நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 10 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - திரையனுபவம்

 


பொன்னியின் செல்வன் was a delightful watch for me...! 

 
முதல் நாள் காலையிலேயே அடித்துப் பிடித்துப் போய் படத்தைப் பார்த்துவிட்டாலும், நேற்றிலிருந்து இன்றுவரை அந்த அனுபவத்தை நினைத்து அசைபோட்டபடியே இருக்கிறேன்.
 
பல வருடங்களுக்கு முன்பு பொ.செ நாவலை வாசித்திருந்தாலும் இப்போது திரையில் பொன்னியின் செல்வனைக் காணும் பொருட்டு மறுவாசிப்பு ஏதும் செய்யாமல் , கதையையும் பாத்திரங்களும் மேலோட்டமாக நினைவில் வைத்திருந்தபடியே போனேன். பெரும்பாலும் எதிர்பார்ப்புகள் எதையுமே பொய்யாக்காமல் பொ.செ சிறப்பானதொரு அனுபவமாக அமைந்தது. 
 
குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இயக்குநர் மணிரத்னம் இப்படி ஒரு பெருங்கதையை (2000+ பக்கங்கள் !) எடுத்துக் கொண்டு , படத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய நிகழ்வுகள், அதற்குப் பொருத்தமான பாத்திரங்கள் எனத் தேர்வுசெய்து ஒட்டுமொத்தமாய் திரையாக்கம் செய்திருக்கும் விதம், மிகச்சிறப்பு. Well crafted and presented ! ❤ 
 
அடிப்படைக் கதையையும் கதை நகரும் போக்கையும் முடிவெடுப்பதில் அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்திருக்கும். ஆனால் அதுவே சரியான விதத்தில் திரைக்கதை அமைக்கவும் உதவியிருக்கலாம். நடிகர்களின் பங்களிப்பைப் பற்றியும் , ரஹ்மானின் இசை எந்தளவுக்கு திரையனுபவத்தை உயர்த்தியிருக்கின்றது என்பதையும் அனைவருமே பேசிவிட்டனர்.
 
ஒரு வரலாற்றுப் புதினம் படமாக்கப் படுகிறது என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றும் over dramatic, larger than life, heroic , visual grandeur காட்சிகள் அத்தனையையும் மிக இயல்பாகவும் சாகசத்தன்மை இன்றியும் காட்சிப்படுத்திருப்பது (சண்டைக் காட்சிகள் உட்பட). பெரிய ஏற்ற இறக்கங்களோ, திருப்பங்களோ, ரசிகர்களை மயிர்கூச்செறிய வைக்கும் cinematic தருணங்களோ இல்லை.இதுவே திரைப்படத்துக்கு பின்னடைவாகவும் அமையலாம். (Pan India angle might not work ?! )
 
போலவே கதையில் குறைவான கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்களை மனதில் பதியவைக்க போதுமான திரைநேரம் (screen time) இருந்திருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் உண்டு; அத்தனையும் முக்கியமான பாத்திரங்கள் வேறு. நாவல் அளவுக்கு பாத்திரங்களை நிறுவுவதற்கான நேரம் எடுத்து கொள்ள முடியாதபடியால் பரபரவென கதை ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப் படுத்தியபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. 
 
இறுதியில் நமக்கு கிடைத்திருக்கவேண்டிய திரை அனுபவம் almost there என்றே முடிந்தாலும் (எனக்கு), இரண்டாம் பாகம் நம் அனைவரின் எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில் சிறப்பான ஒன்றாக அமையுமென நினைக்கிறேன். மேலும் இத்தனை ஆண்டுகளாக மணிரத்னம் தனக்கென வைத்திருந்த பல கட்டுப்பாடுகளையும் மீறி, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தக்கூடிய ஒரு திரைப்படத்தை எடுத்து , அதனை வெற்றிப்படமாகவும் தந்திருக்கிறார். 
 
A well adapted historical fiction from Tamil film industry...! ❤ Thank you Ponniyin Selvan team...! ❤ 
*********************************************************************************
 
இத்துடன் மூன்றாவது முறையாக பொன்னியின் செல்வன் பார்த்தாயிற்று. உட்லண்ட்ஸ், தி.நகர் கிருஷ்ணவேணி, கேசினோ....இவற்றுள் மிகச்சிறந்த ஒளி/ஒலி அனுபவம் வாய்க்கப்பெற்றது தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கில் தான் (பரிந்துரைத்த ஷ்ருதி டிவி கபிலன் அண்ணனுக்கு நன்றி ❤️)
எனக்குப் படம் இன்னும் அலுக்கவேயில்லை. திரையிலும், பின்னணி இசையிலும் சின்னச்சின்னதாய் பல புதிய விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. 
 
அருண்மொழி - வந்தியத்தேவன் முதல் மோதலின் போதான பின்னணி இசை ஒரு மாதிரியான Doo wop + a capella கலவையாக இருந்தது. அந்த சண்டைக்காட்சியில் வேகம் கூடக்கூட பின்னணியும் ராட்டினமாய் சுற்றத்தொடங்குகிறது.
'சாய சஞ்சரே' என்கிற நந்தினியும் குந்தவையும் சந்திக்கிறபோது ஒலிக்கிற சேர்ந்திசைப் பின்னணிப் பாடல்,
 
நந்தினிக்காக மட்டும் அவ்வப்போது ஒலிக்கிற; துயரத்தையும் வஞ்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் அந்தக்குரலிசை,
வந்தியத்தேவன் கோட்டையிலிருந்து தப்பி ஓடும்போது ஒலிக்கிற இசைக்கோர்ப்பு,
 
போர்க்காட்சிகளுக்கான முழக்கங்களும் பின்னணி இசையும், இறுதிக்காட்சிக்குப் பிறகு ஒலிக்கிற அந்த சோகப்பாடல் என அத்தனையுமே தனித்தனியாக ரசிக்கும்படியான இசைத் துணுக்குகள். ரஹ்மான் பொன்னியின் செல்வன் பின்னணி இசைக் கோர்ப்பை வெளியிடப்போகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
 
கதை, வரலாறு, புனைவு, அரசியல் என இந்த திரைப்படத்தைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றையும் தாண்டி திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளும், வசனங்களும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மூன்று முறையும் அந்தக் காட்சிகளின் போது சிலிர்த்துப் போனது எனக்கு.
 
(mild spoilers ahead) 
 
இலங்கைக்கான மணிமுடியை மறுக்கும் அருண்மொழி வர்மனிடம், மண் வரைப் பணிபவன் வான் வரை உயர்வான் என பெளத்த பிக்கு சொல்லி வாழ்த்துகிற காட்சி;
 
தங்களை பாண்டிய ஆபத்துதவிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ஊமைராணி பற்றி வந்தியத்தேவனிடமும் ஆழ்வார்கடியானிடமும் அருண்மொழிவர்மன் சொல்லும் போது 'யார் இந்தத் தாய். எதற்காக ஒரு காவல் தெய்வம் போல என்னைப் பின் தொடர்ந்து காக்கிறாள்?' எனக் கேட்குமிடம்;
 
குந்தவை ஆதித்த கரிகாலனை சந்திக்கிறபோது அவர்களுக்குள் நிகழ்கிற உரையாடலின் இறுதியில் நந்தினியைப் பற்றிப் பேச்சு வர.. 'அவள் எப்படி என்னை மறந்தாள்?' என ஆதித்த கரிகாலன் கேட்குமிடம்.
 
(spoiler ends)
 
ரசிக்கும்படியான காட்சிகளைப்போலவே கொஞ்சம் எள்ளலுக்குரிய காட்சிகளும் உண்டு 😝 எ. கா. சோழ தேசத்து அரசர்கள் அனைவரின் உடை அமைப்பும் , சிகையலங்காரமும் கொஞ்சமாய் ஜப்பானிய சாமுராய்களைப்போலவே இருந்தது; அதுவும் silhouette காட்சிகளில் அந்த சாயல் அப்பட்டமாகவே தெரிந்தது.
 
போலவே நாகத்தீவு (இலங்கை) தொடர்பான காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிகிறது. மரக்கலம்/படகுகள் வந்து நிற்கிற அந்தக் கரைப்பகுதி பிரபலமான சுற்றுலாத்தலம் என நினைக்கிறேன் ( புக்கெட்டின் ஜேம்ஸ்பாண்ட் தீவு?) இலங்கையின் தம்பள்ளையில் நடக்கிற காட்சிகளில் துணைநடிகர்கள் கூட்டத்தினரில் பெரும்பலானோர் கிழக்காசிய முகங்களாக இருந்தது, கதை நிகழும் இடம் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படி இன்னும் நிறைய 😊
ஒவ்வொன்றாக ரசித்து மனதில் அசைபோடவும் கேள்வி கேட்கவும் படத்தில் பல காட்சிகள் உண்டு.
 
எப்படியும் இன்னொரு முறை Imaxஇலும் பார்த்து விடுவேனென நினைக்கிறேன் 🙈☺️ பிறகு மறுபடியும் எழுதுவோம். இரண்டாம் பாகம் வருவதற்குள் நாவலை மீண்டுமொரு வாசித்து விட்டு, இந்த புனைவுலகில் முழுமையாக மூழ்கிவிடுவேனென நினைக்கிறேன் 🤣😅

Related Posts Plugin for WordPress, Blogger...