நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 28 டிசம்பர், 2016

நீருக்கடியில் சில குரல்கள் - பிரபு காளிதாஸ்


சம்பந்தமில்லாத குரல் 1:

ஸ்கூல் படிக்கும்போது செம்மையான ஹாக்கி ப்ளேயரா இருந்த ஒரு பையன் , ஸ்கூல் பீப்பிள் லீடராவும் இருந்தவன், பெருசா படிக்க மாட்டான் ஆனாலும் அப்படியொரு கண்ட்ரோலிங் பவர் அவனுக்கு; அவன் சொன்னா பசங்க கேப்பாங்க. ஸ்கூல்ல சின்ன லெவல்ல சண்டை போட ஆரம்பிச்சு மத்த ஸ்கூல் பசங்களோட நடக்குற பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்துப் பண்ணிகிட்டு திரிஞ்சவன். ஒரு நாள் கண்ணு மண்ணு தெரியாத கோவத்துல அவன் பண்ண ஒரு கொலைக்கப்புறம் அவன் வாழ்க்கையே மாறிப் போச்சு.லோக்கல் அரசியல் தொடர்புகள், அடியாள், அப்டி இப்டின்னு இப்ப ஜெயில்ல போய் உக்காந்துருக்கான். இப்போ அவன் மேல பத்துக்கும் மேற்பட்ட கேஸ்கள். வயசு இன்னும் முப்பதைத் தொடல.
------------------------------------------------------------------------------------------------------------------------
சம்பந்தமில்லாத குரல் 2:

ஒரு அண்ணன்.  பாலிடெக்னிக் படிச்சுட்டு வேலையில்லாம சுத்திட்டு இருந்தாரு.சத்தம் போட்டுக் கூட பேசமாட்டாரு. வேலை இல்லாததனால ஏரியாவுல ஒரு ’ஒன்றிய’த்தோட ஆபிஸ்/ரூம்ல எடுபிடி வேலை பண்ணிட்டு இருந்தாரு. அப்புறம் அங்கேயே கார் ஓட்டவும் ஆரம்பிச்சாரு. எதிராளி எவனோ அந்த அரசியல்வாதிக்கு போட்ட ஸ்கெட்ச்சுல வண்டில இருந்த அத்தன பேரும் எஸ்கேப்பாகிட இவர் மாட்டிகிட்டாரு. கொத்திப் போட்டுட்டானுங்க. அப்போ அவருக்கு வயசு 28.
------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையோட குரல்:

வாழ்க்கைல ஒருத்தர் என்னமாதிரி மாற்றத்துக்கு உள்ளாகுறாங்கன்றத தீர்மானிக்கிறது அவங்களோட இளமைக்காலம் தான். குடும்பத்துல என்ன மாதிரியான சூழல்ல வளர்ராங்க, வெளில யார்கூட பழகுறாங்க, சுத்தி இருக்குற இடங்கள்ல என்ன நடக்குது, தனிப்பட்ட முறைல ஒருத்தரோட குணாதிசயம் என்ன, இதெல்லாம் சேந்தது தான் ஒரு மனுஷன். அப்டியே டமால்னு ஆகாயத்துலேர்ந்து குதிச்சு ஒருத்தன் நல்லவனாவோ கெட்டவனாவோ மாறிடுறதில்ல.அது ஒரு நீளமான ப்ராசஸ்.பல சம்பவங்களோட தொகுப்பு. இந்த ப்ராசஸ் அவங்க ஆசப்பட்டதுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அல்லது அவங்களோட குணாதிசயத்துக்கு கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒரு வாழ்க்கைமுறைல கொண்டுபோய் தள்ளும். சில சமயங்கள்ல அவங்க வாழாமலே கூட போறதுண்டு.  ரவுடியாகவோ, வன்முறையாளனாகவோ, இருக்கிற ஒருத்தனோட கடந்த காலத்தைப் பாத்தீங்கன்னா நிச்சயம் இந்த மாதிரி ஒரு கதை இருக்கும். Form ஆகுறதுன்னு சொல்வாங்கள்ல, அந்த மாதிரி.

தஞ்சாவூர் குரல்:

தஞ்சாவூரைக் களமாகக் கொண்ட நாவல்னு கேள்விப்பட்டவுடனே ரொம்ப ஆவலா காத்திருந்தேன். நான் தஞ்சாவூர்க்காரனில்ல. பெரிய கோவில், சோழர்களின் தலைநகரம், காவிரியோட கடைமடைத் தண்ணி, இசைப் பாரம்பரியம், இப்படியா எங்க ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ஏகப்பட்ட ஒத்துமைகள் இருக்கு.அந்த தஞ்சாவூர்ல இருக்குற சுந்தர், கதிரவன். இந்த ரெண்டு பசங்களோட வாழ்க்கைல நடக்குற சம்பவங்களோட தொகுப்பு தான் ‘நீருக்கடியில் சில குரல்கள்’.

சுந்தரின் குரல்:

சுந்தர் ஸ்கூல் பையன்; காரணமேயில்லாம தன்மேல வன்மத்தோட அடிக்கிற வாத்தியார திருப்பி அடிச்சுடுற அளவுக்குக் கோபமும் முரட்டுத்தனமுமான பையன். கொஞ்சமும் அவனை புரிஞ்சுக்க முயற்சி பண்ணாத, வரட்டு கெளரவத்தப் புடிச்சுத் தொங்குற அவனோட அப்பா. இந்தக் குடும்பத்தை விட்டுட்டு தன் நண்பன் கருவாயனோட  நிம்மதியா எங்கேயாவது போய் சந்தோஷமா இருக்கனும்ங்குறது தான் வாழ்க்கை லட்சியம். ரயில் இஞ்சின் டிரைவரா இருக்குற ரவி அண்ணன் தான் மனசப் புரிஞ்சுகிட்ட ஒரே ஆளு. மேட்டுத்தெருவுல இருக்குறவங்களோட வாழ்க்கை மாதிரி தன் வாழ்க்கை ஏன் இல்லன்னு மனசுக்குள்ள கேள்வி.என்ன ஆச்சு ?

கதிரவன் குரல்:

அப்பாவைப் பிரிஞ்ச அம்மா தப்பான ஒரு உறவுல இருக்கான்னு தெரிஞ்சதும் வீட்ட விட்டு வெளிய வந்துடுடத் துடிக்கிற கதிரவன். சோறு போட்டு ஆதரிச்சு உள்ளூர் ரவுடி அப்பள கனேசன் கிட்ட சேத்துவிட்ட நண்பன் ராஜா, காதலிச்சதுக்கே அறுவா வெட்டு வாங்குற அளவுக்குப் போனாலும் மனசுலேர்ந்து அழிக்க முடியாத கோமதி . இவன் தன்னோட வழிகாட்டியா நெனைக்குற தியேட்டர் ஆப்பரேட்டர்; ஒருகட்டத்துல வாழ்க்கைய நகர்த்துறதுக்காக வன்முறையைத் தேர்ந்தெடுக்குற கதிரவன் என்னதான் ஆனான் ?

என் குரல்:

வன்முறையையும் காமத்தையும் justify பண்ணவுமில்லாம glorify பண்ணவுமில்லாம ஒரு கதை சொல்லல். கதையோட ஓட்டத்துலயே ஊரோட geographyய சொல்ற விதமும் (ஆத்துப்பாலம் தொடங்கி தெருக்கள், சேரி, சாலைகள், பழைய கட்டிடங்கள்), பேரடைஸ் தியேட்டர் - நதியா கட் அவுட் - தஞ்சாவூர் வெட்டு - ஸ்போக்ஸ் கம்பி மீன் குத்தல்னு எல்லாத்துலயும் இருக்குற டீட்டெய்லிங்கும் அட்டகாசம்.

கடைசியா : செகண்ட் பார்ட் வருமோன்னு யோசிக்க வைக்குற நாவலோட abrupt முடிவு. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்னு தோணுச்சு. அந்த விவரனைகளுக்காகவும் காட்சிப்படுத்தலுக்காகவுமே கட்டாயம் படிக்கலாம்

வாழ்த்துகள் பிரபு மாம்ஸ்...!

நீருக்கடியில் சில குரல்கள் - பிரபு காளிதாஸ்
உயிர்மை பதிப்பகம்
ISBN: 978-93-85104-71-8
விலை: ரூ.120
128 பக்கங்கள்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...