நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 26 மே, 2024

The random urge and the trip down the musical rabbit hole


என்றைக்கும் இல்லாமல் திடீரென ஒரு நாள், தூங்கி எழுந்ததும் காலை ஒரு மாதிரி வெறுமையாக இருக்கும். வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருப்பேன். தூக்கம் தெளிந்தும் தெளியாமல் இருக்கும். அப்படியே பல்துலக்கி விட்டு முகம் கழுவிவிட்டு, ஒரு காப்பி போட்டுக் கொண்டு, லேப்டாப்பைத் திறந்து ஏதாவது ஒரு பாடலைத் தேடுவேன். அது எப்போதோ கேட்ட அல்லது யாரோ சொன்ன ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டேயிருக்கிற பாடலாக இருக்கலாம். அல்லது இதுவரை கேட்டேயிராத ஆனால் அப்போதைய மன அலைக்கழிப்பை ஆற்றுப் படுத்துகிற ஒரு பாடலாக/ இசைத்துணுக்காக இருக்கலாம். 
 
அந்தப் பாடலைக் கேட்டதும் , இவர்களைப் பற்றி நம் நட்புவட்டத்தில் யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிப் பார்ப்பதுண்டு. எப்படியும் ஓரிருவர் எழுதியிருப்பார்கள். அதிலிருந்து மற்றுமொரு திறப்பு கிட்டும். வேறொரு பாடல்; வேறொரு இசைக்கலைஞர் ; வேறொரு பரிமாணம் வேறொரு உலகம். ஒன்றை அடியொற்றி மற்றொன்றென நம்மை சுற்றியிருக்கிற உலகை மறந்து, வேலை நாளின் பரபரப்பை மறந்து, ஒரு இசைச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருப்பேன். பின்பு ஏதோவொரு புள்ளியில் மனம் அடங்கியதும் ஒரு மாதிரி புத்துணர்வுடன் இந்த புற உலகிற்கு மீண்டு வருவேன். 
 
இம்மாதிரி musical rabbit holeல் விழுவதும் தேடுவதும் கேட்டிராத புது இசையைக் கண்டடைவதும் அண்மையில் (கடந்த ஒரு சில ஆண்டுகளில்) வெகுவாக குறைந்துவிட்டது. வாழ்க்கைச் சூழல், பணி , பொறுப்புகள், தேவைகள், சோம்பேறித்தனம், மன அயற்சி, என பல காரணிகள் உண்டு. கேட்ட பாடல்களையே கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதியான சொகுசு உண்டு. பழகிவிட்ட மனமும் அதனைத் தாண்டி வேறெங்கும் செல்ல அனுமதியாது. அத்தனையையும் தாண்டி ஒரு நாள் இந்த தேடலில் இறங்கினால் கிடைக்கிற அத்தனையும் புதையல்களாக இருக்கும். இன்றைய நாள் அப்படியொரு நாள்.
  
 
 
 முதலில் கேட்டது Glass beams - Mahal . ஆஸ்த்ரேலிய இசைக்குழுவானாலும் ஒரு மாதிரி துருக்கிய வாடையுடனான இசையாகத் தோன்றியது. மத்திய கிழக்கும் இந்தியாவும் மேற்கத்திய இசையில் சந்திக்கிற புள்ளி போல. தொடர்ந்து அவர்களைப் பற்றி தேடிப் படித்து மற்ற பாடல்களையும் கேட்கத்துவங்கினேன். Such a trip it was ❤ Mahal தொடங்கி rattlesnake, mirage, taurus என ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம் ஒரு அனுபவம். இவர்களைப் பற்றி தேடியதில் ரெட்டிட்டின் r/Khruangbin குழுமத்தில் இவர்களுடைய காணொலியைப் பகிர்ந்து பாராட்டி பேசியிருந்தார்கள். அதில் ஒரு கமெண்ட் 'They sound like middle eastern khruangbin' என்றிருந்தது. உடனே khruangbin பற்றித் தேட.. voila மற்றுமொரு கதவு திறந்தது. And yes , I discovered Khruangbin , only now. க்ஹ்ராங்பின் பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேட Srinivasan Rம் , Ravi kiranம் பகிர்ந்திருந்த இவர்களுடைய பாடல்கள் கண்ணில் பட்டன. 
 
மாஸ்டர் சரவண கணேஷின் மற்றுமொரு கட்டுரையும் கிடைத்தது. அவர் பகிர்ந்திருந்த பாடல் க்ஹ்ராங்பின்னுடையதாக இருந்தாலும் கட்டுரை மற்றுமொரு ஆஸ்த்ரேலிய funk இசைக்குழுவான Hiatus Kaiyote பற்றியது. அதுவரையில் இவர்களையும் கேட்டதில்லை. Laputa, Jekyll, Shaolin monk motherfunk என இது ஒரு ரோலர் கோஸ்ட்டர் பயணம். இறுதியாக toumani diabate ல் வந்து நின்றிருக்கிறேன். What a wonderful experience and what a ride it has been. எல்லா பாடல்களின் இணைப்புகளையும் கமெண்ட்ல போட்றேன். 
❤
 
 

 
//...have no idea to this day what those two Italian ladies were singing about. Truth is, I don't want to know. Some things are best left unsaid. I'd like to think they were singing about something so beautiful, it can't be expressed in words, and makes your heart ache because of it. I tell you, those voices soared higher and farther than anybody in a gray place dares to dream. It was like some beautiful bird flapped into our drab little cage and made those walls dissolve away, and for the briefest of moments, every last man in Shawshank felt free. - Red (Shawshank redemption) //


சனி, 25 நவம்பர், 2023

ஜிகர்தண்டா Double X

 

Pizza வுக்கு முந்தைய கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்கள் தொடங்கி இப்போதைய web series முயற்சிகள் வரையில் அத்தனையையும் பார்த்திருக்கிறேன். அவருடைய குறும்படங்களிலும் திரைப்படங்களிலும் ஒரு quirky யான நகைச்சுவையும் திடீரென நிகழும் அசட்டுத்தனமான திருப்பங்களுமாக நிறைந்திருக்கும்.

இதுவரையிலும் தனிப்பட்ட முறையில் எனக்கு பீட்சா தவிர்த்து ஜிகர்தண்டா 1 மட்டுமே நிறைவான திரை அனுபவமாக அமைந்தது. பேட்டை முழுக்க முழுக்க ஒரு fanboy சம்பவம் (ஆண்டவர் விசிறிகள் லோகிண்ணாவை கூட்டிக்கொண்டு வர வேண்டாம்) ஏன் எதற்கென தெரியாமல் ஜாலியாக கொண்டாடிய படம். ஆனாலும் அது கார்த்திக் சுப்புராஜின் trademark படமல்ல. மெர்க்குரி படமெல்லாம் பார்க்கவேண்டும் என்கிற ஆவலே இருந்ததில்லை.

இறைவி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்து பெரிதாக வெற்றியடையாமல் போன திரைப்படம். நடிகராக SJ.சூர்யாவுக்கான மீள்வருகை சிறப்பாக அமைந்தாலும், ட்ரைலர் ஒரு ஆக்ஷன் திரைப்படம் போல வெட்டப்பட்டிருந்தாலும் படம் முழுக்க முழுக்க ஒரு emotional dramaவாகவே அமைந்திருந்தது. தங்களுடைய egoவின் காரணமாக தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளுகிற ஆண்களும் அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிற பெண்களும் என ஒரு மாதிரி நன்றாகவே இருக்கும். இன்றும் content ஆக்கப்படுகிற, ‘ஆண் நெடில்’, 'மனிதி வெளியே வா' மாதிரியான குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல விஷயங்கள் படம் முழுக்க உண்டு.

ஜகமே தந்திரம் கார்த்திக் சுப்புராஜ் மீது ஒரு படைப்பாளியாக வைத்திருந்த நம்பிக்கையை மொத்தமாக உடைத்த படம். இவ்வளவு மேம்போக்காகவும் அலட்சியமாகவும் ஒரு திரைப்படம் இயக்க முடியுமாவென யோசிக்க வைத்தது. மஹான் கொஞ்சம் 50/50. திரையரங்கில் வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என யோசிக்க வைத்த படம்.

கார்த்திக் சுப்புராஜின் திரைப்படங்களில் அரசியல் எனப் பார்த்தால் ஈழ அரசியலை மட்டும் தனது படங்களிலும் வலைத்தொடர்களிலும் பேசி வந்ததைத் தாண்டி வேறெதுவும் இருந்ததில்லை. அது போக அவருடைய படங்களைப் பார்க்கையில் அவர் ஒரு retro-obsessed wannabe Quentin Tarantino ரசிகர் தானோ என்ற வகையில் குறைத்து மதிப்பிட்டிருந்தேன். அத்தனையையும் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மாற்றியிருக்கிறது

ஒரு கொடூர கேங்க்ஸ்டரை பிடிக்கும் பொருட்டு காவல்துறையின் துணையுடன் குழுவுக்குள் அனுப்பப்படுகிற ஒரு சராசரி திரைக்கலைஞன், அவன் வந்த நோக்கம் வேறு; இறுதியில் நடப்பது வேறு. இதை கதையின் மையமாக வைத்து ஒரு பரபரப்பான மசாலா திரைப்படமாக எடுக்கப்பட்டது ஜிகர்தண்டா முதல் பாகம். அதே கதைக் கருவை 70/80கள் பின்னணியில் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 

பிரதமராகும் எண்ணத்துடன் அதிகார வெறிபிடித்துத் திரியும் ஒரு பெண் அரசியல் தலைவர், தன் திரை பிரபலத்தின் மூலம் முதல்வராக முயலும்/விரும்பும் நடிகர், தென் மாவட்டங்களில் ரவுடிகளின் துணையுடன் ஆளுமை செலுத்தும் அரசியல்வாதி, யானைகளைக் கொடூரமாகக் கொல்லும் ஒருவன், அவனை பிடிப்பதற்காக காட்டில் வாழும் பழங்குடி மக்களை அரசாங்கத்தின்  துணையுடன் துன்புறுத்தும் காவல்துறை, ஷெட்டானி ஆட்கள் அரசு/காவல்துறை என இரண்டு பக்கமும் மாட்டிகொண்டு தவிக்கும் பழங்குடி மக்கள், இந்த பழங்குடி மக்களுள் ஒருவனாக இருந்தாலும் அவர்களுக்காக போராடாமல் தன்னுடைய வசதிக்காக வாழ்கிற ஒரு கேங்க்ஸ்டர் , அந்த கேங்க்ஸ்டரின் சினிமா ஆசையை பயன்படுத்தி அவனை கொன்று போலீசாகத் துடிக்கும் ஒரு போலி இயக்குநர்..! இவர்களுக்கிடையேயான கதை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

 இது போக படம் முழுக்க க்ளிண்ட் ஈஸ்ட்வுட், வீணை பாலச்சந்தர் , ரே தாசன், சத்யஜித் ரே, அலியஸ் சீஸர், க்ளிடீஸ் திரையரங்கம் என ஏகப்பட்ட references/tributes.
கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படம் கொண்டாடப்படக் காரணம் படத்தின் இரண்டாம் பகுதி தான் என நினைக்கிறேன். இந்திய சினிமாவின் தற்போதைய வழக்கமான ‘க்ளைமாக்ஸ்ல வர்ர பெரிய துப்பாக்கி’ மாதிரி ஒரு காட்சியை வைத்து அல்லியஸ் சீஸர் பழங்குடி மக்களுடன் சேர்ந்து காவல்துறையினரை எதிர்த்து சுட்டு வீழ்த்தியிருந்தாலோ, அல்லது அதே துப்பாக்கியை ரே தாஸன் எடுத்திருந்தாலோ இது KGF போன்ற ஒரு மாஸ் மசாலா திரைப்படமாகியிருக்கும்.

 But it was a conscious decision from Karthik Subburaj to not do that, as he mentioned in an interview. ”எனக்கு அத பண்ண வேண்டாம்னு தோணுச்சு. அப்படி இருக்க வேண்டாம்னு விட்டுட்டேன்” என்பது போல சொல்லியிருந்தார். 
அதற்கு பதிலாக ரேதாஸன் சொல்வது கலை தான் என் ஆயுதம். சினிமா தான் என் ஆயுதம் என்பது தான். ஒரு utopian கனவு போலத் தெரிந்தாலும் அதிலிருக்கிற உண்மைத் தன்மையை பாராட்டாமல் இருக்க முடியாது. இது தான் என்னுடைய அரசியல், அதனை இப்படித்தான் என் திரைப்படங்களின் வழியாகப் பேசுவேன் என கார்த்திக் இந்தப் படத்தின் வழியாக அறிவித்திருப்பது போல தோன்றுகிறது. திரைப்படம் அவருடைய சொந்தத் தயாரிப்பு என்பதும் அந்த சுதந்திரத்துக்கான காரணமாக இருக்கலாம். 

ராகவா லாரன்ஸைப் பொருத்த வரையிலும் இது தான் அவருடைய career best எனச் சொல்லலாம். அதுவும் எஸ்.ஜே.சூர்யா மாதிரி ஒருவர் ஃப்ரேமில் இருக்கும்போது அவரைத் தாண்டி தான் ஸ்கோர் செய்வதெல்லாம் பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா அவருடைய வழக்கமான over the top theatrics எதுவும் இல்லாமல் (ஒரு சில காட்சிகள் தவிர்த்து) ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். நிமிஷா சஜயனைப் போன்ற ஒரு நடிப்பாற்றல் மிகுந்த திறமையாளருக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

இசையமைப்பாளர் சந்தோஷ் தன் பங்குக்கு பாடல்களிலும் பின்னணி இசையிலும் அடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதிலும் ஜிகர்தண்டா முதல் பாகத்தின் பின்னணி இசைக் கோர்ப்புகளை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்த விதம் இடைவேளையின் போதான அசால்ட் சேது இசையும், இறுதியில் ஒலிக்கிற உயிர்ப்பிச்சை இசையும் அவ்வளவு பொருத்தம். ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு internalize செய்து பின்பு வேறு வடிவில் வெளிப்படுத்துவது கலைஞர்களுக்கான/படைப்பாளிகளுக்கான முக்கியமான கூறு. அதனை கார்த்திக் ஒரு வகையில் சிறப்புற செய்திருந்தாலும், சந்தோஷும் இத்திரைப்படத்தின் கதையையும் கார்த்திக் சுப்புராஜின் நோக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு இசையில் வெளிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. 

இந்த படத்துக்குள் படமெடுக்கிற meta narrative ஐ தமிழில் பலரும் முயன்று பார்த்திருக்கிறார்கள் . இதில் நமக்கு நல்ல உதாரணங்களும் உண்டு (ஜிகர்தண்டா 1) எடுபடாத உதாரணங்களும் உண்டு (உத்தம வில்லன், கதை திரைக்கதை வசனம் இயக்கம்). ஜிகர்தண்டா முதல் பாகத்தில் கூட அந்த அ.குமார் படம் கதையுடன் கொஞ்சம் ஒட்டாமல் ஆனால் முக்கிய பங்கு வகிக்கிற மாதிரி இருக்கும். டபுள் எக்ஸைப் பொருத்த வரையில் இந்த meta narrativeஐ மிகச்சிறப்பாக திரைக்கதையாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
Everything everywhere all at once திரைப்படம் பார்த்த போது ஒரு மாதிரி நிறைவுடன் கொஞ்சம் புன்னகையுடன் திரையரங்கிலிருந்து வெளியே வந்தேன். அதன் பிறகு அந்த மாதிரியான ஒரு நிறைவைத் தந்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான்.

கார்த்திக் சுப்புராஜ் அவருடைய படங்களில்  வைத்த இரண்டு வசனங்கள்

1. நாம பேசக்கூடாது... படம் தான் பேசனும்
2. நான் செஞ்சதுலயே சிறப்பான தரமான சம்பவம்

இதையே இந்தப்படத்துக்கும் பொருத்தமாகச் சொல்லிக் கொள்ளலாம். 

You Don't Choose Art. Art Chooses You <3

வியாழன், 1 ஜூன், 2023

த.ராஜன் - பழைய குருடி (சிறுகதைத் தொகுப்பு)


  த.ராஜனின் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து...!

உண்மையில் தீவிரத்தன்மை மிகுந்த கதைகளை படிப்பதற்கென பிரத்தியேகமான ஓர் மனநிலை தேவையாக இருக்கிறது. மேலோட்டமாகவோ மேம்போக்காகவோ பக்கங்களைப் புரட்டி, சொற்களின் மீது கண்களை ஓடவிட்டு மூளையில் அள்ளிப் போட்டுக் கொண்டு பின்பு அசைபோட்டு, கலைந்துகிடக்கிற சொற்களை ஒழுங்கமைத்து, இன்னது தான் கதையென விளங்கிக் கொள்கிற பாணியில் பெரும்பாலான கதைகளைப் படித்துவிடுவேன். சிலருக்கோ பலருக்கோ இதுவே ஏற்புடையதாக இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்

சிக்கலான கதையமைப்பு, உணர்வெழுச்சி மிகுந்திருக்கிற மையப்புள்ளி , கதையின் அடர்த்தி, கடுமையான/செழுமையான மொழி, நம்மைக் கதையில் பொருத்திக் கொள்ளக்கூடிய தன்மை என ஏதேனும் சில காரணங்களால் ஒரு சில கதைகளை என்னால் ஒரே முறையில் படித்து , புரிந்து, உணர்ந்து கொள்ளமுடியாமல் போயிருக்கின்றது. இம்மாதிரியான கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக படித்துக் கடந்துவிடுவதும் எளிதன்று. கதையின் பாரம் மூச்சுமுட்ட தோளில் அழுத்துவது போல் இருக்கும். நிதானமாக அதற்கென நேரமொதுக்கி ஆழம் பார்த்து ஆற்றில் இறங்குவது போல, தீவிரமாக படிக்கத்தொடங்குகையில் அந்தச் சுழல் மெதுவாக நம்மை இழுத்துக் கொள்ளும். 

ஏதோ வாசிப்பினை சாகசம் போல சித்தரிக்கும்பொருட்டு நான் இப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே நான் உணர்ந்ததையே சொற்களில் கடத்திவிட முயன்றிருக்கிறேன். த.ராஜனின் இந்த சிறுகதைத் தொகுப்பு (நெடுங்கதைகள் ? குறுநாவல்கள்?) நான் மேலே குறிப்பிட்டதைப் போன்ற ஒன்று. ராஜன் எனக்கு பத்தாண்டுகளாய் பழகிய நண்பர். கண்டதை (யெல்லாம்) படித்து இலக்கியக் கரையேறிவிடும் முனைப்புடன் சுற்றிய நண்பர் கூட்டத்தில் அவரும் நானும் உண்டு. தேர்ந்த வாசகராகவும் , பின்பு இதழியலாளராகவும், பிழைதிருத்துபவராகவும் (ஒரு கட்டத்தில் அவரை நோக்கி கேலியாக சொல்லப்பட்டதை நிஜமாக்கினார்), அறிந்த நண்பரை எழுத்தாளராகப் பார்க்கிற மகிழ்ச்சியை என்னால் சொற்களில் விவரிக்க முடியாது.

ஆனாலும் அவருடைய முதல் புத்தகம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன், புத்தகத்தின் தலைப்பிற்காக அவருடன் ஒரு சண்டையிட்டேன். அவர் சொன்ன விளக்கங்களை அப்போது மனம் ஏற்காவிட்டாலும், ஓராண்டுக்குப் பின் புத்தகத்தைப் படிக்கையில் அவருடைய விளக்கத்தை சரியானதென ஏற்றுக்கொண்டேன்.167 பக்கங்கள் கொண்ட தொகுப்பில் பாலூட்டிகள், வின்சென்ட்டின் அறை, பழைய குருடி, அரூபி , அறிவுஜீவியின் பொய் என ஐந்தே நெடுங்கதைகள் தாம். 

முதல் கதையான பாலூட்டிகள் கிட்டத்தட்ட ஒரு நாட்டார் கதைக்கான தன்மையைக் கொண்டிருக்கிறது. எங்கோ திருநெல்வேலியின் அடையக்கருங்குளதிலிருந்து வந்து, சென்னை முழுவதுமாக நகரமயமாவதற்கு முன்பு தென்னந்தோப்பாகக் கிடந்த இடத்தில்  சுடலைமாடனை வழிபட்டு வெளவாலைப் பலியிடுகிற ‘வெளவால் தாத்தா’ கந்தையனையும், இரண்டு தலைமுறைக்குப்பின், பாட்டனை பார்த்தேயிராமல் அவர் பற்றிய கதைகளின் வழியாகவே அவரை அறிந்துகொண்ட பேரன் சின்னதுரையையும் முன்பு தென்னந்தோப்புகள் நிறைந்திருந்து  இப்போது நகரமயமாகிவிட்ட இடத்தை வந்தடைகையில் வெளவாலே இவர்கள் இருவரையும் இணைக்கிற கண்ணியாக இருக்கிறது. இந்தக் கதையில் குறிப்பிட்ட சொல்லவேண்டிய பகுதி ஒன்றுண்டு. கந்தையன் ஒரு வெளவாலுக்கு பிரசவம் பார்க்கிற (ஆம் !) பகுதியின் விவரணைகளை ஒரு மாதிரி அச்சத்துக்கும் அருவெறுப்புக்கும் இடையேயான சிலிர்ப்புடனேயே படித்தேன். மொத்தத்தில் இந்தச் சிறுகதையை, பிழைப்புக்காக இடம்பெயர்ந்தும் தங்களுடைய அடையாளங்களை இழந்தும்/துறந்தும் வாழ்கிற மக்களுடைய இருத்தலியல் சிக்கல்களை (existential crisis ?!) பேசுகிற கதையாகவே புரிந்து கொள்கிறேன்.

அடுத்த கதையான வின்சென்ட்டின் அறை, மனப்பிறழ்வு கொண்ட , தன்னுடைய பாலினம் சார்ந்த அடையாளச்சிக்கலுடைய ஒருவனின் கதை, அவனைப் பற்றி மற்றவர்களின் வழியாக உருவாக்கப் படுகிற சித்திரமும் , கதைசொல்லி வின்சென்ட் பற்றி உருவாக்குகிற சித்திரமும் கதையின் முடிவில் ஒட்டுமொத்தமாக கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாத கதை.

 பழைய குருடி - தொகுப்பின் முகமான இந்தக் கதையில் நம்மை யோசிக்க வைத்து திசைதிருப்பும்படியான ஒரு வேலையைச் செய்திருக்கிறார் ராஜன். பாலூட்டிகள் கதையின் பாத்திரங்களான கந்தையனும் சின்னத்துரையும் இங்கேயும் உலவுகின்றனர்.  முதல் கதையின் நீட்சி போலவே தெரிந்தாலும் சாதியெனும் அடையாளத்தை தொலைத்துவிடும் முனைப்புடன் செயல்படும் சின்னதுரையை, நொய்த்தொற்றுக் கால பொதுமுடக்கம் வேறு உருவில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்துவதும் , அவனும் அவன் குடும்பத்தினருடன் உழல்வதுமாக முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. 

இந்த தொகுப்பை எழுத்தாளர் பா.வெங்கடேசனுக்கும், எழுத்தாளர் சீனிவாச ராமநுஜம் சமர்ப்பித்திருந்தார் ராஜன். அதற்கான காரணத்தை கடைசி இரண்டு கதைகளான அரூபி , அறிவுஜீவியின் பொய்  ஆகியவற்றைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் தூயனுடைய நாவலான கதீட்ரலின் ஒரு பகுதியை பெயர் மாற்றங்களுடன் அப்படியே பயன்படுத்தியிருப்பதாக முன்னுரையில் சொல்லியிருந்தார் ராஜன். அரூபி சிறுகதையில் குறிப்பிட்ட அந்தப் பகுதியை வாசிக்கையில் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

தொகுப்பின் ஐந்தாவது/இறுதி கதையான ‘அறிவுஜீவியின் பொய் ’ இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பூனா ஒப்பந்தம் என்னும் வரலாற்று நிகழ்வினைப் பின்னணியாக வைத்து காலச்சுழல் (timeloop) மாதிரியான ஒருவகையில் எழுதப்பட்ட சிறுகதை. இப்படியொரு கதையினை யோசிப்பதற்கே மனம் சோர்ந்துவிடும். ராஜன் அரசியலையும், வரலாற்றையும், இந்தக் கதைக்கான போக்கையும் சரிசமமாக கையாண்டிருக்கிற விதம் வியக்கவைக்கிறது.

 நான் வாசித்தவரையில் புனைவெழுத்தின் சாத்தியக்கூறுகளை முடிந்த அளவு சோதித்து ,புதிதாக முயன்றுபார்த்து மிகச்சிக்கலான abstract (இணையான எளிய தமிழ்ச்சொல் புலப்படவில்லை) உணர்வுகளையும் காட்சிகளையும்  எழுத்தின்வழி கடத்தியதாகக் கருதும் எழுத்தாளர்கள் மனோஜ் (புனைவின் நிழல் தொகுப்பு), பா.வெங்கடேசன் (ராஜன் மகள்) , தூயன் (கதீட்றல்) ஆகியோர். அவருடைய நண்பனாக, த.ராஜனும் அந்த வரிசையில் இடம்பெறுவார் என உறுதியாக நம்புகிறேன். இந்த சிறுகதைத் தொகுப்பு அதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கின்றது. இருன்மையான, யாரும் பேசத்தயங்குற உணர்வுகளையும் ,தீவிரத்தன்மை வாய்ந்த, இறுக்கமான அல்லது சிக்கலான கதைக்களங்களை எடுத்துக் கொண்டு அதனை முடிந்தளவு உயிர்ப்புடனும் , தனிப்பட்ட உரையாடல்கள் அதிகமின்றி கதையின் போக்கினை விவரிப்பதன் வழியாகவும் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பினை நமக்குத் தந்திருக்கின்றார்.

மிகச்சிறப்பான அட்டைப்படம் /புத்தக வடிவமைப்புக்காகவும் , கதைகளினூடாக இடம்பெறுகிற ஆஸ்வால்டோ கயாசமின் (Oswaldo Guayasamin) ஓவியங்களுக்காகவும் எதிர் வெளீயீடு பதிப்பகத்துக்கு என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும் <3

பழைய குருடி - த.ராஜன் | சிறுகதைத்தொகுப்பு | 167 பக்கங்கள் (கெட்டி அட்டை)| விலை ரூ.250 | ISBN9789390811175

புத்தகம் வாங்க: https://rb.gy/4sb59

திங்கள், 13 மார்ச், 2023

Everything everywhere all at once

 

இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிற முதுமை வரை சிறியதும் பெரியதுமாய் பல முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. கல்வி, உணவுத்தேர்வு, வாழ்க்கை முறை, காதல், திருமணம், தொழில், நட்பு , குடும்பம் என எல்லாவற்றிலுமே நமக்கு முன் வாய்ப்புகளும் கேள்விகளும் கொட்டிக்கிடக்கும்போது, அவற்றுள் நமக்கு விருப்பமான ஒன்றையோ அல்லது நமக்கு இது சரியானதாக இருக்கும் என நாம் நம்பும் ஒன்றையோ தேர்ந்தெடுப்போம். அந்த நேரத்து முடிவு நம் வாழ்வை என்னவாக மாற்றப் போகிறதென யாராலும் கணிக்க முடியாது.

ஒருவேளை , காலம் நமக்குச் சில உண்மைகளைப் புரிய வைத்து, நமது முடிவுகள் குறித்த தெளிவை ஏற்படுத்தும்போது  எதையுமே மாற்ற முடியாமல் எல்லாவற்றையும் கடந்து வந்திருப்போம். ஆனால் நம் மனதை ஆற்றிக்கொள்ளும் பொருட்டு ,” ஒரு வேளை நாம் இப்படிச் செய்யாமல், இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்காமல் வேறொன்றை தேர்ந்தெடுத்திருந்தால் கட்டாயம் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்” என சமாதானம் சொல்லி கொள்வோம். உண்மையில் வேறு பாதையில் சென்றிருந்தால் வாழ்வு எப்படி இருந்திருக்குமென யாராலுமே கணிக்க முடியாது . அப்படி கணிக்கவோ, அந்த உலகில் நமது வாழ்க்கை நாம் விரும்பியபடி அமைந்திருக்கிறதாவென தெரிந்து கொள்ள முடிந்தால் ? இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையிருந்து விடுபட்டு விருப்பமான வேறொரு வாழ்க்கைக்குள் புகுந்து கொள்ள முடிந்தால் ?

இதுதான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything everywhere all at once) திரைப்படத்தின் அடிநாதம்.  திரைப்படம் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்பு ’மல்டிவெர்ஸ்’ (Multiverse) என்றால் என்னவென்று பார்ப்போம். அண்மையில் வெளிவந்த ஸ்ப்டைர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்ளிட்ட மார்வெல் காமிக்ஸின் பல திரைப்படங்களிலும் லோகி, வாண்டாவிஷன் உள்ளிட்ட வலைத்தொடர்களிலும் இந்த மல்டிவெர்ஸ் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்வதானால் நாம் வாழும் இந்த உலகம் இடம்பெற்றிருக்கிற பிரபஞ்சத்தைப் போலவே , பரந்து விரிந்த வெளியில் பல பிரபஞ்சங்கள் இருக்கலாம். அதில் நம்முடைய வேறொரு பிரதி இந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையில் வேறொரு குணாதிசயம் கொண்டவராக வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவை நாம் பயணித்து செல்ல முடியாத தூரத்தில், வேறொரு பரிணாமத்தில் இருக்கலாம். இந்த கருத்தாக்கமே மல்டிவெர்ஸ் என்றழைக்கப் படுகிறது. எதிர்கால அறிவியல் முன்னேற்றம் இந்த பிரபஞ்சங்களுக்கு இடையேயான பயணத்தைs சாத்தியப்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கக்கூடும் , என்கிற கற்பனையே பல படைப்பாளிகளையும் இந்த கருத்தாக்கத்தை நோக்கி திருப்பியிருக்கின்றது.

எவ்ரிதிங் எவ்ரிவேர்... திரைப்படமும் அப்படியொரு மல்டிவெர்ஸில் இடம்பெறும் கதை தான். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவரான எவ்லின் க்வான் வாங் என்கிற பெண், அவர் நடத்தி வரும் சலவை நிறுவனத்தின் கணக்குவழக்குகளை சரிபார்ப்பதில் தொடங்குகிறது திரைப்படம். எவ்லினின்  கணவர் வேமண்ட் வாங், மகள்  ஜாய் வாங் உள்ளிட்டோரின் அறிமுகத்துடன் , அவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இல்லாததும் இவர்களுக்கிடையேயான மனத்தாங்கல் குறித்தும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதன்பின் எவ்லின் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்யும் பொருட்டு  தனது குடும்பத்தாருடன்  வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறார். அங்கே இருக்கிற கண்டிப்பான பெண் அலுவலர் எவ்லினிடம் கணக்குகள் குறித்துக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே எவ்லின் திடீரென அங்கிருந்து  நாற்காலியுடன் வேறெங்கோ இழுத்துச்செல்லப்படுகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என உணரும் முன்பே அவருடைய கணவர் வேமண்ட் அவர்முன் தோன்றி தான் வேறொரு உலகத்திலிருந்த வந்திருப்பதாகவும் எவ்லின் மிகப்பெரிய ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் ஒரு சக்தி வாய்ட்ந்த எதிரியின் மூலம் பெரும் ஆபத்து நேர இருப்பதாகவும் சொல்ல அங்கிருந்து திரைப்படம் வேறொரு களத்தில் பரபரப்பாக பயணிக்கத் துவங்குகிறது.

பின்பு வெவ்வேறு உலகங்களில் புகழ்பெற்ற ஆக்‌ஷன் நடிகையாகவும், சமையல் கலைஞராகவும், பாடகியாகவும், விஞ்ஞானியாகவும், பாறாங்கல்லாகவும் (!) இருக்கும் பல எவ்லின்களையும் அவர்களுடைய வாழ்வையும் பார்க்கிறோம். எவ்லினுக்குக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நேரப்போகும் ஆபத்து என்ன ? யார் அந்த சக்திவாய்ந்த எதிரி? எவ்லினுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? எவ்லின் சிக்கல்களை முறியடித்து இந்த உலகிற்கு திரும்பினாரா இல்லையா ? என்பதெல்லாம் மீதிக்கதை.

எவ்லினாக மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கும் மைக்கேல் யோஹ் (Michael Yeoh)  க்ரவ்ச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன் (Crouching tiger hidden dragon) உள்ளிட்ட பல புகழ்பெற்ற சீன/ஹாங்காக் திரைப்படங்களில் 35 ஆண்டுகளாக நடித்து வருபவர். உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசானுக்கு இணையாக பெரும்பாலான சண்டைக்காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்த நடிகை என்ற பெருமையும் மைக்கேல் யோஹ்வுக்கு உண்டு. ஜாக்கிசான் பற்றிக் குறிப்பிடுகையில் மற்றுமொரு ருசிகரமான சம்பவத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். 

 டேனியல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் இயக்குநர்களான டேனியல் க்வான் (Daniel Kwan) டேனியல் ஷெய்னெர்ட் (Daniel Scheinert) இருவரும் ஜாக்கிசானை மனதில் வைத்தே கதையை எழுதியிருக்கின்றார்கள். சண்டைக்காட்சிகள் ,அபத்த நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என இந்தப் படத்துக்குத் தேவையான அத்தனைக்கும் ஜாக்கி பொருத்தமானவராக இருப்பார் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால் அவர்கள், அவர்கள் சீனா சென்று ஜாக்கிசானை அணுகியபொழுது அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகே டேனியல்ஸ், பெண் பாத்திரத்தை மையமாக வைத்து கதையை மாற்றி எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார்கள். 

மைக்கேல் யோஹ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதும் திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததும் யாருமே எதிர்பாராத ஒன்று. ’எவ்ரிதிங் எவ்ரிவேர்’ திரைப்படம் உலகம் முழுக்க பெருவெற்றி பெற்றதை அறிந்த ஜாக்கிசான் , யோஹ்வுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு டேனியல்ஸ் இந்தப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதையும் சொல்லி குறுந்தகவல் அனுப்ப, ‘your loss my bro'  என விளையாட்டாக அவரைக் கேலி செய்திருக்கிறார் யோஹ். இதுமட்டுமின்றி எவ்லினின் கணவர் வேமண்ட் பாத்திரத்தில் ஜாக்கிசானைப் போலவே தோற்றமளிக்கும் கேஹ்யூய் க்வானையும் நடிக்கவைத்து குறும்பு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள். 

’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அதன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷ்வல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் . அதீதமாக எளிமைபடுத்தி சொல்வதானால் ஒளிப்பதிவு, ஒப்பனை, காட்சியைப் படம்பிடிக்கும் விதம்,  கோணம் ஆகிவற்றில் மாறுபாடு செய்தல், ப்ரொடக்‌ஷன் வடிவமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு, கலை இயக்கம், உள்ளிட்டவற்றின் துணையுடன் உருவாக்கப்படுபவை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) எனவும் கணினியின் துணைகொண்டு டிஜிட்டலாக மேம்படுத்தப்பட்டு, உருமாற்றப்பட்டு,உருவாக்கப்படுபவை விஷ்வல் எஃபெக்ட்ஸ் (VFX) எனவும் அழைக்கப்படுகின்றன.

ஹாலிவுட் திரைப்படங்களும் அவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியத் திரைப்படங்களும் பல நூறு கோடிகளில் செலவு செய்து, பல நூறு தொழிநுட்பக் கலைஞர்களின் துணை கொண்டு VFX செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், முறையான பயிற்சியோ முன்னனுபவமோ இல்லாமல் தாங்களாகவே கிராஃபிக்ஸ் வடிவமைப்பைக் கற்றுக் கொண்ட ஐந்தே  ஐந்து  தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக் கொண்டு 500க்கும் மேற்பட்ட VFX  காட்சித்துண்டுகளை உருவாக்கியிருக்கிறது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ படக்குழு. VFX இயக்குநர் ஸ்சாக் ஸ்டல்ட்ஸ் (Zak Stoltz) உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் ஐவரும் லாக்டவுன் காலத்தில் தங்கள் வீட்டில் இருந்தபடி தங்களுடைய கணினியையே பயன்படுத்திபடி வீடியோவில் பேசிப் பேசியே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் இத்தனை பெரிய காரியத்தை சாதித்திருக்கின்றார்கள். 

பெரும் ஸ்டூடியோக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் திரைத்துறையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த பத்தாண்டுகளாக  சிறப்பான சுயாதீன திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் A24 என்னும் நிறுவனமே  ’எவ்ரிதிங் எவ்ரிவேர்..’ திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அவர்களுடன் இணைந்து இயக்குநர்கள் டேனியல்ஸும், ஹாலிவுட்டில் மார்வெல்லுக்காக பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்களும் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார்கள். இரண்டரை கோடி டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுக்க பத்தரை கோடி டாலர்களை சம்பாதித்திருக்கின்றது. அதுமின்றி ரசிகர்கள், விமர்சகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றது.

’எவ்ரிதிங் எவ்ரிவேர்...’ திரைப்படம்  சிறந்த நடிப்பு, அபாரமான சண்டைக்காட்சிகள், அட்டகாசமான VFX, பொருத்தமான பின்னணி இசை என அத்தனையையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு வேறு சில பல காரணிகளும் உண்டு. தங்களுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் புலம் பெயரும் பெற்றோர் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பதின்பருவ இளைஞர்களின் மன அழுத்தம், பெறோருக்கும் அவர்களுக்குமான தலைமுறை இடைவெளி, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள், தனிமனிதர்கள் எதற்காகவாவது ஒடிக்கொண்டே இருக்க வேண்டிய போட்டிச்சூழல் , இருத்தலியல் சிக்கல்கள், என எல்லாவற்றையும் ஒரு தத்துவார்த்தமான அதே சமயம் அசட்டுத்தனமான நகைச்சுவையினூடாக உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருப்பதே அந்த உளப்பிணைப்பிற்குக் காரணம் எனக் கொள்ளலாம்.


’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்...’ -

Related Posts Plugin for WordPress, Blogger...