நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 27 அக்டோபர், 2025

பைசன் - காளமாடன் - 2025


 

பைசன் - காளமாடன் பார்த்துவிட்டேன். இதுவரையிலும் வந்த மாரி செல்வராஜின் திரைப்படங்களிலேயே எல்லா வகையிலும் முழுமையான திருப்திகரமான படம் என உறுதியாகச் சொல்லலாம். எடுத்துக் கொண்ட கதைக்கும் கதைக்களத்திற்கும் நியாயம் செய்யும் வகையில், படத்தில் கையாளப் பட்டிருக்கிற தீவிரமான விஷயங்களை சொன்ன விதத்திலும், பாத்திரப் படைப்பிலும், நடிகர்கள் தேர்விலும் , மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.

தென்மாவட்ட உள்ளூர் கபடிப் போட்டிகள் யூட்யூபில் காணக்கிடைக்கின்றன. அல்லூர் பிரபா, தூத்துக்குடி க்ளெமண்ட் உள்ளிட்ட கபடி வீரர்களின் பெயர்கள் பரிச்சயமானது அப்படித்தான். நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். உண்மையில் பைசன் திரைப்படத்தில் இடம்பெற்ற கபடி சார்ந்த காட்சிகள் அத்தனையும் ஏதோ அசலான உள்ளூர் போட்டிகளை மறைந்திருந்து காட்சிப்படுத்தியது போலத்தான் தோன்றியது . வீரர்களில் உடல்மொழி, ஆட்ட முறைகள் உட்பட அனைத்திலும் அவ்வளவு உண்மைத்தன்மை. படக்குழுவினரின் உழைப்பும், நடிகர்களின் அர்ப்பணிப்பும் வியக்க வைத்தது.அதிலும் துருவ் கபடி வீரராகவே மாறிவிட்டார்.அவர் சொன்னது போல இது தான் அவருடைய முதல் படம்.

பொதுவாக பரியேறும் பெருமாள் உள்ளிட்ட மாரியின் படங்களில் அழகியல், குறியீடு சார்ந்த விஷயங்களில் அதீதமான கவனம் செலுத்தப்பட்டு கதையின் மையத்திலிருந்து விலகிப் போய்விடும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது . அது பைசனில் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் ; படம் முழுக்க இரு வேறு சமூக சார்ந்த இரு தனி மனிதர்களின் பகை அந்தந்த சமூகத்தினருக்கு எதிரான பகையாக (அந்த தனி மனிதர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் )மாறுவதையும் அதனால் இதற்கு தொடர்பே இல்லாத கிட்டான் இந்தச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பதையும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். உண்மைச் சம்பவங்களில் தொடர்புடையோரின் பாத்திரங்கள் என்பதால் அமீர், லால் ஆகியோரின் பாத்திரப் படைப்புகளில் மிக மிக கவனமாகவே செயல்பட்டிருக்கிறார் மாரி செல்வராஜ். அவர்களின் வழியே பேசப்படவேண்டியவற்றையும் தவறாமல் பேசியாயிற்று.

கறுப்பின விளையாட்டு வீரர்கள் பற்றிய ஹாலிவுட் திரைப்படங்களில் தவறாமல் இடம்பெறும் அம்சம் ஒன்று உண்டு. அவர்கள் வாழும் சூழலில் அவர்களைச் சுற்றியிருக்கிற வன்முறையில் சிக்கிக் கொண்டால் வாழ்வு பாழாய் போகுமென எப்போதும் யாராவது ஒருவரோ பலரோ அவர்களை பாதுகாத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு மேலேற்றி விட முயன்றுகொண்டே இருப்பார்கள். பி.டி வாத்தியாராக வரும் அருவி ‘மதன்’ போல், பைசன் திரைப்படத்திலும் அப்படியான பல பாத்திரங்கள் உண்டு .

அமெரிக்காவில் முதன்முதலில் தொழில்முறை பேஸ்பால் அணியில் இடம்பெற்று விளையாடிய கறுப்பின வீரரான ஜாக்கி ராபின்சன் பற்றிய திரைப்படம் 42. பின்வருவது அந்தப்படத்தில் அணியின் உரிமையாளருக்கும் ஜாக்கி ராபின்சனுக்கும் இடையே இடம்பெறும் முக்கியமான உரையாடல்

Jackie Robinson: You want a player who doesn’t have the guts to fight back?

Branch Rickey: No. No. I want a player who’s got the guts not to fight back. People aren’t gonna like this. They’re gonna do anything to get you to react. Echo a curse with a curse and, uh, they’ll hear only yours. Follow a blow with a blow and they’ll say, “The N**ro lost his temper.” That “The N**ro does not belong.” Your enemy will be out in force... and you cannot meet him on his own low ground. We win with hitting, running, fielding. Only that. We win if the world is convinced of two things: That you are a fine gentleman and a great baseball player. Like our Savior... you gotta have the guts... to turn the other cheek. Can you do it?

Jackie Robinson: You give me a uniform... you give me a number on my back... and I’ll give you the guts.

பைசன் திரைப்படத்தில் கிட்டானுக்கும் இதே மாதிரியான சூழல் தான். சுற்றியிருக்கிறவற்றிலிருந்து அவன் தப்பித்துக்கொள்ளவும், தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கவும், எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவும் அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவ்வப்போது விழுகிறான்; கோவப்படுகிறான்; காயப்படுகிறான்; ஆனாலும் திரும்பவும் எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கிறான். அவனாக விரும்பாமல் இந்த வன்முறைச் சுழலுக்குள் பல முறை இழுக்கப்பட்டாலும் அதிலிருந்து மற்றோரால் வெளியேற்றப்படுகிறான்.

தென்மாவட்டங்களின் சாதீயக் கொந்தளிப்புகளுக்கிடைய ஹாக்கியையும் பிற விளையாட்டுகளையும் பிடித்துக் கொண்டு மேலேறி வந்த பையன்களைப் பற்றி சரவணன் சந்திரன் நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய பார்பி நாவலும் அதில் இடம்பெறும் ‘விளையாடும் போது கேலரியைப் பார்க்காதே’ எனும் வாசகமும் மனதில் வந்து போயின.
பைசனின் ஆக்கத்தைப் பொருத்தவரையில் மாரி செல்வராஜின் craftsmanship உச்சம் தொட்டிருக்கின்றது. ஒவ்வொரு பாத்திரமும் எழுதப்பட்ட விதமும் திரையில் அந்தந்த பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடமும் ஒட்டுமொத்தமாக திரைப்படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. பசுபதிக்கு ‘சார்ப்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாருக்குப் பிறகு காலத்திற்கும் மனதில் நிற்பது போல் ஒரு பாத்திரம். மனிதர் அப்படியொரு நடிப்பினை தந்திருக்கிறார். சார்ப்பட்டா பரம்பரை திரையரங்குகளில் வெளிவராத குறையினை இந்தப் படம் போக்கியிருக்கிறது. அமீர், லால் உள்ளிட்டோரின் நடிப்பைப் பற்றி தனித்தனியே குறிப்பிட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். எல்லாருமே அசுரத்தனமாக போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை பற்றிப் பேசியே ஆக வேண்டும். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இருந்திருக்க வேண்டுமென நினைத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் அதை தவறென நிரூபித்திருக்கிறார் நிவாஸ் . தீக்கொளுத்தி, சீனிக்கல்லு, தென்னாடே, ரெக்க உள்ளிட்ட ஒவ்வொரு பாடலுமே ஒரு தனித்தன்மையுடன் மிளிர்கிறது. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இந்தப் படம் நிவாஸுக்கான நிரந்தர இடத்தினை தமிழ்த்திரையுலகில் உறுதி செய்யுமென நம்புவோம்.
அர்ஜுனா விருது வென்ற கபடி வீரரான மணத்தி கணேசனின் கதையினை எடுத்துக் கொண்டு அதற்கு தென் மாவட்டங்களின் கடந்த கால தற்கால நிகழ்வுகளை இணைத்து ஒரு திரைக்கதையினை உருவாக்கி சலிக்காத ஒரு திரையனுபவத்தினை நமக்கு வழங்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். His finest work or art till date. <3

Bison will stay in ours for a long time <3
 

சனி, 4 அக்டோபர், 2025

Justified - ஹில்பில்லி ஷேக்ஸ்பியர்

  


Yellowstone பார்த்து முடித்தபின் அதே மாதிரியான வேறு ஒரு நிலப்பகுதி சார்ந்த கதையமைப்பைக் கொண்ட வேறு தொடர்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்படி சிக்கியது தான் இந்த Justified தொடர். யெல்லோஸ்டோன் எப்படி ரெட்னெக் (redneck - slang word ) என்றழைக்கப் படுகிற conservative அமெரிக்கர்கள் அவர்களின் வாழ்வியல் சார்ந்ததோ அதே போல Justified தொடர் ஹில்பில்லி என சுட்டப்படும் அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைத்தொடர் சார்ந்த நிலப்பரப்பில் வாழ்கிற வெள்ளையின மக்கள் , அவர்களின் வாழ்வியல் சார்ந்த கதை (என்னத்த பெரிய வாழ்வியல் - மூன்ஷைன்னு ஒரு கள்ளச்சா*ராயம் காய்ச்சுவானுங்க, வேட்டையாடுவாங்க, கன்னாபின்னான்னு க*ஞ்*சா வளர்ப்பு அது சார்ந்த தொழில்கள். இத தான் காட்றாங்க :D )

அமெரிக்க எழுத்தாளரான எல்மோர் லியனார்ட் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த ஜஸ்டிஃபைட் வலைத்தொடர். இவருடைய பல நாவல்கள், கதைகள் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. இவருடைய சிறப்பே இந்த நிலவியல் சார்ந்த கதைகளை விறுவிறுப்பாக எழுதுவதுடன் வித்தியாசமான அசலான கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிடுவதும் தான்.

கதை நாயகன் ரேலன் கிவன்ஸ் ஒரு மார்ஷல் அதிகாரி. அதாவது சிறையிலிருந்து தப்பியோடிய தண்டனைக் கைதிகளை தேடிப் பிடிப்பது, கைதிகளை சிறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வது, கைதிகளை ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு இடமாற்றுவது உள்ளிட்ட வேலைகள் இந்த மார்ஷல்களின் பொறுப்பு. ரேலன் ஒரு trigger happy ஆசாமி. எதற்கெடுத்தாலும் துப்பாக்கி தூக்குகிற ஆள். சுடுவதில் அசகாய சூரனும் கூட. இப்படிப்பட்ட ஆளுக்கு அவருடைய சொந்த ஊருக்கே பணிமாற்றலாகி வருகிறார். அங்கிருக்கிற பிரச்சனைகள் அத்தனையும் அவருக்கு அத்துபடி.

அதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது ரேலனின் பால்ய வயது நண்பனும் , கொடும் குற்றவாளியுமான பாய்ட் க்ரவ்டர். சிறுவயதில் ரேலனும் பாய்டும் நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றாக வேலை செய்தவர்கள். பாய்ட் வெடிப்பொருட்கள் சார்ந்து வேலை செய்ததால் அதில் நிபுணாத்துவம் பெற்றவன். போதாக்குறைக்கு ஒரு வெள்ளை இனவெறி குழுவையும் தலைமை தாங்கி நடத்தி வருபவன்.எப்படிப்பட்ட சூழலையும் தன்னுடைய பேச்சுத்திறமையால் சமாளித்துவிடக்கூடியவன் (Silver-tongue). கெட்டவனா அல்லது எதிர்நாயகனா என் நமக்கே குழப்பம் ஏற்படுத்தக் கூடிய பாத்திரப்படைப்பு இது.

ரேலனுக்கும் பாய்டுக்கும் இடையேயான மோதலுடன் பல கிளைக்கதைகளுடன் கூடிய சுவாரஸ்யமான க்ரைம் ட்ராமா . ரேலன் கிவன்ஸாக நடித்திருப்பவர் ஹிட்மேன் புகழ் டிமத்தி ஆலிஃபண்ட். அவருடைய உடல்வாகும், கெளபாய் ஸ்டைலும், அலட்சியமான உடல்மொழியும் ரேலன் எனும் பாத்திரத்தை மிகச்சிறப்பான ஒன்றாக மாற்றியிருக்கின்றது. பாய்ட் க்ரவ்டராக நடித்திருக்கும் வால்டன் காக்கின்ஸும் ஒன்றும் சாதாரணமான ஆளில்லை. நடிப்பு ராட்சஸன். இந்த தொடரின் மிகப்பெரிய பலமே வால்டனுடைய நடிப்பு தான்.

உங்களுக்கு கொஞ்சம் மெதுவாக நகர்கிற ஆக்‌ஷன் க்ரைம்ட்ராமாக்கள் பிடிக்குமென்றால் கட்டாயம் பார்க்கலாம். நிறைய சுவாரஸ்மான பாத்திரங்களும் கதைகளும் உண்டு. கூடவே அட்டகாசமான Bluegrass இசையும் / பாடல்களும் உண்டு. I am particularly huge fan of Bluegrass music. 

This show has been celebrated by the viewers as Hillbilly Shakespeare. :D Rightfully so...! Absolutely loved it. 

Justified (6 seasons) - Streaming on Sony Liv

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

கூலியும் மதராஸியும் செட் ப்ராபர்டி கதைகளும்..!

 


கூலி - மதராஸி ரெண்டு படமும் அடுத்தடுத்த நாட்கள்ல பாத்து முடிச்சேன். பிடிச்சிருக்கு பிடிக்கலங்குறதைத் தாண்டி பல விஷயங்கள் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு. கூலி படம் பத்தி பலரும் பல கோணங்கள்ல எழுதி பேசி முடிச்சுட்டாங்க. நான் புதுசா ஏதும் சொல்லப் போறதில்ல. ரொம்ப ரொம்ப underwhelming ஆன படம். எனக்கு உணர்வுப்பூர்வமான எந்த highs ans lowsம் இல்லாம அப்டியே பாத்து முடிச்சேன். ஷெளபின் நடிப்பையும் ஒரு சில காட்சிகள்ல பின்னணி இசையையும் (உபேந்திராவுக்கான பின்னணி இசை) தாண்டி ஆக்‌ஷன் காட்சிகள் உட்பட எதுவுமே மனசுல நிக்கல.

இவ்வளவு stars and budget இருந்தும் execution and staging சிறப்பா பண்ற லோகேஷ்னாலயே அத ஒழுங்கா பண்ண முடியலன்னு தெரியுது. Thuglife பாத்துட்டு லோகேஷ் விக்ரம் படத்தை கையாண்டிருந்த விதம் பத்தி வியந்து எழுதியிருந்தேன். I did not except he'd become this , in such a short span of time. அநிருத் ஏற்கனவே நெறைய ஒப்பேத்தி வைக்குற மாதிரி தான் தெரியுது இது அடுத்ததா சாய் அப்யங்கர் பின்னாடி நிக்கிறார். sigh...!

Disclaimer: மனநலம் மற்றும் உளவியல் சிக்கல்கள் பற்றி என்னுடைய கருத்து அத்தனையும் கேள்வியறிவு மற்று இணையத்திருந்து தெரிந்து கொண்டது மட்டும். நான் பயிற்சி பெற்ற மருத்துவரோ அல்லது மனநல ஆலோசகரோ அல்ல. feel free to point out any mistakes in my interpretations

இப்போ மதராஸிக்கு வருவோம். இந்தப் படத்துக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இதை யாரும் எந்த வகையிலும் பெருசா ஹைப் பண்ணி பேசாதது தான். அதனாலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாம படம் பாத்தேன். படத்துல பிரச்சனைகள் இருந்தாலும் நமக்கு சட்டுன்னு கோவம் வராததுக்கு அதுதான் காரணம்னு நெனைக்கிறேன்.

பொதுவா கதையின் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ ஒரு மனநல சிக்கல் (Psychological and psychiatric disorders ) இருந்து அதன் வழியாக கதையினை நகர்த்துவது அல்லது திரைப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை, காட்சிகளை அதன் மனநல சிக்கல் சார்ந்து காலங்காலமாக உலகம் முழுக்க பல திரைப்படங்களில் தொடர்ந்து செய்யப்படும் ஒரு விஷயம் தான். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கதை நாயகனுடைய மன நல சிக்கலை பயன்படுத்திய படங்கள் என்று எடுத்துக்கொண்டால் மூன்று ( bipolar disorder), அந்நியன் (multiple personality disorder) , நான் சிகப்பு மனிதன் (Narcolepsy) என சிலவற்றை குறிப்பிடலாம். ஹாலிவுட்டில் Split ( Dissociative identity disorder) , Accountant (Autism ) , Fight Club (split personality) ஆகிய உதாரணங்கள் உண்டு. இதில் ஸ்ப்ளிட் படத்தை குறிப்பிட தனிக்காரணம் உண்டு.

mild spoilers ahead

இந்த வகையில் மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு Fregoli Delusion என்கிற மனச்சிக்கல். சிறுவயதில் தன் கண் முன்னே குடும்பத்தினரை மொத்தமாக ஒரு விபத்தில் இழந்த அவருக்கு அதன் காரணமாக மனநலம் பாதிப்படைகிறது. ஆபத்தில் இருக்கும் எவரையும் தன்னுடைய குடும்பத்து உறுப்பினராகவே உருவகப்படுத்திக் கொண்டு ஓடிப்போய் உதவுகிற மனப்பாங்க. மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல விஷயம் போலத் தோன்றினாலும் வாழ்வில் எப்போதோ நிகழ்ந்த ஒரு கொடுமையான அதிர்ச்சிகரமான நிகழ்வினை அது தந்த வலியை திரும்பத் திரும்ப மனதால் அனுபவிப்பது போன்ற ஒரு நிலை.

இப்படிப் பட்ட நாயகனுக்கு ஒரு காதல் தோல்வி , அதனால் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்கிற அவரை வேறொரு உளவுத்துறை / காவல்துறை உயரதிகாரியான பிஜூமேனன் சந்திக்கிறார். தமிழகத்தில் து**ப்பாக்கி கலாச்சாரம் பரவாமல் தடுக்க, இங்க கொண்டு வரப்பட்டிருக்கும் பெருமளவிலான கள்ளத்துப்பாக்கிகள் மக்களை சென்றடையாமல் தடுக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நெருக்கடியான சூழல் இருப்பதால் , எப்புடியோ போற உயிரு மக்கள காப்பாத்த போகட்டும் சார்னு சிவகார்த்திகேயன் சொல்ல பிஜூமேனன் குழுவினரும் இவருடைய மனநல பிரச்சனை பற்றி தெரியாமல் இவரை தங்களுடைய மிஷனுக்காக அனுப்பி வைக்கிறார்கள் . இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

படம் துவங்கியதிலிருந்தே நான் ஒரு மாதிரி conflicted மனநிலையுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த conflict இன்னும் அதிகமானது மருத்துவம் படிக்கிற நாயகி empathy க்கும் delusion க்கும் வேறுபாடு தெரியாமல் நாயகனுடைய இந்த உதவும் மனப்பாங்கை பார்த்து அவரை காதலிக்கத் துவங்குகிறார் .(காலங்காலமா நாம் தமிழ்சினிமாவில் பார்த்த விஷயம் தான். ofcourse we are expected to overlook all this in a commercial action masala film. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் மட்டுமே) அது மட்டுமின்றி இது நோயில்லடா வரம் என்பது மாதிரி அசட்டுத்தனமான பேசவும் செய்கிறார்.

இதையெல்லாம் தாண்டி படம் தொய்வில்லாமல் சென்றது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முருகதாஸ் ஓரளவு கதையையும் பாத்திரங்களையும் யோசித்து எழுதியிருக்கின்றார். ஒரு சில பாத்திரங்களை மேலோட்டமாக எழுதியிருக்கிறார். மேலே குறிப்பிட்ட நாயகியின் வசனம் ஒரு உதாரணம். இன்னொரு இடத்தில் பிஜூமேனன் சிகா விடம் “உனக்கு மெண்டல் பேலன்ஸ் இல்ல. நாங்க உன்ன மாதிரி எமோஷனலா யோசிச்சு முடிவெடுக்க முடியாது. இதுக்கெல்லாம் படிச்சு பயிற்சி எடுத்திருக்கோம்” என சொல்வார். ஆனால அதுவரையிலும் அவரே எமோஷனாலக முடிவெடுத்து தான் மனச்சிக்கல் உடைய சிவகார்த்திகேயன் பாத்திரத்தை தன்னுடைய மிஷனுக்கு பயன்படுத்தியிருப்பாரு. இந்த மாதிரி முரணான விஷயங்கள் நிறைய உண்டு. இரண்டாவது பாதியில் திடீரென வரும் animal instinct அது சார்ந்த காட்சிகளும் இந்த ரகம்.

ஆக்‌ஷன் காட்சிகளை ரொம்பவே ரசித்தேன். டான்சிங் ரோஸ் ஷபிர் , வித்யுத் ஜம்வால் என இரண்டு அட்டகாசமான acrobatic வில்லன்களை வைத்துக் கொண்டு சண்டை இல்லாவிட்டால் எப்படி. இருவருக்குமே நிறைய வாய்ப்பிருக்கிற சண்டைக் காட்சிகள் உண்டு. அதிலும் வித்யுத் கதைநாயகனை மிஞ்சும் அளவுக்கு பில்டப் / மாஸ் காட்சிகள் உண்டு அதனால் தான் க்ளைமாக்ஸ் payoff சிறப்பாக இருந்தது. போலவே சிவாவின் physical stature க்கு வித்யுத் உடன் வெறுமனே சண்டை வைத்தால் எடுபடாமல் போயிருக்கும் என்பதால் அந்த animal instinct வைத்து சரிக்கட்டி விட்டார்கள். கார் சேஸிங் உட்பட பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசமாக வடிவமைக்கப் பட்டிருந்தது . ஸ்டண்ட் மாஸ்டருக்கு இணையாக ஓளிப்பதிவாளரும் உழைத்திருக்கிறார். job well done.

சிவகார்த்திகேயன் ஒரு முழுநீள ஆக்‌ஷன் நாயகனா இறங்காம அவருக்கு பழக்கமான naive/innocent/emotional நடிப்பையே செய்திருக்கிறர். He definitely emotes better than before. And Rukmini looked so beautiful <3 இன்னும் அவங்களப் பாத்தா சப்த சாகரதாச்சே ஞாபகம் தான் வருது. அதோட தாக்கம் அப்புடி.

அண்மையில் சாய்வித் சித்ரா பேட்டியில் ஒரு தயாரிப்பாளர் குறிப்பிட்ட விஷயம் “அப்பவெல்லாம் பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டும் தான் தனியா செட் போட்றது எல்லாம். மத்தவங்களுக்கு ஏறகனவே போட்ட செட்ட தான் திரும்ப திரும்ப மாத்தி யூஸ் பண்ணுவாங்க” இப்போ செட்டுக்கு பதிலா கதைக் களம் அப்டித்தான் மறுசுழற்சி செய்யப்படுது போல. கடைசியா வந்த பத்து ஆக்‌ஷன் படம் எடுத்தா அதுல பாதிக்கு மேல ஒரே மாதிரி ட்ரக், துப்பாக்கி, கண்டெய்னர், போர்ட், சிண்டிகேட், ஃபேக்டரி, ஆர்கன் ட்ராஃபிக்கிங் ந்னு அதே அரைச்ச மாவு. How long are we gonna milk Breaking bad / Narcos :( It has become extremely tiresome and monotonous.

பாப்போம்...eagerly waiting for an amazing action entertainer next..!

வியாழன், 26 ஜூன், 2025

நெஞ்சில் சுமக்கின்ற பாறாங்கல்


----------------------------------------------------------------
நான் எனது நெஞ்சில் நெடுநாட்களாக ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

எனது இடது தோள்பட்டைக்கு முன்னே மார்புக்கு கொஞ்சம் மேலாக அந்த பாறாங்கல்லை வைத்து இரு கைகளாலும் அழுத்திப் பிடித்திருக்கிறேன்

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றிய போது அதன் பாரம் குறித்தான அச்சமோ சுமையின் காரணமான வலியோ தெரியவில்லை

அல்லது நான் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை

எப்போதிலிருந்து இந்த பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறாய் எனக் கேட்பீர்களானால் என்னிடம் பதிலில்லை

அல்லது நான் அதனை நினைவில் கொள்ளவில்லை

இரண்டாண்டுகள் ஆகியிருக்கலாம் இருபதாண்டுகள் ஆகியிருக்கலாம்
யுகங்களாகக் கூட இருக்கலாம்

எவ்வளவு கனம்? என்ன எடை?
என்னால் அளவிட முடியவில்லை

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றியபோது இருந்த எடை தான் இப்போதும். 
அவ்வப்போது கொஞ்சம் கூடியும் குறைந்தும் இருக்கலாம்
சரியாக சொல்லத்தெரியவில்லை

அல்லது நான் அதனை அளவிடவில்லை

உங்களுக்குப் புரியாத வகையில் சொல்வதானால்
என் தந்தையின் உடலிலினின்று பிரிந்த உயிரின் எடையாக இருக்கலாம்
என் நண்பர்களின் மரணத்தின் கனமாக இருக்கலாம்
வேறு சில நண்பர்களின் பிரிவின் சுமையளவாய் இருக்கலாம்
பிரியமானவர்களின் மெளனத்தின் கனமாக இருக்கலாம்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

இறக்கி வைக்கலாமே எனக் கேட்பீர்களானால் எங்கே அல்லது யாரிடம் எனத் திரும்பக்கேட்பேன்
சிலரிடம் பதில் இருக்கும் சிலரிடம் பதில் இருக்காது
எங்கே எப்படி யாரிடம் இறக்கி வைப்பதென யாருக்கும் தெரியவில்லை...! 

அல்லது யாருக்கும் நேரமில்லை 

இந்த பாறாங்கல்லை சுமந்தபடி உறங்கி விழிக்கிறேன்
குளித்து உடுத்தி அலுவலகம் செல்கிறேன்
புகைப்படங்களுக்குச் சிரிக்கிறேன்
புத்தகங்கள் படிக்கிறேன்
சமைத்து உண்கிறேன்
குழந்தையைக் கொஞ்சுகிறேன்
அவ்வப்போது இந்தப் பாறாங்கல் இருப்பதே தெரியாமல் மறைந்து போய்விடுகிறது

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

- சுதர்சன் ஹரிபாஸ்கர்
Related Posts Plugin for WordPress, Blogger...