நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 26 ஜூன், 2025

நெஞ்சில் சுமக்கின்ற பாறாங்கல்


----------------------------------------------------------------
நான் எனது நெஞ்சில் நெடுநாட்களாக ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

எனது இடது தோள்பட்டைக்கு முன்னே மார்புக்கு கொஞ்சம் மேலாக அந்த பாறாங்கல்லை வைத்து இரு கைகளாலும் அழுத்திப் பிடித்திருக்கிறேன்

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றிய போது அதன் பாரம் குறித்தான அச்சமோ சுமையின் காரணமான வலியோ தெரியவில்லை

அல்லது நான் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை

எப்போதிலிருந்து இந்த பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறாய் எனக் கேட்பீர்களானால் என்னிடம் பதிலில்லை

அல்லது நான் அதனை நினைவில் கொள்ளவில்லை

இரண்டாண்டுகள் ஆகியிருக்கலாம் இருபதாண்டுகள் ஆகியிருக்கலாம்
யுகங்களாகக் கூட இருக்கலாம்

எவ்வளவு கனம்? என்ன எடை?
என்னால் அளவிட முடியவில்லை

முதன் முதலில் அதனை என் தோளில் ஏற்றியபோது இருந்த எடை தான் இப்போதும். 
அவ்வப்போது கொஞ்சம் கூடியும் குறைந்தும் இருக்கலாம்
சரியாக சொல்லத்தெரியவில்லை

அல்லது நான் அதனை அளவிடவில்லை

உங்களுக்குப் புரியாத வகையில் சொல்வதானால்
என் தந்தையின் உடலிலினின்று பிரிந்த உயிரின் எடையாக இருக்கலாம்
என் நண்பர்களின் மரணத்தின் கனமாக இருக்கலாம்
வேறு சில நண்பர்களின் பிரிவின் சுமையளவாய் இருக்கலாம்
பிரியமானவர்களின் மெளனத்தின் கனமாக இருக்கலாம்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

இறக்கி வைக்கலாமே எனக் கேட்பீர்களானால் எங்கே அல்லது யாரிடம் எனத் திரும்பக்கேட்பேன்
சிலரிடம் பதில் இருக்கும் சிலரிடம் பதில் இருக்காது
எங்கே எப்படி யாரிடம் இறக்கி வைப்பதென யாருக்கும் தெரியவில்லை...! 

அல்லது யாருக்கும் நேரமில்லை 

இந்த பாறாங்கல்லை சுமந்தபடி உறங்கி விழிக்கிறேன்
குளித்து உடுத்தி அலுவலகம் செல்கிறேன்
புகைப்படங்களுக்குச் சிரிக்கிறேன்
புத்தகங்கள் படிக்கிறேன்
சமைத்து உண்கிறேன்
குழந்தையைக் கொஞ்சுகிறேன்
அவ்வப்போது இந்தப் பாறாங்கல் இருப்பதே தெரியாமல் மறைந்து போய்விடுகிறது

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

நான் ஒரு பாறாங்கல்லை சுமந்துகொண்டிருக்கிறேன்

அல்லது நான் அப்படி நினைத்துக் கொள்கிறேன்

- சுதர்சன் ஹரிபாஸ்கர்

வெள்ளி, 6 ஜூன், 2025

Thuglife and my long rant about boring cinematic experience


_________________________________________________________________

தத்தமது துறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட பெரும் படைப்பாளிகள் , கலைஞர்கள் ஒன்று சேர்கிற திரைப்படம் என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ? தொழில்நுட்ப ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான கதையோட்டத்தினாலும் எப்படியானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் ? எல்லாவற்றையும் மறந்து பார்வையாளர்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கவேண்டாமா ? இது எதுவுமே நிகழாமல் இந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறான ஒரு தட்டையான அனுபவத்தை பார்வையாளனுக்குத் தந்தால், அதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தால், இது குறித்து புலம்பாமல் கேலி செய்யாமல் வேறென்ன செய்வார்கள் ?

தனிப்பட்ட முறையில் நான் நிறையவே எதிர்பார்த்தேன். இந்தியன் 2 மாதிரி சகிக்க முடியாத குப்பையாகவெல்லாம் இத்திரைப்படம் ஆகவில்லை. ஆனால் கதை, திரைக்கதை, தொழில்நுட்பம், செண்ட்டிமெண்ட், ஆக்‌ஷன்,இசை என எந்த வகையிலும் முழுமை பெறாத ஒரு திரைப்படமாக தக்லைஃப் அமைந்திருக்கிறது. பழமையின் சாயலையும் நினைவின் சுவையையும் வைத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகள் தான் காலந்தள்ள முடியும் ? பாத்திரப் படைப்பில் நாயகனை நினைவு படுத்தும் காட்சிகள் உண்டு , வேறு சில திரைப்படங்களையும் நினைவூட்டலாம். பத்தாண்டுகளுக்கு பிறகு எண்ணிப் பார்த்தால் கமலும் சிம்புவும் இணைந்து நடித்த ஒரு மணிரத்னம் படம் என்பதைத் தவிர்த்து வேறெதுவும் நம் மனதில் நிற்க வாய்ப்பில்லை.

கமல் ஹாசன் எழுதி இயக்கிய திரைக்கதையில் பங்களித்த பல திரைப்படங்களை காலங்காலமாக பார்த்து வந்திருக்கிறோம். நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய பாத்திரங்கள், அழுத்தமான நடிப்பு , புதுமையான விஷயங்கள், சோதனை முயற்சிகள் என அத்தனையையும் செய்திருக்கிறார். வணிகரீதியான வெற்றியைப் பெறாத படங்களில் கூட மனதில் நிற்கிற காட்சிகள் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் .உணர்வுப்பூர்வமான காட்சிகளென்றால் உத்தமவில்லன் மனோரஞ்சன் தன் மகனுடன் தனது நோய் குறித்து பேசுகிற காட்சி, மகள் மனோன்மனியை சந்திக்கிற காட்சி இவற்றை உதாரணமாகச் சொல்லலாம். சண்டைக் காட்சிகளில் விஷ்வரூபம் 1ல் இடம்பெற்ற warehouse fight, விக்ரம் 2 திரைப்படத்தின் indoor fight.

இந்த மாதிரி எதையுமே தக்லைஃப் படத்தில் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அல்லது என்னால் ஒன்றி ரசித்து வியக்க முடியவில்லை. நினைவுகளை இழந்துவிட்ட தன் காதலியிடம் தன்னை நினைவூட்ட முயலும் காதலன் என்பது எத்தனை காவியத்தன்மை வாய்ந்த ஒரு காட்சி. அதே மாதிரியான ஒரு காட்சி தக்லைஃபில் உண்டு சுற்றியிருந்தவர்கள் ஆங்காங்கே சிரித்துக் கொண்டு கேலி செய்து கொண்டு இருந்தார்கள். அத்தனை மேலோட்டமாக எழுதி காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

முழுநீள ஆக்‌ஷன் படமான விக்ரம் படத்தில் கூட அத்தனை அழுத்தமான காட்சிகள் உண்டு. ”எனக்கும் சக்சஸ் இருக்கு சார். ஆனா என்னால சொல்ல முடியாது. I am known by my failures. நான் ஒரு நேர்மையான கொம்பன்” என கமல் சொல்லிமுடிக்கும் போதும், மகனை இழந்து பேரப்பிள்ளையை வைத்துக் கொண்டு போர்க்கண்ட சிங்கம் பாடல் பின்னணியில் தோன்றும் போதும் நமக்கும் மனம் கலங்கும். கமல்-லோகேஷ்-அநிருத் கூட்டணியால் செய்ய முடிந்ததை கமல்-மணிரத்னம்-ரஹ்மானால் ஏன் செய்ய முடியவில்லை.

மணிரத்னம் பற்றி தனியே என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அவரின் சிறப்பென சொல்லப்படுகிற urban aesthetics ஐக் கூட அவரால் சிறப்பாக செய்ய முடியவில்லை. அத்தனை வறட்சியான romance (if at all there was any) சிம்பு த்ரிஷாவுக்கு இடையேயான காட்சியிலும் திரையரங்கமே சிரித்துக் கொண்டிருந்தது பொன்னியின் செல்வன் குறித்து பலருக்கும் பலவித கருத்துகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு இரண்டு பாகங்களும் எனக்கு பிடித்தே இருந்தன. வந்தியத்தேவன் - குந்தவை காதல் காட்சிகள் , ஆதித்தகரிகாலன் - நந்தினி கடைசி சந்திப்பு காட்சி, அருள்மொழி கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கிற காட்சி என அட்டகாசமான staging உடன் நிறைய காட்சிகள் உண்டு. But nothing worked for me in Thug Life . The only portion where emotions, performance and music came along together and worked out well was when Ishwarya Lakshmi's story reveal happened.

படத்தின் முதல் பாதி கொஞ்சம் நாயகனை நினைவூட்டினாலும் இரண்டாம் பகுதி இந்தியன் 2 வையும் விவேகம் திரைப்படத்தையும் நினைவூட்டுவது போல இருந்தது. தேவையில்லாத போதி தர்மர் வகையறா கராத்தே சண்டையும் ஜடாமுடி கோலமும் கொஞ்சமும் பொருந்தவேயில்லை.

ரஹ்மானின் இசையில் பாடல்கள் (முந்தைய பழைய பாடல்களின் சாயலுடன் இருந்தாலும்) ரசிக்கும்படியே இருந்தன . ஜிங்குச்சா (ராட்சச மாமனே + ஹை சக்கா சக் ), அஞ்சுவண்ண பூவே (எங்க போன ராசா) , முத்தமழை ( ஹே ராமா + எது சுகம், சுகம் + இதயம் நகர்ந்து ) , ஓ மாறா ( மரியான் - ஆஃப்ரிக்கா + மகுடி - கடல்) . ஆனால் பின்னணி இசை கொஞ்சமும் ஒட்டாமல் ஏனோ தானோ என்றிருந்தது.

Be it anything or anyone. Protagonist, antagonist, conflict, romance, heroism, action, emotional highs, action elevation, humor, sentiment....nothing works with lackluster and shallow writing. அது தான் எனக்கு திரும்பத்திரும்ப மனசுல தோணுன விஷயம். இன்னொன்னு without riding on nostalgia and star value திரும்பவும் ஒரு engaging and exciting theatrical experience அ தமிழ் சினிமா எப்போ தரும் அப்டிங்குற கேள்வியும் தொக்கி நிக்குது ?


ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நீஸெவின் வேர்க்கனி - மயிலன் ஜி சின்னப்பன் - சால்ட் பதிப்பகம்


இந்த ஆண்டு படித்து முடித்த முதல் நாவல் (குறுநாவல் ?!) மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் நீஸேவின் வேர்க்கனி. நூற்றியிருபது பக்கங்களுக்குள் என்பதால் எளிமையாகப் படித்து முடித்து விடலாம் என்கிற முன்முடிவுடன் தொடங்கினேன். எதிர்பார்ப்பிற்கு மாறாக மயிலனின் வழக்கமான மொழிநடையிலிருந்து மாறுபட்டு அதிகம் கவனக்குவிப்பைக் கோருகிற ஒரு நாவலாக அமைந்திருந்தது ‘நீஸேவின் வேர்க்கனி’. 

பதினேழாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையானது டானிஷ் நிலப்பிரபுக்களான விர்கஸ், நேதா இருவரின் கலை சார்ந்த ஓர் அற்புதமான உரையாடலுடன் துவங்குகிறது. அதன் பின் நாவல் முழுவம் உரையாடல்கள் குறைந்து போய் பெரும்பகுதி விவரணைகளாலேயே நிரம்பியிருக்கின்றது. அதீத விருப்பம் , எல்லை, துன்பம் எனப் பொருள்படும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நாவல் , எனக்கு துயரங்களின் தொகுப்பாகவே தொன்றியது.

மன்னரின் ஆசியுடன் டானிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவி இந்தியாவில் வாணிபத்தை விரிவாக்கிடும் பொருட்டு டச்சுக்காரர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு கீழைத்திசையில் இரு கப்பல்களில் பயணப்படும் விர்கஸும் நேதாவும் இந்தப் பெரும்பயணத்தில் இழந்தவையும் பெற்றவையுமே இந்த நாவல். தொடக்கத்தில் காலனியாதிக்கவாதிகளின் பாடுகளை அவர்களின் பார்வையில் தெரிந்து கொள்வதில் எனக்கு என்ன கிட்டும் என்கிற மேலோட்டமான நெருடலுடனே வாசிக்கத்துவங்கி ஒரு கட்டத்தில் கதையின் ஓட்டத்தில் கதைப்பாத்திரங்களோடும் அவர்தம் வாழ்வினோடும் ஒன்றிவிட்டு, பின்பு அதே நெருடலுடன் ’உங்களுக்கு வேணும்டா; என சிறுபிள்ளைத்தனமாக என்னை விலக்கிக் கொள்ள முயன்றதும் நடந்தது.
முதல் அத்தியாயத்தின் கலை குறித்த பின்வரும் உரையாடல்கள் உண்டு 

 // “நற்கலை எப்போதும் பெருவலியிருந்தும் உளப்பிணியிலிருந்தும் வருத்தும் ஏழ்மையிலிருந்துமே பிறக்கமுடியும்”
“கேளிக்கை மனத்திலிருந்து கலையுருவாக்கம் நிகழமுடியாது என்று நான் சொல்வதை கலை என்பதையே வலியின் வெளிப்பாடாகத் திரிக்கிறேன் என எடுத்துக்கொள்ள சாத்தியமுண்டு. வெளிப்பாட்டுத் தளத்திலல்லாமல் , உள்ளீடு சார்ந்தவொன்றை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கலை நிர்ப்பந்திக்கும் அக்கறையும் சிரத்தையும் மிதவை மனங்களால் எட்டமுடியாதது. உத்தேசிக்கும் வெளியீடு, காதலாகவோ களிப்புணர்வாகவோ கொண்டாட்டமாகவோ இருந்தாலும் அதற்கான அழுத்தமான, பிரத்தியேகமான ஊன்றல் வேண்டும்.செல்வச்செழுமை அந்த ஊன்றலை அனுமதிக்காது” //

மேற்கண்ட உரையாடல்களே இந்த நாவலின் மொத்த சாரத்தையும், வாசிக்கிறவர்கள் இந்த படைப்பிலிருந்து பெறுவதென்ன எனபதையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

நாவலின் தலைப்பான நீஸே குறித்து முதல் அத்தியாத்தில் ஒரு குறிப்பு உண்டு. நேதாவும் விர்கஸும் கலைமனம் குறித்தான விவாதத்தின் முடிவில் நேதா உருவாக்கிக்கொண்டிருக்கிற நீஸேவின் மரச்சிற்பத்தை விர்கஸிடம் காட்டுவான். நீஸே (Nisse) என்பது டானிஷிய தொன்மங்களிலும் நாட்டார்வழக்கிலும் சொல்லப்படுகிற ஒரு வகை நல்லாவி. உருவத்தில் சிறியவையான இவை வயதில் முதிய தோற்றத்துடன் வீட்டிற்குள் இருந்தபடி அன்றாட வேலைகளைச் செய்கிற பணியாள் போன்றவை. ஆனால் தொன்மங்களில் சொல்லப்பட்டது போலன்றி இளமையான அழகான உருவத்தில் நீஸேவை வடித்திருப்பான் நேதா. நீஸேவின் வேர்க்கனி என்கிற தலைப்பிற்கும் இதற்குமான தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

காலம்காலமாக வழக்கத்திலிருக்கும் ஒன்றை நம்முடைய பார்வையில் முற்றிலும் வேரொன்றாக உருவகித்து மீட்டுருவாக்குவது(ம்) தான் கலைமனம் செய்யக்கூடியதென நேதா முயன்றான் எனில் மயிலன் இந்த நாவலின் வழி செய்ய முயன்றிருப்பதுவும் அது தானா? 

நாவல் டென்மார்க்கின் கோப்பன்ஹேகனில் தொடங்கி, இலங்கை, திரிகோணமலை, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ரகுநாத நாயக்கர் என அத்தனையையும் தொட்டு தரங்கம்பாடியின் டன்ஸ்பர்க் கோட்டையில் முடிகிறது. கப்பல் பயணத்தின் பிற நிகழ்வுகளைக் குறிப்பிட்டால் வாசிக்கிறவர்களுக்கு எதுவும் மிஞ்சாது என்பதால் அதனை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளவும் . Well written and very demanding work of fiction. வாழ்த்துகள் மயிலன்...! <3

சால்ட் பதிப்பகம் அவர்களுடைய வழக்கமான அழகியலுடன் மிகச் சிறப்பாக புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்கள். வடிவமைப்பாளரும் ஓவியருமான பழனிவேலன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்
Related Posts Plugin for WordPress, Blogger...