படுத்தின.

2010-11 ஆண்டுகளில் அப்போதைய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி இந்த தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக (National Social Security Fund - NSSF) , 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.  அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போது நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பும், பாதித் தொகையோ அல்லது மூன்றில் ஒரு பங்கோ மட்டும் வழங்கப்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை குழு (Comptroller and Auditor General - CAG) தாக்கல் செய்த அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டு  பின் பயன்படுத்தப்படாமல் தேங்கிய தொகை மொத்தம் ரூ.1927 கோடிகள். இந்தத் தொகை மீண்டும் மத்திய தொகுப்பு நிதியிலேயே (Consolidated Funds of India) சேர்க்கப்பட்டது.

அப்படியே இந்த தொகை முறையாகவும் முழுமையாகவும் வழங்கப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆணையங்களும் அமைக்கப் பட்டிருந்தாலும், போதுமானதாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே ? ஏன் ?

CBAG (Centre for Budget and Governance Accountability) என்கிற அமைப்பு தாக்கல் செய்த ஆய்வறிக்கையின் படி , உன்மையில் முறைசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருக்கவேண்டிய தொகை ரூ.22,841 கோடிகள் (நாட்டின் மொத்த GDPல் 0.39 சதவிகிதம்) இந்த பரிந்துரைக்கப்பட்ட தொகைக்கும் அரசு ஒதுக்கிய தொகைக்குமான வேறுபாட்டிலேயே உண்மை நிலையை விளங்கிக் கொள்ளலாம்

2019ஆம் ஆண்டின் இறுதியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட Code on Social Security 2019 சமூகப் பாதுகாப்பு மசோதா , பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கிட்டத்தட்ட தொழிலாளர் நலம் தொடர்பான பத்து சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கூறுகளைக் கொண்டிருந்த இந்த மசோதாவில் தான் முறைசாரா தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் gig workers, platform workers (ஸ்விக்கி, ஊபர், மாதிரியான தளங்களின்  ஒருங்கிணைப்பில் பணிபுரிகின்றவர்கள்), தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், கட்டிடத் தொழிலாளர்கள், வேற்று மாநிலத் தொழிலாளர்கள்  (Inter state migratory workers) உள்ளிட்டவர்களையும் அரசு வகைமைப்படுதியிருக்கின்றது. இவர்களின் நலனுக்கான வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவக் காப்பீடு, ஜன் தான் திட்டம் உள்ளிட்டவற்றையும் பரிந்துரைத்திருக்கின்றது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு , செயல்படுத்தப்பட்டால் தான் இவற்றில் இருக்கிற நடைமுறைச் சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும். 

இப்போது புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிற சில பரிந்துரைகளோடு பார்க்கலாம். 

1.மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத் தேர்வுகள்

2. ஆறாம் வகுப்பிலிருந்தே மாணாக்கர்களுக்கு தொழிற்கல்வியை (உள்ளூர் திறன்தொழிலாளர்களோடு இணைந்து) அறிமுகப்படுத்தல்

3. இளங்கலை/அறிவியல்/பட்டயப் படிப்புகளுக்கு - மூன்றாண்டுகள் கட்டாயம் , இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு - நான்கு ஆண்டுகள் கட்டாயம் - இந்த முறையை மாற்றி முதல் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய கல்வியை இடைநிறுத்திக் கொள்ளலாம். அதற்கேற்ற சான்றிதழ் வழங்கப்படும் என மாற்றம்

4. மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், என அத்தனைக்கும் இளங்கலை/முதுகலைக்கென தனித்தனி நுழைவுத் தேர்வுகள், தேசிய திறனறி தேர்வுகள், தகுதித் தேர்வுகள், தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள்

5. கட்டாய மும்மொழிக் கொள்கை - கட்டாய தாய்மொழிக் கல்வி 

6. கல்வியில் மாநிலங்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு மாற்றல் 

தொழிலாளர் நலம் சார்ந்த சட்டங்கள், சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மேற்சொன்ன அத்தனையையும் மனதில் நிறுத்தி, அவற்றை புதிய கல்விக்கொள்கை முன்வைக்கிற திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். 

பலதரப்பட்ட சமுகப் பொருளாதரப் பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் முழுமையாகக் கொண்டு சேர்ப்பதே ஓர் அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, தரத்தின் பெயரால் கல்வியைப் பெற இத்தனை முட்டுக்கட்டைகளைப் போட்டு அவர்களுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் மறைமுகமாகத் தடுத்து நிறுத்துவதாக இருக்கக் கூடாதல்லவா ?

Skilled labour கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சுற்றிவளைத்து புலம்புவதெல்லாம் cheap labour கிடைக்கவில்லை என்பதாவே புரிந்து கொள்கிறேன்.

குறைந்தபட்ச பணிப் பாதுகாப்பையும் நிலையான ஊதியத்தையும் வழங்குகிற சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் நுழைய உதவும் தற்போதைய கல்விமுறையை மாற்றி, பணிப்பாதுகாப்போ, சட்டப்பாதுகாப்போ, நிலையான ஊதியமோ இல்லாது முறைசாரா தொழில்களுக்குள், திறன் தொழிலாளர்கள் என்ற பெயரில் நம் குழந்தைகளைத் தள்ளுவதா அறம் ?

இது அமைப்புசார் அடக்குமுறை (systematic oppression) அல்லவா ? 

***Spoilers ahead***

Snowpiercer என்ற  ஒரு கொரியத் திரைப்படம் உண்டு. உலகம் மொத்தமும் பணி சூழ்ந்து வாழத் தகுதியற்றதாக மாறிய பின் உலகின் கடைசி மக்கள் கூட்டம், நில்லாமல் ஓடும் ஒரு ரயிலில் பயணிக்கும். அங்கேயும் வர்க்க வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு.ரயிலில் செல்வச் சீமான்கள் சொகுசான முன் பகுதிப் பெட்டிகளிலும் அந்த ரயிலைத் தொடர்ச்சியாக ஓடவைக்கிற உழைக்கும் ஏழைத் தொழிலாளர்கள் ரயிலின் பின் பகுதிப் பெட்டிகளிலும் வாழ்ந்து வருவார்கள்.  

ஏழைகளின் பகுதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உயரமும் எடையும் கொண்டிருக்கிற குழந்தைகள் வருடந்தவறாமல் தொடர்ச்சியாகக் காணாமல் போவார்கள். இதனைத் தடுத்து அந்தக் குழந்தைகளுக்கு என்ன ஆனது என கண்டறியும் பொருட்டே தொழிலாளர்களிடையே கிளர்ச்சி எழும். ஆயுதம் ஏந்தி ஒரு தலைவன் பின்னால் அணிவகுத்து போராடுவார்கள். பெரும் உயிர்ச்சேதமும் போராட்டமும் நிகழ்ந்தபின் அந்தத் தலைவன் ரயிலை இயக்குகிற இஞ்சின் பெட்டியை அடைவான். குழந்தை எங்கு தேடியும் கிடைக்காம இறுதியில்  இஞ்சின் கதவைத் திறக்கும்போது அவன் காணும் காட்சி நம் இதயத்தை உறையவைக்கும். 

காணாமல் போகும் அந்தக் குழந்தை, பழுதாகிப் போன ஒரு இஞ்சின் பாகத்துக்குப் பதிலாக கையால் அந்த வேலையை செய்ய உட்காரவைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட வயது, உயரம், எடையில் அதுவரை காணாமல் போன அத்தனைக் குழந்தைகளும் அதற்காகத்தான் பயன்படுத்தப் பட்டிருப்பார்கள் என்ற உண்மை புலப்படும். 

***Spoiler ends***

இதற்குமேல் நேரடியாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. 

நம்மாலானதெல்லாம் குறைந்த பட்சம் நம்முடைய வட்டத்தில் இருப்பவர்களுக்காவது இந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மட்டுமே. அதையாவது முழுமையாகச் செய்வோம். 

உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பேசுவோம்

***********************************************************

References:

https://thewire.in/labour/national-social-security-fund-unorganised-workers

https://cag.gov.in/sites/default/files/audit_report_files/Report_No.44_of_2017_-_Financial_Audit_on_Accounts_of_the_Union_Government.pdf

https://www.inventiva.co.in/stories/riyarana/india-lockdown-most-affected-is-unorganized-sector-it-is-93-of-the-total-workforce-41-crore-people-lack-economic-security/

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://economictimes.indiatimes.com/news/economy/indicators/national-database-of-workers-in-informal-sector-in-the-works/articleshow/73394732.cms?from=mdr

https://www.prsindia.org/billtrack/code-social-security-2019#:~:text=The%20Code%20on%20Social%20Security%2C%202019%20was%20introduced%20in%20Lok,for%20Labour%20and%20Employment%2C%20Mr.&text=It%20replaces%20nine%20laws%20related,'%20Social%20Security%20Act%2C%202008.

https://www.financialexpress.com/opinion/skill-india-why-there-is-a-gap-between-current-status-and-goals-explained/1520633/#:~:text=The%20proportion%20of%20formally%20skilled,and%2096%25%20in%20South%20Korea.

https://www.rediff.com/business/column/does-india-have-enough-skilled-labour/20190930.htm



செவ்வாய், 14 ஜூலை, 2020

வைரமுத்து - #MeToo மற்றும் #CancelCulture

(C) - Illustration by Taylor Callery for TIME


அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்கிற ஆஃப்ரிக்க அமெரிக்கர் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முக்கியத்துவம் பெற்றது இந்த #CancelCulture என்கிற விஷயம். ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை கடந்த காலங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவமதித்த, அவதூறாக, மதிப்பைக் குறைக்கும் வகையில் சித்தரித்த திரைப்படங்களையும், அவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்களையும் எதிர்த்து போராடத் துவங்கினர். விளைவாக hbo சேனலிலிருந்து ‘Gone with the wind’ திரைப்படமும், netflixல் இருந்து ‘the help’ திரைப்படமும் நீக்கப்பட்டன.


#MeToo இயக்கத்தில் தொடங்கி இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வரை எல்லா தரப்பிலும் இந்த Cancel culture கடைபிடிக்கப்பட்டது/படுகிறது.



ஒரு துறையில் பெரும் புகழ்பெற்ற தனிமனிதர் (சினிமா/விளையாட்டு/அரசியல்/கலை etc) அவருடைய கடந்தகாலத் தவறுகளின் அடிப்படையிலோ அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ பொதுத் தளத்திலும் பிற இடங்களிலும் (அவரின் கலைத்திறம் ஆளுமை உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல்) நிராகரிக்கப்பட்டால், அது தான் #CancelCulture இந்த வரிசையில் காலம் கடந்த புத்தகங்களையும், திரைப்படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது அந்த படைப்பு உருவான காலகட்டத்தில் சரியான பார்வையோ புரிதலோ இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தேதிக்கு அந்த திரைப்படமோ/புத்தகமோ பேசும் விஷயம் தவறு (irrelevant/incorrect) எனக் கொள்வது.

இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை நூறாண்டுகளுக்கு முன்பே ஃபோர்ட் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் இதைப் போல நிராகரிக்கப்பட்டிருக்கிறார். ’The Dearborn Herald' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த அவர், யூதர்களை மோசமாக சித்தரித்து அவதூறாக எழுதப்பட்ட ஒரு தொடர் கட்டுரையையும் அந்த பத்திரிக்கையில் வெளியிட்டுவந்தார்.பின்பு அமெரிக்கா முழுக்கவும் யூதர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பாலும், அறப்போராட்டங்களாலும், நீதிமன்ற வழக்குகளாலும் ஒரு கட்டத்தில் ஃபோர்ட் தனது தவறுகளுக்காக பொது மன்னிப்புக் கேட்க வேண்டிவந்தது.அப்படியாக அந்த cancellation campaign முடிவுக்கு வந்தது.

இதே போல் சமகாலத்தில் sexual assault / harassment பாலியல் புகார் காரணமாக cancel செய்யப்பட்டவர்கள் ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், இயக்குநர் வுடி ஆலன், நடிகர் கெவின் ஸ்பேசி உள்ளிட்டோரும் உண்டு.

இந்த #CancelCulture சரியா தவறா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஒரு பிரபலத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
இது இப்படி இருக்க, இந்த sexual assault/harassment allegations ஐப் பொருத்த வரையில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே அன்றி பொதுவில் அவர் எப்படி நடத்தப் பட வேண்டுமென்றோ ஊடகம் உள்ளிட்டவற்றில் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி அணுக வேண்டும் என்றோ எந்த guidelinesம் இருப்பதாகத் தெரியவில்லை (இருந்தால் தெரியப்படுத்தவும்)

நம்மளால, நம்முடைய மனசாட்சிப்படி, moral compass படி, நமக்குத் தெரிஞ்ச தகவல்களை வெச்சு தான் முடிவெடுக்க முடியும். அப்படிப் பாத்தா benefit of doubtஅ position of powerல இருக்குறவங்களுக்கு குடுக்காம இருக்குறதுதான நியாயம். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தானே நிக்கனும்.

வைரமுத்து எழுதுன பாடல்களைக் கேக்குறது guilty pleasure தான்..ஆமாம் அவருடைய எழுத்தைப் புகழத்தோணும் தான் அதே சமயம் அவரால பாதிக்கப்பட்ட இந்த victims பத்தி ஞாபகம் வந்தா நமக்குள்ள ஒரு conflict வரனும். அதான் நியாயம்…! பரவால்ல… இதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கிறவரை, நம்மால முடிஞ்சவரைக்கும் அவரைக் கொண்டாடாம இருந்தாலே போதும்னு நெனைக்கிறேன்.

இவ்வளவு எழுதுறதுக்கு காரணமும் அந்த internal conflict தான்.

வைரமுத்து, தாம்ப்ராஸ் நாராயனன், காஞ்சிபுரம் ஜெயேந்திரன், உள்ளிட்ட எல்லாரையும் ஒரே தட்டுல தான் வெச்சுப் பாக்கனும்..எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒரே மாதிரி தான் அணுகனும்… போலவே ஸ்ரீரெட்டி அவர்களுடைய புகாரையும் சின்மயி அவர்களுடைய புகாரையும் ஒரே மாதிரி தான் எடுத்துக்கனும். Partialஆ அறம் பேசக் கூடாது…!


எனக்கு எழுந்த இன்னொரு கேள்வி, இந்த #CancelCulture மாதிரியான விஷயங்களைப் பத்தி இங்க நம்முடைய தமிழ் சமூகத்துல ஏன் பரவலான விவாதங்கள் எதுவும் நடக்கல ? குழப்பத்துல இருக்குறவன் தன்னுடைய referenceக்காக தேடுனா கூட இங்க எந்த ஆய்வுகளோ விவாதங்களோ கட்டுரைகளோ இல்லை…இந்த போஸ்ட் எழுத அதுவும் ஒரு காரணம்.


உங்களுடைய கருத்துகளை சொல்லுங்க. I’m eager to learn, unlearn and listen


(மேற்கண்ட போஸ்ட் நான் ஃபேஸ்புக்கில் எழுதிய. பின்னாட்களில் referenceக்காக இங்கே பதிகிறேன். கூடவே நண்பர்களுடைய கருத்துகளையும்)



திங்கள், 18 மே, 2020

வெறுப்பின் வேர்கள் - The anatomy of hate by Revati Laul



வெறுப்புக்கும் கோபத்திற்குமான வேறுபாடு என்ன ? கோபம் ஒரு நொடிப்பொழுதில் ஒரு குறிப்பிட்ட சூழலில் அப்போதைக்கு நிகழ்கிற உணர்வுப்பூர்வமான எதிர்வினை (emotional response) அல்லது ஒரு உணர்வு வெளிப்பாடு . வெறுப்பென்பது அப்படியல்ல; பல காலமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைப்படுகிற ஒன்று. தவறான முன்முடிவுகள், மதிப்பீடுகள், அருவருப்பு, கோபம், பழி உணர்வு, ஏமாற்றம் உள்ளிட்ட பலவற்றின் கலவைதான் வெறுப்பெனக் கொள்ளலாம்.

மேலும், உளவியல் ரீதியாக தனி மனிதர்களைக் காட்டிலும் ஒரு குழுவின் மீதான வெறுப்பை வளர்த்துக்கொள்வது எளிதென சொல்லப்படுகிறது. நீங்கள் முகந்தெரியாத யாரோ ஒருவர் மீது உடனேயே கோபப்பட முடியும்; ஆனால் அவரை நீங்கள் வெறுப்பதற்கு உங்களுக்கு தொடர்ச்சியாக நிறைய காரணிகளும், நியாயங்களும் தேவைப்படலாம். அப்படி காலம் காலமாக ஒரு மதத்தின் பெயரால் மற்றொரு மதத்தின் மீது வெறுப்பை ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டவர்களுக்கு , அதை மொத்தமாக வெளிக்காட்டிக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என்ன ஆகும் ? எதிர்படுகிறவர்களின் நிலை என்ன ? அங்கே ஒரு உயிருக்கான மதிப்பு இருக்குமா ?



2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து குஜராத்தில் வெடித்த மதக்கலவரங்களும் , உயிர்கள், உடைமைகள் என பெரும் சேதம் விளைந்ததையும்,  கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக (அதிகாரப்பூர்வமான தகவல் மட்டும்)  நாம் கேள்விப்பட்டிருப்போம். இது ஒரே நாளில் நடந்துவிட்ட ஒர் நிகழ்வா ? கலவரங்களைச் செய்தவர்களும், வீடுகளைக் கொளுத்தியவர்களும், கடைகளைச் சூரையாடியவர்களும் , பெண்களை வன்புணர்ந்தவர்களும், வேறு பல குற்றச்செயல்களைச் செய்தவர்களும் ஒரு நாள் கோபத்திலா இத்தனையையும் செய்தார்கள் ? நிச்சயமாக இல்லை.

சுரேஷ் - ச்சர்ரா (Chharas) என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். 1871 ல் ப்ரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றப்பரம்பரையினராக அடையாளப் படுத்தப் பட்டவர்கள் இந்த ச்சர்ரா மக்கள். திருடுவதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் பெருமளவு குடியிருந்த குஜராத்தின் ச்சர்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தான் சுரேஷ். குடும்பத்தின் அடையாளமும் அதனால் எழுந்த பிரச்சனைகளின் காரணமாக பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர்.

டங்கர் - பில் (Bhil) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கல்லூரி சென்று பட்டப்படிப்பு வரையிலும் பயின்றவர் . இறைச்சி உண்கிற, மது குடிக்கிற தன்னுடைய சொந்த சமூகம் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மை டங்கருக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. உண்மையில் தான் பழங்குடி அல்ல; ஒரு ராஜபுத்திர ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளவே அவர் எப்போதும் உள்ளூர விரும்பினார்.

ப்ரணவ் - முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்ற ஓரளவு வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். அவர்களுடைய குடும்பத்திற்கென சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. ப்ரணவ்வின் தந்தை போர்வெல் தொழிலை நடத்திவந்தார். ப்ரணவ்வின் குடும்பத்தில் அனைவருமே சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்

ஒருவரோடு மற்றொருவருக்குத் தொடர்பில்லாத மூன்று பேர்; மூவருமே சமூகப் பின்னணியிலும் , பொருளாதார நிலையிலும் , கல்வியிலும், வெவ்வேறு படிநிலைகளிலிருந்து வந்தவர்கள். மூவருமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மதத்தைத் தவிற மூவரையும் இணைக்கிற புள்ளி  குஜராத்தின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்கள்  மட்டுமே.இம்மூவரின் வாழ்க்கையையுமே சிறுவயதிலிருந்து  தொடங்கி , குஜராத் கலவரங்களோடு இவர்கள் எந்த வகையில் இணைகிறார்கள் என்பது வரையிலும் விவரித்திருக்கிறார் புத்தகத்தை எழுதிய ரேவதி லால் .

எல்லா எளிய மனிதர்களைப் போலவும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களுக்கும் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்புகளைத் தருகின்றது. அவர்கள் தேர்ந்தெடுக்கிற பாதைகளைப் பொருத்து சிலருக்கு மீட்சியும் சிலருக்கு மீளாத் துயரும் மிஞ்சுகின்றது.
Choice, however, is a vexing word. What part of choice applies when a tidal wave of anger tears through a state What part of it is the moment, the madness, the collective, and what part individual, personal history -Revati Laul, The anatomy of hate

உண்மையில் சிறுவயதிலிருந்தே மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் இவர்களுக்கு ஊட்டப்படுகிற வெறுப்பு அச்சமூட்டுவதாக இருக்கின்றது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS), விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) , பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் சமூகத்தினூடாகவும் மக்களினூடாகவும் அந்தளவு ஊடுருவியிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி, பில்கிஸ் பானோ, நரோதா பாட்டியா படுகொலைகள்; இந்தப் பெயர்களையெல்லாம் நாம்செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நிறையவே கேட்டிருப்போம். உண்மையில் அந்த ஒவ்வொரு பெயரின் பின்னாலும் பல ரத்தக் கறையோடான கதைகள் இருக்கின்றன. இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் அத்தனை கொடூரமான செயல்களை செய்தவர்களும், செய்யத்தூண்டியவர்களும், அதனை அனுபவித்தவர்களும், மனிதர்கள் என்னும் உண்மையை மட்டுமே. 

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூவரில் இருவர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, இந்து மதம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் இவர்களைக் கொண்டு வந்து அந்த மதத்தின் பெயரால் வன்முறைச் செயல்களைச் செய்யத் தூண்டியது எது ? இந்த இணைப்பு எப்படிச் சாத்தியமாயிற்று ? 

சுரேஷ் (ச்சார்ரா) ஆகட்டும் , டங்கர் (பில்) ஆகட்டும் இவர்களுடைய தொடக்கம் என்பது அவரவர்களுடைய பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைப்பதிலேயே தொடங்கியிருக்கின்றது. ஒரு சிறு குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தொடங்கி, மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு கூட்டம் கூட்டுவது, அவர்கள் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆட்கள் சேர்ப்பது, தேர்தலுக்காக வேலை செய்வது, எனத் தொடங்கி அவரவர்ககளின் தனிப்பட்ட மேற்பார்வையில் கட்சியோ/இயக்கமோ செய்ய விரும்பும் பெரும் வன்முறைச் செயல்களைச் செய்ய இந்த குழுக்களுக்கு தலைவர்களாக தங்களை வரித்துக் கொள்வது வரை உள்ள உளவியலை நாம் கண்டுணர வேண்டும்.  

VHP, RSS, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக இளைஞர்களுக்கு போலியானதொரு தலைமைப் பொறுப்பையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் வழங்குவதன் மூலமே அவர்களை மதம் என்ற குடையின் கீழ் ஒன்றுதிரட்டுகின்றார்கள். முறையான கல்வியும், வேலை வாய்ப்பும் மட்டுமே அவர்களுடைய சமூகப் பொருளாதார பின்னணியை மேம்படுத்தி இந்த அடையாளச் சிக்கலிலிருந்து அவர்களை மீட்க வழிவகை செய்யும். இந்த மீட்சியானது தனி மனிதர்களுக்கு மட்டுமான தற்காலிகமான் ஒன்றாக இல்லாமல்  அவர்களுடைய எதிர்காலச் சந்ததியினர் வரையிலும் தொடரக்கூடிய நிரந்தமான , உண்மையான மீட்சியாக இருக்கும். 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் கலவரங்களில் தொடர்புடையவர்களை நேர்கண்டு, பல ஆவணங்களைச் சேகரித்து, தீர ஆய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றார் பத்திரிகையாளரான ரேவதி லால். மதத்தின் பெயரால் மக்கள் மனதில் விதைக்கப்படுகிற நஞ்சைப் பற்றியும் அரசியல் லாப நோக்கங்களுக்காக பொதுமக்களின் உயிரைக் கொல்லவும் தயங்காத தனி மனிதர்கள் குறித்தும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் மிகச்சிறந்த தொடக்கம்.

The Anatomy of Hate Paperback by Revati Laul (Author) - Amazon

திங்கள், 6 ஏப்ரல், 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன் ஜி சின்னப்பன்



Like most human behavior, suicide is a multi causal act. Teasing out the strongest predictive variables is difficult, particularly because such internal cognitive states may not be accessible even to the person experiencing them. We cannot perceive the neurochemical workings of our brain, so internal processes are typically attributed to external sources. Even those who experience suicidal ideation may not understand why or even if and when ideation might turn into action.

-Michael Shermer , Scientific American

இவ்வுலகில் பிறந்த ஒவ்வோர் உயிரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இயற்கையாகவோ அல்லது வேறு புற காரணிகளின் பொருட்டோ தத்தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்வதை, அல்லது நின்று போவதை, நாம் மரணம்/மரணித்தல் என்கிறோம். மனிதர்களாக இருக்கும் வகையில் அவர்கள் உருவாக்கிய நினைவுகளின் வாயிலாக, அவர்தம் சுற்றத்தோடு கொண்டிருக்கிற உறவின் வாயிலாக, அவர் கொண்டிருந்த (அல்லது கொண்டிருந்ததாக அனைவரையும் நம்பவைத்த)  பண்புநலன்களின் வாயிலாக, இறந்துபோனவரைக் குறித்த ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளுகிறோம்.

இறந்துபோனவர் குறித்து நாம் உருவாக்கிக் கொள்ளுகிற மனச்சித்திரம் முழுக்கவே நமது பார்வைக் கோணமே அன்றி அவரை இன்னார் என்று விளக்கிச் சொல்கிற வரையறையாகிவிடாது. Our opinion or perception is entirely what we interpret about the deceased person rather than being the definition of their personality.

ஓர் உயிரின் மறைவு, அதை எல்லோராலும் எடுத்தாளப்படுகிற, உரிமை கோரப்படுகிற ஒன்றாகவும் மாற்றிவிடுகிறது. இறந்தவரைப் பற்றி யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; நல்லவிதமாகவோ அல்லது வெறுப்புடனோ அல்லது தனிபட்ட வெறுப்புக்கு கணக்குத் தீர்க்கும் வகையிலோ; எப்படியானாலும் மறைந்தவர் வந்து கேள்வி கேட்கப் போவதில்லையல்லவா ?

தனிப்பட்ட முறையில் மரணங்களால் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகும் ஆள் நான்; எந்த ஒரு உயிரிழப்பையும் எளிதாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.  இது குறித்து நண்பர்களோடு நிறையவே பேசியிருக்கிறேன். தெரிந்தவர்கள் என்று இல்லை; கொஞ்சம் கூட தொடர்பில்லாத யாரோ ஒருவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்டாலும் அதே உணர்வு தான்.சாலை விபத்துகள், இயற்கை மரணம், தற்கொலை, மூப்பு, நோய் என எப்படி நிகழ்ந்த மரணமாக இருந்தாலும் அதற்கு காரணங்களும் விளக்கங்களும் தேடி மனதை ஆற்றிக் கொள்ளவும் தேற்றிக்கொள்ளவும் முயல்கிற பெரும்பாலானோர் போலவேதான் நானும்.

என் அம்மா அடிக்கடி சொல்கிற விஷயம் ஒன்று உண்டு. ”செத்துப் போறவங்களுக்கு அந்த ஒரு நிமிஷ வலிதான். சுத்தியிருக்குறவங்களுக்கு அவங்களோட வாழ்நாள் முழுக்க அது வலி.” இயற்கை மரணமே இப்படியென்றால், உண்மையில் தற்கொலை முடிவை எடுக்கிறவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களை வாழ்நாள் முழுமைக்கும் தண்டித்துவிடுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியொரு தற்கொலையில் தான் தொடங்குகிறது ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’. நாம் நினைப்பதைப் போல இங்கு கூறாய்வு செய்யப்படுவது அவனுடைய உயிரற்ற உடல் அல்ல. பிரபாகரனுடைய நண்பனாகிய கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. மாறாக அவனுடைய பார்வையில், அவன் வழியாகத் தான் பிரபாகரனைக் குறித்து நாம் அறிந்து கொள்கிறோம். பிரபாகரனின் மரணத்திற்கான /தற்கொலைக்கான காரணத்தை அறியும் பொருட்டே துவங்குகிறது கதைசொல்லியின் தேடல்.

கதைசொல்லியின் ஐயங்களும், முன்முடிவுகளும், தீர்மானங்களும், அற்பத்தனங்களும், கேள்விகளும், மனவுளைச்சலும் நம்முடையதாகிவிடுகின்றன.ஒருகட்டத்தில் வாசிக்கிற நாமே கதைசொல்கிறவராக மாறிவிடுகிறோம்.  நாவலின் முதல் பாதி முழுக்க நாம் சந்திக்கிற உரையாடுகிற ஒவ்வொருவரும் தத்தமது உலகத்தில் தம்மையே முன்னிறுத்தி தங்களுடைய கோணத்தில் சொல்கிற கதைகளில் நாமும் பிரபாகரனும் துணைப் பாத்திரங்களே.

பிரபாகரனின் உற்ற நண்பனாகத் தன்னைக் நிறுவிக் கொள்கிற சதாசிவம் தொடங்கி, செவிலி நாஸியா, மணி, தாமோதரன், பாஸ்கர், லீமா, அன்வர் என அத்தனை பேரும் ஒவ்வொரு முடிச்சைப் போட்டு பிரபாகரனின் மரணத்துக்கு வெவ்வேறு சாயங்களைப் பூசிச் செல்கின்றனர்; காதல் தோல்வி, குடும்பச் சிக்கல், பணி நிமித்தமான மன அழுத்தம், போதைப் பழக்கம்,  அகந்தை, ஏன்.. அமானுஷ்ய சாயமும் கூட. எல்லா தேடல்களையும் போலவே பிரபாகரனின் மரணத்திற்கான விடைதேடலும் இடைநிறுத்தத்திற்குள்ளாகிறது.

புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் ஏழாண்டுகளுக்குப்பின்  மீண்டும் தொடர்கிற தேடலில் ஒவ்வொரு முடிச்சும் கதைசொல்லியின் பார்வையிலேயே அவிழ்க்கப்படுகிறது. இறுதியில் நாம் எதிர்பார்க்கிற விடை கிடைத்ததாவென புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு பாத்திரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைவராக வருகிற மயில்சாமியுடையது. ஒரு அரசியல் கட்சிக்கு கொஞ்சமும் குறையாத அளவு அதிகாரத்திமிரும், பதவி தருகிற மிதப்பும், உள்ளரசியலும், தனிமனித வஞ்சம் தீர்த்தலும் மருத்துவத்துறையில் (லும்) நிறைந்திருப்பதே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது

மேலே குறிப்பிட்ட எல்லா பாத்திரங்களுமே சமூகத்தின் வெவ்வேறு பண்புநலன்களைக் கொண்ட வெவ்வேறு முகங்களின் மாதிரிகள் எனச் சொல்லலாம். நாவலின் முதல்பாதியில் அவர்களுடைய தரப்பு நியாயங்களையும் விளக்கங்களையும் கேட்டறிந்து கருத்துருவாக்கம் செய்யும் நாம், இரண்டாம் பாதியில் ஒவ்வொருவர் சொல்கிற தகவலுக்கும் பின்னாலிருக்கிற தரவுகளைப் பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கிறோம். Like a detailed case study or psychoanalysis.

மயிலனின் சிறுகதைகளில் நான் தொடர்ந்து கவனித்து வருகிற கூறு ஒன்றுண்டு. பாத்திரங்களின் வழி தனிமனிதர்களின் ego குறித்தும் அவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் குறித்தும் நிறையவே பேசப்படும். அந்த ego சிறிதளவேனும் சீண்டப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ, போலி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டு சில்லறைத்தனங்கள் அத்தனையும் வெளிப்படும். பின்பு சுய பரிசோதனையும், கேள்விகளுமாய்த் தொடர்ந்து இறுதியில் தெளிவடைவதோடு , தன் அற்பத்தனத்தை தானே நொந்துகொள்கிற புரிதலோடு முடியும். இந்த படிநிலைகளின் விரிவான வடிவமாகவே ’பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலாகப் பார்க்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ’மனநலம்’ என்பதே அதிகம் பொருட்படுத்தப் படாத இன்றைய சூழலில், லூசு மெண்ட்டல் மாதிரியான சொற்கள் அத்தனை சுளுவாக புழங்குகிற சமூகத்தில், மருத்துவர்களின் (மாணவர்களின்) மன அழுத்தம் குறித்தும் அதற்கான புற காரணிகளைக் குறித்தும்  விரிவானதொரு  உரையாடலையும் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ வாயிலாகத் துவக்கி வைத்திருக்கிறார் மயிலன்.

இதுவரை மரணம் குறித்தும் உயிர்வாழ்தல் குறித்தும் இத்தனை விரிவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசிய புத்தகங்கள் எவையெனக் கேட்டால் ஆங்கிலத்தில் Atul Gawande எழுதிய Being Mortal, Paul Kalanithy எழுதிய When breath becomes air ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டு புத்தகங்களை எழுதியவர்களுமே மருத்துவர்கள்; நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள். அன்றாடம் பிறப்பையும் இறப்பையும் ஒர் நாளின் சுழற்சியில் பல முறை கடக்கிறவர்களுக்கு அவற்றின் பின்னாலிருக்கிற உணர்வுகளும் மதிப்பீடுகளும் அற்றுபோய்விடும் என்ற பொது நம்பிக்கையை மாற்றிய புத்தகங்கள் இரண்டுமே. தமிழில் இவ்வகையான எழுத்துக்கு ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ ஒரு துவக்கமாக இருக்குமென நம்புகிறேன்.

An awesome medical-psychoanalysis-thriller in Tamil..and that's a first..! நிச்சயமாகத் தவறவிடக் கூடாத புத்தகம்...!

வாழ்த்துகள் மயிலன்...! :)

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்
Related Posts Plugin for WordPress, Blogger...