நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

கூலியும் மதராஸியும் செட் ப்ராபர்டி கதைகளும்..!

 


கூலி - மதராஸி ரெண்டு படமும் அடுத்தடுத்த நாட்கள்ல பாத்து முடிச்சேன். பிடிச்சிருக்கு பிடிக்கலங்குறதைத் தாண்டி பல விஷயங்கள் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு. கூலி படம் பத்தி பலரும் பல கோணங்கள்ல எழுதி பேசி முடிச்சுட்டாங்க. நான் புதுசா ஏதும் சொல்லப் போறதில்ல. ரொம்ப ரொம்ப underwhelming ஆன படம். எனக்கு உணர்வுப்பூர்வமான எந்த highs ans lowsம் இல்லாம அப்டியே பாத்து முடிச்சேன். ஷெளபின் நடிப்பையும் ஒரு சில காட்சிகள்ல பின்னணி இசையையும் (உபேந்திராவுக்கான பின்னணி இசை) தாண்டி ஆக்‌ஷன் காட்சிகள் உட்பட எதுவுமே மனசுல நிக்கல.

இவ்வளவு stars and budget இருந்தும் execution and staging சிறப்பா பண்ற லோகேஷ்னாலயே அத ஒழுங்கா பண்ண முடியலன்னு தெரியுது. Thuglife பாத்துட்டு லோகேஷ் விக்ரம் படத்தை கையாண்டிருந்த விதம் பத்தி வியந்து எழுதியிருந்தேன். I did not except he'd become this , in such a short span of time. அநிருத் ஏற்கனவே நெறைய ஒப்பேத்தி வைக்குற மாதிரி தான் தெரியுது இது அடுத்ததா சாய் அப்யங்கர் பின்னாடி நிக்கிறார். sigh...!

Disclaimer: மனநலம் மற்றும் உளவியல் சிக்கல்கள் பற்றி என்னுடைய கருத்து அத்தனையும் கேள்வியறிவு மற்று இணையத்திருந்து தெரிந்து கொண்டது மட்டும். நான் பயிற்சி பெற்ற மருத்துவரோ அல்லது மனநல ஆலோசகரோ அல்ல. feel free to point out any mistakes in my interpretations

இப்போ மதராஸிக்கு வருவோம். இந்தப் படத்துக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இதை யாரும் எந்த வகையிலும் பெருசா ஹைப் பண்ணி பேசாதது தான். அதனாலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாம படம் பாத்தேன். படத்துல பிரச்சனைகள் இருந்தாலும் நமக்கு சட்டுன்னு கோவம் வராததுக்கு அதுதான் காரணம்னு நெனைக்கிறேன்.

பொதுவா கதையின் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ ஒரு மனநல சிக்கல் (Psychological and psychiatric disorders ) இருந்து அதன் வழியாக கதையினை நகர்த்துவது அல்லது திரைப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை, காட்சிகளை அதன் மனநல சிக்கல் சார்ந்து காலங்காலமாக உலகம் முழுக்க பல திரைப்படங்களில் தொடர்ந்து செய்யப்படும் ஒரு விஷயம் தான். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கதை நாயகனுடைய மன நல சிக்கலை பயன்படுத்திய படங்கள் என்று எடுத்துக்கொண்டால் மூன்று ( bipolar disorder), அந்நியன் (multiple personality disorder) , நான் சிகப்பு மனிதன் (Narcolepsy) என சிலவற்றை குறிப்பிடலாம். ஹாலிவுட்டில் Split ( Dissociative identity disorder) , Accountant (Autism ) , Fight Club (split personality) ஆகிய உதாரணங்கள் உண்டு. இதில் ஸ்ப்ளிட் படத்தை குறிப்பிட தனிக்காரணம் உண்டு.

mild spoilers ahead

இந்த வகையில் மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு Fregoli Delusion என்கிற மனச்சிக்கல். சிறுவயதில் தன் கண் முன்னே குடும்பத்தினரை மொத்தமாக ஒரு விபத்தில் இழந்த அவருக்கு அதன் காரணமாக மனநலம் பாதிப்படைகிறது. ஆபத்தில் இருக்கும் எவரையும் தன்னுடைய குடும்பத்து உறுப்பினராகவே உருவகப்படுத்திக் கொண்டு ஓடிப்போய் உதவுகிற மனப்பாங்க. மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல விஷயம் போலத் தோன்றினாலும் வாழ்வில் எப்போதோ நிகழ்ந்த ஒரு கொடுமையான அதிர்ச்சிகரமான நிகழ்வினை அது தந்த வலியை திரும்பத் திரும்ப மனதால் அனுபவிப்பது போன்ற ஒரு நிலை.

இப்படிப் பட்ட நாயகனுக்கு ஒரு காதல் தோல்வி , அதனால் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்கிற அவரை வேறொரு உளவுத்துறை / காவல்துறை உயரதிகாரியான பிஜூமேனன் சந்திக்கிறார். தமிழகத்தில் து**ப்பாக்கி கலாச்சாரம் பரவாமல் தடுக்க, இங்க கொண்டு வரப்பட்டிருக்கும் பெருமளவிலான கள்ளத்துப்பாக்கிகள் மக்களை சென்றடையாமல் தடுக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நெருக்கடியான சூழல் இருப்பதால் , எப்புடியோ போற உயிரு மக்கள காப்பாத்த போகட்டும் சார்னு சிவகார்த்திகேயன் சொல்ல பிஜூமேனன் குழுவினரும் இவருடைய மனநல பிரச்சனை பற்றி தெரியாமல் இவரை தங்களுடைய மிஷனுக்காக அனுப்பி வைக்கிறார்கள் . இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

படம் துவங்கியதிலிருந்தே நான் ஒரு மாதிரி conflicted மனநிலையுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த conflict இன்னும் அதிகமானது மருத்துவம் படிக்கிற நாயகி empathy க்கும் delusion க்கும் வேறுபாடு தெரியாமல் நாயகனுடைய இந்த உதவும் மனப்பாங்கை பார்த்து அவரை காதலிக்கத் துவங்குகிறார் .(காலங்காலமா நாம் தமிழ்சினிமாவில் பார்த்த விஷயம் தான். ofcourse we are expected to overlook all this in a commercial action masala film. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே) அது மட்டுமின்றி இது நோயில்லடா வரம் என்பது மாதிரி அசட்டுத்தனமான பேசவும் செய்கிறார்.

இதையெல்லாம் தாண்டி படம் தொய்வில்லாமல் சென்றது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முருகதாஸ் ஓரளவு கதையையும் பாத்திரங்களையும் யோசித்து எழுதியிருக்கின்றார். ஒரு சில பாத்திரங்களை மேலோட்டமாக எழுதியிருக்கிறார். மேலே குறிப்பிட்ட நாயகியின் வசனம் ஒரு உதாரணம். இன்னொரு இடத்தில் பிஜூமேனன் சிகா விடம் “உனக்கு மெண்டல் பேலன்ஸ் இல்ல. நாங்க உன்ன மாதிரி எமோஷனலா யோசிச்சு முடிவெடுக்க முடியாது. இதுக்கெல்லாம் படிச்சு பயிற்சி எடுத்திருக்கோம்” என சொல்வார். ஆனால அதுவரையிலும் அவரே எமோஷனாலக முடிவெடுத்து தான் மனச்சிக்கல் உடைய சிவகார்த்திகேயன் பாத்திரத்தை தன்னுடைய மிஷனுக்கு பயன்படுத்தியிருப்பாரு. இந்த மாதிரி முரணான விஷயங்கள் நிறைய உண்டு. இரண்டாவது பாதியில் திடீரென வரும் animal instinct அது சார்ந்த காட்சிகளும் இந்த ரகம்.

ஆக்‌ஷன் காட்சிகளை ரொம்பவே ரசித்தேன். டான்சிங் ரோஸ் ஷபிர் , வித்யுத் ஜம்வால் என இரண்டு அட்டகாசமான acrobatic வில்லன்களை வைத்துக் கொண்டு சண்டை இல்லாவிட்டால் எப்படி. இருவருக்குமே நிறைய வாய்ப்பிருக்கிற சண்டைக் காட்சிகள் உண்டு. அதிலும் வித்யுத் கதைநாயகனை மிஞ்சும் அளவுக்கு பில்டப் / மாஸ் காட்சிகள் உண்டு அதனால் தான் க்ளைமாக்ஸ் payoff சிறப்பாக இருந்தது. போலவே சிவாவின் physical stature க்கு வித்யுத் உடன் வெறுமனே சண்டை வைத்தால் எடுபடாமல் போயிருக்கும் என்பதால் அந்த animal instinct வைத்து சரிக்கட்டி விட்டார்கள். கார் சேஸிங் உட்பட பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசமாக வடிவமைக்கப் பட்டிருந்தது . ஸ்டண்ட் மாஸ்டருக்கு இணையாக ஓளிப்பதிவாளரும் உழைத்திருக்கிறார். job well done.

சிவகார்த்திகேயன் ஒரு முழுநீள ஆக்‌ஷன் நாயகனா இறங்காம அவருக்கு பழக்கமான naive/innocent/emotional நடிப்பையே செய்திருக்கிறர். He definitely emotes better than before. And Rukmini looked so beautiful <3 இன்னும் அவங்களப் பாத்தா சப்த சாகரதாச்சே ஞாபகம் தான் வருது. அதோட தாக்கம் அப்புடி.

அண்மையில் சாய்வித் சித்ரா பேட்டியில் ஒரு தயாரிப்பாளர் குறிப்பிட்ட விஷயம் “அப்பவெல்லாம் பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டும் தான் தனியா செட் போட்றது எல்லாம். மத்தவங்களுக்கு ஏறகனவே போட்ட செட்ட தான் திரும்ப திரும்ப மாத்தி யூஸ் பண்ணுவாங்க” இப்போ செட்டுக்கு பதிலா கதைக் களம் அப்டித்தான் மறுசுழற்சி செய்யப்படுது போல. கடைசியா வந்த பத்து ஆக்‌ஷன் படம் எடுத்தா அதுல பாதிக்கு மேல ஒரே மாதிரி ட்ரக், துப்பாக்கி, கண்டெய்னர், போர்ட், சிண்டிகேட், ஃபேக்டரி, ஆர்கன் ட்ராஃபிக்கிங் ந்னு அதே அரைச்ச மாவு. How long are we gonna milk Breaking bad / Narcos :( It has become extremely tiresome and monotonous.

பாப்போம்...eagerly waiting for an amazing action entertainer next..!

வியாழன், 26 ஜூன், 2025

நெஞ்சில் சுமக்கின்ற பாறாங்கல்


----------------------------------------------------------------
நான் எனது நெஞ்சில் நெடுநாட்களாக ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

எனது இடது தோள்பட்டைக்கு முன்னே மார்புக்கு கொஞ்சம் மேலாக அந்த பாறாங்கல்லை வைத்து இரு கைகளாலும் அழுத்திப் பிடித்திருக்கிறேன்

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றிய போது அதன் பாரம் குறித்தான அச்சமோ சுமையின் காரணமான வலியோ தெரியவில்லை

அல்லது நான் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை

எப்போதிலிருந்து இந்த பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறாய் எனக் கேட்பீர்களானால் என்னிடம் பதிலில்லை

அல்லது நான் அதனை நினைவில் கொள்ளவில்லை

இரண்டாண்டுகள் ஆகியிருக்கலாம் இருபதாண்டுகள் ஆகியிருக்கலாம்
யுகங்களாகக் கூட இருக்கலாம்

எவ்வளவு கனம்? என்ன எடை?
என்னால் அளவிட முடியவில்லை

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றியபோது இருந்த எடை தான் இப்போதும். 
அவ்வப்போது கொஞ்சம் கூடியும் குறைந்தும் இருக்கலாம்
சரியாக சொல்லத்தெரியவில்லை

அல்லது நான் அதனை அளவிடவில்லை

உங்களுக்குப் புரியாத வகையில் சொல்வதானால்
என் தந்தையின் உடலிலினின்று பிரிந்த உயிரின் எடையாக இருக்கலாம்
என் நண்பர்களின் மரணத்தின் கனமாக இருக்கலாம்
வேறு சில நண்பர்களின் பிரிவின் சுமையளவாய் இருக்கலாம்
பிரியமானவர்களின் மெளனத்தின் கனமாக இருக்கலாம்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

இறக்கி வைக்கலாமே எனக் கேட்பீர்களானால் எங்கே அல்லது யாரிடம் எனத் திரும்பக்கேட்பேன்
சிலரிடம் பதில் இருக்கும் சிலரிடம் பதில் இருக்காது
எங்கே எப்படி யாரிடம் இறக்கி வைப்பதென யாருக்கும் தெரியவில்லை...! 

அல்லது யாருக்கும் நேரமில்லை 

இந்த பாறாங்கல்லை சுமந்தபடி உறங்கி விழிக்கிறேன்
குளித்து உடுத்தி அலுவலகம் செல்கிறேன்
புகைப்படங்களுக்குச் சிரிக்கிறேன்
புத்தகங்கள் படிக்கிறேன்
சமைத்து உண்கிறேன்
குழந்தையைக் கொஞ்சுகிறேன்
அவ்வப்போது இந்தப் பாறாங்கல் இருப்பதே தெரியாமல் மறைந்து போய்விடுகிறது

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

- சுதர்சன் ஹரிபாஸ்கர்

வெள்ளி, 6 ஜூன், 2025

Thuglife and my long rant about boring cinematic experience


_________________________________________________________________

தத்தமது துறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட பெரும் படைப்பாளிகள் , கலைஞர்கள் ஒன்று சேர்கிற திரைப்படம் என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ? தொழில்நுட்ப ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான கதையோட்டத்தினாலும் எப்படியானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் ? எல்லாவற்றையும் மறந்து பார்வையாளர்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கவேண்டாமா ? இது எதுவுமே நிகழாமல் இந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறான ஒரு தட்டையான அனுபவத்தை பார்வையாளனுக்குத் தந்தால், அதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தால், இது குறித்து புலம்பாமல் கேலி செய்யாமல் வேறென்ன செய்வார்கள் ?

தனிப்பட்ட முறையில் நான் நிறையவே எதிர்பார்த்தேன். இந்தியன் 2 மாதிரி சகிக்க முடியாத குப்பையாகவெல்லாம் இத்திரைப்படம் ஆகவில்லை. ஆனால் கதை, திரைக்கதை, தொழில்நுட்பம், செண்ட்டிமெண்ட், ஆக்‌ஷன்,இசை என எந்த வகையிலும் முழுமை பெறாத ஒரு திரைப்படமாக தக்லைஃப் அமைந்திருக்கிறது. பழமையின் சாயலையும் நினைவின் சுவையையும் வைத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகள் தான் காலந்தள்ள முடியும் ? பாத்திரப் படைப்பில் நாயகனை நினைவு படுத்தும் காட்சிகள் உண்டு , வேறு சில திரைப்படங்களையும் நினைவூட்டலாம். பத்தாண்டுகளுக்கு பிறகு எண்ணிப் பார்த்தால் கமலும் சிம்புவும் இணைந்து நடித்த ஒரு மணிரத்னம் படம் என்பதைத் தவிர்த்து வேறெதுவும் நம் மனதில் நிற்க வாய்ப்பில்லை.

கமல் ஹாசன் எழுதி இயக்கிய திரைக்கதையில் பங்களித்த பல திரைப்படங்களை காலங்காலமாக பார்த்து வந்திருக்கிறோம். நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய பாத்திரங்கள், அழுத்தமான நடிப்பு , புதுமையான விஷயங்கள், சோதனை முயற்சிகள் என அத்தனையையும் செய்திருக்கிறார். வணிகரீதியான வெற்றியைப் பெறாத படங்களில் கூட மனதில் நிற்கிற காட்சிகள் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் .உணர்வுப்பூர்வமான காட்சிகளென்றால் உத்தமவில்லன் மனோரஞ்சன் தன் மகனுடன் தனது நோய் குறித்து பேசுகிற காட்சி, மகள் மனோன்மனியை சந்திக்கிற காட்சி இவற்றை உதாரணமாகச் சொல்லலாம். சண்டைக் காட்சிகளில் விஷ்வரூபம் 1ல் இடம்பெற்ற warehouse fight, விக்ரம் 2 திரைப்படத்தின் indoor fight.

இந்த மாதிரி எதையுமே தக்லைஃப் படத்தில் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அல்லது என்னால் ஒன்றி ரசித்து வியக்க முடியவில்லை. நினைவுகளை இழந்துவிட்ட தன் காதலியிடம் தன்னை நினைவூட்ட முயலும் காதலன் என்பது எத்தனை காவியத்தன்மை வாய்ந்த ஒரு காட்சி. அதே மாதிரியான ஒரு காட்சி தக்லைஃபில் உண்டு சுற்றியிருந்தவர்கள் ஆங்காங்கே சிரித்துக் கொண்டு கேலி செய்து கொண்டு இருந்தார்கள். அத்தனை மேலோட்டமாக எழுதி காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

முழுநீள ஆக்‌ஷன் படமான விக்ரம் படத்தில் கூட அத்தனை அழுத்தமான காட்சிகள் உண்டு. ”எனக்கும் சக்சஸ் இருக்கு சார். ஆனா என்னால சொல்ல முடியாது. I am known by my failures. நான் ஒரு நேர்மையான கொம்பன்” என கமல் சொல்லிமுடிக்கும் போதும், மகனை இழந்து பேரப்பிள்ளையை வைத்துக் கொண்டு போர்க்கண்ட சிங்கம் பாடல் பின்னணியில் தோன்றும் போதும் நமக்கும் மனம் கலங்கும். கமல்-லோகேஷ்-அநிருத் கூட்டணியால் செய்ய முடிந்ததை கமல்-மணிரத்னம்-ரஹ்மானால் ஏன் செய்ய முடியவில்லை.

மணிரத்னம் பற்றி தனியே என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அவரின் சிறப்பென சொல்லப்படுகிற urban aesthetics ஐக் கூட அவரால் சிறப்பாக செய்ய முடியவில்லை. அத்தனை வறட்சியான romance (if at all there was any) சிம்பு த்ரிஷாவுக்கு இடையேயான காட்சியிலும் திரையரங்கமே சிரித்துக் கொண்டிருந்தது பொன்னியின் செல்வன் குறித்து பலருக்கும் பலவித கருத்துகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு இரண்டு பாகங்களும் எனக்கு பிடித்தே இருந்தன. வந்தியத்தேவன் - குந்தவை காதல் காட்சிகள் , ஆதித்தகரிகாலன் - நந்தினி கடைசி சந்திப்பு காட்சி, அருள்மொழி கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கிற காட்சி என அட்டகாசமான staging உடன் நிறைய காட்சிகள் உண்டு. But nothing worked for me in Thug Life . The only portion where emotions, performance and music came along together and worked out well was when Ishwarya Lakshmi's story reveal happened.

படத்தின் முதல் பாதி கொஞ்சம் நாயகனை நினைவூட்டினாலும் இரண்டாம் பகுதி இந்தியன் 2 வையும் விவேகம் திரைப்படத்தையும் நினைவூட்டுவது போல இருந்தது. தேவையில்லாத போதி தர்மர் வகையறா கராத்தே சண்டையும் ஜடாமுடி கோலமும் கொஞ்சமும் பொருந்தவேயில்லை.

ரஹ்மானின் இசையில் பாடல்கள் (முந்தைய பழைய பாடல்களின் சாயலுடன் இருந்தாலும்) ரசிக்கும்படியே இருந்தன . ஜிங்குச்சா (ராட்சச மாமனே + ஹை சக்கா சக் ), அஞ்சுவண்ண பூவே (எங்க போன ராசா) , முத்தமழை ( ஹே ராமா + எது சுகம், சுகம் + இதயம் நகர்ந்து ) , ஓ மாறா ( மரியான் - ஆஃப்ரிக்கா + மகுடி - கடல்) . ஆனால் பின்னணி இசை கொஞ்சமும் ஒட்டாமல் ஏனோ தானோ என்றிருந்தது.

Be it anything or anyone. Protagonist, antagonist, conflict, romance, heroism, action, emotional highs, action elevation, humor, sentiment....nothing works with lackluster and shallow writing. அது தான் எனக்கு திரும்பத்திரும்ப மனசுல தோணுன விஷயம். இன்னொன்னு without riding on nostalgia and star value திரும்பவும் ஒரு engaging and exciting theatrical experience அ தமிழ் சினிமா எப்போ தரும் அப்டிங்குற கேள்வியும் தொக்கி நிக்குது ?


ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நீஸெவின் வேர்க்கனி - மயிலன் ஜி சின்னப்பன் - சால்ட் பதிப்பகம்


இந்த ஆண்டு படித்து முடித்த முதல் நாவல் (குறுநாவல் ?!) மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் நீஸேவின் வேர்க்கனி. நூற்றியிருபது பக்கங்களுக்குள் என்பதால் எளிமையாகப் படித்து முடித்து விடலாம் என்கிற முன்முடிவுடன் தொடங்கினேன். எதிர்பார்ப்பிற்கு மாறாக மயிலனின் வழக்கமான மொழிநடையிலிருந்து மாறுபட்டு அதிகம் கவனக்குவிப்பைக் கோருகிற ஒரு நாவலாக அமைந்திருந்தது ‘நீஸேவின் வேர்க்கனி’. 

பதினேழாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையானது டானிஷ் நிலப்பிரபுக்களான விர்கஸ், நேதா இருவரின் கலை சார்ந்த ஓர் அற்புதமான உரையாடலுடன் துவங்குகிறது. அதன் பின் நாவல் முழுவம் உரையாடல்கள் குறைந்து போய் பெரும்பகுதி விவரணைகளாலேயே நிரம்பியிருக்கின்றது. அதீத விருப்பம் , எல்லை, துன்பம் எனப் பொருள்படும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நாவல் , எனக்கு துயரங்களின் தொகுப்பாகவே தொன்றியது.

மன்னரின் ஆசியுடன் டானிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவி இந்தியாவில் வாணிபத்தை விரிவாக்கிடும் பொருட்டு டச்சுக்காரர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு கீழைத்திசையில் இரு கப்பல்களில் பயணப்படும் விர்கஸும் நேதாவும் இந்தப் பெரும்பயணத்தில் இழந்தவையும் பெற்றவையுமே இந்த நாவல். தொடக்கத்தில் காலனியாதிக்கவாதிகளின் பாடுகளை அவர்களின் பார்வையில் தெரிந்து கொள்வதில் எனக்கு என்ன கிட்டும் என்கிற மேலோட்டமான நெருடலுடனே வாசிக்கத்துவங்கி ஒரு கட்டத்தில் கதையின் ஓட்டத்தில் கதைப்பாத்திரங்களோடும் அவர்தம் வாழ்வினோடும் ஒன்றிவிட்டு, பின்பு அதே நெருடலுடன் ’உங்களுக்கு வேணும்டா; என சிறுபிள்ளைத்தனமாக என்னை விலக்கிக் கொள்ள முயன்றதும் நடந்தது.
முதல் அத்தியாயத்தின் கலை குறித்த பின்வரும் உரையாடல்கள் உண்டு 

 // “நற்கலை எப்போதும் பெருவலியிருந்தும் உளப்பிணியிலிருந்தும் வருத்தும் ஏழ்மையிலிருந்துமே பிறக்கமுடியும்”
“கேளிக்கை மனத்திலிருந்து கலையுருவாக்கம் நிகழமுடியாது என்று நான் சொல்வதை கலை என்பதையே வலியின் வெளிப்பாடாகத் திரிக்கிறேன் என எடுத்துக்கொள்ள சாத்தியமுண்டு. வெளிப்பாட்டுத் தளத்திலல்லாமல் , உள்ளீடு சார்ந்தவொன்றை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கலை நிர்ப்பந்திக்கும் அக்கறையும் சிரத்தையும் மிதவை மனங்களால் எட்டமுடியாதது. உத்தேசிக்கும் வெளியீடு, காதலாகவோ களிப்புணர்வாகவோ கொண்டாட்டமாகவோ இருந்தாலும் அதற்கான அழுத்தமான, பிரத்தியேகமான ஊன்றல் வேண்டும்.செல்வச்செழுமை அந்த ஊன்றலை அனுமதிக்காது” //

மேற்கண்ட உரையாடல்களே இந்த நாவலின் மொத்த சாரத்தையும், வாசிக்கிறவர்கள் இந்த படைப்பிலிருந்து பெறுவதென்ன எனபதையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

நாவலின் தலைப்பான நீஸே குறித்து முதல் அத்தியாத்தில் ஒரு குறிப்பு உண்டு. நேதாவும் விர்கஸும் கலைமனம் குறித்தான விவாதத்தின் முடிவில் நேதா உருவாக்கிக்கொண்டிருக்கிற நீஸேவின் மரச்சிற்பத்தை விர்கஸிடம் காட்டுவான். நீஸே (Nisse) என்பது டானிஷிய தொன்மங்களிலும் நாட்டார்வழக்கிலும் சொல்லப்படுகிற ஒரு வகை நல்லாவி. உருவத்தில் சிறியவையான இவை வயதில் முதிய தோற்றத்துடன் வீட்டிற்குள் இருந்தபடி அன்றாட வேலைகளைச் செய்கிற பணியாள் போன்றவை. ஆனால் தொன்மங்களில் சொல்லப்பட்டது போலன்றி இளமையான அழகான உருவத்தில் நீஸேவை வடித்திருப்பான் நேதா. நீஸேவின் வேர்க்கனி என்கிற தலைப்பிற்கும் இதற்குமான தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

காலம்காலமாக வழக்கத்திலிருக்கும் ஒன்றை நம்முடைய பார்வையில் முற்றிலும் வேரொன்றாக உருவகித்து மீட்டுருவாக்குவது(ம்) தான் கலைமனம் செய்யக்கூடியதென நேதா முயன்றான் எனில் மயிலன் இந்த நாவலின் வழி செய்ய முயன்றிருப்பதுவும் அது தானா? 

நாவல் டென்மார்க்கின் கோப்பன்ஹேகனில் தொடங்கி, இலங்கை, திரிகோணமலை, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ரகுநாத நாயக்கர் என அத்தனையையும் தொட்டு தரங்கம்பாடியின் டன்ஸ்பர்க் கோட்டையில் முடிகிறது. கப்பல் பயணத்தின் பிற நிகழ்வுகளைக் குறிப்பிட்டால் வாசிக்கிறவர்களுக்கு எதுவும் மிஞ்சாது என்பதால் அதனை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளவும் . Well written and very demanding work of fiction. வாழ்த்துகள் மயிலன்...! <3

சால்ட் பதிப்பகம் அவர்களுடைய வழக்கமான அழகியலுடன் மிகச் சிறப்பாக புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்கள். வடிவமைப்பாளரும் ஓவியருமான பழனிவேலன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
Related Posts Plugin for WordPress, Blogger...