நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 24 டிசம்பர், 2020

அத்தாரோ - சரவணன் சந்திரன்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள ‘Christ the redeemer' சிலையை நிச்சயமாக நீங்கள் ஏதோவொரு செய்தித்தாளிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ பார்த்திருக்கலாம். கிட்டத்தட்ட அந்த சிலையின் அமைந்திருக்கிற மலை கிராமத்தின் அதே மாதிரியான ஒரு புவியியல் அமைப்பைக் கொண்ட ‘அத்தாரோ’ எனும் மலைத் தீவு தான் கதைக்களம். மேலே மலையும் காடுமாகவும், கீழே அடிவாரத்தைச் சுற்றிலும் கடலுமாய் இருக்கிற இடம். 

ஏடன் என்னும் மூப்பனைப் பற்றிய அறிமுகம் நமக்குச் சொல்லப்படுகிறது. அந்த காடும் மலையும் கடலும் அவனுக்கு எவ்வளவு பழக்கப்பட்டவை என அறிந்து கொள்கிறோம்.சரவணன் சந்திரனின் பிற கதைகளைப்போலவே கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. கதைசொல்லி வேறெங்கோ ஒரு தூர தேசத்திலிருந்து அத்தாரோ மலையை வந்தடைந்த விதத்தை சொல்கிறான். அதன்பின் அந்த காட்டுக்கு அவனை ஏடன் பழக்கப்படுத்துவதும், அவன் என்னவாக மாறி எதைக் கற்றுக் கொண்டான் என்பதையுமே மீதிக்கதை எனக் கொள்ளலாம். 

”காடுகளுக்கு பகலும் இரவும் ஒன்றுதான். காடு எப்போதும் தனித்தே இருக்கிறது. அதுதான் காட்டின் இயல்பும்.  பகலும் இரவும்தான் மாறி மாரி வருகின்றன.ஒவ்வொன்றின் அடிப்படையையும் புரிந்து கொண்டால், அச்சத்திற்கு இடமேயில்லை”

”எல்லைகளை மட்டும் மறுபடி நினைவூட்டுகிறேன்.இதைச் சத்திய வாக்காகக் கொள். முதலில் உன் எல்லை எது என உணர்ந்து கொள்”

 ஏடன் காடுகளைப் பற்றியும் எல்லைகளைப் பற்றியும் இப்படித்தான் முதலில் சொல்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறான். பின்பு கதைசொல்லியிடம் விலங்குகளைப் பற்றிப் பேசிவிட்டு, “நீ வேட்டை விலங்கா ? சார்பு விலங்கா ?” எனக் கேட்குமிடத்தில் கிட்டத்தட்ட நாம் இதுதான் கதையின் மையமென முடிவு செய்துகொள்ளலாம். 

ஆனால் நிறைய கிளைக்கதைகளையும் வர்ணனைகளையும் என்னால் பொருத்திக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை. இது கதைசொல்லியின் transformation பற்றிப் பேசும் நாவலா ? அல்லது அவனுடைய survival பற்றிப் பேசும் நாவலா ? அல்லது காடு-மலை-கடல் கொண்ட ஒரு தீவின் கதையா ? இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ஏடனும் கதைசொல்லியும் மனிதர்களா அல்லது இரு புலிகளின் கதைகளைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் கூட எழுந்தது. மேலும் முள்ளங்கிக்காரிகளைப் பற்றிய வர்ணனைகளும், அந்தக் காட்டில் உலவித் திரியும் புலியும், நாய் போல மாற சாபம் வாங்கிய மூதாட்டியின் மகன்களும் எதற்காகவென  இப்போதும் புரியவில்லை.

உண்மையில் ஒரு நூற்றி இருபது பக்க நாவலை (நாற்பது வெற்றுப்பக்கங்களைத் தவிர்த்துவிட்டு) படிக்க மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சரவணனின் பிற படைப்புக்களைப் போல ஒரு தடையில்லாத கதையோட்டமோ இலகுவான மொழிநடையோ இல்லை என்பது முதல் காரணம். இங்கு அத்தாரோ என்னும் நாவலில் மையம் நிலையான ஒன்றாக இல்லாமல் பல கதைகளையும் தொட்டுச் செல்வதாலும், அனைத்துமே ஒரு மாதிரியான abstract ஆக சொல்லப்பட்டிருப்பதாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்து முடித்தேன்.

இறுதியாக...

”அறிந்து  திகட்டிப் போன ருசியை விட்டு, அறியாத ருசியை நோக்கிப் போ, இந்த மலை பல ருசிகளைக் காட்டிக் கண்கட்டி வித்தை காட்டும். அதில் எது சிறந்தது எனக் கணக்கிடுவதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும்”

ஏடனின் இந்த வாக்கியத்தையே எனக்கானதாகவும் எடுத்துக்கொள்கிறேன். இது நான் அறியாத ருசி. எனக்குப் புரியாத களம். சில காலம் கழித்து இந்த நாவல் எனக்கு முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரியலாம். மறுவாசிப்பின் போது வேறொரு கதையை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கும் கூட அப்படியே ஆகலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இணைப்பு இங்கே

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...