நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 29 ஜூன், 2016

தேவதைமொழிச் சாபம் - Soliloquy

உரையாடல்களுக்கு உடனிருக்காமல்
நினைவுகளை மட்டும் துணையிருத்தி
பறந்து போதல்
தேவதைமொழிச் சாபம்...!!

http://mangaworkshop.net/images/art/7235/27821.jpg
அன்பின் பார்ட்னர்,

நலமாகவே இருப்பாயென நம்புகிறேன். இடத்தைப் பழக்கிக் கொள்ளலும் மனிதர்களை அறிந்து கொள்ளலும் அத்தனை கடினமில்லையுனக்கு. எங்காயினும் யாராயினும் பறந்து திரிவாய் நீ... சிறகில்லாப் பட்சி...! நான் சாதாரணனல்லவோ.  நாட்களைக் கடத்தியபடி முடிவில்லாச் சாலைகளையும், எதிர்காற்றையும், இஞ்சின் உறுமலையும் உணர்ந்தபடி என்னைப் புதுப்பித்துக் கொள்கிற எனது நெடும்பயணங்களுக்காய் காத்திருக்கிறேன். காப்பி உறிஞ்சுவதை நிறுத்தவில்லை. உன் முன்னால் கொட்டிவிடும் பொருட்டு காலநேரம் பாராது சேர்த்துவைத்த கதைகளின் பாரம் தலைமேல் கனக்கிறது.ஆதலால் புத்தகங்கள் படிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன். உனக்குச் சொல்லும் பொருட்டு மூளையில் கோர்வையாக்கிய தனி நிகழ்வுகளை உதிர்த்துவிடாமல் அப்படியே காய்ந்துபோகவிட்டிருக்கிறேன்

உனக்கான மாலைநேரமாய் இருந்ததை நானும் எனது ஒரு கோப்பை காப்பியும் வலிந்திழுத்துத் தனியாய்ப் பழ(க்)க முயன்றுகொண்டிருக்கிறோம்.
நான் நல்ல கதைசொல்லியா எனத் தெரியாது. ஆனால் உன்னைக் காட்டிலும் பொறுமையாய்க் கதை கேட்கும் வேறெவளையும் எனக்குத்தெரியாது. இன்னமும் புத்தகங்கள் படிக்கிறாயா ? வாசனைகளை வியக்கிறாயா ?
மனிதப் பதர்களின் மன முரண்களை ஒற்றைப் புன்னகையில் கடந்துவிடுகிறாயா ? உனக்கான பிரத்யேகப் புன்முறுவலை யார் முகத்திலும் தேட விருப்பமில்லையெனக்கு. கிடக்கட்டும்...யாவும். அரற்றுதல் பொருட்டாய் விழுகிற வார்த்தைகளைக் கண்டுகொள்ளாதே. இந்த பொறுப்புத் துறத்தல் உன்னிடத்தில் தேவையில்லையெனத் தெரியுமெனக்கு.

அப்புறம், வார்த்தைகளின் பாரம் குறித்துச் சொன்னேனல்லவா ? அதற்காகத்தான் இந்தக் கடிதம். தாள்மடித்து உரையிலிட்டு முகவரி எழுதியனுப்புகிற மரபுக்கடிதமல்ல. கண் இமையில் ஒரு முடி உதிர்ந்தால்...பருத்தி வெடித்து பறந்த விதை கையில் அகப்பட்டால்.. கண்மூடி வேண்டியதைச் சொல்லி ஊதிப்பறக்க விடுவதுபோல் ஒன்று.
ஒப்படைப்பு, அரற்றல், ஓதல், உதறல், சிதறல்..... உளறல்..கோரிக்கை  ஏதோவொன்றெனக்கொள்..!

எனக்கான உனது வார்த்தைகளை எங்கே கொட்டிக் குவிக்கிறாய் ? கேட்பாருண்டா ? பின்னே... சிறப்பாய்ச் சொல்லிக் கொள்ளும்படி உன் இன்மை அன்றி வேறேதுமில்லை இங்கே. நான் முன்பொருமுறை உன்னிடத்தில் சொன்னது போல், நீயில்லாத வெற்றிடத்தை அற்றவைகளால் இட்டுநிரப்புதல் கூடுமா என்ன ? சக பைத்தியத்தைக் கண்டடைதல் சாதாரணமல்லவே.

போகட்டும்..!பின்னொரு யாருமற்ற பின்னிரவில் எழுதுகிறேன் உனக்கு. மகிழ்ந்திரு..! It was great running into you..!!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான். 

5 கருத்துகள் :

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

வாவ்

Arthi சொன்னது…

Your world undoubtedly took me to a different world, Awesome words , u r a package of talents.

ungalsudhar சொன்னது…

Thanks a ton :) :)

Meenu சொன்னது…

So nice ...

Meenu சொன்னது…

So nice ...

Related Posts Plugin for WordPress, Blogger...