நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 19 மே, 2013

அமெரிக்கன் ஃபுட்பால் - ஹாலிவுட் 'Sports' படங்கள் - ஒரு பார்வை




நம்மூரில் ஸ்போர்ட்ஸை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரிய பட்ஜெட் மசாலா படங்களில் ஊறுகாயாக (உ.ம் கில்லி – கபடி, M.குமரன் – கிக் பாக்ஸிங்) அவ்வப்போது ஏதாவதொரு விளையாட்டை பயன்படுத்தியதைத் தவிர, முழுமையாக ஒரு விளையாட்டை முன்வைத்து அதில் வெற்றியும் பெற்ற படங்கள் என எடுத்துக்கொண்டால் சென்னை 28 (கிரிக்கெட்), வெண்ணிலா கபடி குழு (கபடி) உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம்.

 ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரையில் இந்த ‘Sports’ வகையைச் சார்ந்த படங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பேஸ்பால் (Baseball), அமெரிக்கன் ஃபுட் பால் (American Football), கூடைப்பந்து (Basketball), குத்துச்சண்டை (Boxing) என ஒரு விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் Sports-Drama, Sports-Bio-pic, Sports-Comedy, Sports-Family என sub-genreகள் நிறைய உண்டு.

இந்த வகை ஸ்போர்ட்ஸ் படங்களின் கதைகளுக்கென ஒரு பொதுவான டெம்ப்ளேட் இருக்கும். ஏதாவதொரு அணி தங்களுடைய வீரர்களிடையே ஒற்றுமை இல்லாததனாலோ அல்லது வேறு காரணங்களாலோ சரியாக விளையாடாமல் தோல்விமேல் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும். அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் திறமையிருந்தும் பெரிதாய் சோபிக்க முடியாதவராய் இருப்பார். எங்கிருந்தோ ஒரு புதிய பயிற்சியாளர் வருவார். அவருடைய ஊக்கத்தினாலும் உந்துதலினாலும் முன்னேறும் அணி க்ளைமாக்ஸில் ஏதாவதொரு மிகப்பெரிய அணியைத் தோற்கடிக்கும்.சுபம் படம் இனிதே நிறைவுற்றது…!!

சில படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி மாறினாலும் இந்த வரையறைக்குள் கொஞ்சமாவது அடங்கும்.குழு விளையாட்டை பற்றிய படங்களுக்கு இந்த விதிகள் கட்டாயம் பொருந்தும்.அதுவே தனி ஒரு விளையாட்டு வீரனைப் பற்றிய கதையாக இருந்தால் இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் மாறும். அந்த குறிப்பிட்ட வீரருடைய வீழ்ச்சியும் எழுச்சியும் (Fall and Rise) சுற்றியே இருக்கும். அவனுடைய குடும்பப் பின்னணியும், குண நலன்களைப் பற்றியும், திறமைகளைப் பற்றியும் கொஞ்சம் டீட்டெய்லிங் இருக்கும்.மற்றபடி இறுதியில் ‘அவருடைய கடுமையான முயற்சியால்/பயிற்சியால் வென்றார்’ வகை கதையாகத்தான் முடியும்.

சரி மேட்டருக்கு வருவோம்… அமெரிக்காவின் தேசிய விளையாட்டு பேஸ்பால்-ஆக இருந்தாலும் இந்த ஃபுட்பால்னா ( நமக்குத் தெரிஞ்ச Football இல்ல. கோழி முட்டை மாதிரி ஒரு பந்தை வெச்சு கிட்டத்தட்ட ரக்பி மாதிரி விளையாடப்படும் (American Football) உயிரையே விட்டுடுவாங்க போல. இந்த விளையாட்டைப் பத்தி எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுருக்கமா சொல்ல முயற்சி பன்றேன்.அணிக்கு 11 பேர். எல்லா அணியிலுமே வீரர்கள் Defence – Offense என இரண்டு குழுக்களா இருப்பாங்க. இந்த ஃபுட்பால் கிரவுண்டின் மொத்த நீளம் 120 கெஜம் (yard) கிட்டத்தட்ட 110 மீட்டர். இரண்டு பக்கங்களும் கோல் போஸ்ட்கள் உண்டு.ஆட்டம் வழக்கம் போல ஆடுகளத்தின் மையத்திலிருந்து தான் தொடங்கும். இந்த செண்டர் கோட்டுக்கு ‘Line of Scrimmage’னு பேரு.என்னதான் footballனு சொல்லிக்கிட்டாலும் பெரும்பாலும் பந்தை கையால மத்தவங்ககிட்ட பாஸ் பண்ணியோ, தூக்கி எறிஞ்சோ அல்லது பந்தை தூக்கிட்டு ஒடியோ தான் விளையாடவேண்டியிருக்கு.

நம்முடைய டீமின் Offense க்ரூப் களத்துல இருக்குன்னா அவங்களுடைய குறிக்கோள் எதிரணியின் Defense-இடம் இருந்து எப்படியாவது தப்பிச்சு பந்தை அப்படி இப்படி பாஸ் பண்ணி பந்தை மீட்டு 40மீட்டர் ஓடி இடையில எதிரணி டிஃபன்ஸ் கிட்டயிருந்தும் தப்பிச்சு கோல் போஸ்ட் இருக்குற கடைசி பத்து மீட்டர் (End Zone)-க்கு பந்தை வெற்றிகரமா கொண்டு வந்துட்டா…!! அது ‘Touchdown’ .உங்க அணிக்கு ஏழு பாயிண்ட்கள்.. (உஸ்ஸ்ஸ்ஸப்பா சொல்லி முடிக்கவே மூச்சு வாங்குது.)

Wait…! பந்தை தூக்கிட்டு பூந்து பூந்து ஓடனும். எதிரணி ப்ளேயர்ஸ் வந்தா சிக்காம தப்பிக்கனும். இதுல என்ன பிரச்சனைன்னு நீங்க கேக்கலாம். பிரச்சனையே அதான்.இது ஒரு ‘Contact Sport’.அதாவது நீங்க எப்படி வேணாலும் முட்டி மோதிக்கலாம்.ரொம்ப ரொம்ப மோசமா அடிபட வாய்ப்பிருக்கு. அதனாலதான் Shoulder pad, Thigh Pad, Helmetனு ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்.எதிரணி Defense டீம்ல இருக்குற ஒவ்வொருத்தரும் சும்மா பீமசேனன் மாதிரி ஆறடி உயரத்துக்கு மேல 150 கிலோ எடைல இருப்பாங்க (Line backers) .அவங்க வேலையே பந்தை தூக்கிட்டு ஒடுற ப்ளேயர தடுக்குறது (Tackle) தான். பந்தை தூக்கிட்டு ஒடுறவர (Running Back) தடுத்து/மோதி பந்தை அவர் தவறவிட்டாத்தான் (Fumble) எதிரணிக்கு அடுத்ததா வாய்ப்பு கிடைக்கும்.இதுல யார்கிட்ட எப்போ பந்தை பாஸ் பண்ணனும்…எதிரணி Defense கிட்டேயிருந்து எப்படி எஸ்கேப்பாகனும்னு எல்லா வியூகங்களையும் வகுக்குறவர் ‘Quarter Back’ (QB). யெஸ்ஸு.. யூ ஆர் ரைட்டு… இந்த QBதான் பெரும்பாலும் அணித்தலைவரா இருப்பாரு.

இங்க கிரிக்கெட்டுக்கு IPL மாதிரி (அந்தளவு லஞ்ச ஊழல்லாம் இல்லீங்கோ.அவிங்கள்லாம் ரொம்ப ரோஷக்காரங்க) அமெரிக்கன் ஃபுட்பாலுக்கு NFL (National Football League) ரொம்ப பிரபலம். அமெரிக்கா முழுவதுமிருந்து 32 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் மோதிக்கொள்கிற Superbowl (உலகக்கோப்பை மாதிரி – ஆனா அது இல்லை) உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 கோடி ரசிகர்களால் பார்க்கப்படுது. அவங்கவங்க State டீமுக்காக அப்புடியே உசுரையே விடுறாங்கைய்யா இந்த மக்கள். ஃபுட்பாலை பொறுத்தவரையில் அமெரிக்கர்களுக்கு அது ஒரு ‘National Pride’.

ஹப்பா…!! ஓரளவு கவர் பண்ணிடேன்னு நெனைக்குறேன்…!! :) :) இனிமே இந்த அமெரிக்கன் ஃபுட்பாலை அடிப்படையா வெச்சு வெளிவந்த.. நான் பார்த்த அரை டஜன்+ படங்களைப் பற்றி விரிவா... கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன்..!! படங்களின் பட்டியல் கீழே…!

1.   Remember the Titans (2000)
2.   Invincible (2006)
3.   Any Given Sunday (1999)
4.   Friday Night Lights (2004)
5.   The Waterboy (1998)
6.   The Longest Yard (2005)
7.   The Blind Side (2009)
8.   Gridiron Gang (2006)
9.   Varsity Blues (1999)
10. We are marshal (3006)

ஆரம்பத்துல இந்த விளையாட்டு ஒரு மண்ணும் புரியலைன்னாலும் நிறைய படங்கள் பார்த்து அப்புறம் அந்த படங்களை இன்னும் ரசிக்க இந்த விளையாட்டைப் பற்றியும் படிச்சு… இப்போ எனக்கு இந்த ‘American Football’ புடிச்ச கேம் ஆயிடுச்சு. :) :)

கடைசியா ஒரு ஃபினிஷிங் டச் : சிறந்த பத்து டச்டவுன்கள் - வீடியோ
Photos Courtesy: Original Uploaders

டிஸ்க்ளைமர்: இந்த கேம் பத்தி நல்லா தெரிஞ்ச அமெரிக்கவாழ் நண்பர்கள் யாரவது இதை படிக்க நேர்ந்தால் எப்படி எழுதிருக்கேன்னு தயவுசெய்து சொல்லிட்டு போங்க. :) :)

வியாழன், 16 மே, 2013

’ஒன்று’ - ரா.கண்ணன், ராஜுமுருகன் - விகடன்



கொஞ்சம் விறுவிறுப்பும் கொஞ்சம் காதலுமாய் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கின்ற வகையிலான சிறுகதைகள் எப்போதுமே என்னைக் கவரத் தவறியதேயில்லை. முதன் முதலில் சிறுவர்மலரில் தான் தொடங்கியது என் வாசிப்பு. பின் குமுதத்தில் தொடர்கதை (’பிளஸ் ஒன்’ தொடர்கதை– பிரியா கல்யாணராமனின் எழுத்துக்கு அடிமை நான்.) படித்து அப்படியே விகடுனுக்கு மாறி ‘சுஜாதா’வை அடையாளங்கண்டு நூலகம் சென்று தனி புத்தகங்கள் அதிகம் வாசிக்கத்தொடங்கிய நேரமது. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது.

இன்று வணிக எழுத்து என்று ‘இலக்கிய’வாதிகளால் பெரும்பாலும் ஒதுக்கப்படுகின்ற அங்கீகரிக்கப் படாத ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், ப்ரியா கல்யாணராமன் (’சுஜாதா’வையும் இப்பட்டியலில் சேர்ப்போரும் உண்டு) உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளே பெரும்பாலானோருக்கு வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்திருக்கும் அல்லது ஆர்வமேற்படுத்தியிருக்கும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. என் அம்மா எனக்கு மு.வ அவர்களையும் தி.ஜா வையும் அறிமுகப்படுத்தினாலும் நானென்னவோ குமுதத்தையும் விகடனையும் தான் அதிகம் விரும்பினேன்.

 நிற்க. எதற்காக இவ்ளோ பெரிய பில்டப் என்று கேட்கலாம். விஷயத்துக்கு வருகின்றேன். ’லைட் ரீடிங்’ (light reading) என்று விளிக்கப்படுகின்ற ‘மென் வாசிப்பு’க்கு நான் எப்போதுமே பெரிய ரசிகன். வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் பெரும்பாலும் அவை தருகின்ற சின்ன சின்ன சஸ்பென்ஸுக்காகவும், திடீர் திருப்பங்களுக்காகவும்,கொஞ்சம் இளமைக்காகவும்,பொங்கும் காதலுக்காகவும் நிறையவே ரசித்திருக்கின்றேன்.அந்த வகையில் சமீபத்தில் அண்ணன் யுவகிருஷ்ணா அவர்கள் பேஸ்புக்கில் பரிந்துரைத்ததன் பேரில் விகடனில் தொடராக வெளிவந்த ‘ஒன்று’ கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். தொடராக வந்தபோதே பட்டையை கிளப்பியது ஆதலால் ஒரு மினிமம் கேரண்டி நம்பிக்கை இருந்தது.
 அப்போது எழுத்தாளரின் அடையாளத்தை வெளியிடாமல் ‘இருவன்’ என்று பெயர் மட்டும் வந்தது. யார்ரா அந்த ‘இருவன்’ இப்படி எழுதுகிறாரென்று நினைப்பேன். புத்தகமாய் வெளிவரும்போது தான் தெரிந்தது ‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகனும், ரா.கண்ணன் அவர்களும் தான் அந்த ’இருவன்’ என்று. மிகவும் மோசமான மனநிலையில் வாசிக்கத் தொடங்கிய நான் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிக்கத் தொடங்கி அப்படியே மூழ்கிப்போனேன். எனக்குள்ளே நிறைய சிரித்துக் கொண்டேன். என் முன்னே நின்ற பிரச்சனைகள் மறந்து போயின. கொஞ்சம் காதலும் கவிதையுமாய் கனநேர கிறுக்கொன்று பிடித்தது. ஒவ்வொரு கதையாய் படித்து முடித்தவுடன் ”அடச்சே..அதுக்குள்ள முடிச்சுப்புட்டானுவளே’ என்று வருந்தவும் செய்தேன்.

எழுத்துநடையில் துள்ளலும் எள்ளலுமாய் தட தடவென பக்கத்து வீட்டு அழகு தேவதைகளினூடாகவும்… காதலில் சொதப்பிய காதல் மன்னர்களினூடாகவும்… அழைத்துச் செல்லும் ஒரு வேகமான ரயில் பயண அனுபவம். அவ்வப்போது நெகிழவும் முகிழவும் சிரிக்கவும் வைக்கத் தவறவில்லை இந்தக் கதைகளின் எழுத்தாளர்களான இருவர்(ன்).

சில நேரங்களில் நாம் வாசிக்க விரும்பும் புத்தகமோ பார்க்க விரும்பும் திரைப்படமோ அது முழுமையான கலைப் படைப்பாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆசானாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் நம்முடைய அந்த நேரத்து பிரச்சனைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் கொஞ்சம் விடுபட வைத்தாலே போதுமானது. ‘ஒன்று’ புத்தகம் அந்த வகை.

கதைகளிலிருந்து நான் ரசித்த வரிகள் சில…!!

’தேடித் தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும் தீர்ந்துவிட்ட பிறகு, கிடைக்கிற மெளனம் எவ்வளவு அழகானது. மெளனத்திலும் தேடினால், ஆழத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் பிய்த்தெறிய முடியாத மச்சம்போல் ஒட்டிக்கிறது பிரியம். ஆமாம்..இதை எல்லாம் பிரியம் என்றே அழைத்தாலென்ன? ஆகவே பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்.’

‘காதல்… வயசையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர் பூதம். ஆதி நெருப்பின் கதகதப்பு. உலகின் முதல் உன்மத்தம். பாதாதிகேசம். கேசாதிப் பாதம். இது கெமிஸ்ட்ரியின் ஹிஸ்டரி.’

’நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்’

‘லாலி என் அருகே இருக்க, ஒரே நேரத்தில் என்னைக் காளான் குடையாகவும் குறிஞ்சி மலராகவும் உணர்ந்தேன். அந்த இரவில் அவள் மழையாகவும், நான் ஈசலாகவும் பிறந்து வந்ததாய் தவித்தேன்’

‘ஏ.டி.எம் ஸ்லிப் பின்னால்கூட ஹைக்கூ எழுதும் மனசுக்காரன் நான். சாலையில் சைரன் கேட்டாலே அதில் பயணிக்கும் நோயாளிக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கும் ஒருத்தி எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை’

’அது அந்தாக்‌ஷரி’ அல்ல தோழர்...என் வாழ்வின் வழிப்பாதை. விரல் பிடித்து விழியாக வாழ்ந்து காட்டக் கிடைக்கவிருக்கும் ஒரு வரம். யார் யாரோ கஷ்டப்பட்டு இத்தனை காலம் திரை இசையை எங்களுக்காகவே படைத்ததாய் தோன்றிய கனம் அது தோழர்’

‘காதலி சென்றுவிட்ட பிறகு காதல் பகிர்ந்த இடங்களைப் பார்ப்பது துயரம். நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்துகிடக்கின்றன பிரியங்கள்.’

’நதியைப்போலக் கடந்துவிட்டது காலம். காதலும் பிரியமும் கடல்போல் நிற்கிறது. போய்ப் பார்ப்பதும் கால் நனைப்பதும் அவரவர் விருப்பம். அவரவர் துயரம்.’

’ஒவ்வொரு நினைவும் ஜனனம். ஒவ்வொரு பிரிவும் மரணம். காதல் விதைத்த பார்வையின் முதல் நொடியையும், பிரிவைக் கொடுத்த வார்த்தையின் கடைசிப் புள்ளியையும் யார் அறிவார்.’

மீதியை புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்:
புத்தகம்: ‘ஒன்று’
எழுதியவர்கள்: ரா.கண்ணன், ராஜு முருகன்
விகடம் பிரசுரம்
விலை:ரூ.85
ஆன்லைனில் வாங்க : http://books.vikatan.com/index.php?bid=2061


Related Posts Plugin for WordPress, Blogger...