நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

சாத்தான்களின் வரம் - Harangue

இப்போது நீ இருக்கிறாயே என
உன்னிடம் வந்து
அழுது தொலைத்துவிட்டால்
நாளை நீ தேடும்போது
நான் இல்லாமல்போனால்
என்னாகுமோ என
எனக்காய் நானே
வெம்பிச் சாகிறேன்
போ...!
Courtesy: http://creativeartandcraftideas.blogspot.in/2016/05/abstract-art-drawing-in-black-and-white.html

பேரன்பின் பார்ட்னருக்கு,

பெரும் மன அழுத்தமே இந்தப் பின்னிரவில் என்னைக் கடிதமெழுத நிர்பந்தித்திருக்கின்றது. வழக்கம் போலக் கேட்டுத் தொலைய வேண்டிய சாபமுனக்கு. மற்றவர்களின் உலகத்துப் பிரச்சனைகளை நான் பெரிதாயொன்றும் பொருட்படுத்துவதில்லை பார்ட்னர்.  போலவே அவர்களும் என்னை. என் உலகத்தின் பிரச்சனைகள் வேறு மாதிரியான சிக்கல்களைக் கொண்டவை. தேடலும், தேடலின் நிமித்தமுமாய்க் கடந்து கொண்டிருக்கிற இந்த வாழ்க்கையில் இளப்பாறுதலுக்காய் எந்த மரத்தடியின் நிழலில் சாய்வேனென்று அறிந்தவனில்லை. அகச்சிக்கலா புறச்சிக்கலாவென ஆராய்பவர்களை மழுப்பிச்சிரித்து மறுதலித்துவிடுகிறேன். கேட்போரெல்லாம் நீயல்லவே. நீயாயிருந்தால் கேட்காமலே உணர்ந்திருப்பாயே. உனக்கு நானும் எனக்கு நீயும் கொடுத்திருக்கிற இந்த வெளிக்கு பெயர்சூட்டித் தாலாட்ட விருப்பமில்லையெனக்கு. குழந்தையைக் கொஞ்சிட பெயர் வேண்டுமா என்ன. சற்றேறக்குறைய பற்றற்றுதான் திரிகின்றேன். ஏதேனும் ஒரு போதைக்கு அடிமைப் பட்டிருந்திருக்கலாமோ என அடிக்கடி தோன்றுகிறதெனக்கு. ’எதை மறக்க எது’வென வெடித்துச் சிரித்தபடி  நீ கேட்பதாய் உணர்கிறேன். உனக்கா புரியாது...!!?

முன்பொருமுறை வாசனைகளைப் பற்றிய நம் உரையாடலை நினைவில் வைத்திருக்கிறாயா ? ’சிதம்பர நினைவுகளில்’ பாலச்சந்திரன் சுள்ளிக்காடு குறிப்பிட்ட அந்த சோப்பு விற்கிற பெண் அவளுடைய திருமணப் பத்திரிக்கையை தந்துவிட்டுப் போனதும் வீடு முழுக்க நிறைந்திருந்த அவளுடைய மணம் பற்றி எழுதியிருந்ததைச் சொன்னதும், எப்போதோ நீ படித்த ஒரு புத்தகத்தில் தன் தோழியைக் காண நாடுவிட்டு நாடுவந்த ஒருத்தி வந்து திரும்பியபின் அந்த அறைக்குச் சொந்தக்காரி “I feel like I don't belong here anymore. All that is left was her fragrance" என்று சொன்னதாய், நீ சொல்ல நான் கேட்ட அந்தத் தருணம் பல யுகங்களுக்கான ஒற்றை கருப்பு வெள்ளை புகைப்படம்போல் மகத்தானதாய் என் மனதில் பதிந்திருக்கிறது.பெயர் தெரியாத அந்தப் புத்தகத்தை இன்றும் உனக்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான மகத்தான தருணங்கள் இப்போது வாய்ப்பதில்லையெனக்கு. அற்பர்களின் வாழ்வில் அற்புதங்கள் எப்போதுமே நிகழ்வதில்லையே.

எழுத்துக்களில் மீண்டு எழுத்துக்களிலேயே தொலைந்து கொண்டிருக்கிறேன். ஆம்... மீண்டும் புத்தகங்களாலான வாழ்க்கை. பல வருடம் பழைய ஒயினை தனிமையில் ருசித்துக் குடிக்கிற ஒரு கவிஞன் போல, துயரத்தை ரசித்துப் பருகிக்கொண்டிருக்கிறேன். உனக்குத் தெரியுமா பார்ட்னர் ? ஒரு வலியை மறக்க அதைவிட அதிகமான வலியை ரசித்து அனுபவிக்கிற Masochism பற்றி ?
வெகு சமீபத்தில் ஒரு மிக நீண்ட பயனத்தினூடாய் அதனைக் கண்டுணர்ந்தேன். கேள்விகள், கல்லெறியப்பட்ட கூட்டின் தேனீக்கள் போல சுற்றி மொய்த்து கொட்டிக் கொண்டிருக்கின்றன. நான் பித்தன் போலச் சிரித்தபடி சாலைகளைத் துரத்திக் கொண்டிருக்கிறேன். காலத்துக்கும் நிலைத்திருக்கிற மகத்தான உணர்வுகளைத் தந்த உறவுகளத்தனையும் மனதில் மட்டுமே நிலைத்து வாழ்கிற சாபம் பெற்று வந்திருக்கிறேனோ எனத் தோன்றுகிறது பார்ட்னர்.  சாத்தான்கள் அளிக்கிற வரங்களாலும் தேவதைகளின் சாபங்களாலும் ஆனவையாக என்னுடைய  மேற்குறிப்பிட்ட தருணங்களைக் கொள்கிறேன்.யாருக்கு வாய்க்கும்  இந்த வாழ்க்கை? மறுபடியும் உன் சிரிப்பு..!

கடிதமெழுதும் போது எனது வலது தோளுக்கு மேலே எட்டிப் பார்க்கிற கண்களாக அவ்வப்போது நானே மாறிக்கொள்கிறேன். கண்களில் கோர்த்துக் கொண்டிருக்கிற கண்ணீர் கன்னத்தில் உருண்டோடும்போது வலிந்து இளித்து இடக்கையால் தட்டிவிடுகிறேன். இந்தக் கடிதத்தை காவியத்தன்மையுடையதாய் மாற்றப் போகிற அந்த ஒற்றைத் துளி கண்ணீர் இதுவாகவும் இருக்கலாம்.  அல்லது வழக்கம் போல் ‘போடா’ என்றபடி தலைநொடித்துச் சிரித்து திரும்பிக்கொள்வாயாக.

தொலைத்த இடத்தில் தேடிக் கண்டடைந்து விடுகிற நம்பிக்கையோடே துயரக்கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான சுவையையும் மெல்லக் கொல்லுகிற தன்மையையும் ஒருங்கே பெற்றிருக்கிற தனித்தன்மை வாய்ந்த விஷம் போலானது இந்தத் துயரமென்பது. ’The Sorrows of Young Werther' என்கிற புத்தகத்தை உனக்குப் பரிந்துரைக்கிறேன் பார்ட்னர். நூற்றாண்டுகளுக்கு முந்தைய கடிதத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறான் அந்தப் பாவி ’கதே’.

”I might blame the weather, or an acquaintance, or some personal disappointment, for my discontented mind; and then this insupportable load of trouble would not rest entirely upon myself. But, alas! I feel it too sadly. I am alone the cause of my own woe, am I not? Truly, my own bosom contains the source of all my sorrow, as it previously contained the source of all my pleasure. Am I not the same being who once enjoyed an excess of happiness, who, at every step, saw paradise open before him, and whose heart was ever expanded toward the whole world? And this heart is now dead, no sentiment can revive it; my eyes are dry; and my senses, no more refreshed by the influence of soft tears, wither and consume my brain. I suffer much, for I have lost the only charm of life: that active, sacred power which created worlds around me,— it is no more.”

நமக்கான வார்த்தைகளை யாரோ எழுதிவைத்துவிட்டுச் செல்வது போல் தான், யாருக்கோ ஆன வார்த்தைகளை நான் இன்று எழுதிக் கொண்டிருக்கின்றேனா பார்ட்னர் ?

மறுபடியும் சொல்கிறேன்; சாத்தான்கள் தந்த வரங்களாலும், தேவதைகளின் சாபங்களாலும் ஆனது இந்த வாழ்க்கை. இன்னும் தனிமைசூழ் இரவுகள் மிச்சமிருந்தால் நிச்சயமாய் அப்போது எழுதுகிறேன் மற்றுமோர்க் கடிதம்.

மகிழ்ந்திரு..!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான்.

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...