நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 27 நவம்பர், 2019

காணாமல் போன தேசங்கள் - நிர்மல்

நிர்மல் அவர்களின் ‘ காணாமல் போன தேசங்கள்’ புத்தகம் குறித்து...

"இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இனக்குழு என்பது பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு காட்டும் தனி முக்கியத்துவமும் மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே முக்கிய பிரச்சனை. அதிகாரத்தை வைத்து நில வளங்கள் மற்றும் வேலை வாய்ப்பை தங்களுக்குள் வைத்துக் கொண்டு சிலரை ஒதுக்குவதே இனக்குழு பிரச்சனையின் மூலம். இதுதான் பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்கள்."
Geopolitics - politics, especially international relations, as influenced by geographical factors. புவியியல் காரணிகள் , சர்வதேச அளவில் பிற நாடுகளோடான உறவு, இவை சார்ந்த அரசியலே - புவியரசியல்.

‘காணாமல் போன தேசங்கள்’ -தலைப்பே விவரிப்பது போல, கால ஓட்டத்தில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன நாடுகள் குறித்தும் அந்தந்த நாடுகளின் அரசியல், மொழி, கலாச்சாரம், இனக்குழுக்கள் (Ethnic groups) , வாழ்வியல், சந்தித்த பிரச்சனைகள், பிற நாடுகளின் தலையீடுகள் குறித்தும் மிக விரிவாக பேசியிருக்கிறார்.

யூகோஸ்லாவியா தொடங்கி ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா வரை காணாமல் போன இந்த தேசங்களின் வரலாறுகளை உற்று நோக்கினால் இனம், மொழி, மதம், அரசியல், கலாச்சாரம் என பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கிற நாடுகள், மொழியின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ, ஏதோவொரு ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்களைத் திணிக்க முயல்வதே புரட்சியும் வன்முறையுமாய் சிதறிப் போக காரணமாக இருந்திருக்கிறது.

ஒவ்வொரு நாடுகளின் இடர்பாடுகள் உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்து வாசிக்கும்போதும் நம் நாட்டில் அதே மாதிரியான ஒரு நிகழ்வோடு அதனை ஒப்புநோக்கத் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. ஈழம், காஷ்மிர் என பலவற்றை நிர்மல் அவரே விரிவாக ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காலம் காலமாக நாம் சமூக அறிவியல் புத்தகங்களில் படித்துவந்த இந்திய நாட்டின் ’Unity in diversity - வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியக் கூறுகள் குறித்தும் உண்மையான நிலை குறித்தும் நமக்கொரு தெளிவான புரிதல் கிடைக்கிறது. நிலவுடைமை, நிலப்பிரபுத்துவம், பண்ணை அடிமை முறை,தேசியவாதம், தனிப்பட்ட மனிதர்களின் அதிகார வெறியால் பாதிக்கப்பட்ட நாடுகள், இயற்கை வளங்களின் மேலாண்மை, மூன்றாம் உலக நாடுகளில் வல்லரசுகளின் சூழ்ச்சி விளையாட்டுகள், என அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
For every Nationalism there will be a counter Nationalism. ஏனென்றால் தேசிய உணர்வு என்பது மிக எளிதில் மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய உணர்வு. அது மிக எளிதாக முன் பின் தெரியாத நபர்களை இணைக்கும், போராட வைக்கும்.... அந்த இணைப்பு சிலரையோ, பலரையோ தனிமைபடுத்தக் கூடும்.
திராவிட சித்தாந்தம் முன்வைக்கிற மாநில சுயாட்சி (State Autonomy), இறையாண்மை (Sovereign state) ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவம் பற்றி பேசுகிற அதே வேளையில் தேசியம் (Nationalism), இன அடையாளங்களை (Ethnic identity) பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்படுகிறது.
இறுதியாக ஒரு தேசம் அதன் மக்களிடையேயான இன/மத/மொழி/கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக தன்னாட்சி செய்வதால் விளைகிற நன்மைகளையும் அதற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்தின் ஆட்சிமுறை/அரசியலமைப்பை சொல்வதோடு முடிகிறது.

த்ரில்லர் வகைக் கதைகளும்,திரைப்படத்தின் சுருக்கமான வடிவிலான கதைகளும், காதல் கதைகளுமாய் நிறைந்து கிடக்கிற இந்த #PenToPublish போட்டியில் இத்தனை தீவிரத்தன்மை வாய்ந்த ’புவியரசியல்’ (Geopolitics) பேசுகிற கட்டுரைத் தொகுப்பை எழுத முடிவு செய்ததற்கே தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள். புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் reference புத்தகங்களின் பட்டியல் மட்டும் நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அத்தனை அசுரத்தனமான உழைப்பு & விவரணை. So far, this has been the most sincere effort which has been made for 2019 #PenToPublish contest.

தமிழ் இலக்கியப் பரப்பில் புனைவல்லாத படைப்புகளுக்கான இடம் பயணக் கட்டுரைகள், இலக்கியவாதிகளின் அனுபவக் கட்டுரைகள் என்கிற அளவில் பெரும்பான்மையாகவும்,  மாநில/தேசிய அரசியல், வரலாறு, அறிவியல் பேசுகிற புத்தகங்கள் ஓரளவும் புழக்கத்தில் இருக்கின்றன. அபுனைவின் முக்கியமான சிக்கல் அவற்றில் பெரும்பாலானவை கொண்டிருக்கிற ஆய்வுக்கட்டுரை மாதிரியான கடுமையான மொழியே. வளர்-இளம் பருவத்தினருக்கான (Teen & Young adults) எளிமையான மொழியைக் கொண்ட அபுனைவுகள் இல்லாத குறையை  , இந்தப் புத்தகம் போக்கும் என நிச்சயம் நம்புவோம்.மீண்டுமொரு முறை மனம்நிறைந்த  வாழ்த்துக்கள் நிர்மல்.வாய்ப்பும் நேரமும் அமைந்தால் தொடர்ந்து எழுதவும்...!

புத்தகம் ஆன்லைனில் வாங்க: இங்கு

செவ்வாய், 26 நவம்பர், 2019

’ரூஹ்’ - லஷ்மி சரவணகுமார்



லஷ்மி சரவணகுமாரின்ரூஹ்நாவல் குறித்து .

 அமேசான் நிறுவனம் நடத்தும் கிண்டில் #PenToPublish போட்டி குறித்தும், இம்முறை அதிகளவு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் வெளிவந்த படைப்புகளில் நான் முதலில் படித்தது லஷ்மியின்ரூஹ்’. ரூஹ் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள் சொல்கிறது இணையம்.
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.

 பாவ்லொ கொய்லோ (Paulo Coelho) எழுதியதி அல்கெமிஸ்ட்நாவல் போன்று, தமிழில் தத்துவமும் வாழ்வியலும் ஆன்மிகமும் சேர்ந்த புனைவுகள் வெகு சொற்பமே. சமகால எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த தத்துவம்/வாழ்வியல் சார்ந்து தீவிரத்தன்மையோடு அணுகியது சரவணன் சந்திரனின்சுபிட்சமுருகன்’. அதனைத் தொடர்ந்து தமிழில் தத்துவம் சார்ந்த, அன்பின் மகத்துவத்தை எளிமையாகப் பேசுகிற ஒரு படைப்புரூஹ்’.


எத்தனை இரவுகளை, எத்தனை பகல்களை தான் என்ற எண்ணமின்றி வாழ்ந்திருக்கிறோம் என ஒரு மனிதன் தெரிந்து கொண்டுவிட்டால் அவன் ஒருபோதும் உலக இச்சைகளின் மீது பற்றுக் கொள்ளாதவனாக வாழத்துவங்கி விடலாம். அப்படிப் பார்த்தால் இங்கு பிணியோடு வந்து குணமாகிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் முழுமையான கருணையால் மறுபிறப்பெடுத்தவனாகவே செல்கிறான்.

 ஏர்வாடியில் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழாவில் தொடங்குகிற கதை, பதினெட்டாம் நூற்றாண்டில் அரபிக்கடலில் மராட்டிய கடற்படைத் தளபதி கனோஜி அங்க்ரேவால்  சிறைபிடிக்கப்படும் பாக்தாத் கப்பல்; அதன் தலைமை மாலுமி அஹமது; இவர்களில் துவங்கி , பேரையூரில் வாழும் தோல்பாவைக் கலைஞர் விட்டல்ராவ்; அவருடைய மகன் ஜோதி, அதே ஊரில் வாழ்கிற அன்வர், அன்வரின் மனைவி ராபியா என்னும் தேவதை; என அத்தனை பேருடைய கதைகளையும் அத்தனை இடங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கிற அற்புதமான கதை சொல்லல்

சிறுவயதிலிருந்தே குடும்பமும் சுற்றமும் வெறுக்கிற, அவனுடைய உடல்மொழியின் பெண்மைக்காக சீண்டப்படுகிற கேலிக்குள்ளாகிற  ஜோதி என்கிற உணர்வுகளின் பாற்பட்ட வெற்று மனிதன்; அவனுடைய எண்ணவோட்டங்களும் மனவக்கிரங்களும் அவனைச் செலுத்துகிற பாதை; இறுதியில் அவன் கண்டடைகிற முடிவு. இந்த உருமாற்றமும் அதனூடான உரையாடல்களும் தத்துவார்த்தமான கேள்விகளுமே ஒரு cathartic process (இணையான தமிழ்சொல்லாம் துப்புறவாக்கத்தில் catharsisன் அழகு இல்லை).

அவளின் நினைவென்பது பற்றியெரியும் காட்டுத் தீயின் உக்கிரம்,  சதையும் எலும்புகளும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம், அவளென்பது  யாதுமான பேருரு
 ராபியாவின் பாத்திரப் படைப்பு குறித்து நிச்சயமாய் பல உரையாடல்கள் நிகழும். தேய்வழக்கான சொல்லாடலில்கத்தி மேல் நடக்கிறமாதிரியான கதை சொல்லல்நிபந்தனையற்ற அன்பின்  மொத்த உருவானவளாய் திகழ்கிற ராபியாவும் அவள் அன்பால் நிகழ்த்துகிற அற்புதங்களுமாய்
நிறைந்திருக்கின்றது ‘ரூஹ்’. கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாய் நிகழ்கிற பெரும் பயணங்களாலும் அதில் பங்குகொண்டு பயணிக்கிறவர்களின் கதைகளாலும் ஆனது ‘ரூஹ்’
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
லஷ்மி சரவணகுமாரின் முந்தைய படைப்பான கொமொரா முழுக்க முழுக்க வெறுப்பையும் அது சார்ந்த உணர்வுகளையும் பேசியதெனில், ‘ரூஹ்’ அதன் எதிர் துருவத்தில் நின்று முழுமையான அன்பையும் சரணடைதலையும் பேசுகின்றது. என்னளவில் இதுவரையிலான லஷ்மியின் படைப்புகளில் ‘ரூஹ்’ எப்போதுமே முதலிடத்தில் இருக்கும்.

தவறவிடக் கூடாத படைப்பு...! கட்டாயம் வாசித்துவிடவும்...!

மின் புத்தகம் வாங்க: இந்த இணைப்பை க்ளிக்கவும்

Related Posts Plugin for WordPress, Blogger...