நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

புல்லட் டைரி - முதல் பயணம் - 1


முன்னறிவிப்பு: இது ஜனவரி மாசம் நான் போய்ட்டு வந்த என் முதல் ரோட் ட்ரிப் பத்தின போஸ்ட்டாக்கும்.



ஏற்கனவே வண்டி வாங்குன கதையப் பத்தி மாங்கு மாங்குன்னு எழுதியாச்சு.வாங்குன வண்டிய நாலு எடத்துக்கு எடுத்துட்டு போனா தான அதுக்கொரு மரியாத. அதனால வண்டில ஊர் சுத்துறதுக்காக ஒரு க்ரூப்பைத் தேடிக் கண்டுபிடிச்சேன். 'V11 Royal Enfield Riders Club' - வேலவன் மோட்டார்ஸ் கூட சேந்து இன்னபிற புல்லட் காதலர்கள் தொடங்குன க்ரூப் தான் இது. அந்த குழுவுடைய மூன்றாவது வருட நிறைவு நாள் ஜனவரி 26 அன்னைக்கு. அதே நாள் V11 குழுவுடைய Core member ஹரிக்கு மதுரைல கல்யாணம். இது எல்லாத்தையும் கனெக்ட் பண்ற மாதிரி ஒரு ரோட் ட்ரிப் ப்ளான் பண்ணாங்க, எங்க ரைடர்ஸ் க்ளப்போட வாட்சப் க்ரூப்ல அறிவிப்புகள் வெளியாச்சு. எப்படா ஊர் சுத்த சான்ஸ் கெடைக்கும்னு காத்திருந்த நான் உடனே வரேன்னு பெயர் குடுத்துட்டேன். ஆனா இது ஒரு long distance ride ங்குறதுனால Full faced helmet, Gloves, Knee Pad, Padded Jacket, ஆகிய பாதுகாப்பு கவசங்கள்லாம் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாங்க.



அதுக்கப்புறம் ஒன்னொன்னா வாங்க ஆரம்பிச்சேன்.ஒருவழியா அந்த பர்சேஸ் முடிஞ்சுது. எப்பவுமே இந்த மாதிரி ரோட் ட்ரிப்புகளுக்கான வழியை முன்னாடியே பேசி முடிவு பண்ணிடுவாங்க. வெறும் நேஷனல் ஹைவே மட்டும் இருந்தா போர் அடிச்சுடும்னு கொஞ்ச தூரம் ஸ்டேட் ஹைவேஸ்; அப்புறம் கொஞ்சம் கிராமங்கள் வழியா போற மாதிரி கரடுமுரடு சாலைகள்; ஒரு வேளை நாம போறது மலைவாச ஸ்தலமா இருந்தா மலை சாலைகள்; இப்டி எல்லாமே கலந்துகட்டி இருக்குற மாதிரியா பாதையை தான் தேர்ந்தெடுப்பாங்க. போகும் பாதை எப்பவுமே தூரமானதா கொஞ்சம் சுத்துவழியா தான் இருக்கும்.ட்ரிப் முடிஞ்சு திரும்பி வரும்போது எல்லாருக்குமே ரொம்ப களைப்பா இருக்கும்ங்குறதுனால நேர் வழியா, ஒரே நேஷனல் ஹைவேல வர மாதிரி இருக்கும்.


இதையெல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. 23ஆம் தேதி காலைல 5.00 மணிக்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அதுக்கப்புறம் அப்படியே போரூர் சிக்னல் வழியா பூந்தமல்லி பைப்பாஸ பிடிச்சு போறதுதான் ப்ளான்.அங்க tollgate பக்கத்துல சின்னதா ஒரு gathering.அவ்ளோதான்.

இந்த இடத்துல இன்னொரு தகவல்.இந்த மாதிரி பைக் ட்ரிப்புல மொத்த குழுவையும் வழிநடத்திட்டு முன்னாடி போறவங்கள 'Lead'னு சொல்லுவோம்.எந்த வழியா போறோம்.. எங்க ப்ரேக் எடுக்குறோம்.. எந்த ஸ்பீட்ல போகனும்னு எல்லாத்தையும் லீட் தான் மத்த ரைடர்ஸ்கூட பேசி முடிவு பண்ணுவாங்க.பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் தான் லீடா இருப்பாங்க. அதே மாதிரி எல்லா ரைடர்ஸையும் பத்திரமா அனுப்பி வெச்சுட்டு பின்னாடி கடைசியா வரவங்களுக்கு 'Sweeper'னு பேரு. இந்த ஸ்வீப்பரா வரவங்க பெரும்பாலும் மெக்கானிக்கா தான் இருப்பாங்க. அவங்கிட்ட கொஞ்சம் ஸ்பேர்ஸ், இஞ்சின் ஆயில், பெட்ரோல் கொஞ்சம், எல்லாமே இருக்கும். இது ஏதும் வண்டி breakdown ஆனா அதுக்கான safety backup.


இப்போ  back to எங்க ட்ரிப். என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு வண்டி.ராஜா தான் இந்த ட்ரிப்புக்கு லீட். ஸ்வீப்பர் வேலவன் மோட்டார்ஸ் டெக்னீஷியன் கார்த்திக்.வெயிலுக்கு முன்னால எவ்ளோ தூரம் கவர் பண்ண முடியுமோ பண்ணிடலாம்னு சொன்னாங்க. தட தடன்னு கெளம்புனோம். அதுக்கப்புறம் அங்கங்க டீ ப்ரேக், ரீஸஸ் ப்ரேக்லாம் எடுத்தாலும் காலை உணவுக்கு திருவண்ணாமலை போய் சேர்ந்தாச்சு.9.00 மணி வாக்குல போய் சேர்ந்தாச்சு.அது முடிஞ்சு 11.00 மணி ஆகும்போது கள்ளக்குறிச்சி. டீ குடிக்க நிறுத்துனோம். செம்ம மழை ஆரம்பிச்சுது. பின்னாடி கட்டியிருந்த பேகுக்கு ஒரு பாலித்தீன் கவரப்போட்டு கவர் பண்ணிட்டு மழை விட்டதும் வண்டிய கெளப்புனோம். மதியம் சாப்பாட்டுக்கு சேலம் செல்வி மெஸ் போயிட்றதா திட்டம். வெற்றிகரமா 2.00 மணி கிட்ட போய் சேர்ந்தோம். சாப்ட்டு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்டியே சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையை புடிச்சு ராசிபுரம் திருச்செங்கோடு வழியா வத்தலகுண்டு போய் சேர்ரதுதான் தான் ப்ளான். அப்பவே மழை பெய்ய ஆரம்பிச்சு எங்க வேகம் குறைஞ்சிடுச்சு.நடுவுல நேஷனல் ஹைவேலேர்ந்து பிரிஞ்சு ஸ்டேட் ஹைவேஸ்ல போக வேண்டிய சூழ்நிலை. Opposite traffic வேற கடுப்பேத்துது.இத்தனைக்கும் நடுவுல ஒரு வழிய 8.00 மணிக்கு கரெக்ட்டா வத்தலகுண்டு வந்து சேரும்போது என் க்ளட்ச் கேபிள் கட் ஆயிடுச்சு.

அப்புறம் அத மாத்திகிட்டு அங்கிருந்து கெளம்பும்போது மணி 9.00க்கு மேல.இன்னும் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் மலைப் பாதைல வண்டியோட்டனும். எனக்கு நார்மல் ரோடே பயங்காட்டும். Ghat ரோடு இன்னும் பிரமாதம். Two way traffic வேற. சக ரைடர்கள் குடுத்த தைரியத்துல மலை ஏற ஆரம்பிச்சேன். 40-50 லயே வண்டிய உருட்டிட்டுப் போய் ஒருவழியா 11.00 மணிக்கு நாங்க புக் பண்ணிருந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.அடுத்த நாள் முழுக்கு ரெஸ்ட் எடுக்குறது தான் திட்டம்.ஆனாலும் பகல் 11.00 மணிக்கு மேல போரடிக்க ஆரம்பிச்சதுனால நாங்க நாலு பேர் மட்டும் லோக்கல் sight seeingக்கு கெளம்பி போனோம்.



 ஊர சுத்தி முடிச்சு சாயந்திரம் வந்து ரூமடைஞ்சாச்சு.அடுத்த நாள் காலைல மதுரை கிளம்புறதா முடிவாச்சு.ஆனா வழக்கமான பாதை இல்லாம வேற வழியில போலாம்னு உள்ளூர் மக்கள் கிட்ட  விசாரிச்சு தாண்டிக்குடி வழியா கீழ இறங்க முடிவாச்சு.








வழக்கமான ghat roads மாதிரி இல்லாம இது கொஞ்சம் கரடு முரடான ரோடு.ஒவ்வொரு வளைவும் சும்மா 180 டிகிரிக்கு நம்மள சுத்தியடிக்கும்.ரொம்பக்  குறுகலான சாலை.ஒரு பக்கம் பகீர் பள்ளத்தாக்கு. கொஞ்ச தூரம் போன இடது பக்கம் ஏதாவது நீர்நிலை இருக்கும்.திடீர்னு ரெண்டு பக்கமும் பச்சை பசேல்னு இருக்கும்.இப்படியாக mother nature kept surprising us with her fantastic creations. 1.00 மணி ஆகும்போது ஒட்டன்சத்திரம் வந்து சேந்தோம்.அம்மா மெஸ்ல மத்தியான சாப்பாடு.அடுத்தது வேடசந்தூர், தாடிக்கொம்பு, பேகம்பூர் வழியா மதுரைக்கு போய் சேர்றதுன்னு முடிவாச்சு.



சாயந்திரம் இருட்டுறதுக்கு முன்னாடியே மதுரைக்கு போய் சேந்தாச்சு. அப்புறம் கல்யாண வீட்டுகாரங்க புக் பண்ணி வெச்சிருந்த சர்வீஸ்டு அப்பார்ட்மென்ட்க்கு போய்  refresh ஆய்ட்டு கல்யாண reception க்கு போய்ட்டு வந்தோம்.





அடுத்த நாள் காலைல கல்யாணத்த அட்டெண்ட் பண்னிட்டு உடனே சென்னை கிளம்பறதா இருந்ததனால நான் riding gears எல்லாம் போட்டுட்டே தான் மேடையேறுனேன். ஒரு வழியா சாப்பாடெல்லாம் முடிஞ்சப்புறம் NH45 பிடிச்சோம்.அங்கங்க re-fuel பண்ண வண்டிய நிறுத்துனதோட சரி.100 கிலோமீட்டருக்கு மேல தான் ப்ரேக் எல்லாம். கடைசியா சாயந்திரம் 99km கடைல காஃபிய குடிச்சுட்டு அடுத்த ஸ்டாப் சென்னைன்னு சொல்லிகிட்டு பிரிஞ்சோம். சிட்டி கிட்ட வந்தப்புறம் மறைமலை நகர்ல ஒரு மெகா நற்செய்திக் கூட்ட மாநாடு. செம்ம ட்ராஃபிக் ஜாம். எப்படா வீட்டுக்குப் போய் சேருவோம்னு இருந்த எங்களுக்கெல்லாம் செம்ம கடுப்பு. ரோட்ட விட்டு சைட்ல வண்டிய எறக்கி ஓட்ட ஆரம்பிச்சோம். அப்டி இப்டின்னு கத்திப்பாரா கிட்ட வந்து சேரும்போது நைட்டு 10.00 மணி ஆயிடுச்சு.வெற்றிகரமா என்னுடைய முதல் லாங் ரைட் முடிச்சுட்டு வீட்டுக்கு  வந்து சேந்தேன்.

ஒட்டுமொத்தமாவே இது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நெடுந்தூர பயணம் நிஜம்மாவே இவ்வளவு விஷ்யங்கள் கத்துக் கொடுக்கும்னு அப்போ தான் புரிஞ்சுது.வெவ்வேற வானிலைல... வேற வேற மாதிரி சாலைகள்ல.. வித்தியாசமான சூழல்ல எல்லாம் பயணப்பட்டு கடைசியா நாம சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேரும்போது ஒரு ஒட்டுமொத்த வாழ்க்கையையே வாழ்ந்த மாதிரி உணருவோம். பயணத்தைத் தவிர வேறெதுவும் இந்த உணர்வைத் தருமான்னு தெரியல.
- தொடரும்


Related Posts Plugin for WordPress, Blogger...