நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 26 டிசம்பர், 2016

அஜ்வா - சரவணன் சந்திரன் - மீட்பனின் மீட்சி


 'அஜ்வா’ என்பது ஒருவகைப் பேரீச்சம்பழம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாகச் சொல்லப்படுவது.  ஏழு அஜ்வா பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டால் எந்த செய்வினையும் அண்டாது என்பது நம்பிக்கை.  

அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு பழமொழி உண்டு “ தான் செத்து மீன் பிடிக்கக்கூடாதுடா” என்று. மீன் பிடிப்பது எதற்கு ? பசியாறி உயிர்வாழ்வதற்கு. பிழைத்து வாழும் நோக்கத்தில் செய்யப்படுகிற முயற்சியிலேயே உயிரைவிட்டால் எதற்குமே அர்த்தமில்லாமல் போகுமில்லையா. ’அஜ்வா’ முழுக்க இந்தப் பழமொழி நினைவுக்கு வந்தபடியே இருந்தது.

”மூன்று தலைமுறை வாழ்ந்தோரும் இல்லை. மூன்று தலைமுறை கெட்டோரும் இல்லை” என ஊர்ப்பக்கம் சொல்வார்கள். தலைமுறைகளின் வீழ்ச்சியையும் இடிந்து தரைமட்டமான சாம்ராஜ்யங்களையும் என் கண்முன்னே எங்கள் குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். இந்த ஒன்றை மட்டும் செய்துவிட்டால் போதும். இதன் பின் நம் வாழ்க்கையே மாறிவிடும் என்று ஏதோவொரு அர்த்தமற்ற வேண்டுதலை, நேர்த்திக்கடனை செய்துவிடும் பொருட்டு அதை நோக்கியே தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடுகிற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அது நமக்குத்தான் அர்த்தமற்ற செயல்; அவர்களுக்கல்ல. There are people who hold onto something which doesn't mean absolutely anything to anybody other than themselves.

எந்த ஒரு பழக்கத்தையும் நீண்ட நாட்களாய்க் கடைபிடிக்கிற ஒருவன், அதன் உச்சங்களைத் தொட்டு ஆனந்தத்தை அடைந்தவன் , அதைப்பற்றி கண்கள்விரிய  பேசுவதைக் கேட்டால் ஆகநிச்சயமாய் இதை நாம் ருசித்துப் பார்த்தால் என்னவென்று உங்களுக்கே தோன்றக்கூடும். போதையோ, குடியோ, உணவோ, காமமோ, பயணமோ, இலக்கியமோ, கவிதையோ, எதுவோ... இவை  அத்தனைக்கும் இந்த வாக்கியம் பொருந்தும். அப்படியொருவன் தான் ‘அஜ்வா’வின் கதைசொல்லி.அவனுடைய பெயரை அவன் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் தன் கதையைச் சொல்கிறான். தனக்குப் பின்னாலிருக்கிற வலியைச் சொல்கிறான். தன் வாழ்க்கையின் மனிதர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவர்களின் கதைகளையும் சொல்கிறான். தன் ஆழ்மனதின் அச்சங்களைப் பற்றிப் பேசுகிறான். 

இந்த நாவலின் கதைசொல்லி இருக்கிறானில்லையா ? அவனும் மேற்குறிப்பிட்ட ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசன் போல் தான். ஒரு வாயில்லாப் பூச்சியாய் வாழ்ந்து மறைந்த தன் கணவனைப் போல் தன் மகனும் ஆகிவிடக்கூடாதென பார்த்துப் பார்த்து வளர்க்கிறாள் அவன் தாய். கையிலிருக்கிற சொத்தை அபகரிக்கும் பொருட்டு அடித்துத் துன்புறுத்துகிற தாய்மாமனிடமிருந்து தப்பிக்க நாடோடியாய் வாழ்ந்தலைகிறான். போதைக்குப் பழக்கப்பட்டு அதன் சுழலில் சிக்கிக் கொள்கிறான்.  வெவ்வேறு வகை போதைப் பொருட்களைப் பற்றி நம்மிடம் பேசிக்கொண்டே காஞ்சிரம்பள்ளிக்கும், பழனிக்கும், திருப்பதிக்கும் இன்னும் ஏதேதோ இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறான். 

அந்த உலகத்தில் தவறி வந்து சிக்கிக்கொள்கிறவர்களை பேசி மீட்கிறான். ஆனாலும் தான் மட்டும் தெரிந்தே அந்தச் சுழலுக்குள்ளிருந்தபடி உழல்கிறான். இவன் அம்மா , கோபம் வந்தால் தீப்பெட்டி ஒட்டும் துத்தநாகம் கலந்த பசையைத் தின்று விடுகிற பசுபதி அத்தை, தனக்குப் பிடிக்காத ’முதுகில் அடிக்கிற’ உரிமையை இவன் வழங்கியிருக்கிற ஒரே நண்பன் ஜார்ஜ் ஆண்டனி, ஜார்ஜ் ஆண்டனியின் அம்மா, கடைசியாய்  டெய்சி...!! வாழ்க்கை முழுவதும் இவனைப் பாதுகாக்கிற தேவதைகளாய்ச் சூழ்ந்திருக்கிறார்கள்.

”சரி என்னதான் கதை ?” என்று கேட்பீர்களேயானால் அதற்கான பதிலைச் சுருக்கமாய் சொல்லிவிட முடியாது. இந்த நாவலுக்காக வெளியிடப்பட்ட ஒரு நிமிடக் காணொளியின் ஒரு நொடி ஃப்ரேமில் சிலுவை தாங்கிய ஏசுவின் படம் வந்து போகும். ”இது தலைமுறைகளின் கதை, சாபங்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் விடுபட நினைக்கிறவர்களின் கதை” என்று பின்னணிக்குரல் ஒலிக்கும். இந்தக் கதையை நம்மிடம் சொல்கிற அவன் தான், பிறரின் பாவங்களுக்காக தான் சிலுவை சுமந்த மீட்பனாய்த் தோன்றுகின்றான். அந்த மீட்பனின் மீட்சிதான் ‘அஜ்வா’வின் கதை. 

நீங்களும், நானும், நம்மைச் சுற்றியிருக்கிற உயிருள்ள எல்லாமும், தன்னைத்தானே அழித்து மீண்டும் புதுப்பித்துக் கொள்கிற செல்களாலானவை தானே. ஒரு முடிவில்தான் மற்றுமொரு தொடக்கம்;அழிபவையெல்லாம் மீண்டும் பிறக்கவும் துளிர்க்கவும் செய்யும் என்கிற நம்பிக்கைக் கீற்று தான் ‘அஜ்வா’.

நிச்சயமாகப் படிக்கலாம்.!! 

வாழ்த்துகள் சரவணன் அண்ணா..!! 

’அஜ்வா’
உயிமை பதிப்பக வெளியீடு
விலை: ரூ.130
ISBN: 978-93-85104688

ஆன்லைனில் வாங்க: இங்கு சொடுக்கவும்

’அஜ்வா’ நாவலின் டீசர் : இங்கு

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...