நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கறுப்புக் குதிரை - Demonetization


Demonetization, பணமதிப்பிழப்பு, கறுப்புப் பணம், Cashless Economy..!!

சமீபத்தில் நாம் அனைவருமே மிக அதிகம் கேட்ட/ கேள்விப்படுகிற வார்த்தைகள் இவை. சரியான திட்டமிடலும் முறையான வழிமுறைகளும் இல்லாமல் தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் முடிவெடுக்கிற ஒரு தலைமையைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால்  நாடுமுழுக்க சாமானியர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். 86% சதவிகிதம் புழக்கத்தில் இருந்த 500-1000 ரூபாய் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன. ATMகளிலும் வங்கிகளிலும் தங்கள் பணத்தை எடுப்பதற்கே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில்லறை வர்த்தகம் செய்பவர்கள், சிறுவணிகர்கள், நேரடியான பாதிப்புக்குள்ளானார்கள்.ரிசர்வ் வங்கியும் பிரதமரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கைகாட்டி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 150 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்

What went wrong ? பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆரம்பத்தில் வரவேற்றவர்கள் கூட பின்னாட்களின் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களாலும், implementation சொதப்பல்களாலும் மிக மோசமாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். முதலில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாகச் சொல்லப்பட்டு, பின்பு cashless economyக்கான தொடக்கம் என்று அரசாங்கத்தால் சப்பைக்கட்டு கட்டப்படுகிற இந்தத் திட்டத்தின் அசலான நோக்கம் தான் என்ன ? இந்தியாவின் பொருளாதார வளார்ச்சிக்கும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் இது எந்த அளவில் பயன்படும் ? கறுப்புப் பணம் மொத்தத்தையும் பதுக்கியவர்கள் ரூபாய் நோட்டுகளாகவே வைத்திருப்பார்கள் என நம்பும் அளவுக்கு அரசாங்கம் அப்பாவியா ? சுற்றி சுழல்கின்றன கேள்விகள். நமக்குத் தெரியவேண்டியது என்ன ? 

இனி கறுப்புக் குதிரை புத்தகத்தில்...

கறுப்புப் பணம் என்றால் என்ன? உலகம் முழுகம் முழுதும் எந்தெந்த வழிகளில் எல்லா கறுப்புப் பணம் உண்டாகிறது என்பதில் தொடங்கி, ஸ்விஸ் வங்கிக் கணாக்குகள், ஹவாலா மோசடி, வங்கிகள் வழியாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் வழியாகவும் கறுப்புப் பணத்தை வெளுப்பாக்குகிற (laundering) வேலை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் வழியாக செய்யப்படுகிற laundering, பங்குச் சந்தைப் பரிமாற்றங்கள் வழியாக நிகழ்கிற தில்லாலங்கடி வேலைகள் என கறுப்புப் பணம் உருவாகிற/வெளுப்பாக்கப்படுகிற அத்தனை வழிமுறைகளையும் தரவுகளோடு விளக்கிச் சொல்கிறார் நரேன். 

அதன் பின் நவம்பர் 8 நிகழ்த்தப்பட்ட Demonetization என்கிற பொருளாதார பேரழிவு குறித்து விளக்கிவிட்டு அதன் விளைவுகளையும், நாடுமுழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளையும் தற்போதைய நிலையையும் விளக்கிச் சொல்கிறார். ரொக்கமில்லாப் பொருளாதாரத்துக்கான எந்தவிதமான உள்கட்டமைப்பும் வசதிகளில் முழுமையாக இல்லாத நம் நாட்டில் இது எந்த அளவு சாத்தியம் என்கிற கேள்வி நம் முன் வைக்கப்படுகின்றது. நீ உன் பணத்தை இப்படித் தான் செலவளிக்க வேண்டும், இவ்வளவு தான் கையாள வேண்டும் என்று அரசாங்கம் தனிமனிதர்களுடைய உரிமைகளில் தலையிடுவது பற்றியும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இன்னும் ஏகப்பட்ட தகவல்கள். இத்தனையும் 20 தலைப்புகளில் 136 பக்களுக்குள் சொல்லிவிடும் முயற்சியே பாராட்டுக்குரியது.

பொருளாதாரம் குறித்த அறிவும், உலகளாவிய பார்வையும் நாலைந்து டேப்லாய்ட் கட்டுரைகளை நுனிப்புல் மேய்வதால் மட்டும் வருவதில்லை. தீவிரமான ஆய்வும் ,பெரும் உழைப்பைக் கோருகிற வாசிப்பும், பல வருட கூர்நோக்கும் மட்டுமே பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான பார்வையையும் உருவாக்கும். அப்படிப்பட்ட தெளிவுடைய ஒருவர், தான் புரிந்துகொண்ட விஷயங்களை மிக மிக எளிமையாகவும் வாசிக்கிற எல்லா தரப்பு மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு வந்திருக்கிற இந்தப் புத்தகம் நிச்சயம் தமிழுக்கு ரொம்ப புதிய முயற்சி, Wall street journal, Bloomberg  மாதிரியான தளங்களில் வெளியாகிற கட்டுரைகளின் தரத்தோடும்/தரவுகளோடும் வாரப்பத்திரிக்கை வாசகர்களுக்கும் புரியக்கூடிய எளிமையான எழுத்துநடையோடும் வெளிவந்திருக்கிற ‘கறுப்புக் குதிரை’ ஒரு Must Read...!! 
வாழ்த்துகள் நரேன் அண்ணா..!! :) 

‘கறுப்புக் குதிரை’ - நரேன் ராஜகோபாலன்
நவி பதிப்பகம் - ரூ.150/-

ஆன்லைனில் வாங்க - இங்கு  க்ளிக்கவும்
அல்லது ‘அரவிந்தன்’ அவர்களை 770 847 9380 ல் அழைக்கவும்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

சாத்தான்களின் வரம் - Harangue

இப்போது நீ இருக்கிறாயே என
உன்னிடம் வந்து
அழுது தொலைத்துவிட்டால்
நாளை நீ தேடும்போது
நான் இல்லாமல்போனால்
என்னாகுமோ என
எனக்காய் நானே
வெம்பிச் சாகிறேன்
போ...!
Courtesy: http://creativeartandcraftideas.blogspot.in/2016/05/abstract-art-drawing-in-black-and-white.html

பேரன்பின் பார்ட்னருக்கு,

பெரும் மன அழுத்தமே இந்தப் பின்னிரவில் என்னைக் கடிதமெழுத நிர்பந்தித்திருக்கின்றது. வழக்கம் போலக் கேட்டுத் தொலைய வேண்டிய சாபமுனக்கு. மற்றவர்களின் உலகத்துப் பிரச்சனைகளை நான் பெரிதாயொன்றும் பொருட்படுத்துவதில்லை பார்ட்னர்.  போலவே அவர்களும் என்னை. என் உலகத்தின் பிரச்சனைகள் வேறு மாதிரியான சிக்கல்களைக் கொண்டவை. தேடலும், தேடலின் நிமித்தமுமாய்க் கடந்து கொண்டிருக்கிற இந்த வாழ்க்கையில் இளப்பாறுதலுக்காய் எந்த மரத்தடியின் நிழலில் சாய்வேனென்று அறிந்தவனில்லை. அகச்சிக்கலா புறச்சிக்கலாவென ஆராய்பவர்களை மழுப்பிச்சிரித்து மறுதலித்துவிடுகிறேன். கேட்போரெல்லாம் நீயல்லவே. நீயாயிருந்தால் கேட்காமலே உணர்ந்திருப்பாயே. உனக்கு நானும் எனக்கு நீயும் கொடுத்திருக்கிற இந்த வெளிக்கு பெயர்சூட்டித் தாலாட்ட விருப்பமில்லையெனக்கு. குழந்தையைக் கொஞ்சிட பெயர் வேண்டுமா என்ன. சற்றேறக்குறைய பற்றற்றுதான் திரிகின்றேன். ஏதேனும் ஒரு போதைக்கு அடிமைப் பட்டிருந்திருக்கலாமோ என அடிக்கடி தோன்றுகிறதெனக்கு. ’எதை மறக்க எது’வென வெடித்துச் சிரித்தபடி  நீ கேட்பதாய் உணர்கிறேன். உனக்கா புரியாது...!!?

முன்பொருமுறை வாசனைகளைப் பற்றிய நம் உரையாடலை நினைவில் வைத்திருக்கிறாயா ? ’சிதம்பர நினைவுகளில்’ பாலச்சந்திரன் சுள்ளிக்காடு குறிப்பிட்ட அந்த சோப்பு விற்கிற பெண் அவளுடைய திருமணப் பத்திரிக்கையை தந்துவிட்டுப் போனதும் வீடு முழுக்க நிறைந்திருந்த அவளுடைய மணம் பற்றி எழுதியிருந்ததைச் சொன்னதும், எப்போதோ நீ படித்த ஒரு புத்தகத்தில் தன் தோழியைக் காண நாடுவிட்டு நாடுவந்த ஒருத்தி வந்து திரும்பியபின் அந்த அறைக்குச் சொந்தக்காரி “I feel like I don't belong here anymore. All that is left was her fragrance" என்று சொன்னதாய், நீ சொல்ல நான் கேட்ட அந்தத் தருணம் பல யுகங்களுக்கான ஒற்றை கருப்பு வெள்ளை புகைப்படம்போல் மகத்தானதாய் என் மனதில் பதிந்திருக்கிறது.பெயர் தெரியாத அந்தப் புத்தகத்தை இன்றும் உனக்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான மகத்தான தருணங்கள் இப்போது வாய்ப்பதில்லையெனக்கு. அற்பர்களின் வாழ்வில் அற்புதங்கள் எப்போதுமே நிகழ்வதில்லையே.

எழுத்துக்களில் மீண்டு எழுத்துக்களிலேயே தொலைந்து கொண்டிருக்கிறேன். ஆம்... மீண்டும் புத்தகங்களாலான வாழ்க்கை. பல வருடம் பழைய ஒயினை தனிமையில் ருசித்துக் குடிக்கிற ஒரு கவிஞன் போல, துயரத்தை ரசித்துப் பருகிக்கொண்டிருக்கிறேன். உனக்குத் தெரியுமா பார்ட்னர் ? ஒரு வலியை மறக்க அதைவிட அதிகமான வலியை ரசித்து அனுபவிக்கிற Masochism பற்றி ?
வெகு சமீபத்தில் ஒரு மிக நீண்ட பயனத்தினூடாய் அதனைக் கண்டுணர்ந்தேன். கேள்விகள், கல்லெறியப்பட்ட கூட்டின் தேனீக்கள் போல சுற்றி மொய்த்து கொட்டிக் கொண்டிருக்கின்றன. நான் பித்தன் போலச் சிரித்தபடி சாலைகளைத் துரத்திக் கொண்டிருக்கிறேன். காலத்துக்கும் நிலைத்திருக்கிற மகத்தான உணர்வுகளைத் தந்த உறவுகளத்தனையும் மனதில் மட்டுமே நிலைத்து வாழ்கிற சாபம் பெற்று வந்திருக்கிறேனோ எனத் தோன்றுகிறது பார்ட்னர்.  சாத்தான்கள் அளிக்கிற வரங்களாலும் தேவதைகளின் சாபங்களாலும் ஆனவையாக என்னுடைய  மேற்குறிப்பிட்ட தருணங்களைக் கொள்கிறேன்.யாருக்கு வாய்க்கும்  இந்த வாழ்க்கை? மறுபடியும் உன் சிரிப்பு..!

கடிதமெழுதும் போது எனது வலது தோளுக்கு மேலே எட்டிப் பார்க்கிற கண்களாக அவ்வப்போது நானே மாறிக்கொள்கிறேன். கண்களில் கோர்த்துக் கொண்டிருக்கிற கண்ணீர் கன்னத்தில் உருண்டோடும்போது வலிந்து இளித்து இடக்கையால் தட்டிவிடுகிறேன். இந்தக் கடிதத்தை காவியத்தன்மையுடையதாய் மாற்றப் போகிற அந்த ஒற்றைத் துளி கண்ணீர் இதுவாகவும் இருக்கலாம்.  அல்லது வழக்கம் போல் ‘போடா’ என்றபடி தலைநொடித்துச் சிரித்து திரும்பிக்கொள்வாயாக.

தொலைத்த இடத்தில் தேடிக் கண்டடைந்து விடுகிற நம்பிக்கையோடே துயரக்கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான சுவையையும் மெல்லக் கொல்லுகிற தன்மையையும் ஒருங்கே பெற்றிருக்கிற தனித்தன்மை வாய்ந்த விஷம் போலானது இந்தத் துயரமென்பது. ’The Sorrows of Young Werther' என்கிற புத்தகத்தை உனக்குப் பரிந்துரைக்கிறேன் பார்ட்னர். நூற்றாண்டுகளுக்கு முந்தைய கடிதத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறான் அந்தப் பாவி ’கதே’.

”I might blame the weather, or an acquaintance, or some personal disappointment, for my discontented mind; and then this insupportable load of trouble would not rest entirely upon myself. But, alas! I feel it too sadly. I am alone the cause of my own woe, am I not? Truly, my own bosom contains the source of all my sorrow, as it previously contained the source of all my pleasure. Am I not the same being who once enjoyed an excess of happiness, who, at every step, saw paradise open before him, and whose heart was ever expanded toward the whole world? And this heart is now dead, no sentiment can revive it; my eyes are dry; and my senses, no more refreshed by the influence of soft tears, wither and consume my brain. I suffer much, for I have lost the only charm of life: that active, sacred power which created worlds around me,— it is no more.”

நமக்கான வார்த்தைகளை யாரோ எழுதிவைத்துவிட்டுச் செல்வது போல் தான், யாருக்கோ ஆன வார்த்தைகளை நான் இன்று எழுதிக் கொண்டிருக்கின்றேனா பார்ட்னர் ?

மறுபடியும் சொல்கிறேன்; சாத்தான்கள் தந்த வரங்களாலும், தேவதைகளின் சாபங்களாலும் ஆனது இந்த வாழ்க்கை. இன்னும் தனிமைசூழ் இரவுகள் மிச்சமிருந்தால் நிச்சயமாய் அப்போது எழுதுகிறேன் மற்றுமோர்க் கடிதம்.

மகிழ்ந்திரு..!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான்.

திங்கள், 9 ஜனவரி, 2017

பாம்புக்காதலன் - My Husband & Other Animals - Janaki Lenin


சென்றாண்டு படித்த புத்தகங்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமானவற்றுள் ஒன்றாக நிச்சயம் ஜானகி லெனின் எழுதிய 'My Husband and Other animals' புத்தகத்தைத் தான் சொல்லுவேன். இது ஒரு சிறந்த கலை வடிவமா எனக்கேட்டால் அதற்கான பதில் எனக்குத் தெரியாது, ஆனால் பூச்சிகள் குறித்தும், ஊர்வன குறித்தும், காடு, வனவிலங்குகளின் பழக்கங்கள் குறித்தும் நிச்சயம் ஒரு எளிய அறிமுகத்தைத் தரக்கூடிய புத்தகமாகத்தான் கருதுகிறேன்.‘The Hindu'வில் தொடர் பத்தியாக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பின் தொகுக்கப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.

ரோமுலஸ் விட்டேக்கர் (Romulus Whitaker) ஒரு herpetologist  (ஊர்வன மற்றம் நீர்நில உயிர்கள் தொடர்பான இயல் தான் herpetology). பிறந்தது அமெரிக்காவில். இளவயதில் குடும்பத்தோடு இந்தியாவுக்கு குடிபெயர்ந்துவிட்ட ரோமுக்கு பாம்புகளின் மீது சிறு வயதிலிருந்தே ஒரு தனி ஆர்வம். சென்னைவாசிகள் அனைவருக்கும் பரிச்சயமான கிண்டி பாம்புப் பண்ணையும் , கிழக்கு கடற்கரை சாலையின் முதலைப் பண்ணையும் இவர் உருவாக்கியவை தான். 1960களில் பாம்புகளை வேட்டையாடி வெளிநாட்டுக்கு கடத்தும் மாஃபியா மிகப்பெரியளவில் செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்திய அரசாங்கம் மிகத் தாமதமாக விழித்துக்கொண்டு பாம்புகளின் ஏற்றுமதியை தடைசெய்கிறது. பாம்புகள் பிடிப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்த இருளரின பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட, பாம்புகளைப் பாதுகாக்கவும் இருளரின மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் சென்னை பாம்புப் பண்ணை உருவாகிறது. மருத்துவத்துறையிலும், விஷ முறிவு மருந்துகளை உருவாக்கவும் தேவையான பாம்பு விஷத்தை எடுக்கிற வேலையில் இருளரின மக்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
Romulus Whitaker with a baby gharial. Photo: Shaju John
Courtesy: http://www.thehindu.com/features/metroplus/Into-the-wild-with-Whitaker/article14479839.ece

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் முதலைகள் அழிந்துவந்ததை தன் கணக்கெடுப்பின் மூலம் அறிந்துகொண்ட ரோம், அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தன்னுடைய சொந்தப் பணத்தில் 1976ல் தொடங்கியது தான் சென்னையின் முதலைப் பண்ணை. இன்று முதலைப் பண்ணையில் Mugger, Ghariyal உள்ளிட்ட 12வகை முதலைகள், ஆமைகள், பல்லிகள், பாம்புகள் ஆகியவை பாதுகாக்கப் படுகின்றன. ஒரு தனி மனிதனாக வனஉயிர் பாதுகாப்புக்காக (Wildlife Conservation) ரோம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மலைக்கவைக்கின்றன. அந்தமான்/நிக்கோபார் தீவுகளில் (அப்போது) அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும் பொருட்டு தன்னுடைய அமெரிக்க பாஸ்போர்ட்டையே இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு அனுமதி வாங்கியிருக்கிறார்.
Courtesy: http://motivateme.in/

பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன பற்றி ஆராய்ச்சி செய்யவும் ஆவணப் படங்களை உருவாக்கவும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்திருக்கிறார் ரோம். அவருடைய பயண அனுபவங்களும் , அவரோடு பயணித்த ஜானகியின் அனுபவங்களுமே இந்தப் புத்தகத்தில் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆவணப்படங்களின் மூலம் ஈட்டிய வருவாயையும், வெவ்வேறு அமைப்புகள் அங்கீகரித்து வழங்கிய விருதுப் பணத்தையும் வன உயிர்கள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே செலவளித்திருக்கிறார். கர்நாடகவின் ஆகும்பேவில் உள்ள ராஜநாகங்களைப் பற்றி ஆராய்ச்சியை முக்கியமாக மேற்கொள்ளும் Rainforest research center  அப்படி விருதுப் பணத்தில் உருவானது தான்.
Smokey Cat - பொகையன் புலி
Courtesy: Mr.Sandesh Kadur http://www.sandeshkadur.com/projects/monsoon/

பறவைகளுக்கு அடிக்கடி பெயர் மாற்றி அழைக்கப்படுவதனால் ஏற்படுகிற சிக்கல்கள், செங்கல்பட்டிலுள்ள தங்களுடைய பண்ணை வீட்டில் நீக்கமற நிறைந்திருந்த தவளைகள்; எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டு வந்தாலும் சரியாய் திரும்பி வந்துவிடுகிற அவற்றின் ஞாபகசக்தி, கிட்டத்தட்ட ஒரு சிறுத்தைப் புலியளவுக்கு இருக்கிற சாம்பல் நிற ‘பொகையன் புலி’ (Smokey Cat)ஐ  மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ரோம் பார்த்த கதை, ஒரு நாய்க்குட்டி போல கறித்துண்டு போட்டால் சொன்ன பேச்சைக் கேட்டு கட்டளைகளைப் புரிந்து கொண்டு நடக்கிற முதலைகளின் பழக்கம், ஒரு காலத்தில் போதைப் பொருள்/  விலங்குகள் கடத்தலில் ஈடுபட்டு பின்னாட்களில் உலகப்புகழ் பெற்ற கலைஞர் ஆண்டி வார்ஹோல் (Andy Warhol) உடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞராய் விளங்கிய Nat Finkelstein ஐ ஜானகி நேரில் பார்த்த கதை, பிற விலங்குகளின் குரலை மிமிக்ரி செய்கிற ’துடுப்பு வால் கரிச்சான்’ பறவை (Greater racket tailed Drongo), Parthenogenesis என்கிற ஆண் உயிரின் தேவை இல்லாமல் தானே கருத்தரிக்கிற ஒரு தன்மையைக் கொண்டிருக்கிற பாம்பு-பல்லிகள்-கொமடா ட்ராகன்கள் பற்றிய தகவல்கள், 'Watchers in the pond' மாதிரியான அறியப்படாத சின்ன புத்தகங்கள் பற்றிய அறிமுகம், அப்புறம் நிறைய....நிறைய.....பாம்புகள் பற்றிய தகவல்கள்..கதைகள்...! இப்படியாக நம்மைச் சுற்றியிருக்கிற உலகைப் பார்க்கும்விதமே மாறிப்போகும் அளவுக்கு தகவல்கள் நிறைந்த புத்தகம். மொத்தமாக 95 தனிக் கட்டுரைகள். கிட்டத்தட்ட 300 பக்கங்கள்; நிச்சயமாக கொஞ்சமும் சலிப்படையாமல் படித்து முடிக்க ஜானகியுடைய மெல்லிய நகைச்சுயுணர்வு தான் காரணம்.

எல்லாத்துக்கும் மேல ஒரு வாழ்க்கைத் துணையாக இருப்பவர்களுடைய passionஐ புரிந்துகொண்டு அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் அர்ப்பணித்து , தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு வாழ்க்கைமுறையை மகிழ்ச்சியாக ஏற்றுகொண்ட ஒரு பெண்ணின் அட்டகாசமான ஸ்டேட்மெண்ட்டாகத் தான் இந்தப் புத்தகத்தைப் பார்க்கிறேன்.

பொதுவாக ’பிற உயிர்களிடத்தே அன்பு’ செலுத்துவது குறித்து நம்மிடையே பல வேறுபட்ட கருத்துகள் நிலவுவதுண்டு. அன்பு செலுத்துவது கூட இரண்டாம் பட்சம் தான். அந்த உயிரை ஒரு பொருட்டாகவாவது கொள்கிறோமா என்பது கேள்வி. சில சமயம் சக மனிதர்களையே ஒரு பொருட்டாகக் கொள்வதில், மதிப்பதில் சிக்கல் இருக்கிற நமக்கு பிற உயிர்கள் எம்மாத்திரம். காட்டு விலங்குளை விட்டுவிடுவோம். வீட்டு விலங்கான ஒரு நாய் மீதோ, பூனை மீதோ, அல்லது ஒரு மாட்டின் மீதோ காட்டப்படுகிற கரிசனம்  ஊர்வன, பூச்சியினம் ஆகியவற்றின் மீது காட்டப்படுகின்றதா ? அதீதமான அருவெறுப்பு அல்லது அச்சத்தின் காரணமாக பெரும்பாலும் நாம் அவ்வுயிர்களை ஆபத்துக்குள்ளாக்கி விடுகிறோம் அல்லது சாகடித்து விடுகிறோம். பிற உயிர்கள் பற்றிய போதிய அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாக இருக்கலாம். கொஞ்சம் தேடலும் ஆர்வமும் வாசிப்பும் இருந்தால் நம்மைச் சுற்றியிருக்கிற சின்னச்சின்ன விஷயங்களைக் கூட வியந்து பார்ப்போம்.

தவறவிடக்கூடாத புத்தகம். கட்டாயம் படியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் வாங்கிக்கொடுங்கள்.

'My husband and other animals' - Janaki Lenin - Westland books - Rs.250

ஆன்லைனில் வாங்க:  லின்க் இங்கே

Related Posts Plugin for WordPress, Blogger...